search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானிலை நிலவரம்
    X
    வானிலை நிலவரம்

    அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ள இடங்கள்- சென்னை வானிலை மையம் தகவல்

    தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ள இடங்கள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தேனி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    விருதுநகர், ராமநாதபுரம் தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    மதுரை, திருச்சிராப்பள்ளி, கரூர், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து, அனல் காற்று வீசக்கூடும். எனவே, அடுத்து வரும் 2 நாட்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசையும் ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் திண்டுக்கல் நத்தம் பகுதியில் 5 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×