search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 2 வாலிபர்கள் போக்சோவில் கைது

    சிங்காநல்லூர் அருகே திருமணம் செய்வதாக கூறி சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 2 வாலிபர்களை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
    சிங்காநல்லூர்:

    பொள்ளாச்சியை சேர்ந்தவர் விக்னேஷ்வரன்(வயது 24). இவர் டிராக்டர் டிரைவர்.

    விக்னேஷ்வரனுக்கு போத்தனூரை சேர்ந்த தையல் வேலை பார்த்து வரும் 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

    இவர்களது காதல் விவகாரம் 2 பேரின் குடும்பத்துக்கும் தெரியவரவே இருவீட்டு பெற்றோரும் அவர்களை கண்டித்தனர். இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி 2 பேரும் திடீரென மாயமாகினர்.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போத்தனூர் போலீசில் புகார் கொடுத்தனர். விசாரணையில் சிறுமியை விக்னேஷ்வரன் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பொள்ளாச்சிக்கு அழைத்து சென்றதும், அங்குள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு சென்று விக்னேஷ்வரன் மற்றும் சிறுமியை மீட்டனர்.

    மேலும் இந்த வழக்கை ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றினர். இதுகுறித்து ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா, சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த விக்னேஷ்வரன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.

    சிவகங்கையை சேர்ந்தவர் ரமேஷ். எலெக்ட்ரிஷியன். இவர் கோவை வடவள்ளி பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார். போத்தனூர் பகுதியில் வேலை பார்த்தபோது ரமேசுக்கு அந்த பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ரமேஷ் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றார்.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் வடவள்ளி பகுதியில் பதுங்கி இருந்த ரமேஷ் மற்றும் சிறுமியை மீட்டு ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் ரமேஷ் அந்த சிறுமியிடம் தனக்கு திருமணம் ஆகவில்லை என்றும், தான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்றும் ஆசை வார்த்தை கூறி வடவள்ளி பகுதிக்கு கடத்தி சென்றதும், அங்கு வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    Next Story
    ×