search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    திருமண நிகழ்ச்சிக்குவந்த வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல்- 2 பேர் பலி

    தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்திற்கு திருமண நிகழ்ச்சிக்குவந்த வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர்.
    அதிராம்பட்டினம்:

    தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சமுத்திரம் மகன் முத்து (வயது 18). இவர் மீனவர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே திருத்துறைப்பூண்டி அருகே உள்ள சின்னத்தூர் கிராமத்திலிருந்து திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண் உள்பட 15 பேர் வேனில் அதிராம்பட்டினத்தை நோக்கி வந்த போது எதிரே பைக் ஓட்டி வந்த முத்து வேன் மீது மோதினார்.

    இதில் முத்து சம்பவ இடத்திலேயே பலியானார். வேன் படிக்கட்டில் அமர்ந்திருந்த சண்முகசுந்தரம் (39) கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்து அவரும் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் வேனில் உள்ளே அமர்ந்திருந்த 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் அதிராம்பட்டினம் மற்றும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    அனைவரும் சிவகங்கை மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×