search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thanjavur accident"

    • விபத்தில் பலியான முனியாண்டி, மதியழகன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகே உள்ள கன்னிதோப்பு பகுதியை சேர்ந்தவர்கள் முனியாண்டி (வயது 60), மதியழகன் (55 ), சுப்பிரமணி (54). அனைவரும் கூலித் தொழிலாளிகள்.

    இவர்கள் 3 பேரும் வடுவூர் அருகே உள்ள புள்ளவராயன் குடிகாட்டில் உறவினர் வீட்டு துக்க நிகழ்வுக்கு செல்ல முடிவு செய்தனர்.

    அதன்படி இன்று காலை மூன்று பேரும் வீட்டில் இருந்து ஒரே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். அப்போது புலவர் நத்தம் பகுதியில் சென்றபோது அங்கு உள்ள பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்ப முடிவு செய்தனர்.

    இதற்காக மோட்டார் சைக்கிளை பெட்ரோல் பங்க் வளைவில் திருப்பினர். அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முனியாண்டி உள்பட 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.

    அந்த நேரத்தில் பின்னால் வந்த மினி லாரி சாலையில் கிடந்த மூன்று பேர் மீதும் மோதியது. இந்த கோர விபத்தில் முனியாண்டி, மதியழகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். சுப்பிரமணி பலத்த காயம் அடைந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுப்பிரமணியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் பலியான முனியாண்டி, மதியழகன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • சுற்றுலா பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே, கேரளாவில் இருந்து தஞ்சாவூருக்கு வந்த சுற்றுலா பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 40 பேர் சிகிச்கைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ரோட்டில் தாறுமாறாக ஓடி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 12-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதிக்கொண்டே சென்று மின்கம்பத்தில் மோதி நின்றது.
    • சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒரு சிறுவன் பலத்த காயமடைந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து இன்று மதியம் தனியார் மினி பஸ் மருத்துவ கல்லூரிக்கு புறப்பட்டது. இந்த பஸ்ஸில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

    இந்த மினி பஸ் மருத்துவ கல்லூரி சாலை பாலாஜி நகர் பகுதியில் சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. ரோட்டில் தாறுமாறாக ஓடி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 12-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதிக்கொண்டே சென்று மின்கம்பத்தில் மோதி நின்றது.

    இதில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மின்கம்பம் பலத்த சேதம் அடைந்தது. மேலும் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒரு சிறுவன் பலத்த காயமடைந்தார். இது தவிர சிலர் லேசான காயமடைந்தனர்.

    தகவல் அறிந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருவையாறு அருகே லாரி மோதிய விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவையாறு:

    திருவையாறு அடுத்த கஸ்தூரி பாய் நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(வயது37). இவர் மோட்டார் சைக்கிளில் கஸ்தூரிபாய் நகரிலிருந்து விளாங்குடி சென்றுகொண்டிருந்தார். அப்போது விளாங்குடியிலிருந்து திருவையாறு நோக்கி லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. அந்த லாரி சோப்பு கம்பெனி அருகே மெயின்ரோட்டில் வரும்போது எதிர்பாரதவிதமாக மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் ராதாகிருஷ்ணன் பலத்த காயம் ஏற்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.

    இதுகுறித்து ராதா கிருஷ்ணன் மனைவி ராஜாத்தி கொடுத்த புகாரின் பேரில் திருவையாறு இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் கீழப்பழுவூரை சேர்ந்த முத்தமிழ்செல்வன்(29) என்பவரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
    தஞ்சையில் இன்று காலை கார் மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை - வல்லம் சாலையில் உள்ள ஜெயலட்சுமி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் நடராஜன்(வயது 63). ஓய்வுபெற்ற சப்- இன்ஸ்பெக்டர்.

    இந்த நிலையில் இன்று காலை நடராஜன், வீட்டில் இருந்து வாக்கிங் சென்று கொண்டிருந்தார். பின்னர் புதிய பஸ் நிலைய பகுதியில் இருந்து வீட்டுக்கு அவர் திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக ஒரு கார், திடீரென நடராஜன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே நடராஜன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் தமிழ் பல்கலைக்கழக போலீசார் விரைந்து வந்து நடராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    விபத்தில் பலியான நடராஜனுக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர்.
    தஞ்சை அருகே பஸ்சுக்காக காத்திருந்த போது கார் மோதி பெண் உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    தஞ்சாவூர்:

    திருச்சி கள்ளர் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி கவுரி (வயது 56).

    இவர் தனது உறவினர்களான புதுக்கோட்டை வெங்கடேஷ்வரா நகரை சேர்ந்த கருப்பையன் (55), மாரிமுத்து (65) ஆகியோருடன் நேற்று மாலை தஞ்சைக்கு வந்தார்.

    தஞ்சை அடுத்த மாரியம்மன் கோவில் பகுதியில் நடந்த ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக அவர்கள் 3 பேரும் வந்திருந்தனர். பின்னர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 3 பேரும் இரவு 11.30 மணியளவில் அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர்.

    அந்த சமயத்தில் தஞ்சையில் இருந்து பாபநாசம் உடையார் கோவிலுக்கு ஒரு கார் தாறுமாறாக வந்தது. கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார், திடீரென பஸ்சுக்காக காத்திருந்த கவுரி, கருப்பையா, மாரிமுத்து ஆகிய 3 பேர் மீதும் மோதியது. இதில் கவுரி, கருப்பையா ஆகியோர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். மாரிமுத்து காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

    உடனே அக்கம்பக்கத்தினர் மாரிமுத்துவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து பற்றி தஞ்சை தாலுகா போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து கவுரி, கருப்பையா உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் , பாபநாசம் பகுதியை சேர்ந்தவர் ரமணி (48) என தெரிய வந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
    தஞ்சை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் நாஞ்சிகோட்டை அருகே உள்ள நா.வல்லுண்டாம் பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா (வயது 24). இவர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டார் .

    தஞ்சை அருகே கொல்லான்கரை-வடக்குப்பட்டு சாலையில் சென்றபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் சூர்யா பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தஞ்சை தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தஞ்சையில் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த கர்நாடகா பஸ் மோதி ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி பலியானார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை-நாகை சாலை, பீட்டர் ஞானப்பிரகாசம் நகரில் வசித்து வந்தவர் ராமன் (வயது 66). இவர் இந்தியன் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மகன் செந்தில்குமார். திருச்சி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று, ராமன் தன்னுடைய சொந்த ஊரான ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு மேலையூர் சென்றிருந்தார்.

    நேற்று இரவு அவர் ஒரத்தநாட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் தஞ்சை நோக்கி வந்து கொண்டிருந்தார். தஞ்சை- மன்னார்குடி சாலையில் சடையார்கோவில் அருகே வந்தபோது, அந்தவழியாக வேளாங்கண்ணியில் இருந்து வந்த கர்நாடகா சுற்றுலா பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த ராமனின் தலையில் பஸ்சின் முன்சக்கரம் ஏறிஇறங்கியது. இதனால் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி ராமன் உயிர் இழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி ராமனின் உடலை பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சை மாவட்டம், கபிஸ்தலம் அருகே கார் மோதிய விபத்தில் முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம், கபிஸ்தலம் காமராஜர் நகரை சேர்ந்தவர் ராஜகோபாலன் (வயது 70). விவசாயி.

    இவர் கடந்த 25-ந்தேதி வீட்டிற்கு பொருட்கள் வாங்குவதற்காக கபிஸ்தலம் கடை தெருவிற்கு சென்றார்.

    அப்போது இவரது பின்னால் வந்த கார் ஒன்று ராஜகோபாலன் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ராஜகோபாலனை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

    இதுகுறித்து கபிஸ்தலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தஞ்சை அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் 2 தொழிலாளிகள் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் 2 தொழிலாளிகள் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    இன்று காலை நடந்த இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு;-

    தஞ்சை அருகே மடிகை கிராமம் பள்ளிக்கூட காலனி தெருவை சேர்ந்தவர் கூத்தையன் (வயது 48). கூலி தொழிலாளி.

    அதே பகுதி அம்பலக்கார தெருவை சேர்ந்தவர் முத்துசாமி (50). விவசாய கூலி தொழிலாளி.

    இந்த நிலையில் நண்பர்களான கூத்தையனும், முத்துசாமியும் இன்று காலை 6 மணியளவில் டீ குடிக்க கடைவீதிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக பட்டுக்கோட்டையில் இருந்து அரியலூர் நோக்கி சென்ற அரசு பஸ் வந்தது. அந்த சமயத்தில் திடீரென கூத்தையனும், முத்துசாமியும் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி ரோட்டில் கீழே விழுந்தனர்.

    அப்போது அரசு பஸ் சக்கரம் அவர்கள் 2 பேர் மீதும் ஏறியது. இதில் கூத்தையன், முத்துசாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.

    அரசு பஸ் மோதி 2 பேர் பலியானதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் பொதுமக்கள் திரண்டனர்.

    பின்னர் இந்த விபத்து பற்றி தஞ்சை தாலுகா போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரசு பஸ் மோதி 2 தொழிலாளிகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    தஞ்சை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனைவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள விளார் ரோடு, காயித்தே மில்லத் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் அலுவலகத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கீதா (வயது 38). இவர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை பணியை முடித்து விட்டு மாலை 6.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கீதா ஸ்கூட்டரில் வீட்டிற்கு புறப்பட்டார்.

    இவர் தஞ்சை மாதாக்கோட்டை அருகே உள்ள பாலத்தில் சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் கீதா ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி தூக்கி வீசப்பட்ட கீதா பலத்த காயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தஞ்சை தமிழ்பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா மூலம் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டி.ஐ.ஜி. இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மனைவி விபத்தில் பலியான தகவல் கிடைத்ததும் ஐ.ஜி. வரதராஜூ, டி.ஐ.ஜி. லோகநாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில் குமார் மற்றும் டி.எஸ்.பிகள் ரவிச்சந்திரன், ஜெயசந்திரன் ஆகியோர் நேரில் சென்று பிரபாகரனுக்கு ஆறுதல் கூறினர்.
    தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஐஸ் வியாபாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை விளார்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 58). ஐஸ் வியாபாரி.

    இந்நிலையில் நேற்று குணசேகரன் கந்தர்வகோட்டையில் ஐஸ் வியாபாரம் செய்து விட்டு மோட்டார் சைக்கிளில் தஞ்சைக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது திருக்கானூர் பட்டி கடை தெருவில் வந்து கொண்டிருக்கும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். இதில் தூக்கி வீசப்பட்ட குணசேகரன் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

    இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×