search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைமைச் செயலகம்
    X
    தலைமைச் செயலகம்

    நாளை மறுநாள் முற்றுகை போராட்டம்- தலைமைச்செயலகத்தில் பலத்த பாதுகாப்பு

    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாளை மறுநாள் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தப்போவதாக வந்த தகவலை அடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
    சென்னை:

    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாளை மறுநாள் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக முஸ்லிம் அமைப்புகள் அறிவித்துள்ளன.

    சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டம் முடிவுக்கு வராத நிலையில் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாக வெளியாகி இருக்கும் தகவல் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதையடுத்து தலைமைச் செயலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவதற்காக நாளை மறுநாள் முஸ்லிம் அமைப்பினர் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே திரள திட்டமிட்டுள்ளனர்.

    இதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். கூடுதல் கமி‌ஷனர்கள், இணை கமி‌ஷனர்கள், துணை கமி‌ஷனர்கள் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    10 துணை கமி‌ஷனர்கள் வரையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க உள்ளனர். சேப்பாக்கத்தில் கூடும் முஸ்லிம்கள் தலைமை செயலகம் நோக்கி சென்று விடக்கூடாது என்பதில் போலீசார் தீவிரமாக உள்ளனர்.

    இதையடுத்து சேப்பாக்கத்தில் இருந்து தலைமை செயலகம் நோக்கி செல்லும் சாலைகளிலும், பாரிமுனை மற்றும் மெரினா கடற்கரை பகுதிகளில் இருந்து செல்லும் சாலைகளிலும் நாளை மறுநாள் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது.
    Next Story
    ×