search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து காயம்
    X
    விபத்து காயம்

    செங்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்-கார் மோதல்: 7 பேர் படுகாயம்

    செங்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கோட்டை:

    கேரளா மாநிலம் கொல்லம் கருநாகப்பள்ளியில் இருந்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ஸ்கிரீன் துணி ஏற்றிக்கொண்டு ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அந்த காரில் கேரள மாநிலம் பத்தினம்திட்டாவை சேர்ந்த அப்துல்ரகுமான் மகன் சலீம்(வயது 36), கொல்லத்தை சேர்ந்த பஷீர்(42), கருநாகப் பள்ளியை சேர்ந்த அஜீஸ் மகன் சாபீத்(23) மற்றும் அதே ஊரை சேர்ந்த சபீக்(23) ஆகிய 4 பேரும் பயணம் செய்தனர்.

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கட்டளைக்குடியிருப்பு அருகில் மெயின்ரோட்டில் வந்த போது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே மோட்டார் சைக்கிள்களில் வந்த செங்கோட்டை அருகே உள்ள லாலாகுடியிருப்பை சேர்ந்த சங்கரமுத்து(54), காசிக்கண்ணு, தவணையூரை சேர்ந்த மாரியப்பன் மகன் முத்து(24) ஆகியோர் மீது மோதியது.

    இதில் 3 பேரும் சாலையில் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அதன்பின்னும் வேகம் குறையாத கார் சாலையின் ஓரத்தில் உள்ள சாம்போடை குளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காரின் கண்ணாடியை உடைத்து அவர்களை மீட்டனர்.

    இதையடுத்து படுகாயம் அடைந்த 7 பேரும் உடனடியாக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின் காரில் வந்த 4 பேர் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த சங்கரமுத்து ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுகுறித்து புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×