search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தஞ்சை அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

    தஞ்சை அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் மர்ம நபர் செயினை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வல்லம்:

    தஞ்சை அருகே உள்ள ஈச்சங்கோட்டை வடக்குத் தெருவை சேர்ந்தவர் முருகேசன் என்பவரின் மனைவி சத்தியா (வயது 29). முருகேசன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சத்தியா ஈச்சங்கோட்டையில் இருந்து அவருடைய மொபட்டில் தஞ்சையில் நடைபெற்ற உறவினர் வீட்டு சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தஞ்சை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது சூரியம்பட்டியை அடுத்த வீ.கே நகர் பகுதியில் சத்தியா மொபட்டை ஓட்டிக் கொண்டு வந்து கொண்டிருக்கும் போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு மர்மநபர் சத்தியா கழுத்தில் அணிந்திருந்த 2¼ பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளார்.

    இதில் சுதாரித்து கொண்ட சத்தியா சத்தம் போட பின்னால் மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்தவர்கள், மர்ம நபரை விரட்டி சென்றுள்ளனர். அப்போது அந்த சாலையில் சென்று கொண்டிருந்த லாரியை மோட்டார் சைக்கிளில் முந்திச்சென்று அவர் தப்பி விட்டார்.

    இந்த சம்பவம் குறித்து சத்தியா வல்லம் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×