search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோசடி
    X
    மோசடி

    போலி கையெழுத்து போட்டு மன்னார்குடி நகராட்சி பெண் ஊழியர் லட்சக்கணக்கில் மோசடி

    மன்னார்குடி நகராட்சியில் போலி கையெழுத்து போட்டு பெண் ஊழியர் லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி நகராட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கணக்காளராக வேலை பார்த்து வருபவர் சரஸ்வதி (வயது 50). இவர் தஞ்சை தொம்பன் குடிசை பகுதியில் வசித்து வருகிறார்.

    இவர் தினமும் தஞ்சையில் இருந்து மன்னார்குடிக்கு வந்து சென்றுள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 29 -ந் தேதி ரூ.2½ லட்சம் மதிப்புள்ள நகராட்சி காசோலையை நகராட்சி உதவியாளர் செல்வம் என்பவரிடம் நகராட்சி வங்கி கணக்குகளை பராமரித்து வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றிற்கு பணமாக மாற்றுவதற்கு கொடுத்தனுப்பியுள்ளார்.

    வங்கியில் காசோலையை பரிசோதித்த வங்கி ஊழியர், அதில் கையெழுத்திட்டிருந்த இதற்கு முன்பு ஆணையர் பொறுப்பு வகித்த ஜெகதீஸ்வரி கையொப்பத்தில் சந்தேகம் வந்ததால் வங்கி ஊழியர் தற்போது நகராட்சி ஆணையர் பொறுப்பிலுள்ள திருமலைவாசனுக்கு தகவல் தெரிவித்தார். இதனை அடுத்து விசாரணை செய்த நகராட்சி ஆணையர் பொறுப்பு திருமலை வாசன் அந்த வங்கிக் காசோலையில் இருந்த ஜெகதீஸ்வரியின் கையெழுத்து போலியானது என்பதை கண்டறிந்தார். இதனை அடுத்து கணக்காளர் சரஸ்வதியிடம் விசாரித்தபோது ஆணையர் பொறுப்பு ஜெகதீஸ்வரியின் கையெழுத்தை காசோலையில் சரஸ்வதி போட்டு வங்கிக்கு பணமாக மாற்றுவதற்கு அலுவலக உதவியாளர் செல்வத்திடம் கொடுத்து அனுப்பியது தெரியவந்தது.

    மேலும் இதேபோன்று கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் அப்போது ஆணையராக இருந்த விஸ்வநாதன் என்பவரது கையெழுத்தை போலியாக போட்டு மூன்று லட்சத்து 42 ஆயித்து 720 ரூபாய் எடுத்து மோசடி செய்ததும் தெரியவந்தது.

    இதனையடுத்து ஆணையர் (பொறுப்பு) திருமலைவாசன் இது குறித்து தஞ்சையில் உள்ள நகராட்சி மண்டல நிர்வாக இயக்குநர் உமாம கேஸ்வரிக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து துறை ரீதியிலான விசார னைக்கு மாநகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டார்.

    மேலும் சரஸ்வதி இது போன்று மேலும் போலி கையெழுத்து போட்டு எவ்வளவு மோசடி செய்துள்ளார் என்பது குறித்தும், இவர் இதற்கு முன்பு தஞ்சை , அரியலூர் , கூத்தாநல்லூர் ஆகிய நகராட்சிகளிலும் பணியாற்றிவுள்ளார்.

    இதில் அரியலூர் நகராட்சியில் பொறுப்பு ஆணையராகவும் பதவி வகித்துள்ளார். அங்கும் இதேபோன்று மோசடி செய்து பணம் கையாடல் செய்தாரா? என்பது குறித்தும் தணிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தனி ஒருவராக இம் மோசடியை செய்தாரா? இல்லை வேறு ஊழியர்கள் உடந்தையாக இருந்துள்ளனரா? என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×