search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை நடந்த வீடுகளில் ஒன்று
    X
    கொள்ளை நடந்த வீடுகளில் ஒன்று

    எசனையில் அடுத்தடுத்து 7 வீடுகளில் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

    எசனை கிராமத்தில் அடுத்தடுத்து 7 வீடுகளில் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் எசனை 1-வது வார்டு வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 41). பெரம்பலூரில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். தனது மனைவி ராணி, 2 குழந்தைகளுடன் ராஜேந்திரன் அதே பகுதியில் ஒரு தளம் கொண்ட மாடி வீட்டில் குடியிருந்து வருகிறார். நேற்று தை அமாவாசை என்பதால் விரதம் இருப்பதற்காக, நேற்று முன்தினம் இரவே வீட்டை கழுவி விட்டு, ராஜேந்திரன், மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் மேலுள்ள தளத்திற்கு சென்று படுத்துள்ளார்.

    இதையடுத்து நேற்று அதிகாலை ராஜேந்திரன் எழுந்து வந்து பார்த்தபோது தரைதளத்தில் வீட்டின் உள்ளே மின்விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. மேலும் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு ராஜேந்திரன் அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த 3¼ பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தது. வீட்டில் தரைதளத்தில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதேபோல் அருகே வரதராஜ்(51) என்பவர், அவரது வீட்டில் தூங்கியுள்ளார். ஆனால் அவரது மற்றொரு ஓட்டு வீட்டின் பூட்டை மர்மநபர்கள் உடைத்துள்ளனர். ஆனால் அங்கு ஏதுவும் இல்லாததால் மர்மநபர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். முன்னதாக வரதராஜ் எழுந்து வந்து விடக்கூடாது என்பதற்காக, அவர் தூங்கிக் கொண்டிருந்த வீட்டின் கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டனர். மேலும் வரதராஜ் வீட்டருகே உள்ள முருகேசன்(70) என்பவர் திருவண்ணாமலையில் உள்ள கோவில் மடத்தில் தொண்டராக வேலை பார்த்து வருகிறார். அவரது வீட்டின் பூட்டை உடைத்து, ரூ.5 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடினர். இதேபோல் அரசு பஸ் டிரைவரான சேகர்(43) என்பவரது தரைத்தளத்தை பூட்டி விட்டு தனது மனைவி, குழந்தைகளுடன் மேலுள்ள தளத்தில் படுத்துள்ளார்.

    அவருடைய தரைத்தள வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, அறையில் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த சுமார் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி அரைஞாண் கயிறை மட்டும் திருடி சென்றனர். மேலும் ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் கிருஷ்ணமூர்த்தி(59) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்மநபர்கள் பூஜை அறையில் இருந்த ரூ.10-யும் திருடி சென்றனர். அப்போது மர்மநபர்கள் நடமாடுவதை கண்டு அவர்களை பிடிக்க கிருஷ்ணமூர்த்தி முயன்றார். ஆனால் அவர்கள் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பினர்.

    மேலும் எசனை கடை வீதியை சேர்ந்தவர் கந்தசாமி மற்றும் கீழக்கரை அமாவாசை ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்த நிலையில், அவர்களின் வீடுகளிலும் பூட்டை உடைத்து மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். வீட்டின் உரிமையாளர்கள் கந்தசாமி, அமாவாசை வந்தால் தான், அவர்கள் வீட்டில் எவ்வளவு திருட்டு போயிருப்பது என்பது தெரியவரும். ஒரே நாளில் அடுத்தடுத்த 7 வீடுகளில், திருட்டு மற்றும் திருட்டு முயற்சி சம்பவம் நடந்தது குறித்து தகவலறிந்து பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் திருட்டில் ஈடுபட்ட ஒரே கும்பலை சேர்ந்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். இந்த திருட்டு சம்பவம் எசனை கிராம மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×