search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    அஞ்சுகிராமம் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

    அஞ்சுகிராமம் அருகே பக்கத்து வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அஞ்சுகிராமம்:

    அஞ்சுகிராமம் அருகே மயிலாடி மார்த்தாண்டபுரத்தைச் சேர்ந்தவர் சிவசங்கர். இவரது மனைவி ராணி. இவர்களுக்கு ஒரு மகளும், ஹரிகரன், (வயது 22) என்ற மகனும் உள்ளனர். ஹரிகரன் நகை ஆசாரியாக வேலை பார்த்து வந்தார்.

    இவர், வெளிநாட்டிற்கு செல்வதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்தார். நேற்றிரவு ஹரிகரன் வீட்டில் இருந்து கொண்டிருந்தார். இரவு 10 மணியளவில் வீட்டின் வெளியே நாய் குரைக்கும் சத்தம் கேட்டது.இதையடுத்து தனது தாயார் ராணியிடம் வெளியே சென்று பார்த்து வருவதாக கூறி விட்டு பின் வாசல் வழியாக சென்றார்.

    பின்னர் நீண்ட நேரமாகியும் ஹரிகரன் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் அவரை அந்த பகுதியில் தேடினார்கள். ஆனால் ஹரிகரனை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் இன்று காலையில் ஹரிகரன், வீட்டின் வளாகத்திற்குள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அஞ்சுகிராமம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். ஹரிகரனின் பக்கத்து வீட்டு மாடி சுற்றுச்சுவரின் செங்கற்களும் உடைந்திருந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள்.

    பக்கத்து வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்து ஹரிகரன் பலியாகி இருக்கலாம் என்று தெரிகிறது. அவர் பக்கத்து வீட்டு மாடிக்கு எதற்கு சென்றார்? எப்படி தவறி விழுந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஹரிகரனின் பெற்றோர் மற்றும் பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் பிணமாக கிடந்த ஹரிகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×