search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினிகாந்த்
    X
    ரஜினிகாந்த்

    பெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்

    சேலத்தில் பெரியார் நடத்திய பேரணி குறித்து தான் கூறிய கருத்திற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார்.

    2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறிய ரஜினி புதிய கட்சியை தொடங்கப் போவதாக அறிவித்து இருந்தார்.

    ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் புது கட்சி அறிவிப்பை வெளியிடாமல் அவ்வப்போது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகை விழாவில் பேசிய ரஜினி பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    இதைத் தொடர்ந்து ரஜினி மீது போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டு வருகிறது. திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்பினர் ரஜினியை கண்டித்து அறிக்கையும் வெளியிட்டனர். அரசியல் கட்சியினரும் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பெரியார் பற்றிய விமர்சனத்துக்கு ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் நாளை மறுநாள் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என்று கோவை ராமகிருஷ்ணன் தலைமையிலான தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்து இருந்தது.

    இதையடுத்து ரஜினி வீட்டு முன்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை போயஸ் கார்டனில் தனது வீட்டு முன்பு திடீரென ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களை சந்தித்து பெரியார் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கம் அளித்தார். ரஜினி அளித்த பேட்டி வருமாறு:-

    துக்ளக் ஆண்டுவிழாவில் நான் பேசியது சர்ச்சையாகி உள்ளது. சேலத்தில் 1971-ம் ஆண்டு அப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை என்று சொல்லி வருகிறார்கள். அவுட்லுக் உள்ளிட்ட பத்திரிகைகளில் அந்த சம்பவம் செய்தியாக வெளியாகி உள்ளது. (இது தொடர்பான பத்திரிகை ஆதாரங்களை காண்பித்தார்)

    சேலத்தில் நடந்த ஊர்வலத்தில் ராமன், சீதை, லெட்சுமணன் சிலைகள் உடை இல்லாமல் செருப்பு மாலை அணிவித்து எடுத்து செல்லப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது.

    இல்லாத ஒன்றையோ, நடக்காத ஒன்றையோ, கற்பனையாகவோ நான் சொல்லவில்லை. அப்போது தர்ணா செய்ததை லட்சுமணன் (பா.ஜனதா பிரமுகர்) ஊர்ஜிதப்படுத்தி உள்ளார். நான் நடக்காத ஒன்றை சொன்னதாக சர்ச்சையாகி வருகிறது. நான் கேள்விப்பட்டதையும், செய்தியாக வெளியானதையும் வைத்துதான் பேசினேன்.

    இதற்காக நான் மன்னிப்பு கேட்க வேண்டும், வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். சாரி. என்னால் மன்னிப்பு கேட்க முடியாது, வருத்தம் தெரிவிக்கவும் முடியாது என்பதை தாழ்மையுடன் சொல்லிக்கொள்கிறேன்.

    கேள்வி:-முற்றுகை போராட்டம் நடத்துவது உங்கள் அரசியல் வருகைக்கான அச்சுறுத்தலா?

    பதில்:- அதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

    கேள்வி:- திருமாவளவன் உள்ளிட்ட சிலர் உங்கள் கருத்தை தவறு என்கிறார்களே?

    பதில்:- இதற்கு விளக்கம் கொடுத்து விட்டேன். தெளிவாக ஆதாரங்கள் இருக்கிறது.

    கேள்வி:- அந்த காலகட்டத்தில் இருந்தவர்களே மறுத்து ஆதாரங்களை காட்டுகிறார்களே?

    பதில்:- நான் பார்த்ததை நான் சொல்கிறேன். அவர்கள் பார்த்ததை அவர்கள் சொல்கிறார்கள். அவ்வளவுதான்.

    கேள்வி:- ரஜினி வரலாற்றை மாற்றி பேசுகிறார் என்கிற வாதம் எழுந்துள்ளதே?

    பதில்:- நான் விளக்கம் சொன்னதை நீங்கள் தான் கிளறுகிறீர்கள். சில வரலாற்று சம்பவங்களை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த வேண்டாம். அது மறுக்க வேண்டிய சம்பவம் அல்ல. மறக்க வேண்டிய சம்பவம்.

    இவ்வாறு ரஜினி கூறினார்.
    Next Story
    ×