
மதுரை கூடல்புதூர் அப்பாத்துரை நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் சோலை குணசேகரன். பொதுப்பணித்துறை காண்டிராக்டரான இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி பழங்கா நத்தத்திலும், 2-வது மனைவி கூடல்நகரிலும் வசித்து வந்தனர்.
சம்பவத்தன்று சோலை குணசேகரன் 2-வது மனைவி வீட்டில் இருந்தார். அப்போது ஒரு பெண் உள்பட 5 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து துப்பாக்கி முனையில், சோலை குணசேகரன் வீட்டில் இருந்த 170 பவுன் நகை, ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பியது.
இந்த சம்பவம் தொடர்பாக கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே கீரைத்துறை பகுதியில் சந்தேகத்துக் கிடமாக சுற்றித்திரிந்த உமாதேவி, தங்கராஜ் ஆகிய 2 பேரை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் காண்டிராக்டர் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டனர். காண்டிராக்டர் சோலை குணசேகரனின் முதல் மனைவி மகன் ராஜராஜன்.
தனது தந்தையின் 2-வது மனைவி வீட்டில் ராஜராஜன் கூலிப்படையை வைத்து கொள்ளையடித்துள்ளார். இதில் உமாதேவி, தங்க ராஜ் உள்பட 4 பேர் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து 2 பேர் கொடுத்த தகவலின் பேரில் ராஜராஜனிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து கொள்ளையடிக்கப்பட்ட 170 பவுன் நகை, பணம் மீட்கப்பட்டது.