search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madurai Robbery"

    • வேலாயுதம் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அருகில் வசிப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த குதிரை சாரிகுளம் பகுதியில் உள்ள ஜெயண்ட் விலாஸ் பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 54). இவர் சித்த மருந்து தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலாயுதம் தொழில் நிமித்தம் காரணமாக திருப்பூர் சென்று விட்டார். மனைவி தனலட்சுமி, மகன் கீர்த்தி வாசனுடன் சென்னையில் சித்தா படிக்கும் தன்னுடைய மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்று விட்டனர்.

    இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நேற்று நள்ளிரவு அங்கு வந்து வீட்டின் முன்பக்க கதவை உடைத்தனர். பின்னர் வீட்டுக்குள் புகுந்த அவர்கள் படுக்கை அறைக்கு சென்று அங்கிருந்த பீரோவையும், மாடியில் இருந்த பீரோவையும் உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 51 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

    மறுநாள் காலை வேலாயுதம் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அருகில் வசிப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுபற்றி அக்கம்பக்கத்தினர் வேலாயுதத்திற்கு தகவல் கொடுத்தனர். வேலாயுதம் வந்து பார்த்தபோது தங்க நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.

    இச்சம்பவம் தொடர்பாக திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் வேலாயுதம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள வீடுகளில் அடிக்கடி கொள்ளை சம்பவம் அரங்கேறி வருவதால் போலீசார் இப்பகுதியில் ரோந்து செல்ல வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா, துத்திமேடை சேர்ந்த கணேஷ் என்பவரை, கூடல் புதூர் போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக கைது செய்தனர்.
    • 2019-ம் ஆண்டு திருப்பத்தூர் மாவட்டம், உமரப்பேட்டை காவல் நிலையத்தில் கணேஷ் மனைவி சுவிதாவிடம் ஏட்டு ராமச்சந்திரன் விசாரணை நடத்தினார்.

    மதுரை:

    மதுரை மதிச்சியம் போலீஸ் நிலையத்தில் ராமச்சந்திரன் (வயது 43) போலீஸ் ஏட்டுவாக உள்ளார். இவர் இதற்கு முன்பு கூடல்புதூரில் போலீஸ்காரராக இருந்தார்.

    அப்போது திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா, துத்திமேடை சேர்ந்த கணேஷ் என்பவரை, கூடல் புதூர் போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக கைது செய்தனர். 2019-ம் ஆண்டு திருப்பத்தூர் மாவட்டம், உமரப்பேட்டை காவல் நிலையத்தில் கணேஷ் மனைவி சுவிதாவிடம் ஏட்டு ராமச்சந்திரன் விசாரணை நடத்தினார்.

    அப்போது அவர் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதற்கு சுவிதா மறுத்து விட்டார். மறுநாள் சுவிதா குடும்பத்தைச் சேர்ந்த சந்திரலேகா, உஷா ஆகியோரை ஏட்டு ராமச்சந்திரன் மதுரைக்கு அழைத்து சென்று விட்டார். கொள்ளையன் கணேசன், தந்தை துரைசாமி, நண்பர்கள் சீனிவாசன், ராஜாவுடன் மதுரைக்கு புறப்பட்டு வந்தார்.

    அவர்களிடம் ஏட்டு ராமச்சந்திரன், மரியாதையாக ரூ.50 ஆயிரத்தை கொடுத்து விடு. இல்லையெனில் உன் மகனை குண்டர் சட்டத்தில் கைது செய்து விடுவேன் என்று மிரட்டி உள்ளார். அதற்கு துரைசாமி, என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று தெரிவித்தார்.

    பின்னர் ஏட்டு ராமச்சந்திரன், அவரிடம் கூகுள்-பே மூலம் ரூ.15 ஆயிரத்தை பெற்றார். அதன் பிறகு ராமச்சந்திரன் பல்வேறு தருணங்களில், துரைசாமி குடும்பத்தினரிடம் ரூ.72 ஆயிரம் வரை லஞ்சம் பெற்றதாக தெரிகிறது.

    இது குறித்து சுவிதா, மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் மதுரை மாநகர போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது மர்மநபர்கள் திடீரென்று வெள்ளியம்மாளை வழிமறித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பினர்.
    • கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த நகை பறிப்பு சம்பவத்தால் பெண் போலீஸ் அதிர்ச்சியடைந்தார்.

    மதுரை:

    மதுரை ரேஸ்கோர்ஸ்சில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் ராஜீவ்காந்தி. இவரது மனைவி வெள்ளியம்மாள் (வயது 31). ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

    இவர் நேற்று இரவு பீ.பி.குளம் பகுதியில் உள்ள உழவர் சந்தைக்கு காய்கறி வாங்கச் சென்றார். அங்கு காய்கறிகளை வாங்கிக்கொண்டு வெள்ளியம்மாள் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் அவரை பின் தொடர்ந்தனர்.

    ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது மர்மநபர்கள் திடீரென்று வெள்ளியம்மாளை வழிமறித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பினர்.

    கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த நகை பறிப்பு சம்பவத்தால் பெண் போலீஸ் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து வெள்ளியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட திருடர்களை தேடி வருகின்றனர்.

    • திருமங்கலம் பகுதியில் கடந்த 10 நாட்களில் 3 இடங்களில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இதில் துப்பு துலக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • உடனடியாக சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை கைது செய்யவேண்டும். மேலும் போலீசார் அடிக்கடி ரோந்து சென்று சந்தேக நபர்களை பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பகுதியான பழனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரபிதீன் முகமது ராஜா (வயது53). இவர் மதுரை மாநகராட்சியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பானு. இவர் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி காலையில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். மகள்கள் கல்லூரிக்கு சென்று விட்டனர்.

    இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 7½ பவுன் தங்க நகை, ரூ.25 ஆயிரம் ரொக்கம், செல்போன், வாட்ச் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    மாலையில் வீடு திரும்பிய ரபிதீன் முகமது ராஜா வீட்டில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் திருமங்கலம் டி.எஸ்.பி. தலைமையில் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து நகை-பணம் திருடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம் பகுதியில் கடந்த 10 நாட்களில் 3 இடங்களில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இதில் துப்பு துலக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். உடனடியாக சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை கைது செய்யவேண்டும். மேலும் போலீசார் அடிக்கடி ரோந்து சென்று சந்தேக நபர்களை பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

    • மாலையில் பாலிடெக்னிக் முடிந்து வீடு திரும்பிய மகன் வீடு திறந்து கிடப்பது குறித்து தாயாருக்கு தகவல் தெரிவித்தார்.
    • திருட்டு குறித்து மணிமேகலை கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் நாகசாமிநாகரை சேர்ந்த கண்ணன் மனைவி மணிமேகலை (37). கண்ணன் இறந்து விட்டார். மணிமேகலை உசிலம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

    இவருக்கு மகன், மகள் உள்ளனர். இருவரும் பாலிடெக்னிக் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மணிமேகலை வீட்டை பூட்டி விட்டு சென்றார். பிள்ளைகள் பாலிடெக்னிக் சென்று விட்டனர். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் பட்டபகலில் மணிமேகலை வீட்டு கதவை உடைத்து பீரோவில் இருந்த 25 பவுன் நகை, ரூ.39 ஆயிரத்தை திருடி சென்றுவிட்டனர்.

    மாலையில் பாலிடெக்னிக் முடிந்து வீடு திரும்பிய மகன் வீடு திறந்து கிடப்பது குறித்து தாயாருக்கு தகவல் தெரிவித்தார். இந்த திருட்டு குறித்து மணிமேகலை கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒவ்வொரு ஆண்டும் தை பொங்கல் சமயத்தில் கிராமத்திற்கு வரும் இவர்கள் அங்குள்ள முனியாண்டி கோவிலில் நடைபெறும் திருவிழாவில் கலந்து கொண்டு ஓரிரு வாரங்கள் கிராமத்தில் தங்கி விட்டு வெளியூர் செல்வது வழக்கம்.
    • கிராமத்தில் பெரும்பாலான வீடுகள் பூட்டியே இருக்கும்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது எஸ்.கோபாலபுரம். இந்த கிராமத்தில் குடியிருப்பவர்கள் பெரும்பாலும் வெளியூர்களில் ஓட்டல்கள் நடத்தி வருகின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் தை பொங்கல் சமயத்தில் கிராமத்திற்கு வரும் இவர்கள் அங்குள்ள முனியாண்டி கோவிலில் நடைபெறும் திருவிழாவில் கலந்து கொண்டு ஓரிரு வாரங்கள் கிராமத்தில் தங்கி விட்டு வெளியூர் செல்வது வழக்கம். இதனால் கிராமத்தில் பெரும்பாலான வீடுகள் பூட்டியே இருக்கும்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கோபாலபுரம் கிராமத்திற்கு வந்த கொள்ளையர்கள் அடுத்தடுத்துள்ள 7 வீடுகளில் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    7 வீடுகளிலும் நகை-பணம் எதுவும் இல்லை. இதனால் கொள்ளையடிக்க வந்த நபர்கள் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்று விட்டனர்.

    நேற்று காலை கோபாலபுரம் முனியாண்டி கோவிலில் நிர்வாகிகளில் ஒருவரான சீனிவாச ராகவனுக்கு ஒரே நாளில் 7 வீடுகளில் பூட்டை உடைத்து திருட முயற்சி நடந்த சம்பவம் குறித்து தகவல் வந்தது.

    அவர் இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது.

    ஓட்டல் நடத்துபவர்கள் வீடுகளை குறி வைத்து நடைபெற்ற இந்த கொள்ளை முயற்சி சம்பவம் திருமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை நாகமலை புதுக்கோட்டையில் வீடு புகுந்து 9 பவுன் நகையை திருடிச்சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை நாகமலை புதுக்கோட்டை என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் சந்தோஷ் இளையராஜா (வயது 46). இவரது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை. எனவே அவரை பார்த்துக் கொள்வதற்காக சந்தோஷ் இளையராஜா பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். அவரது மனைவி, மகன் மட்டும் வீட்டில் இருந்தனர்.

    சம்பவத்தன்று அவர்கள் வீட்டின் படுக்கை அறையில் தூங்கினர். அப்போது நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்மநபர்கள் பின்கதவு பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர்.

    பின்னர் நைசாக பீரோவில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலி, 4 பவுன் வளையல், ஒரு பவுன் தோடு, ஒரு பவுன் மோதிரம் உள்பட 9 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர்.

    மறுநாள் நகைகள் திருடு போயிருப்பது கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக சந்தோஷ் இளையராஜா நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார்.

    இதனடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    மதுரை மாவட்டம் திருமங்கலம் புரோட்டா மாஸ்டர் வீட்டில் 26 பவுன் நகை மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் புதுப்பட்டி அருகே ரெங்கபாளையம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சரவணக்குமார். இவர் செக்கானூரணியில் உள்ள கடையில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். மாதத்துக்கு ஒருமுறை தான் ஊருக்கு செல்வது வழக்கம்.

    சரவணகுமாரின் தாயார் அருகில் வசித்து வருகிறார். இவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் சரவணக்குமாரின் மனைவி லதா மற்றும் மகள் ஆகியோர் இரவு நேரம் மாமியார் வீட்டுக்கு சென்று அவரை கவனித்து அங்கேயே தூங்குவது வழக்கம். அதேபோல் நேற்று இரவும் தாயும், மகளும் அங்கு சென்று விட்டனர்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம ஆசாமிகள் யாரோ வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 26 பவுன் நகை மற்றும் பொருட்களை திருடி சென்றனர்.

    இன்று காலை வீடு திரும்பிய லதா, கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகை கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
    மதுரையில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் வக்கீலிடம் 3¼ பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
    மதுரை:

    மதுரை அய்யர் பங்களா அய்யப்பன் நகரைச் சேர்ந்தவர் ரத்தினம். இவரது மகள் பூங்கொடியாள் (வயது 35) வக்கீல்.

    இவர் இருசக்கர வாகனத்தில் உத்தங்குடி சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் பின் தொடர்ந்தனர்.

    அவர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் திடீரென பூங்கொடியாள் அணிந்திருந்த 3¼ பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை அண்ணாநகர் சதாசிவம் நகர் நக்கீரர் குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் பெங்களூருவில் என்ஜினீயராக உள்ளார். அவரது மனைவி ஜனனி (23).

    சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அவர்கள் வீட்டின் பீரோவில் இருந்த 15 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.

    இதுகுறித்து அண்ணா நகர் போலீசில் ஜனனி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து நகை திருடிய மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்.
    மதுரையில் கோவில் அர்ச்சகர் வீட்டின் கதவை உடைத்து 35 பவுன் நகைகளை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    மதுரை:

    மதுரை கே.கே.நகர் லோகாஸ் காலனியைச் சேர்ந்தவர் முரளிக்கண்ணன் (வயது 39). இவர் அங்குள்ள கற்பக விநாயகர் கோவிலில் அர்ச்சகராக உள்ளார்.

    கடந்த 9-ந் தேதி முரளிக்கண்ணன் குடும்பத்துடன் சென்னை சென்றுவிட்டார். இதனால் வீடு பூட்டப்பட்டு கிடந்தது. நேற்று காலை அவர்கள் வீடு திரும்பினர்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடந்துள்ளது. வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவும் திறந்து கிடந்தது. இதனைக் கண்டு முரளிக்கண்ணன் அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டிற்குள் கொள்ளையர்கள் புகுந்திருப்பது தெரிய வரவே, அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    வீட்டின் பீரோவில் இருந்த 35 பவுன் நகைகள் கொள்ளை போயிருப்பதாக போலீசாரிடம் முரளிக்கண்ணன் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெருங்குடியில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 10 பவுன் நகையை பறித்து தப்பிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை மாவட்டம், பெருங்குடி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரபோஸ். இவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது மர்ம நபர் ஒருவன், நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து சந்திர போசின் மனைவி அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தான்.

    விழித்து பார்த்த சந்திரபோஸ் மற்றும் குடும்பத்தினர் விரட்டிச் சென்றபோது மர்ம நபர் தப்பிச் சென்று விட்டான். திருடப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

    இது குறித்து பெருங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடிவருகிறார்.
    சோழவந்தான் அருகே வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சோழவந்தான்:

    சோழவந்தான் அருகே உள்ள ஊத்துக்குளி கிராமத்தைச்சேர்ந்தவர் தமிழன் (வயது35), லாரி டிரைவர். இவரது மனைவி நந்தினி (24).

    நேற்று இரவு இவர்கள் வழக்கம்போல் வீட்டில் தூங்கினர். அப்போது காற்றுக்காக கதவை திறந்து வைத்ததாக தெரிகிறது

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்மநபர் நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் நைசாக புகுந்தார். அங்கு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த நந்தினி கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை மர்ம நபர் பறித்துக்கொண்டு தப்பினான்.

    காலையில் எழுந்த நந்தினி நகை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து காடுபட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து வீட்டுக்கு புகுந்து நகை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
    ×