search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    திருமங்கலம் அருகே புரோட்டா மாஸ்டர் வீட்டில் 26 பவுன் நகை கொள்ளை

    மதுரை மாவட்டம் திருமங்கலம் புரோட்டா மாஸ்டர் வீட்டில் 26 பவுன் நகை மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் புதுப்பட்டி அருகே ரெங்கபாளையம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சரவணக்குமார். இவர் செக்கானூரணியில் உள்ள கடையில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். மாதத்துக்கு ஒருமுறை தான் ஊருக்கு செல்வது வழக்கம்.

    சரவணகுமாரின் தாயார் அருகில் வசித்து வருகிறார். இவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் சரவணக்குமாரின் மனைவி லதா மற்றும் மகள் ஆகியோர் இரவு நேரம் மாமியார் வீட்டுக்கு சென்று அவரை கவனித்து அங்கேயே தூங்குவது வழக்கம். அதேபோல் நேற்று இரவும் தாயும், மகளும் அங்கு சென்று விட்டனர்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம ஆசாமிகள் யாரோ வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 26 பவுன் நகை மற்றும் பொருட்களை திருடி சென்றனர்.

    இன்று காலை வீடு திரும்பிய லதா, கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகை கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×