search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மறியல் செய்த மாணவிகளை படத்தில் காணலாம்.
    X
    மறியல் செய்த மாணவிகளை படத்தில் காணலாம்.

    விடுதியில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கல்லூரி மாணவிகள் திடீர் மறியல்

    விடுதியில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கல்லூரி மாணவிகள் கையில் வாளியுடன் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
    திருச்சி:

    திருச்சி கண்டோன்மெண்ட் ரெனால்ட்ஸ்ரோட்டில் அரசினர் கல்லூரி மாணவிகள் விடுதி உள்ளது. இங்கு வெளி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 150 மாணவிகள் தங்கி இருந்து திருச்சியில் பல்வேறு கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று மாலை 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் கையில் காலி வாளியுடன் விடுதியில் இருந்து வெளியேறி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீசார் அங்கு சென்று அவர்களிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள் போலீசாரிடம், “விடுதியில் அடிக்கடி மோட்டார் பழுது காரணமாக தண்ணீர் பிரச்சினை ஏற்படுவதாகவும், இதனால் அன்றாடம் கல்லூரிக்கு புறப்படும்போது மிகுந்த சிரமம் ஏற்படுவதாகவும் கூறினார்கள்.

    மேலும், விடுதியில் வழங்கப்படுகிற சாப்பாடு சரியில்லை என்றும், இதுகுறித்து கேட்டால் மிரட்டுவதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் மறியலை கைவிட்டு விடுதி அருகே சென்ற மாணவிகள் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை கூறி முறையிட்டனர்.

    தகவல் அறிந்து அங்கு தாசில்தார் சத்தியபாமா, வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக விடுதியில் லாரி மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், மாணவிகளின் அனைத்து கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினர். இதையடுத்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு விடுதிக்குள் சென்றனர்.

    மாணவிகள் நேற்று மாலை மறியலில் ஈடுபட்டபோது, அங்கு கண்டோன்மெண்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் வந்தார். அவர், மறியல் செய்த மாணவிகளை பார்த்து மிரட்டுவதுபோல் ஆவேசமாக பேசினார். இதனால் மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதை கண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் உடனே சப்-இன்ஸ்பெக்டரை அழைத்து அறிவுரை கூறினார். தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டரை அங்கிருந்து புறப்பட்டு செல்லும்படி கூறினார்.
    Next Story
    ×