search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    எட்டயபுரத்தில் லாரி மீது கார் மோதி 2 பேர் பலி

    எட்டயபுரத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எட்டயபுரம்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து 7 பேர் ஒரு காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட நேற்றிரவு புறப்பட்டு வந்தனர். காரை பண்ருட்டியை சேர்ந்த பிராங்கிளின் (வயது33) என்பவர் ஓட்டி வந்தார்.

    அவர்களது கார் இன்று காலை 7.30 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கீழஈரால் விலக்கு பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னால் தூத்துக்குடி நோக்கி ஒரு லாரி சென்றது. திடீரென அந்த லாரியின் பின்பகுதியில் கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் லாரியின் பின் பகுதியில் கார் சிக்கி கொண்டது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த பிராங்கிளின், பண்ருட்டியை சேர்ந்த விஜி என்ற நந்தகுமார் ஆகிய இருவரும் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.

    காரில் இருந்த வைத்திய நாதன் (48), பாலு (36), சவுந்தரி (28), ராஜி (36), செந்தில்குமார் (35), ரமேஷ்(31) ஆகிய 6பேரும் படுகாயம் அடைந்தனர். லாரியின் பின்பகுதியில் கார் சிக்கி கொண்டதால் காரின் உள்ளே இருந்தவர்கள் யாரும் வெளியே வரமுடிய வில்லை. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    மேலும் கோவில்பட்டி தீயணைப்பு வீரர்களும் வந்தார்கள். போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காரின் கதவுகளை உடைத்து அதில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். பலியானவர்களின் உடல்கள் சுமார் 1மணி நேர போராட்டத்திற்கு பின் காரில் இருந்து மீட்கப்பட்டது.

    பின்பு இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதே போல் காயமடைந்த 6 பேரும் எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    முதலுதவி சிகிச்சைக்கு பின், அவர்கள் 6 பேரும் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள் விபத்தில் சிக்கிய சம்பவம் அவர்களது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது.

    Next Story
    ×