search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீப்பிடித்து எரிந்த குடோன்.
    X
    தீப்பிடித்து எரிந்த குடோன்.

    திருப்பூரில் பட்டாசு பொறி பட்டு பிளாஸ்டிக் குடோன் சேதம்

    திருப்பூரில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு பொறி பட்டு பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. அருகில் இருந்த 2 கார்களும் எரிந்து சேதம் அடைந்தன.

    திருப்பூர்:

    திருப்பூர் நடராஜா தியேட்டர் அருகே உள்ள திருவள்ளுவர் தோட்டத்தை சேர்ந்தவர் கருணையம்மாள் (வயது 75). இவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் கருவம்பாளையத்தை சேர்ந்த தர்மராஜ் (55) என்பவர் பிளாஸ்டிக் கழிவு குடோன் வைத்து நடத்தி வருகிறார். மேலும், அந்த இடத்தில் கருவம்பாளையத்தை சேர்ந்த நயினா (65) என்பவர் ஆட்டோ டிங்கரிங் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இதுபோல் அந்த பகுதியில் ஏராளமான ஒர்க்ஷாப்புகளும் இயங்கி வருகின்றன.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று மாலை அங்கு சிலர் பட்டாசுகள் வெடித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசில் இருந்து தீப்பொறிகள் பறந்து பிளாஸ்டிக் கழிவு குடோனில் விழுந்தது. இதில் அங்கு இருந்த பேப்பர்களில் தீப்பிடித்து பிளாஸ்டிக் கழிவுகளிலும் மளமளவென தீ பரவியது. சிறிது நேரத்தில் அந்த தீ அருகில் உள்ள ஒர்க்ஷாப்பிலும் பரவியது. இதனால் அந்த ஒர்க்ஷாப்பில் வேலைக்காக நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களும் தீப்பிடித்து எரிந்தன. பிளாஸ்டிக் கழிவுகள் எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் கரும்புகையாக காட்சியளித்தது. நேரம் செல்ல செல்ல தீ கொழுந்து விட்டு எரிந்தது.

    இது குறித்து அக்கம்பக்கத்தினர் திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

    ஆனால் பிளாஸ்டிக் கழிவுகள் என்பதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. மேலும், அந்த பகுதியில் குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களும் வேறு பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற வாகனங்களையும் வேறு இடத்திற்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.

    தொடர்ந்து தீயணைப்பு நிலைய தண்ணீர் லாரி, தனியார் தண்ணீர் லாரிகள் என 14 லாரி தண்ணீரை பயன்படுத்தி 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதிக்கு போலீஸ் துணை கமி‌ஷனர் உமா மற்றும் தெற்கு தாசில்தார் மகேஷ்வரன் உள்பட அதிகாரிகள் பலர் வந்து, பார்வையிட்டனர். மேலும், தீயை விரைவாக அணைப்பதற்கு ஆலோசனைகளையும் வழங்கினர். இதற்கிடையே தீ வேகமாக பரவியதால், அந்த பகுதியில் அவசரமாக மின் ஊழியர்களை அழைத்து மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்தனர்.

    இதன் பின்னர் தீ முழுவதுமாக அணைக்கப்பட்ட பிறகே மின் இணைப்பு வழங்கப்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் 2 கார்கள் உள்பட பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி விடுமுறை என்பதால் அந்த குடோன் மற்றும் ஒர்க் ஷாப்புகளில் தொழிலாளர்கள் யாரும் இல்லை. இதனால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

    இது குறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×