search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாங்குநேரி அருகே வருவாய் ஆய்வாளர் போல் நடித்து பணம் மோசடி செய்த தொழிலாளி கைது
    X

    நாங்குநேரி அருகே வருவாய் ஆய்வாளர் போல் நடித்து பணம் மோசடி செய்த தொழிலாளி கைது

    நாங்குநேரி அருகே உதவி தொகை பெற்று தருவதாக வருவாய் ஆய்வாளர் போல் நடித்து பணம் மோசடி செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    களக்காடு

    நாங்குநேரி அருகே உள்ள விஜயநாராயணம் சிவந்தியாபுரத்தை சேர்ந்தவர் வேலம்மாள். இவர் சில மாதங்களுக்கு முன்பு தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதையடுத்து அவரது உறவினரிடம் ஒரு மர்ம நபர் சென்று தான் வருவாய் ஆய்வாளர் என்றும் இறந்த வேலம்மாள் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை பெற்று தருவதாகவும் கூறியுள்ளார்.

    மேலும் அவர்களிடம் முன்பணமாக ரூ. 12 ஆயிரம் வேண்டும் என்று கூறி தனது அக்கவுண்டில் போடுமாறு கூறியுள்ளார். அதனை நம்பி பணத்தை போட்டுள்ளனர். இதே போல் மூலக்கரைப்பட்டி லெத்திகுளத்தை சேர்ந்த சுப்பையா சமீபத்தில் இறந்தார். அவரது வீட்டிற்கு சென்ற அந்த மர்ம நபர் இதே போல் நிவாரண தொகை பெற்று தருவதாக கூறி தனது பேங்க் அக்கவுண்டில் ரூ. 4 ஆயிரத்து 500 செலுத்துமாறு கூறியுள்ளார். அவர்களும் அந்த பணத்தை அக்கவுண்டில் போட்டுள்ளனர்.

    பின்னர் பல முறை அவர்கள் அந்த நபரை தொடர்பு கொண்ட போதும் பதில் இல்லை. இறந்த வேலம்மாளின் உறவினர் ஒருவர் அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அவர் திசையன்விளையில் இருந்து நெல்லை சென்ற பஸ்சில் பணியில் இருந்தார். அப்போது அந்த பஸ்சில் ஏமாற்று மர்ம நபர் ஏறியுள்ளார். இதை பார்த்த கண்டக்டர் அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது ஒரு திருப்பத்தில் பஸ் சென்ற போது கீழே குதித்து மர்ம நபர் தப்பியுள்ளார். எனினும் கண்டக்டர் பின்னால் விரட்டி சென்றார். இதனால் அங்கு இரவு நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் பொதுமக்கள் உதவியுடன் அவரை பிடித்து மூலக்கரைப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சேலத்தை சேர்ந்த தொழிலாளி பிரபாகரன் (வயது 50) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவர் வேறு எங்கெல்லாம் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×