search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி, மூதாட்டி பலி
    X

    கோவை அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி, மூதாட்டி பலி

    கோவை அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி மற்றும் மூதாட்டி பலியான சம்பவம் குறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கவுண்டம்பாளையம்:

    கோவை ஆனைக்கட்டி அருகே உள்ள கொண்டனூர் புதூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சன். இவரது மனைவி பொன்னம்மாள் (80). இவர் இன்று காலை தனது தோட்டத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு ஒற்றை காட்டு யானை நின்று கொண்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொன்னம்மாள் விரைந்து நடக்க ஆரம்பித்தார்.

    அவரை துரத்தி சென்ற காட்டு யானை துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் அவர் சம்பவ இடத்திலே பலியானார். இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசாரும் பெரிய நாயக்கன்பாளையம் வனத்துறையினரும் அங்கு விரைந்து சென்றனர்.

    அவர்கள் யானை தாக்கி பலியான பொன்னம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை ஆனைக்கட்டியை சேர்ந்தவர் ரங்கசாமி (62). இவர் கேரள மாநில எல்லையில் சோலையூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார்.

    இன்று காலை அவர் வீடு திரும்புவதற்காக அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த காட்டு யானை தொழிலாளி ரங்கசாமியை துதிக்கையால் தூக்கி வீசியது.

    இதில் அவர் சம்பவ இடத்திலே பலியானார்.மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளது. இந்த யானைகள் அடிக்கடி உணவு, தண்ணீர் தேடு ஊருக்குள் புகுந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

    மேலும் ஆனைக்கட்டி பகுதியில் யானை தாக்கி பொது மக்கள் பலியாகும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

    இதனை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×