search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புயல் சின்னம் உருவாகிறது- தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு
    X

    புயல் சின்னம் உருவாகிறது- தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள லட்சத்தீவு பகுதியில் புயல் சின்னம் உருவாகுவதால் தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Cyclone #Monsoon #IMD
    சென்னை:

    இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை கேரளாவிலும், கர்நாடகாவிலும் வரலாறு காணாத அளவுக்கு பெய்தது. தொடர்ந்து 4 மாதங்களாக நீடித்து வரும் பருவமழை வட மாநிலங்களில் முடிவுக்கு வந்துள்ளது.

    ஆனால் அரபிக் கடலையொட்டியுள்ள கர்நாடகா, கேரளா, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அடுத்த 48 மணிநேரத்தில் தென்மேற்கு பருவமழை முழுவதுமாக முடிவுக்கு வருகிறது.

    அதன்பிறகு 6-ந்தேதி வாக்கில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள லட்சத்தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது புயல் சின்னமாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்பின்பு அடுத்த 48 மணிநேரத்தில் அது மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் சென்றுவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.


    இதன் காரணமாக 5-ந்தேதி காலை 8.30 மணி முதல் 6-ந்தேதி காலை 8.30 மணி வரை தமிழகம் மற்றும்புதுவையிலும், கேரளாவிலும் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அதன்பிறகு பலத்த மழைபெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே குமரிகடல் பகுதியில் இருந்து வடக்கு கேரளா வரை பரவிய மேலடுக்கு சுழற்சி தெற்கு மராட்டியம் வரை நீடிக்கிறது. இதேபோல் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுவையில் அனேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல் குடி, குமரி மாவட்டம் தக்கலை ஆகிய இடங்களில் 7 செ.மீ மழை பெய்துள்ளது.

    குடவாசல், திருவாரூர், குழித்துறையில் 5 செ.மீ, திருமனூர், நாகர்கோவில், விளாத்திகுளம், கோவில் பட்டியில் 4 செ.மீ. மழையும், பெய்துள்ளது.

    சென்னையில் நேற்று காலையும், இன்று காலையும் லேசாக மழை தூறியது. பகலில் கோடை போல் கடும் வெயில் சுட்டெரிக்கிறது.

    சென்னை டி.ஜி.பி. அலுவலகம், புழல் ஆகிய இடங்களில் 1 செ.மீ. மழை பெய்தது. #Cyclone #Monsoon #IMD
    Next Story
    ×