search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒட்டப்பட்டியில் இன்று பொதுமக்கள் சாலை மறியல்
    X

    ஒட்டப்பட்டியில் இன்று பொதுமக்கள் சாலை மறியல்

    ஒட்டப்பட்டியில் இன்று குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் ஒட்டப்பட்டியை அடுத்துள்ள வள்ளுவர் நகரை சேர்ந்த பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் தருமபுரியில் இருந்து சேலம் செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். வள்ளுவர் நகரில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வசித்து வருகின்றனர். இங்கு வாழும் மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் மற்றும் குடிநீர் வசதி இருந்து வந்தது. ஆனால் தற்போது 3 மாதமாக குடிநீர் சரிவர வருவதில்லை. 

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஊராட்சி நிர்வாகம் மற்றும் தாசில்தாரிடம் மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை. எனவே அந்த பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் இன்று ஒட்டப்பட்டி பகுதியில் தருமபுரியில் இருந்து சேலம் செல்லும் சாலையிலும் சேலத்தில் இருந்து தருமபுரி செல்லும் சாலையிலும்  காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அதியமான் கோட்டை போலீசார், வட்டாட்சியர் பழனியம்மாள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை நிர்வாகிகள் சமாதானப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். குடிநீர் பிரச்சினையை சரி செய்வதாகவும் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×