search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்வேறு சம்பவங்களில் பலியான 14 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் உதவி- முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
    X

    பல்வேறு சம்பவங்களில் பலியான 14 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் உதவி- முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

    பல்வேறு சம்பவங்களில் பலியான 14 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNCM #EdappadiPalanisamy
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மதுரை மாவட்டம், மேலக்கால் கிராமத்தைச் சேர்ந்த ஞானபிரகாசம் மின் மோட்டார் பழுது நீக்கும் பணியின் போது உயிரிழந்தார்.

    கருப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் அருவியில் குளிக்கச் சென்ற போது, தவறி விழுந்து உயிரிழந்தார்.

    போடிநாயக்கன்பட்டி கிராம உட்கடை பேட்டை புதூர் கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி வாய்க்காலில் குளிக்கச் சென்ற போது ஆற்றில் விழுந்து உயிரிழந்தார்.

    கோயம்புத்தூர் மாவட்டம், ஊஞ்சவேலம்பட்டி கிராமத்தில், சாலை விபத்தில் ஜெயலட்சுமி, ஸ்ரீநிதி, ஆனந்தகிருஷ்ணன், நடராஜ் மற்றும் திருமுருகன் ஆகிய 5 பேர் உயிரிழந்தனர்.

    ஆண்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த குமார் குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

    தேவணாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சேவியர் பிரைட்டன் குமார் ஆழியார் அணையில் மூழ்கி உயிரிழந்தார்.

    திருவள்ளூர் மாவட்டம், போந்தவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகள் தர்ஷினி ஆலய திருவிழாவின் போது, பட்டாசு வெடித்ததில், உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், கே.திப்பனபள்ளி கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பன் மனைவி மூக்கம்மாள் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

    புதுக்கோட்டை மாவட்டம், பட்டரைச்சேரி கிராமத்தைச் சேர்ந்த காமாட்சி இரு சக்கர வாகனத்தில் சென்ற போது சாலை விபத்தில் உயிரிழந்தார்.

    அறந்தாங்கி வட்டம், பூவற்றக்குடி சரகம், திருநாளுர் கிராமத்தைச் சேர்ந்த மாரிக்கண்ணன் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

    இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த மேற்கண்ட 14 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #TNCM #EdappadiPalanisamy
    Next Story
    ×