search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் முன்னாள் மண்டல தலைவரை கொல்ல சதி - வெடிகுண்டு தயாரித்த 2 பேர் படுகாயம்
    X

    மதுரையில் முன்னாள் மண்டல தலைவரை கொல்ல சதி - வெடிகுண்டு தயாரித்த 2 பேர் படுகாயம்

    மதுரையில் முன்னாள் மண்டல தலைவரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி குண்டு தயாரித்தபோது வெடித்ததில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    மதுரை:

    மதுரை காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜபாண்டியன், அ.தி.மு.க. முன்னாள் மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர்.

    அதே பகுதியைச் சேர்ந்தவர் வி.கே.குருசாமி. தி.மு.க. பிரமுகரான இவரும் முன்னாள் கிழக்கு மண்டல தலைவர் ஆவார்.

    இருவருக்கும் இடையே கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இரு தரப்பிலும் அடுத்தடுத்து கொலைகள் நடந்துள்ளன. இதுவரை சுமார் 14 பேர் வரை கொல்லப்பட்ட நிலையில் இருதரப்பிலும் பழிக்குப் பழி வாங்கும் போக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    கடந்த 4-ந்தேதி வி.கே.குரு சாமியின் ஆதரவாளரான சுமைதூக்கும் தொழிலாளி வேல்குமார் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை வழக்கில் முன்னாள் மண்டல தலைவர் ராஜபாண்டியனின் ஆதரவாளர்கள் தேடப்பட்டு வருகிறார்கள். இதனிடையே இதற்கு பழிக்கு பழி வாங்க வி.கே.குருசாமியின் ஆதரவாளர்கள் சதி திட்டம் தீட்டினர். இதற்காக காமராஜபுரம் வாழைதோப்பு பகுதியில் வி.கே.குருசாமியின் ஆதரவாளர் முனுசாமி வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்துள்ளனர்.

    முனுசாமி மற்றும் திருத்தங்கல்லை சேர்ந்த பட்டாசு தயாரிக்கும் தொழிலாளி நரசிம்மன் (38) ஆகிய இருவரும் குண்டுகளை தயார் செய்தபோது எதிர் பாராதவிதமாக வெடி குண்டுகள் வெடித்தன.

    குண்டு வெடிப்பில் வீட்டின் மேற்கூரை பறந்தது. முனுசாமியும், நரசிம்மனும் பலத்த காயம் அடைந்தனர். பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுதொடர்பாக தெப்பக்குளம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    அங்கிருந்த 5 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் குண்டு தயாரிக்க வைத்திருந்த வெடிபொருட்களையும் கைப்பற்றினர். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முனுசாமி, நரசிம்மன் ஆகியோரைமீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் முன்னாள் மண்டல தலைவர் ராஜபாண்டியன் மற்றும் அவரது ஆதரவாளர்களை பழிக்குப்பழியாக கொல்லும் நோக்கில் இந்த நாட்டு வெடிகுண்டுகளை தயார் செய்தது தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×