search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவில்பட்டியில் நகைக்கடை அதிபரை கடத்திக் கொலை: தனிப்படை போலீசார் தீவிர விசாரணை
    X

    கோவில்பட்டியில் நகைக்கடை அதிபரை கடத்திக் கொலை: தனிப்படை போலீசார் தீவிர விசாரணை

    கோவில்பட்டியில் நகைக்கடை அதிபரை கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் என்கிற செந்தில் (வயது 40). இவர் கோவில்பட்டி தெற்கு பஜாரில் நகைக்கடை மற்றும் நகை அடகு கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ஞானதேவி (33). இவர்களுக்கு ஞானரோ‌ஷன் (11) என்ற மகனும், தேஜாஸ்ரீ (4) என்ற மகளும் உள்ளனர். ஞானரோ‌ஷன் 6-ம் வகுப்பும், தேஜாஸ்ரீ எல்.கே.ஜி.யும் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 30-ந் தேதி இரவில் செந்தில் தனது நகைக்கடையில் இருந்தவாறு மனைவியிடம் செல்போனில் பேசினார். அப்போது அவர் சிறிது நேரத்தில் நகைக்கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு வருவதாகவும், பொருட்கள் ஏதும் வாங்க வேண்டுமா? என்றும் கேட்டுள்ளார்.ஆனால் அவர் வீட்டுக்கு செல்லவில்லை.

    மறுநாள் (31-ந்தேதி) காலையில் ஞானதேவி தனது கணவரை தேடி நகைக்கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு ஒரு கதவு மட்டும் பூட்டியிருந்தது. மற்றொரு கதவு பூட்டப்படாமல் இருந்தது. ஆனால் அங்கு செந்தில் இல்லை. எனவே தனது கணவரை யாராவது கடத்தியிருக்கலாம் என கோவில்பட்டி கிழக்கு போலீசில் ஞானதேவி புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான செந்திலை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலையில் கோவில்பட்டி- குருமலை ரோட்டில் உள்ள கெச்சிலாபுரம் விலக்கு தரைமட்ட தாம்போதி பாலத்தின் ஓடை அருகில் காட்டுபகுதியில் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் ஒரு ஆண் பிணம் கிடந்தது.

    உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தவர் மாயமான நகைக்கடை அதிபர் செந்தில் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து செந்திலின் குடும்பத்தினரை சம்பவ இடத்திற்கு போலீசார் வரவழைத்து கொலை செய்யப்பட்டது செந்தில் என்பதை உறுதி செய்தனர். பின்னர் செந்தில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் செந்தில் மாயமான வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றினர். அவரை யாரோ மர்ம நபர்கள் கடத்தி கொண்டு சென்று தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர்.

    நகை அடமானம் பிடித்ததில் ஏற்பட்ட தகராறில் அவர் கடத்தி கொலை செய்யப்பட்டாரா? அல்லது தொழில் போட்டி காரணமாக கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை காரணமாக கடத்தி கொல்லப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலை குறித்து துப்புதுலக்கவும், கொலையாளிகளை கண்டுபிடிக்கவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ், சப்- இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், குருசந்திர வடிவேலு ஆகியோர் அடங்கிய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த தனிப்படையினர் சென்னை, பாண்டிச்சேரி மற்றும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். நகைக்கடை அதிபரை கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் செந்தில் நகைக்கடையின் அருகே காவல்துறை சார்பில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமிராவில் பதிவாகி உள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் செந்தில் மாயமான அன்று இரவு 2 நபர்கள் செந்திலை அவரது கடையில் இருந்து அழைத்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். அந்த 2 நபர்கள் யார்? என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #tamilnews
    Next Story
    ×