என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • விஜயலட்சுமி வழக்கில் 12 வாரத்துக்குள் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும்.
    • சீமானிடமும் மீண்டும் விசாரணை நடத்தி வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளனர்.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் வளசரவாக்கம் போலீசார் சீமானிடம் நேற்று இரவு 1¼ மணி நேரம் விசாரணை நடத்தினர்.

    விஜயலட்சுமி தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளின் பேரில் 63 கேள்விகள் சீமானிடம் கேட்கப்பட்டன. விஜயலட்சுமியுடன் ஏற்பட்ட பழக்கம், இருவரும் ஒன்றாக இருந்தது, பணம் கொடுத்ததாக கூறப்படுவது போன்ற விசயங்களை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் சீமான் பதில் அளித்துள்ளார்.

    இதனை வளசரவாக்கம் போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர். இருவரும் சம்மதத்தின் பேரிலேயே ஒன்றாக இருந்தோம் என்று சீமான் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    விஜயலட்சுமி வழக்கில் 12 வாரத்துக்குள் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும் என்று ஐகார்்ட்டு உத்தரவிட்டதையடுத்து, வழக்கு விசாரணை வேகமெடுத்துள்ளது.

    இதன் அடிப்படையிலேயே பெங்களூருக்கு நேரில் சென்று விஜயலட்சுமியிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சீமானிடமும் மீண்டும் விசாரணை நடத்தி வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளனர்.

    இதையடுத்து அடுத்த வாரத்தில் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர். இது தொடர்பாக போலீசார் கூறும்போது, "இந்த வழக்கு விசாரணை, கோர்ட்டு உத்தரவின் பேரிலேயே விரைவுப்படுத்தப் பட்டுள்ளதாகவும், 6 வாரங்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மும்மொழிக்கொள்கையை திணிப்பது தி.மு.க.வோ, அதன் தலைவரோ அல்ல.
    • உரிமைகளுக்காக பேசுவது, போராடுவது என்பது எந்த பிளவையும் ஏற்படுத்தாது.

    சென்னையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ரெயில்வே துறையில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை அமைச்சர் தீர்த்து, நாடு முழுவதும் ரெயில் விபத்துகள் ஏற்படாமல் கவனித்தால் நாட்டிற்கு மிகப்பெரிய பலனை ஏற்படுத்தும்.

    மும்மொழிக்கொள்கையை திணிப்பது தி.மு.க.வோ, அதன் தலைவரோ அல்ல.

    மும்மொழிக்கொள்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டால், புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டால் தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை தர மாட்டோம் என்று அதிகாரத்தோடு சொல்லக்கூடியவர்கள் தான் இங்கே பிரச்சனைகளை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள்.

    தமிழ்நாடு என்றாலே ஒரு இளக்காரம், தமிழ்நாட்டு மக்கள் எங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் அதனால் அந்த மக்களுக்கு எந்த திட்டங்களையும் செய்யக்கூடாது என்ற எண்ணத்தோடு செயல்படுவதுதான் பிளவை ஏற்படுத்துமே தவிர உரிமைகளுக்காக பேசுவது, போராடுவது என்பது எந்த பிளவையும் ஏற்படுத்தாது. சமூகத்தை ஒருங்கிணைக்கும்.

    சீமானின் வீட்டில் இருக்கும் பெண்கள், கட்சியில் இருக்கும் பெண்கள் கேட்க வேண்டும். இதைவிட கேவலமாக பேசுவதை பெண்களை எப்படி சகித்துக்கொண்டு, பொறுத்துக்கொண்டு, கேட்டுக்கொண்டு அந்த வீட்டில் இருக்கிறார்கள், கட்சியில் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை என்று கூறினார்.

    • நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3500-யையும், கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரமும் நிர்ணயிக்கப்படும்.
    • சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலங்களை கையகப்படுத்த தடை விதிக்கப்படும்.

    சென்னை:

    பாட்டாளி மக்கள் கட்சியின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டார்.

    அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    மாநிலத்தில் மொத்த பட்ஜெட்டில் 25 சதவீதம் வேளாண் துறைக்கு ஒதுக்கப்படும். அனைத்து விளைப் பொருள்களையும் அரசே கொள்முதல் செய்ய கட்டாயம் சட்டம் கொண்டு வரப்படும். விளைப் பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்வதற்காக ஓர் ஆணையம் அமைக்க வேண்டும். விவசாயிகளால் உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் லாபம் சேர்த்து விலை நிர்ணயம் செய்யப்படும். காய்கறி, பழங்கள் ஆகியவற்றுக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை விலை நிர்ணயம் செய்யப்படும்.

    நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3500-யையும், கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரமும் நிர்ணயிக்கப்படும். ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 30 ஆயிரம் காவிரி பல்பொருள் அங்காடிகள் அமைக்கப்படும். ரேசன் கடைகளில் நாட்டு சர்க்கரை, நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவை மானிய விலையில் வழங்கப்படும்.

    வனவிலங்குகள் தாக்கி உயிரிழப்போருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். வேளாண்மை துறையில் 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். நெல் உற்பத்தி திறனை அதிகரிக்க சிறப்பு திட்டம் கொண்டு வரப்படும்.

    விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறி, பழங்கள், மலர்கள் ஆகியவற்றை வீணாகாமல் பாதுகாக்க அனைத்து வட்டாரங்களிலும் குளிர்சாதன கிடங்குகள் அமைக்கப்படும்.

    சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலங்களை கையகப்படுத்த தடை விதிக்கப்படும். அதே போல் அரியலூர் மாவட்டத்தில் புதிய சிமெண்ட் தொழிற்சாலைகள், நெய்வேலி சுரங்க விரிவாக்க திட்டம், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் அனைத்து வகை தொழில் திட்டங்களுக்கும் தடை விதிக்கப்படும்.

    கோதாவரி-காவிரி, காவிரி-குண்டாறு ஆகிய நதிகள் இணைப்பு திட்டங்கள் நிறைவேற்றப்படும். ஒரு லட்சம் கோடியில் நீர்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும். தமிழ்நாட்டில் 25 இடங்களில் இயங்கும் மணல் குவாரிகள் மூடப்படும். ஊரக வேலைவாய்ப்பு திட்ட வேலை நாட்கள் 150 ஆக உயர்த்தப்படும். அந்த திட்டம் வேளாண்மை பணிக்கும் நீட்டிக்கப்படும்.

    திண்டிவனத்தில் வேளாண்மை கல்லூரி மற்றும் தஞ்சாவூர், வேலூர், நெல்லை ஆகிய இடங்களில் 3 புதிய வேளாண் கல்லூரிகள் உருவாக்கப்படும் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

    இந்நிகழ்ச்சியில் ஏ.கே.மூர்த்தி, திலகபாமா, வடிவேல் ராவணன், ஜெயராமன், அருள், அடையாறு வடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட் போட வைத்ததே பா.ம.க.தான். மாநிலம் முழுவதும் இயற்கை வளங்கள் கொள்ளை போய் இருக்கின்றன. பல இடங்களில் அழிக்கப்படுகின்றன. இதுதான் திராவிட மாடலா? நிலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் இப்போது ஆழ்கடலில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நமது கடல் பிராந்தியம் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எடுத்தாலும் இயற்கை சீற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    எனவே இதை அனுமதிக்க முடியாது. அனைத்து கட்சிகளும் இதை எதிர்த்து போராட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகம் முழுவதும் மும்மொழி கொள்கையை ஆதரித்து 5-ந்தேதி முதல் பா.ஜ.க. சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்க உள்ளோம்.
    • தொகுதி மறுசீரமைப்பு பற்றிய பிரச்சனையை எழுப்பியது முதலமைச்சர் தான்.

    சென்னை :

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 5-ந்தேதி நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. பங்கேற்காது என்று அக்கட்சி மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் கூட்டத்தில் பங்கேற்காததற்கான காரணங்களை, முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் விவரித்துள்ளார்.

    இதையடுத்து, திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறுகையில், தமிழகம் முழுவதும் மும்மொழி கொள்கையை ஆதரித்து 5-ந்தேதி முதல் பா.ஜ.க. சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்க உள்ளோம். தொகுதி மறுவரையறை விகிதாச்சார அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என அமித்ஷா தெளிவுப்படுத்தி உள்ளார். தொகுதி மறுசீரமைப்பு பற்றிய பிரச்சனையை எழுப்பியது முதலமைச்சர் தான். அப்பிரச்சனைக்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். இந்தி திணிப்பு நாடகத்தை மக்கள் ஏற்க மறுத்ததால் தொகுதி மறுவரையறை குறித்து பேசி திசை திருப்ப முயற்சி. மத்திய அரசு நிதி அளிக்கவில்லை என இன்னும் எவ்வளவு காலம் தான் பொய்களை பரப்ப முடியும் கூறினார். 




    • தனியார் எஸ்டேட்டில் டெட்டனேட்டர்கள் கொண்டு குண்டு தயாரித்து வந்த இளைஞர் உயிரிழந்தார்.
    • சடலத்தின் அருகில் இருந்து வெடிபொருட்களும் மீட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை தனியார் எஸ்டேட்டில் டெட்டனேட்டர்கள் கொண்டு குண்டு தயாரித்து வந்த இளைஞர் உயிரிழந்தார்.

    கேரளாவை சேர்ந்த சிபு என்ற இளைஞரின் உடல் தனியார் எஸ்டேட்டில் இருந்து மீட்கப்பட்டது. அவரது உடல் அருகில் இருந்து வெடிபொருட்களும் மீட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் சிறுமலை தனியார் எஸ்டேட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். வெடிபொருட்கள் மீட்கப்பட்ட நிலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டு காலம் எந்த வரியும் உயர்த்தப்படவில்லை.
    • தமிழகத்தில் இன்று நல்ல திட்டங்கள் எதுவும் இல்லை.

    திருப்பூர்:

    திருப்பூரில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., பங்கேற்று பேசியதாவது:-

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்து நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களையும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமைந்ததும் மீண்டும் செயல்படுத்தப்படும்.

    இன்று மின் கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி உயர்ந்து விட்டது. பாதாள சாக்கடை வரி 129 சதவீதம் உயர்ந்துவிட்டது. நாய், பூனை வளர்த்தாலும் பூனை குட்டி போட்டாலும் வரி போடுகிறார்கள்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டு காலம் எந்த வரியும் உயர்த்தப்படவில்லை. ஆனால் இன்று வீட்டு வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டு விலைவாசியும் உயர்ந்து விட்டது.

    தமிழகத்தில் இன்று நல்ல திட்டங்கள் எதுவும் இல்லை. இன்னும் 10 அமாவாசையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி அமையும். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அனைத்து மகளிருக்கும் மாதம் தோறும் ரூ.2000 வழங்கப்படும் என்றார்.

    • ஆண்டுதோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து நோன்பு கடைப்பிடிக்கப்படும்.
    • ஞாயிற்றுக்கிழமை ஆங்கில மாதம் 2.3.2025-ந்தேதி அன்று ரமலான் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.

    சென்னை:

    முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதாகும். இந்த மாதம் முழுவதும் நோன்பை கடைபிடிப்பார்கள்.

    இஸ்லாமிய காலண்டரில் 9-வது மாதம் ரமலான் ஆகும். இந்த புனித மாதத்தில் தான் மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய திருக்குர்ஆன் அருளப்பட்டது.

    ஆண்டுதோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து நோன்பு கடைப்பிடிக்கப்படும்.

    இந்த ஆண்டுக்கான ரமலான் நோன்பு நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதுகுறித்து தமிழக அரசின் தலைமை காஜி டாக்டர் சலாகுத்தீன் அய்யூப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஹிஜ்ரி 1446 ஷாபான் மாதம் 29-ந்தேதி வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 28.2.2025 தேதி அன்று மாலை ரமலான் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை.

    ஆகையால் ஞாயிற்றுக்கிழமை ஆங்கில மாதம் 2.3.2025-ந்தேதி அன்று ரமலான் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    நோன்பு என்பது கிழக்கு வெளுத்ததில் இருந்து சூரியன் மறையும் வரை உண்ணுதல், பருகுதல் உள்பட நோன்பை முடிக்கும் காரியங்களை விட்டு ஒருவர் தன்னை தடுத்து கொள்வதாகும்.

    புனித ரமலான் மாதத்தையொட்டி இரவில் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவார்கள். இந்த மாதம் முழுவதும் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவார்கள்.

    இந்த புனித மாதத்தில் முஸ்லிம்கள் தர்மம் எனும் ஜகாத்தில் ஈடுபடுவார்கள். மேலும் திருக்குர் ஆன் ஓதுதல், பிரார்த்தனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். ஒரு மாத கால நோன்பு முடிவில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். 

    • மனிதநேய கட்சியினர் அனைவரையும் கைது செய்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினர்.
    • மறியலில் ஈடுபட்ட 76 பேரை போலீசார் கைது செய்தனர்.

    காட்டுமன்னார்கோவில்:

    மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளை கைது செய்யக்கோரி பா.ஜ.க. வினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக மத்திய அரசை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பிரதமர் மோடியின் உருவப்படத்தை எரித்ததாக கூறப்படுகிறது. இதற்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று பா.ஜ.க.வினர் வலியுறுத்தினர்.

    இதனை தொடர்ந்து காட்டுமன்னார் கோவில் போலீசார் மனிதநேய மக்கள் கட்சியினர் 5 பேரை கைது செய்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி காட்டுமன்னார் கோவில் பஸ் நிலையம் அருகே பா.ஜ.க.வினர் மாவட்ட தலைவர் தமிழழகன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

    அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதை கேள்விபட்டதும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ஆனால், மனிதநேய கட்சியினர் அனைவரையும் கைது செய்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினர்.

    இந்த நிலையில் பா.ஜ.க.வினர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். ஆனாலும் முடியவில்லை.

    இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 76 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் காட்டுமன்னார் கோவிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    • மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 288 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
    • மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முன்தினம் தொடங்கி இன்று வரை 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என ஏற்கனவே வானிலை மையம் அறிவித்திருந்ததது. அதன்படி 2 நாட்களாக பெய்யும் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.

    நெல்லை மாவட்டம் முழுவதும் நேற்று பகலில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. பிற்பகலில் 3 மணி அளவில் திடீரென மழை பொழிய தொடங்கியது. தொடர்ந்து கனமழை பெய்ய ஆரம்பித்தது. சில இடங்களில் மாலையில் இடி-மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.

    அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. இதனால் வி.கே.புரம் பகுதியில் பழமையான மரம் முறிந்து விழுந்தது. அங்கு 19 மில்லிமீட்டர் மழை பெய்தது. சேரன்மகாதேவி, கன்னடியன் கால்வாய் பகுதியில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    களக்காடு சுற்றுவட்டார பகுதிகளில் அதிகபட்சமாக 36.40 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. சேரன்மகாதேவியில் 29 மில்லிமீட்டரும், நாங்குநேரி சுற்றுவட்டாரத்தில் 9 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், மற்றொரு புறம் பெரும்பாலான பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் நெற்கதிர்கள் செழித்து வளர்ந்திருந்தது. சில இடங்களில் அவை மழையால் வயல்களில் சாய்ந்தன.

    அணைகளை பொறுத்தவரை பிரதான அணையான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று பாபநாசம் அணை நீர்மட்டம் 80.60 அடியாக இருந்த நிலையில், நேற்று முழுவதும் பெய்த மழையால் 2 அடி உயர்ந்து 82.50 அடியை எட்டியது. அங்கு இன்று காலை வரை 48 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 85.35 அடியை எட்டியுள்ளது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 650 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 288 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் நேற்று காலையில் தொடங்கி இன்று அதிகாலை வரையிலும் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 8.1 சென்டிமீட்டரும், நாலு முக்கில் 7.2 சென்டிமீட்டரும், காக்காச்சியில் 6.6 சென்டிமீட்டரும், மாஞ்சோலையில் 5.5 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் இன்று காலையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு போலீசாரால் தடை விதிக்கப்பட்டது.

    மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் செம்மண் கலந்த கலரில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மேலும் காலை முதல் வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் தொடர்ந்து மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டு வருகிறது.

    தென்காசி மாவட்டம் முழுவதும் இரவில் பெய்த மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் இருக்கும் நெற்கதிர்கள் வயல்களுக்குள்ளேயே சாய்ந்து கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் தொடர்ந்து மழை பெய்தால் நெற்கதிர்கள் முளைக்கும் தருவாய்க்கு செல்லப்படும் எனவே தற்பொழுது பெய்த மழையினால் வெயிலின் தாக்கம் குறைந்து பொதுமக்களுக்கு நன்மை ஏற்பட்டாலும் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நெற்கதிர்கள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது என்பதால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.

    தென்காசி நகர் பகுதியிலும், செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மாலையில் தொடங்கி இரவு வரையிலும் பெய்த மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்சமாக 54 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    தென்காசியில் 24 மில்லிமீட்டரும், ஆய்க்குடியில் 40 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது. ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலையில் தொடங்கி சுமார் 2 மணி நேரம் விட்டு விட்டு மழை பெய்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம், மணியாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. எட்டயபுரம், வேடநத்தம், சூரன்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டுவிட்டு பெய்த மழையால் குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதிகபட்சமாக மணியாச்சியில் 18 மில்லிமீட்டரும், ஓட்டப்பிடாரத்தில் 15 மில்லிமீட்டரும் மழை பெய்தது. கயத்தாறில் 6 மில்லிமீட்டரும், கடம்பூரில் 7 மில்லிமீட்டரும் மழை பெய்தது. 

    • கட்சியை பலப்படுத்தும் பணிகளில் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
    • 2026-ல் முதலமைச்சர் வேட்பாளராக விஜயை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கவே திட்டமிட்டுள்ளதாக த.வெ.க.வினர் கூறினர்.

    சென்னை:

    நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தொடங்கினார்.

    அதன்பிறகு கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய அவர், கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந்தேதி மிகவும் பிரமாண்டமாக நடத்தி காட்டி மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

    இந்த நிலையில் 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு மாற்றாக, அ.தி.மு.க.வுடன் தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இரு கட்சிகளிடையே கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

    இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2-ம் ஆண்டு விழா மாமல்லபுரம் அருகே உள்ள சொகுசு விடுதியில் கடந்த 26-ந்தேதி நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

    இதில் பங்கேற்று பேசிய தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய், அறிஞர் அண்ணா கட்சி ஆரம்பித்து 1967-ம் ஆண்டு முதல் முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். புரட்சித்தலைவர் எம்.ஜி. ஆர். கட்சி ஆரம்பித்து 1977-ம் ஆண்டு தேர்தலில் நின்று ஆட்சியை பிடித்தார். அவர்கள் இருவருமே மிகப்பெரிய வெற்றியை பெற்றனர். அதுதான் வரலாறு, அதேபோல் 2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வரலாறு படைக்கும் என்றார்.

    இந்த விழாவில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் பங்கேற்று பேசினார். '35ஆண்டு கால அரசியலில் விஜய் புதிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளார். விஜய் தலைமையில் தமிழக வெற்றிக்கழகம் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்' என்று அவர் பேசினார்.

    இந்த நிலையில் 2026 சட்டசபை தேர்தலில் விஜய், அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரமாட்டார். விஜய் தனித்து நின்று ஆட்சியை பிடிப்பார் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன் சுராஜ் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோர் தந்தி டி.வி.க்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:-

    தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க. விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால் 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி இல்லை.

    தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் தனித்து போட்டியிட உள்ளது. தனித்து தேர்தலை சந்திப்பதற்காக கட்சியின் தலைவர் விஜய் வியூகம் வகுத்து வருகிறார். தேர்தலில் விஜய் தனித்து போட்டியிட்டு ஆட்சியை பிடிப்பார்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    விஜய் தனித்து போட்டியிடப் போவதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்து இருப்பது அ.தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பிரசாந்த் கிஷோரின் இந்த பிரத்யேக பேட்டி இன்று இரவு 9 மணிக்கு தந்தி டி.வி.யில் முழுமையாக ஒளிபரப்பாக உள்ளது.

    • பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது.
    • நூல் விலை மற்றும் மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்படுகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்ப, நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரித்து வருவது வழக்கம். நூல் விலை மற்றும் மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மார்ச் மாதத்துக்கான நூல் விலையை நூற்பாலைகள் இன்று அறிவித்தன. இதில் நூல் விலையில் மாற்றமில்லை. இதனால் தொழில் துறையினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

    அதன்படி கிலோவுக்கு 10-ம் நம்பர் கோம்டு நூல் ரூ.175, 16-ம் நம்பர் ரூ.185, 20-ம் நம்பர் கோம்டு நூல் ரூ.243, 24-ம் நம்பர் ரூ.255, 30-ம் நம்பர் ரூ.265, 34-ம் நம்பர் ரூ.283, 40-ம் நம்பர் ரூ.303, 20-ம் நம்பர் செமி கோம்டு ரூ.240, 24-ம் நம்பர் ரூ. 250, 30-ம் நம்பர் ரூ.260, 34-ம் நம்பர் ரூ. 273, 40-ம் நம்பர் ரூ.293-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • ஜனாதிபதி திரவுபதி முர்மு கடிதம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • நல்ல உடல் நலத்துடன் அவரது பொதுவாழ்வு தொடர வாழ்த்துகிறேன்.

    சென்னை:

    தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று 72-வது பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு கடிதம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தொலைபேசி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வாழ்த்து வருமாறு:-

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் தலைமையில் தமிழ் நாடு எல்லாத் துறைகளிலும் திசைகளிலும் முன்னேறும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நலமுடன் நல்லாட்சி நடத்துக.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் தள பதிவில்,

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதை தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மும்மொழிகளிலும் அவர் பதிவிட்டு உள்ளார்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து மடலில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று 72-வது பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் அவரது பொதுவாழ்வு தொடர வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து செய்தியில்:-

    இன்று 72-வது பிறந்தநாள் கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    நடிகர் சத்யராஜ் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது:-

    இந்திய ஒன்றியத்தின் முதல்வர்களில் முதலிடம் வகிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினை வாழ்த்துவதில் மட்டமற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    மத்திய மந்திரி எல்.முருகன், முன்னாள் மத்திய மந்திரி கே.சி.வேணுகோபால், ராஜீவ் சுக்லா எம்.பி., வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சமூக வலைதளம் மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    ×