என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Kovi Chezhian"

    • தி.மு.க தலைவர்களின் பிறந்தநாள் ஏழை, எளிய மக்கள் திருவிழாவாக கொண்டாடும் நிகழ்ச்சியாக நடந்து வருகிறது.
    • ஆளுநரின் வரைமுறை என்ன? அதிகார துஷ்பிரயோகம் என்ன? என்பது குறித்து பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூா்:

    தஞ்சையில் இன்று மாநகர, பகுதி இளைஞரணி சார்பில் நடந்த இலவச மருத்துவ முகாமை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என யார் பிறந்தநாள் என்றாலும் அறிவுப்பூர்வமான, ஆக்கபூர்வமான பிறந்த நாளாக கொண்டாட வேண்டும் என்பதுதான் தி.மு.க தலைவர்களின் நோக்கம். அதன் அடிப்படையில் தான் இன்று இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது .

    தலைவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதை தொண்டர்கள் செய்யும் ஒரே இயக்கம் தி.மு.க தான். உதயநிதி ஸ்டாலின் 48-வது பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 6-ம் தேதி தொடங்கி ஜனவரி 1-ந்தேதி வரை 48 நிகழ்ச்சிகளை இளைஞர் அணி நிர்வாகிகள் செய்து வருகின்றனர். அதில் ஏழை எளிய மக்களுக்கு உணவுகள் வழங்குவது, அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து முகாம்கள் நடத்துவது, இளைஞர்கள், மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்துவது, பொது கூட்டங்கள் நடத்துவது என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். எனவே தி.மு.க தலைவர்களின் பிறந்தநாள் ஏழை, எளிய மக்கள் திருவிழாவாக கொண்டாடும் நிகழ்ச்சியாக நடந்து வருகிறது.

    ஆளுநரின் வரைமுறை என்ன? அதிகார துஷ்பிரயோகம் என்ன? என்பது குறித்து பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் தமிழ்நாடு தான் எங்களுக்கு தாய் வீடு என கூறி வருகின்றனர். உச்சநீதிமன்ற தீர்ப்பில் ஒரு மாநிலத்தில் இரண்டு அதிகார மையங்கள் கிடையாது. சட்டமன்றங்கள் கூடி அமைச்சரவை என்ன முடிவு எடுத்து அறிவிக்கிறதோ அதற்கு ஆளுநர் ஒப்புதல் தரவேண்டும் என கூறியுள்ளது. இந்த தீர்ப்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சம்மட்டி அடி அடிப்பது போல் உள்ளது. இந்த உண்மை செய்தியை வெளிக்கொண்டு வந்தால் அது மத்திய அரசுக்கு மற்றும் மத்திய அரசுக்கு துணை போகும் ஆளுநர்களுக்கு பலவீனம் என்பதை தெரிந்து தான் தெளிவான ஒரு அறிவிப்பை வெளியிடுவதில் பல்வேறு சமூக வலைதளங்கள் ஒரு மேக மூட்டத்தை போல் மறைக்க பார்க்கிறது. ஆனால் நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் தெளிவான அறிக்கை வெளியிட்டுள்ளார். முதலமைச்சருக்கு தான் அதிகாரம்

    மக்களாட்சி தத்துவம் என்பது முதலமைச்சருக்கு தான் அதிகாரம் உள்ளது. ஒருவேளை உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்குப் பிறகு ஆளுநர் பித்தலாட்டம் செயலை செய்வாரானால் சட்டத்தின் தீர்ப்புப்படி தெளிவுபடுத்தி மாநில முதலமைச்சருக்கு தான் முழு அதிகாரம் உண்டு. அது துணைவேந்தரை நியமிப்பது என்றாலும், பல்கலைக்கழகங்கள் தொடங்குவது என்றாலும் அமைச்சரவை என்ன தீர்மானம் கொண்டு வருகிறதோ அதற்கு ஒப்புதல் தரவேண்டிய கடமைதான் ஆளுநருக்கு உண்டு என்பது தெளிவுபடுத்தப்படும். இந்தத் தீர்ப்பின் விரிவாக்கம் ஒன்று அமைச்சரவை அனுப்பிய மசோதாவிற்கு கையெழுத்து இட வேண்டும், இல்லையெல் திருப்பி அனுப்ப வேண்டும்.

    அப்படி இல்லை என்றால் ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் ஆளுநரின் வேலை. அதைத் தவிர நீண்ட நாட்களாக மசோதாவை வைத்துக் கொண்டு இருப்பது அவரது வேலை அல்ல என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனை அவர் புரிந்து செயல்பட வேண்டும் என்றார். 

    • தாழ்தள பஸ்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக, ஏறவும் இறங்கவும் முடியும்.
    • கல்லூரி செமஸ்டர் தேர்வு என்பது பல்கலைக்கழகத்தால் வரையறுக்கப்பட்ட விஷயம்.

    தஞ்சாவூா்:

    தஞ்சையில் இன்று 5 புதிய சொகுசு தாழ்தளப் பஸ்கள் சேவையை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பான ஆட்சியால் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தியவர் கருணாநிதி. அவரது வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஏராளமான நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    மாற்றுத்திறனாளிகள் பஸ்களில் ஏறி, இறங்க சிரமப்படுவதை உணர்ந்து தாழ்தள பஸ்கள் சேவையை அதிகப்படுத்தி உள்ளார். இந்த தாழ்தள பஸ்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக, ஏறவும் இறங்கவும் முடியும். மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி முதியவர்கள், பெண்களுக்கும் இந்த பஸ்கள் எளிய முறையில் இருக்கும். அனைத்து விதமான சிறப்பு அம்சங்களும் இந்த பஸ்கள் கொண்டது.

    கல்லூரி செமஸ்டர் தேர்வு என்பது பல்கலைக்கழகத்தால் வரையறுக்கப்பட்ட விஷயம். இதனைத் தேர்தல் ஆணையம் நன்கு அறியும். எனவே விடுப்பு காலங்களில் தான் தேர்தல் நடத்துவதற்கான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும். சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே செமஸ்டர் தேர்வு நடத்தப்பட மாட்டாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொதுமக்கள் இருந்த இடத்திலேயே ஆவணங்களை பெறும் வகையில் ஆவணக்காப்பக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
    • தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் ஆவணக்காப்பக இணையதளத்தை தொடங்கி வைத்தார்.

    சென்னை:

    தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறையின் சார்பில் 50-வது தேசிய ஆவணக்காப்பாளர்கள் குழு கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இதில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்று, 'பொதுமக்கள் நிலஆவணங்களை எளிதில் பெறும் வகையில் முதற்கட்டமாக 1864 முதல் 1897-ம் ஆண்டு வரை (பழைய செட்டில்மென்ட் ரிஜிஸ்டர்) மற்றும் 1861 முதல் 1940-ம் ஆண்டு வரையிலான இனாம் உண்மை பதிவேடு இணையத்தில் பதிவேற்றப்பட்டு பொதுமக்கள் இருந்த இடத்திலேயே ஆவணங்களை பெறும் வகையில் www.digitamiinsduarchives.gov.in ஆவணக்காப்பக இணையதளத்தை தொடங்கி வைத்தார்.

    மேலும், 'ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக 1857-ம் ஆண்டுக்கு முன்பு தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் தியாகங்கள்', 'மைசூர் போர்களும் தமிழ்நாடு கைப்பற்றப்பட்ட முறைகளும்' ஆகிய 2 நூல்களை வெளியிட்டார்.

    கூட்டத்தில் தேசிய ஆவணக்காப்பக தலைமை இயக்குனர் சஞ்சய் ரஸ்தோகி, தமிழ்நாடு உயர்கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் பொ.சங்கர், தமிழ்நாடு ஆவணக்காப்பக முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர் ஹர்சஹாய் மீனா, 20 மாநில ஆவணக்காப்பக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • கவர்னர் வந்ததிலிருந்து தமிழகத்தில் உயர்கல்வித்துறைக்கு முட்டுக்கட்டை போடும் முயற்சி தான்‌ எடுத்து கொண்டு இருக்கிறார்.
    • பா.ஜ.க ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டையும், தமிழக முதல்வரையும் வஞ்சிக்கிறது.

    தஞ்சாவூா்:

    தஞ்சையில் இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-

    கும்பகோணம் கலைஞர் பல்கலைக்கழகத்திற்கு தற்காலிக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நிரந்தர இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் மூலம் கோப்புகள் தலைமைச் செயலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழக கவர்னர் இதுவரை ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்துகிறார்.

    உயர்கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில் நானும் உயர்கல்வித்துறை செயலாளரும் கவர்னரை சந்தித்து இது சம்பந்தமாக கோரிக்கை வைக்க நேரம் கேட்டுள்ளோம். இதுவரை நேரம் ஒதுக்கவில்லை. காத்துக் கொண்டிருக்கிறோம். அழைக்கும் பட்சத்தில் கலைஞர் பல்கலைக்கழகத்தின் அவசியம், இதனால் பயனடையும் மாணவர்கள் குறித்து கருத்துக்களை எடுத்துரைப்போம். தமிழக கவர்னர் விரைவில் அழைக்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம்.

    கவர்னர் வந்ததிலிருந்து தமிழகத்தில் உயர்கல்வித்துறைக்கு முட்டுக்கட்டை போடும் முயற்சி தான் எடுத்து கொண்டு இருக்கிறார். அந்த முயற்சி, தடைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து உயர் கல்வித்துறையை உச்சத்துக்கு கொண்டு செல்வோம்.

    தி.மு.க. தான் திராவிட பற்று-தமிழ் பற்று கொள்கையில் பின் வாங்காமல் உள்ளது. பா.ஜ.க ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டையும், தமிழக முதல்வரையும் வஞ்சிக்கிறது.

    17 மாநிலங்களில் ஆளுகிற பா.ஜ.க மற்றும் மத்தியில் ஆளும் பா.ஜ.க செய்கிற அநீதியை கண்டிக்கிற ஒரே ஒற்றைத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். அது அவர்களுக்கு பிடிக்கவில்லை. தமிழக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். அதை எல்லாம் விரைவில் உடைத்து எரிந்து தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ.உடன் இருந்தார்.

    • கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதற்கான தேதியை அரசு அறிவிக்கும்.
    • கல்லூரிகளில் ராகிங் கொடுமையை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சைக்கு வருகிற 15,16 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கருணாநிதி சிலை திறப்பு, கட்சி நிர்வாகிகள் சந்திப்பு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    இந்த நிலையில் இன்று தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் முதலமைச்சரை வரவேற்கும் விதமாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் ராட்சத பலூன் பறக்க விடப்பட்டன.

    பின்னர் அமைச்சர் கோவி.செழியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    முதலமைச்சர் தஞ்சை வருகையை முன்னிட்டு மத்திய, தெற்கு, வடக்கு மாவட்டங்கள் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது. அதன் ஒருபகுதியாக முதலமைச்சரை வரவேற்கும் விதமாக இன்று தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது. மொத்தம் தஞ்சை மாநகரில் 3 இடங்களில் ராட்சத பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளன.

    மேட்டூர் அணையில் இருந்து இன்று முதலமைச்சர் தண்ணீர் திறந்து விட்டுள்ளார். டெல்டா மாவட்டங்களில் விதைநெல், இடுபொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. தட்டுபாடின்றி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதத்திற்கு முன்பாகவே ஆறு, குளம், வாய்க்கால்கள் தூர்வாருவது குறித்து முடிவு செய்யப்பட்டு தூர்வாரப்பட்டன. கடைக்கோடி வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதற்கான தேதியை அரசு அறிவிக்கும்.

    கல்லூரிகளில் ராகிங் கொடுமையை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கல்லூரி முதல்வர், துறை தலைவர்கள், மாணவர் பிரதிநிதிகள், பெற்றோர் சங்க நிர்வாகிகள் என ஐவர் அல்லது ஏழு பேர் கொண்ட கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழுவினர் மாணவர்கள் கல்லூரி வருவது முதல் கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்வது வரை கண்காணிப்பர். மேலும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. எனவே பள்ளி, கல்லூரிகளில் ராகிங் குற்றம் நடைபெறா வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    முதலாம் ஆண்டு டிப்ளமோ முடித்தவர்கள் பொறியியலில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது தொடர்ந்து வந்த கோரிக்கை. அதனை தடையில்லாமல் நிறைவேற்றி வருகிறோம். கடந்த 4, 5 ஆண்டுகளில் தேர்வு எழுத முடியாமல் விடுப்பட்ட மாணவர்களும் தொடர்ந்து படிக்கும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இடைநிற்றல் என்பது தொழில்கல்வி, ஐ.டி.ஐ, பாலிடெக்னிக்கிலும் இருக்க கூடாது என்பதற்காகவும், இடைநிற்றல் இல்லாத தொழில்கல்வி இருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். அதன் அடிப்படையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதன் மூலம் இடைநிற்றல் என்பது உயர்கல்வியிலும் இல்லை என்ற நிலையை அடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக கவர்னர் வேந்தர் பதவிக்குரிய கண்ணியத்தை தவறவிட்டுள்ளார்.
    • ஊழல்வாதிக்கு கவர்னர் நடத்திய விழா பெருத்த அவமானத்திற்கு உரியது என்றார்.

    சென்னை:

    உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி - லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை வளையத்திற்குள் இருக்கும் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகன்னாதனுக்கு பிரிவு உபசார விழாவினை தமிழ்நாடு கவர்னர்-அதுவும் கவர்னர் மாளிகையிலேயே நடத்தியிருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பல்கலைக்கழகங்கள் தோறும் மதவாத பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் கவர்னர், ஊழல் வழக்கில் உள்ளவரையும்- அதிலும் குறிப்பாக பினாமி கம்பெனியை உருவாக்கி ஊழல் புகாரில் சிக்கியுள்ளவரை எந்த முகத்தை வைத்துக்கொண்டு கவர்னர் மாளிகையில் வரவேற்றார்?

    முறைகேட்டுப் புகாரில் கைது செய்யப்பட்டு, காவல் நிலைய விசாரணைக்கு ஏறி இறங்கிக் கொண்டிருப்பவர். துணைவேந்தராக இருக்கும்போதே சாதிப் பெயரைச் சொல்லி ஒருவரைத் திட்டியதால் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழான வழக்கில் கைது செய்யப்பட்டவர்.

    விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் கைதுசெய்ய நேரிடும் என்று ஐகோர்ட்டாலேயே எச்சரிக்கப்பட்டவர். இவருக்கு பதவிக்காலம் முடிந்த பின்னரும் பணி நீட்டிப்பு வழங்கியதோடு - இப்படிப்பட்ட துணைவேந்தர் ஒருவருக்கு ராஜ்பவனில் பிரிவு உபசார விழாவினையும் நடத்தியதன் மூலம் "வேந்தர்" என்ற பொறுப்பில் இருப்பதற்கான தகுதியை கவர்னரே இழந்துவிட்டார் என்றுதான் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

    தி.மு.க. ஆட்சிக்கு எதிராக- தனது மதவாத கருத்துக்களைப் பரப்ப பாடுபட்ட துணைவேந்தருக்கு பாராட்டு விழா நடத்தியுள்ள கவர்னர், வேந்தர் பதவிக்குரிய கண்ணியத்தை தவறவிட்டுள்ளதோடு- மற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு எல்லாம் ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளார்.

    உயர்கல்வியின் மாண்பை சீர்குலைத்துள்ளார். ஊழல்வாதிக்கு கவர்னர் நடத்திய விழா பெருத்த அவமானத்திற்குரியது மட்டுமின்றி- பல்கலைக்கழக வரலாற்றில் கவர்னர் தமிழ்நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தி விட்டார் என தெரிவித்துள்ளார்.

    • இனிப்பும் உப்பும் எப்படி ஒரே சுவை தர முடியும்?
    • உங்களின் 'டபுள் ரோல்' நடிப்பு தமிழ்நாட்டில் எடுபடாது.

    சென்னை:

    உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களை எல்லாம் பல மாதங்களாகக் கிடப்பில் போட்ட ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு இந்தியா முழுவதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க குடியரசுத் தலைவருக்கும் 3 மாதம் காலக்கெடு நிர்ணயித்து உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம்.

    இந்த வடுக்களையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியாமல், வழக்குப் போட்டு வென்ற தமிழ்நாடு அரசுக்கு எதிராக வழக்கம் போல ஒலமிட்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள். புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவில் பேசிய ஆளுநர் ரவி, அபத்தமான கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்.

    "சமூகநீதிக் குறித்துப் பேசும் இந்த மாநிலத்தில் செருப்பு போட்டுச் செல்வதற்காகவும், இரு சக்கர வாகனத்திற்காகவும் தலித்துகள் தாக்கப்படுகின்றனர்" எனப் பச்சை பொய்யைச் சொல்லியிருக்கிறார் ஆளுநர். 'பட்டியல் சாதியினருக்கு எதிரான குற்றங்களில் பீகார் இரண்டாவது இடத்தில் இருக்கிறது' எனத் தேசியப் பட்டியல் சாதியினருக்கான ஆணையத்தின் (NCSC) தலைவர் விஜய் சாம்ப்லா 2023-இல் சொன்னார்.

    ஆளுநர் அவர்களே. உங்கள் சொந்த மாநிலத்தில் இப்படி அநீதி நடந்து கொண்டிருக்கும் போது தமிழ்நாட்டைப் பற்றிப் பேச உங்களுக்குத் தகுதி இருக்கிறதா? பீகாரில் பா.ஜ.க. தயவில்தான் ஆட்சி நடக்கிறது. அதைக் கண்டித்துப் பேச முடியுமா உங்களால்?

    அம்பேத்கரைப் பற்றியெல்லாம் உருகிப் பேசியிருக்கிறீர்கள். "அனைவரும் ஒன்று. அனைவரும் சமம் என்பதைத்தான் சனாதன தர்மம் கூறுகிறது" எனச் சனாதனத்திற்குப் பிராண்ட் அம்பாசிடராகப் பேசிக் கொண்டிருக்கும் நீங்கள், சனாதனத்தை எதிர்த்தப் புரட்சியாளர் அம்பேத்கரைப் புகழ்வது பொருத்தமாகவா இருக்கிறது?

    சனாதனம் போதித்த சாதியால் ஏற்பட்ட இழிவுகளை அகற்றத்தானே அம்பேத்கர் போராடினார். இனிப்பும் உப்பும் எப்படி ஒரே சுவை தர முடியும்?

    சனாதனத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டே பட்டியலின மக்களைப் பற்றிக் கவலைப்படுகிறீர்களே! உங்களின் 'டபுள் ரோல்' நடிப்பு தமிழ்நாட்டில் எடுபடாது.

    நாடு முழுவதும் பட்டியல் மற்றும் பழங்குடியினத்தவர் மீதான வன்கொடுமைகளில் 97.7 விழுக்காடு வழக்குகள் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 13 மாநிலங்களில்தான் பதிவாகியிருக்கின்றன என ஒன்றிய அரசின் அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. 2024-ஆம் ஆண்டில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினத்தவர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவான வழக்குகள் குறித்த ஒன்றிய அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, நாடு முழுவதும் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல் குறித்து 51,656 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில், 12,287 வழக்குகள் உத்தரப் பிரதேசத்தில் பதிவாகியிருக்கிறது. இது, மொத்தம் பதிவானவற்றில் 23.78 விழுக்காடாகும்.

    உத்தரப் பிரதேசத்திற்கு அடுத்த இடத்தில் ராஜஸ்தானில் 8,651 வழக்குகளும் - மத்தியப் பிரதேசத்தில் 7,732 வழக்குகளும் பீகாரில் 1,799 வழக்குகளும் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்த இடங்களில் ஒடிசாவில் 5.93 விழுக்காடும் மகாராஷ்டிராவில் 5.24 விழுக்காடும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த 6 மாநிலங்களில் மட்டும் 81 விழுக்காடு வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த ஆறு மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது. தமிழ்நாட்டில் 3 விழுக்காடு வழக்குகளே பதிவானது.

    நாட்டிலேயே பட்டியலின மக்களுக்கு எதிராக அதிகளவில் வன்முறைகளும் கொடுமைகளும் நடைபெறுவது பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில்தான் என்பதை ஒன்றிய அரசின் தரவுகளே சொல்கின்றன. சாதிக் கொடுமைகளுக்கு அடிப்படையான மனுநீதியை உயர்த்திப் பிடிக்கும் சனாதனி ஆளுநர் ஆர்.என்.ரவி, சாதிக்கொடுமைகளுக்கு எதிராகப் போராடும் சமூகநீதி மாநிலத்தில் நீலிக்கண்ணீர் சிந்துகிறார்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜனநாயக முறையில் செயலாற்றி வரும் மாநில அரசுக்குக் குடைச்சலைக் கொடுக்கிறார். உச்சநீதிமன்றம் ஓங்கிக் குட்டிய பிறகும் அந்த அவமானத்தைத் துடைக்க அவதூறுகளை அள்ளி வீசுகிறார். ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுவதைப் போல் பட்டியலின மக்கள் மீது கரிசனத்தைக் கொட்டுகிறார்.

    உங்களை ஆளுநராக நியமித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் அம்பேத்கரைப் பற்றிச் சொன்னது உங்களுக்கு நினைவில் இருக்கிறதா ஆளுநரே! "இந்தக் காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என அவரின் பெயரைக் கோஷமிடுவது பேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்குப் பகவானின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்குச் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்" என அமித்ஷா நாடாளுமன்றத்தில் சொன்னபோது நாடு முழுவதும் கொந்தளிப்பு எழுந்தது.

    அம்பேத்கர் தலித் தலைவர் அல்ல; அவர் பாரதத் தாயின் மகன்" என இன்றைக்குச் சொல்லும் ஆளுநர் அவர்களே.. அமித்ஷா சொன்ன போது ராஜ்பவனின் தர்பார் மண்டபத்தில் ஒரு கண்டனக் கூட்டத்தை ஏன் நடத்தவில்லை? அமித்ஷா சொல்வது போல உங்களுக்கும் அம்பேத்கர் பெயரைக் கோஷமிடுவது பேஷனாகிவிட்டதா?

    ஆரியம் பேசும் நீங்கள் அம்பேத்கரைப் போற்றி பாடுகிறீர்கள். புரட்சியாளர் அம்பேத்கரைப் பற்றிப் பேசவோ திராவிடத்தைத் தூற்றவோ உங்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • மாணவர்களின் நலனில் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்ய வேண்டாம்.
    • கவர்னரின் செயல்பாடு என்ன என்பதை இந்தியா உற்று நோக்குகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகே இராராமுத்திரைக் கோட்டை ஊராட்சியில் இன்று புதிய பொது விநியோக கட்டிடத்தை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பல்கலை கழக துணைவேந்தர் நியமனத்தில் கவர்னரின் செயல்பாடு என்ன என்பதை இந்தியா உற்று நோக்குகிறது. ஒவ்வொரு மாநில கவர்னர்களுக்கும் உரிமை என்ன, கடமை என்ன என்பதை அரசியலமைப்பு சட்டம் பல்வேறு நெறிமுறைகளில் சொல்லி இருக்கிறது. அதை மீறும் வகையில் துணைவேந்தர் பதவி நிரப்பப்படாமல் உள்ளது.

    மூன்று உறுப்பினர்கள் தேர்வுக் குழு என்பதை நான்காக அதிகரிப்பதன் மூலம் அதை செயல்படாமல் தடுப்பது கவர்னரின் நோக்கமாக உள்ளது. இது ஒருபோதும் நிறைவேறாது. முறைப்படி எல்லா நடவடிக்கையும் எடுக்கப்பட்டு துணைவேந்தர் பணி நியமனம் செய்யபடும்.

    மாணவர்களின் நலனில் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்ய வேண்டாம். மாணவர்கள் நலன் கருதி சிந்திக்கின்ற செயல்படுகின்ற முதலமைச்சர் நமது தமிழக முதலமைச்சர் மட்டும்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மூன்றரை ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த செட் தேர்வு மார்ச் மாதம் ஆசிரியர் வாரியத்தால் நடத்தப்பட உள்ளது.
    • செட் தேர்விற்கு பிறகு மார்ச் மாத இறுதியில் ஆயிரம் கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்க உள்ளோம்.

    ஈரோடு:

    ஈரோடு சிக்கய்ய நாயக்கர் (சி.என்.சி) கல்லூரி அரசு கல்லூரியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்று உயர் கல்வித்துறை அமைச்சர் செழியன், தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி வளாகத்தில் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

    அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சி.என்.சி. கல்லூரியை நிர்வாகத்தினர் நடத்த முடியாத சூழ்நிலையில் தமிழக அரசு நடத்துவதற்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக நீண்ட காத்திருப்பிற்கு பிறகு கிடைத்துள்ளது.

    மொத்தம் 52 ஏக்கர் கொண்ட இக்கல்லூரியில் 40 ஏக்கரில் விளையாட்டு அரங்கம், மிகப்பெரிய நூலகம் மற்றும் ஐ.ஏ.எஸ் அகாடமி அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். இது குறித்து உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் ஆய்விற்கு வந்துள்ளார் என்றார்.

    பின்னர் உயர்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் கோவி.செழியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பெரியாரால் உருவாக்கப்பட்டு மாணவர்களின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இக்கல்லூரி பல தலைவர்களை உருவாக்கியுள்ளது. நிர்வாக காரணங்களால் தற்போது தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இங்கு விளையாட்டு அரங்கம், மிகப்பெரிய நூலகம் மற்றும் ஐ.ஏ.எஸ் அகாடமி அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். இது பெரியாருக்கான பாராட்டிற்குரிய செயல். விரைவில் இத்திட்டத்தை செயல்படுத்த உயர்க்கல்வித்துறை பணிகளை துரிதப்படுத்தும்.

    ஈரோட்டில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் முதுகலை விரிவாக்க மையம் தொடர்ந்து நடத்த வழிவகை உள்ளதா என்பது குறித்து முதலமைச்சருடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு 2500 கவுரவ விரிவுரையாளர்கள் அறிவித்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இது போதிய அளவில் இல்லை. மூன்றரை ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த செட் தேர்வு மார்ச் மாதம் ஆசிரியர் வாரியத்தால் நடத்தப்பட உள்ளது. விரைவில் அதற்கான ஹால்டிக்கெட் வழங்கப்பட உள்ளது. 6 மாதத்திற்கு ஒருமுறை செட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதால் செப்டம்பர் அல்லது அக்டோபரில் நடத்தி ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப உள்ளோம். கடந்த அ.தி.மு.க. 10 ஆண்டுகள் ஆட்சியில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டது. தி.மு.க. ஆட்சி அமைந்த ஒன்றரை ஆண்டுகளில் 5 ஆயிரம் ரூபாய் உயர்த்தி தற்போது 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

    செட் தேர்விற்கு பிறகு மார்ச் மாத இறுதியில் ஆயிரம் கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்க உள்ளோம். ஜூன் மாதத்தில் 4 ஆயிரம் நிரந்தரப் பேராசிரியர்கள் நியமிக்க உள்ளோம். அதற்கான கேள்வித்தாள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஜூன் மாதத்தில் 4 ஆயிரம் பேராசிரியர்கள் பணி நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது.

    ஈரோட்டில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வந்துள்ளது. இதுகுறித்து முதலமைச்சரிடம் கலந்து பேசி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, எம்.பி.க்கள் கே.இ.பிரகாஷ், அந்தியூர் செல்வராஜ், சந்திர குமார் எம்.எல்.ஏ., மேயர் நகரத்தினம், மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட துணைச்செயலாளர் செந்தில்குமார், மண்டல தலைவர் பழனிச்சாமி, இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் திருவாசகம் உள்பட பலர் உடன் இருந்தனர். 

    ×