என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கும்பகோணம் கலைஞர் பல்கலைக்கழகம் விவகாரம்: கவர்னர் அழைக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை- அமைச்சர்
    X

    கும்பகோணம் கலைஞர் பல்கலைக்கழகம் விவகாரம்: கவர்னர் அழைக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை- அமைச்சர்

    • கவர்னர் வந்ததிலிருந்து தமிழகத்தில் உயர்கல்வித்துறைக்கு முட்டுக்கட்டை போடும் முயற்சி தான்‌ எடுத்து கொண்டு இருக்கிறார்.
    • பா.ஜ.க ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டையும், தமிழக முதல்வரையும் வஞ்சிக்கிறது.

    தஞ்சாவூா்:

    தஞ்சையில் இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-

    கும்பகோணம் கலைஞர் பல்கலைக்கழகத்திற்கு தற்காலிக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நிரந்தர இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் மூலம் கோப்புகள் தலைமைச் செயலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழக கவர்னர் இதுவரை ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்துகிறார்.

    உயர்கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில் நானும் உயர்கல்வித்துறை செயலாளரும் கவர்னரை சந்தித்து இது சம்பந்தமாக கோரிக்கை வைக்க நேரம் கேட்டுள்ளோம். இதுவரை நேரம் ஒதுக்கவில்லை. காத்துக் கொண்டிருக்கிறோம். அழைக்கும் பட்சத்தில் கலைஞர் பல்கலைக்கழகத்தின் அவசியம், இதனால் பயனடையும் மாணவர்கள் குறித்து கருத்துக்களை எடுத்துரைப்போம். தமிழக கவர்னர் விரைவில் அழைக்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம்.

    கவர்னர் வந்ததிலிருந்து தமிழகத்தில் உயர்கல்வித்துறைக்கு முட்டுக்கட்டை போடும் முயற்சி தான் எடுத்து கொண்டு இருக்கிறார். அந்த முயற்சி, தடைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து உயர் கல்வித்துறையை உச்சத்துக்கு கொண்டு செல்வோம்.

    தி.மு.க. தான் திராவிட பற்று-தமிழ் பற்று கொள்கையில் பின் வாங்காமல் உள்ளது. பா.ஜ.க ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டையும், தமிழக முதல்வரையும் வஞ்சிக்கிறது.

    17 மாநிலங்களில் ஆளுகிற பா.ஜ.க மற்றும் மத்தியில் ஆளும் பா.ஜ.க செய்கிற அநீதியை கண்டிக்கிற ஒரே ஒற்றைத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். அது அவர்களுக்கு பிடிக்கவில்லை. தமிழக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். அதை எல்லாம் விரைவில் உடைத்து எரிந்து தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ.உடன் இருந்தார்.

    Next Story
    ×