என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தேசிய அளவில் ஆண்டுக்கு 4 முறை லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது.
    • சென்னை ஐகோர்ட்டில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமான பலதரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    சென்னை:

    சுப்ரீம் கோர்ட் முதல் மாஜிஸ்திரேட்டு கோர்ட் வரை ஏராளமான வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. இதில் குறிப்பிட்ட சதவீத வழக்குகளை விசாரித்து முடிவுக்கு கொண்டு வரும்போது, அதைவிட பெருமளவு புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விடுவதால், நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது.

    இதனால், மாற்றுமுறையில் இந்த வழக்குகளை முடிவுக்கு கொண்டுவர சுப்ரீம் கோர்ட்டும், அனைத்து மாநில ஐகோர்ட்டுகளும் நடவடிக்கை எடுத்தன.

    இதற்காக தேசிய அளவில் ஆண்டுக்கு 4 முறை லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது. அதுபோல ஐகோர்ட் சார்பில் அவ்வப்போது லோக் அதாலத் நடத்தப்படுகிறது. இருந்தாலும், எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரவில்லை.

    சென்னை ஐகோர்ட்டில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமான பலதரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை முடிவுக்கு கொண்டுவர ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, வாரந்தோறும் வியாழக்கிழமை நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரணைக்கு எடுத்து விரைந்து முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார்.

    இதன்படி, ஜூடிசியல் பதிவாளர் கே.சீதாராமன் சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார். அதில், ''20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருக்கும் அனைத்து வகையான வழக்குகளும், அந்ததந்த நீதிபதிகள் முன்பு வாரந்தோறும் வியாழக்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்படும்.

    இந்த நடைமுறை சென்னை ஐகோர்ட், ஐகோர்ட் மதுரை கிளையில் நாளை (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது என்று வக்கீல்கள், வழக்குகளை நேரடியாக தொடரும் பொதுமக்கள் ஆகியோருக்கு தெரியப்படுத்துகிறோம்'' என்று கூறியுள்ளார்.

    • நிச்சயமற்ற தன்மை மற்றும் சவால்களை எதிர்கொண்ட சுனிதா வில்லியம்ஸ் மற்று புட்ச் வில்மோர் ஆகியோருக்கு எனது சல்யூட்.
    • சுனிதா வில்லியம்ஸ் தைரியம் மற்றும் உறுதிப்பாட்டின் உருவகமாக அங்கு வலுவாக நின்றார்.

    சென்னை:

    சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்களாக சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் SpaceX-ன் 'ட்ராகன்' விண்கலம் மூலம் 17 மணிநேர பயணத்திற்கு பிறகு பத்திரமாக பூமிக்கு திரும்பினர். இதையடுத்து பத்திரமாக பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில், திட்டமிடப்படாத 9 மாதங்கள் விண்வெளியில் இருந்து, நிச்சயமற்ற தன்மை மற்றும் சவால்களை எதிர்கொண்ட சுனிதா வில்லியம்ஸ் மற்று புட்ச் வில்மோர் ஆகியோருக்கு எனது சல்யூட்.

    குறிப்பாக விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தைரியம் மற்றும் உறுதிப்பாட்டின் உருவகமாக அங்கு வலுவாக நின்றார். அவரது பயணம் விண்வெளி ஆய்வு மட்டுமல்ல, பெண்களின் வலிமை மற்றும் அதிகாரமளித்தல் பற்றியது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீரராக, அவரது முன்மாதிரியான பயணம் விடாமுயற்சிக்கு ஒரு சான்றாகும்.

    நான்கு பேர் கொண்ட குழு - க்ருவ்9 உங்களை வரவேற்கிறோம். உங்கள் கதை வருங்கால தலைமுறைகளை தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று தெரிவித்தார். 



    • அடுத்த சில நிமிடத்தில் அப்பெண் திருப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
    • அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை பயணிகள், பொதுமக்கள் என பலரும் பாராட்டினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பல்லடம் வழியாக ஆறாக்குளத்திற்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பல்லடம் பஸ் நிலையத்தில் ஏறிய பெண் பயணி ஒருவர் திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். சின்னக்கரையை கடந்து செல்லும்போது அவர் மயக்கமடைந்தார். சக பெண் பயணிகள் இது குறித்து கண்டக்டர் சக்திவேலிடம் தெரிவித்தனர்.

    அவர் ஆம்புலன்சை தொடர்பு கொண்டதில், தாமதமாகும் என்ற நிலையில், பல்லடம் போக்குவரத்து கழக கிளை மேலாளர் செந்தில்குமாரிடம் இது குறித்து தெரிவித்தார். பஸ்சில் உள்ள பயணிகளை மாற்று பஸ்சில் அனுப்பிவிட்டு மயக்கமடைந்த பயணியை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கிளை மேலாளர் உத்தரவிட்டார்.

    அதன்படி பயணிகள் வீரபாண்டி பிரிவில் இறக்கி விடப்பட்டனர். பயணித்த சில பெண்கள் மயக்கமடைந்த பெண்மணியை தனியாக விட்டுச்செல்ல மனமின்றி, தாங்களும் மருத்துவமனைக்கு வருவதாக கூறி சென்றனர்.

    இதனைத்தொடர்ந்து துரிதகதியில் செயல்பட்ட டிரைவர் ராசு கண்ணன், அரசு பஸ்சை ஆம்புலன்சாக கருதி வேகமாக இயக்கினார். அடுத்த சில நிமிடத்தில் அப்பெண் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். மின்னல் வேகத்தில் செயல்பட்ட அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை பயணிகள், பொதுமக்கள் என பலரும் பாராட்டினர்.

    • பேருந்து அங்கிருந்து 500 மீட்டர் தூரம் கல்லூரி சாலையில் ஓடிச் சென்று நின்றது.
    • ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    காரைக்குடி:

    திருச்சியில் இருந்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு நேற்று மாலை 5 மணி அளவில் அரசு பஸ் வந்தது. காரைக்குடி வருமானவரித்துறை அலுவலகம் அருகே வரும்போது அரசு பேருந்தில் திடீரென பிரேக் செயல்படவில்லை. டிரவைர் பஸ்சை நிறுத்த முயன்றார். ஆனால் பலனில்லை.

    தொடர்ந்து தாறுமாறாக சென்ற அரசு பஸ்சை சாலை தடுப்பின் மீது மோதி நிறுத்த முயன்றுள்ளார். ஆனாலும் பேருந்து அங்கிருந்து 500 மீட்டர் தூரம் கல்லூரி சாலையில் ஓடிச் சென்று நின்றது. ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    • நீரில் தெர்மாகோல் விடுவது எளிது, விமான நிலையம் அமைப்பது அப்படியல்ல- சட்டசபையில் அமைச்சர் பேச்சு.
    • நான் கடைசி பெஞ்ச் மாணவன். என்னைப் போன்ற கடைசி பெஞ்ச் மாணவர்களுக்கு உதவ வேண்டும்.

    தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 2-வது நாள் விவாதம் இன்று நடைபெற்றது. முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

    ராமேஸ்வரத்தில் இன்னும் ஓராண்டில் எப்படி விமான நிலையம் அமைக்க முடியும். தி.மு.க. ஆட்சி முடிய இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் ஏர்போர்ட் எப்படி அமைப்பீர்கள்? என செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, "மதுரைக்காரர்களுக்கு மட்டும் ஏர்போர்ட் இருந்தால் போதுமா? ராமநாதபுரத்திற்கு வேண்டாமா? படிப்படியாக பணி தொடங்கும். ஏர்போர்ட் ஜீபூம்பா வேலை இல்லை. கட்டமைப்பை ஏற்படுத்தியதும் உரிய காலத்தில் கட்டி முடிப்போம்" என்று கூறினார்.

    அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா "நீரில் தெர்மாகோல் விடுவது எளிது, விமான நிலையம் அமைப்பது அப்படியல்ல. நிலம் கையகப்படுத்துவது குறித்து ஆராய்ந்து மத்திய அரசின் அனுமதி பெற்று ஓசூரில் ஏர்போர்ட் விரைவில் அமைக்கப்படும்" என என பதில் அளித்தார்.

    ஏர்போர்ட் குறித்து விவரம் இல்லையே என கேட்டால் விவகாரமாக பேசுகிறீர்கள். அதிகாரி சொன்னதைத்தான் செய்தோம். தெர்மாகோல் என கிண்டலடிக்கிறீர்கள், பரவாயில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

    இன்றைய சட்டசபை நிகழ்வில் பேசுவதற்கு கொடுக்கப்பட்ட நேரம் குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செல்லூர் ராஜூ பதில் அளிக்கையில் "எனக்கு பேசுவதற்கு போதுமான நேரம் கொடுக்கப்படவில்லை. அமைச்சர்களில் சைகளை பார்த்துதான் சபாநாயகர் செயல்படுகிறார்.

    நடுநிலையாக இல்லை. அவர் ஆசிரியராக இருந்தவர். நான் கடைசி பெஞ்ச் மாணவன். என்னைப் போன்ற கடைசி பெஞ்ச் மாணவர்களுக்கு உதவ வேண்டும். இல்லையென்றால் உபத்ரவம் கூட கொடுக்காமல் இருக்கலாம். அதை செய்யல.

    இன்னும் என்னை தெர்மாகோல், தெர்மாகோல்னு ஓட்டுறாங்க... இன்னைக்கு அமைச்சர்கள் எல்லாம் அதிகாரிகள் ஒரு திட்டத்தை சொன்னால் நேரில் சென்று பார்க்கிறார்கள். அதைபோன்று எங்களது மாவட்ட ஆட்சியாளர்கள், முதன்மை பொறியாளர் எங்களை அழைத்துச் சென்றார்கள். மக்களின் பிரச்சனைக்காக நான் சென்ற கலந்து இருக்கிறேன். அதுக்கு என்னங்க... இன்னும் ஓட்டிக்கிட்டு இருந்தால் என்ன அர்த்தம்" என்றார்.

    • இரண்டு திருக்கோயில்களிலும் உயிரிழந்த பக்தர்கள் தங்களது உடல் நலக்குறைவு காரணமாகவே உயிரிழந்துள்ளனர்.
    • பக்தர்களின் அவசர சிகிச்சை மற்றும் முதலுதவிக்காக இத்திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டுள்ளை அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு நேற்று முன்தினம் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்த காரைக்குடியை சேர்ந்த ஓம்குமார், அவரது குடும்பத்தினர் முன்னரே தரிசனம் செய்ய வரிசையில் சென்ற நிலையில் தனியாக சென்றபோது அவருக்கு ஏற்கனவே உள்ள மூச்சுத்திணறல் நோயினால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்தார்.

    அதேபோன்று ராமேசுவரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு இன்று விடியற்காலை ஸ்படிகலிங்க தரிசனத்திற்கு வருகை தந்த பக்தர் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக மயங்கிய நிலையில் காணப்பட்டதால் அவரை திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் முதலுதவி மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் பரிசோதித்த மருத்துவர் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    மேற்குறிப்பிட்ட இரண்டு திருக்கோயில்களிலும் உயிரிழந்த பக்தர்கள் தங்களது உடல் நலக்குறைவு காரணமாகவே உயிரிழந்துள்ளனர். கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழக்கவில்லை. பக்தர்களின் அவசர சிகிச்சை மற்றும் முதலுதவிக்காக இத்திருக்கோயில்கள் உள்ளிட்ட 17 திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் அனைத்து திருக்கோயில்களிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிட வசதி, முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு தனி வரிசைமுறை போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன.

    மதத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைத்தவர்களுக்கு மக்கள் கொடுத்த சம்மட்டி அடியால் அண்ணாமலை போன்றோர் இந்து சமய அறநிலையத்துறையின் மீது இதுபோன்ற களங்கம் கற்பிக்க முயல்வதில் வியப்பேதுமில்லை.

    இவ்வாறு சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

    • தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் 22ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
    • கேரள மாநில முதல்வர், தெலுங்கானா மாநில முதல்வர் பங்கேற்கின்றனர்.

    தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் 22ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது என திமுக மருத்துவரணி செயலாளர் எழிலன் தெரிவித்துள்ளார்.

    அண்ணா அறிவாலயத்தில் திமுக மருத்துவரணி செயலாளர் எழிலன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் "7 மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் மற்றும் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்து கடிதம் எழுதி இருந்தார்.

    தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் பி.ஆர்.எஸ். கட்சியின் தலைவர் கே.டி. ராமராவ் பங்கேற்கின்றனர். அதேபோல் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனும் பங்கேற்கிறார்.

    முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பை ஏற்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூட்டத்தில் பங்கேற்கிறார். மேற்குவங்க மாநிலத்தில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ், ஒடிசாவில் இருந்து பிஜு ஜனதா தளம் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்" என்றார்.

    • நான் நினைத்தால் கலெக்டர், எஸ்.பி.யை மாற்றிவிடுவேன் என தர்மசெல்வன் பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையானது.
    • அவருக்குப் பதிலாக தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக-வின் புதிய பொறுப்பாளராக எம்.பி. ஆ. மணி நியமிக்கப்பட்டுள்ளார்.

    நான் நினைத்தால் கலெக்டர், எஸ்.பி.யை மாற்றிவிடுவேன் என தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தர்மசெல்வன் பேசிய ஆடியோ வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவியில் இருந்து தர்மசெல்வன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

    அவருக்குப் பதிலாக தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக-வின் புதிய பொறுப்பாளராக எம்.பி. ஆ. மணி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    தருமபுரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த தடங்கம் சுப்பிரமணியத்தை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக தர்மசெல்வன் கடந்த மாதம் 23ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.

    ஒன்றிய, நகர செயலாளர்கள் உட்பட முக்கிய நிர்வாகிகளுடன் பேசியபோது எடுத்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் தர்மசெல்வன் "நான் சொல்வதை கேட்கவில்லையென்றால் எந்த அதிகாரியும் இருக்கமாட்டான். இதில் யாரும் தலையிட முடியாது.

    நீங்கள் நினைக்கிற ஆட்களையெல்லாம் மாற்ற முடியாது. நான் லெட்டர் கொடுத்தால் தான் மாற்ற முடியும். அதை நீங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். கலெக்டர், எஸ்.பி, அதற்கு கீழ் இருக்கும் அத்தனை நிர்வாகமும் நான் சொல்வதை கேட்க வேண்டும். கேட்கவில்லையென்றால் அவர்கள் அந்த பதவியில் இருக்கமாட்டார்கள். இதை நான் செய்வேன்.

    என்னிடம் தலைவர், 'அதிகாரிகள் யாராக இருந்தாலும் சரி நீ சொல்வதை யாரும் கேட்கவில்லையென்றால், எனக்கு லெட்டர்பேடில் எழுதி கொடு' என தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்பு நீங்கள் எப்படியிருந்தீர்களோ, ஆனால் இனி எதுவாக இருந்தாலும் எனக்கு தெரிய வேண்டும்" என பேசியுள்ளார்.

    • சாதாரண மக்களின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையில் மருந்துகளின் விலை அதிகரித்து வருகிறது.
    • கடந்த 5 ஆண்டில் 800-க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி எம்.பி.யான விஜய் வசந்த் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

    அதிகரித்து வருகின்ற அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளின் விலையினைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை வேண்டும் எனவும், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளேன்.

    சாதாரண மக்களின் அன்றாட பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையில் அத்தியாவசிய மருந்துகளின் விலை அதிகரித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 800-க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

    உயிர் காக்கும் மருந்துகளின் விலையும் கடந்த ஆண்டுகளில் மிகவும் அதிகரித்துள்ளது. புற்றுநோய்க்கான மருந்துகள் கடந்த 5 ஆண்டுகளில் 50 சதவீதம், நீரிழிவு நோய்க்கான மருந்துகள் கடந்த 3 ஆண்டுகளில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

    ஜெனரிக் மருந்துகள் நகர் மற்றும் கிராமப்புற மக்களைச் சென்றடைவதில் பல தடைகள் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு மருந்து நிறுவனங்களைக் கட்டுப்படுத்த தவறிய அரசின் செயல்கள் இந்த விலை உயர்வுக்கு ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது.

    உள்நாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் போதிய மருந்துகளைத் தயாரித்து விநியோகம் செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களும் ஒரு முக்கிய காரணமாகும்.

    ஆகவே மத்திய அரசு உடனடியாக தலையிட்டு புற்றுநோய், நீரிழிவு நோய், இதய நோய் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தும் அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகளின் விலையினைக் குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். உள்நாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களை ஊக்குவித்து அத்தியாவசிய மருந்துகளை இந்தியாவிலே தயாரிப்பதன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களின் விலையுயர்ந்த மருந்துகளுக்கு மாற்றாக அமையும்.

    மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்வதைத் தடுக்க கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும்.

    ஜெனரிக் மருத்துகள் இந்தியாவின் அனைத்து கிராமங்களிலும் கிடைக்க வழிவகை செய்யவேண்டும். விலை நிர்ணயம் செய்வதின் காரணங்களை மக்களுக்கு எடுத்துக் கூறுவதன் மூலம் மக்களும் விழிப்படைவார்கள். இதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • இந்த ஆண்டின் மூன்று மாதங்களுக்குள் இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படும் பத்தாவது சம்பவம் இதுவாகும்.
    • பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க வலுவான தூதரக முயற்சிகள் தேவை.

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்த ஆண்டின் மூன்று மாதங்களுக்குள் இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படும் பத்தாவது சம்பவம் இதுவாகும்.

    ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 17.03.2025 அன்று மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களை, அவர்களது மீன்பிடி விசைப்படகுடன் 18.03.2025 அன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளது வேதனை அளிக்கிறது.

    பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க வலுவான தூதரக முயற்சிகள் தேவை என்று பலமுறை தான் வலியுறுத்திக் கேட்டுக் கொண்ட போதிலும், இதுபோன்ற கவலையளிக்கக்கூடிய சம்பவங்களின் எண்ணிக்கை தொய்வின்றி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு மீன்பிடித் தொழிலையே பெரிதும் நம்பியுள்ளனர். இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி இதுபோன்று சிறைபிடிக்கப்படுவதால், அவர்களது குடும்பத்தினர் வறுமையின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

    எனவே, தமிழ்நாட்டு மீனவர்கள் மேலும் கைது செய்யப்படாமல் தடுக்கவும், இலங்கை சிறைக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 110 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க வலுவான தூதரக முயற்சிகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு கடிதத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

    • கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி திறக்கப்பட்ட முதல்வர் மருந்தகங்களில் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    • முதல்வர் மருந்தகங்களை திறந்து பயன்பாடற்ற நிலையில் வைத்திருப்பது திமுக அரசின் அப்பட்டமான காழ்ப்புணர்ச்சி.

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்ட ஒரே மாதத்திற்குள் மருந்துகள் தட்டுப்பாடு- ஏழை, எளிய மக்களை சிரமத்திற்குள்ளாக்கும் திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி கடும் கண்டனத்திற்குரியது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி திறக்கப்பட்ட முதல்வர் மருந்தகங்களில் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

    முதலமைச்சர் அறிவித்துவிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுத்து அவசரகதியில் திறக்கப்பட்ட முதல்வர் மருந்தகங்களில் மக்களுக்கு தேவையான மருந்துகள் இல்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.

    ஏழை, எளிய மக்களுக்கு தரமான மருந்துகளை மலிவான விலையில் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதயதெய்வம் அம்மாவால் தொடங்கப்பட்ட அம்மா மருந்தகங்களை முடக்கிவிட்டு, முதல்வர் மருந்தகங்களை திறந்து அதனையும் பயன்பாடற்ற நிலையில் வைத்திருப்பது திமுக அரசின் அப்பட்டமான காழ்ப்புணர்ச்சியையே வெளிப்படுத்துகிறது.

    எனவே, இனியும் அவசரகதியிலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியிலும் திட்டங்களை தொடங்குவதை நிறுத்திவிட்டு அம்மா மருந்தகங்கள் போன்ற மக்களின் மகத்தான ஆதரவு பெற்ற திட்டங்களை தொடர்ந்து நடத்திட முன்வர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு டிடிவி தினகரன் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    • அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து ஒரே வழக்காக விசாரிக்கக்கோரி சீமான் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
    • சீமான் தரப்பு வழக்கறிஞர், முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதாக கூறினார்

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த ஜனவரி மாதம் வடலூரில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார்.

    இது தொடர்பாக சீமான் மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கடலூர், கோவை, சேலம், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்நிலையில், அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து ஒரே வழக்காக விசாரிக்கக்கோரி சீமான் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், ஒரு சம்பவத்துக்காக பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யக்கூடாது என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு மாறாக தனக்கெதிராக 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து ஒரே வழக்காக விசாரிக்க வேண்டுமென டிஜிபிக்கு கடிதம் எழுதப்பட்டதாகவும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரு விசாரணை அதிகாரியை நியமித்து தனக்கெதிரான அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்தெந்த காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? அந்த முதல் தகவல் அறிக்கைகள் எங்கே என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த சீமான் தரப்பு வழக்கறிஞர், முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

    இதனையடுத்து, எந்த விவரங்களும் இல்லாமல் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இதன் மீது எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    ×