என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தீ மளமளவென அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியதால் 20-க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாயின.
    • தீ விபத்து ஏற்பட்ட உடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    விருதுநகரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20-க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பல் சாம்பலாயின.

    விருதுநகர் மாவட்டம் மேலத்தெரு பேட்டையில் இன்று அதிகாலையில் ராஜா என்பவரது வீட்டில் கேஸ் சிலிண்டர் கசிவால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    இந்த தீ மளமளவென அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியதால் 20-க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாயின.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

    தீ விபத்து ஏற்பட்ட உடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    இந்த தீ விபத்தில் 20-க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பல் சாம்பலாயின. தீ விபத்தில் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் இழந்து விட்டதாக பெண்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

    • உண்மை தன்மை தெரியாத பலர் அந்த எண்ணிற்கு தொடர்பு கொள்கின்றனர்.
    • மோசடி கும்பல் இவற்றை பயன்படுத்தி லிங்க் வாயிலாக பண மோசடியில் ஈடுபடுகின்றனர்.

    சென்னை:

    வங்கி கிளை தொடர்பு எண்கள், ஆன்லைன் பேங்கிங், கார்டு புகார்கள் குறித்த விவரங்களை அறிய வாடிக்கையாளர் சேவை மைய எண்கள் வங்கி வாயிலாக வழங்கப்பட்டு உள்ளன.

    வங்கிகளுக்கு நேரில் செல்ல முடியாத பட்சத்தில் பலர் இணையதளத்தில் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் பெயரை பதிவிட்டு வாடிக்கையாளர் சேவை மைய எண்களை பெறுவர். அதில் சில செல்போன் எண்கள் வரும். இவ்வாறு தேடப்படும் எண்கள் சமீப நாட்களாக மோசடி கும்பலால் மாற்றப்படுகிறது. உண்மை தன்மை தெரியாத பலர் அந்த எண்ணிற்கு தொடர்பு கொள்கின்றனர். மோசடி கும்பல் இவற்றை பயன்படுத்தி லிங்க் வாயிலாக பண மோசடியில் ஈடுபடுகின்றனர்.

    ஆன்லைனில் வங்கி வாடிக்கையாளர் சேவை எண்ணை தேட வேண்டாம். எனவே வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று தகவல்களை தெரிந்து கொள்வது சரியானதாக இருக்கும் என்று வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர்.

    • கூடுதல் ஊழியர்கள் இல்லாததால், இ-பாஸ் சோதனை செய்வதில் சிரமம் ஏற்பட்டது.
    • இ-பாஸ் பதிவு செய்யாமல் வந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்களை, ஊட்டிக்கு செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர்.

    ஊட்டி:

    மலைகளின் அரசியான ஊட்டிக்கு சாதாரண நாட்களில் வரும் விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும். அதுவும் கோடை விடுமுறை சீசனில் கட்டுக்கடங்காமல் இருக்கும்.

    இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், நீலகிரிக்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி, கடந்த ஆண்டு மே மாதம் 7-ந்தேதி முதல் நீலகிரிக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை அமலில் இருந்து வருகிறது.

    தற்போது கோடை சீசன் தொடங்க உள்ளதால், திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வாரநாட்களில் 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டது.

    இந்த கட்டுப்பாடு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லாறு மற்றும் கோத்தகிரி வழியாக ஊட்டி செல்லும் வாகனங்களை இ-பாஸ் பதிவு செய்யப்பட்டு உள்ளதா என கல்லாறு, குஞ்சப்பனை சோதனை சாவடிகளில் போலீசாரும், வருவாய்த்துறையினரும் சோதனை செய்கிறார்கள். இதன் பின்னரே மேற்கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    இதேபோல் கேரள, கர்நாடக மாநிலங்களின் எல்லையில் உள்ள கூடலூர் நாடுகாணி, சோலாடி, தாளூர், பாட்டவயல், நம்பியார் குன்னு, கக்கநல்லா ஆகிய சோதனை சாவடிகளிலும் சுற்றுலா வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது.

    இ-பாஸ் பதிவு செய்யாமல் வந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்களை, ஊட்டிக்கு செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். 

    இந்நிலையில் 'இ-பாஸ்' முறையை ரத்து செய்யக்கோரி வியாபாரிகள் மாவட்டம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்துகிறார்கள். இ-பாஸ் நடைமுறையை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 24 மணி நேர கடையடைப்பு உள்பட பொது வேலைநிறுத்தம் இன்று நடைபெறுகிறது.

    • அப்போது யார் எதிரியாக நினைத்தார்களோ அவர்களின் பெயரை வைத்து மகிழ்ந்த கட்சி தான் திமுக.
    • கூட்டணி பற்றி ரகசியமாக பேசிவிட்டு கேட்டால் நாங்கள் சும்மதான் போயிட்டு வந்தோம் என்கிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 'சூரிய மகள் 2025' என்ற தலைப்பில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் இயக்குநர் கரு.பழனியப்பன் கலந்து கொண்டார். அவர் பேசியாதவது:-

    நிகழ்ச்சியில் பேசிய இரண்டு அமைச்சர்களும் அரசியல் பற்றி பேசாமல், இந்த ஆட்சியின் சாதனைகளை பற்றி பேசினார்கள். முதலமைச்சரின் திட்டங்களை பற்றி பேசினார்கள். அது தான் மனிதனுக்கு கிடைக்கின்ற மிக சிறந்த பாராட்டு என்று நினைகின்றேன்.

    திமுக ஆட்சியில் நூலகம் கட்டினார்கள். முதலில் சென்னை நூலகத்திற்கு அண்ணாவின் பெயர், மதுரையில் நூலகம் கட்டி கலைஞர் பெயர், கோவை நூலகத்திற்கு பெரியார் பெயர் வைத்துள்ளனர்.

    ஆனால் திருச்சியில் உள்ள நூலகத்திற்கு எதற்காக காமராஜர் பெயர் வைக்க வேண்டும். ஏன் என்றால் விஜய் என்னுடைய எதிரி திமுக தான் என்று சொன்னார். அதை முதல் முதலில் 1958ல் சட்டசபையில் என்னுடைய ஒரே எதிரி திமுக தான் என்று காமராஜர் சொன்னார்.

    அப்போது யார் எதிரியாக நினைத்தார்களோ அவர்களின் பெயரை வைத்து மகிழ்ந்த கட்சி தான் திமுக.

    கூட்டணி பற்றி ரகசியமாக பேசிவிட்டு கேட்டால் நாங்கள் சும்மாதான் போயிட்டு வந்தோம் என்கிறார்கள்.

    ஆனால் அமித்ஷாவோ கூட்டணியை பற்றி பேசினோம் என்று சொல்கிறார்.

    நமக்கு இருக்குற ஒரே காமெடி அண்ணாமலை. அவரையும் மாத்திடாதீங்க.. அந்தக் கட்டுல எல்லாமே ஜோக்கர்தான் என அவர் கூறினார்.

    • யானைகள் ரெயில் தண்டவாளங்களை கடக்கும் 11 இடங்கள் அடையாளம் காணப்பட்டது.
    • 2 இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தமிழ்நாடு - கேரள வனப்பகுதிகளில் தண்டவாளங்களை கடக்க முற்படும்போது ரெயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க கோரியும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை தெற்கு ரெயில்வே நிர்வாகம் மேற்கொள்ளக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் திண்டுக்கல்லைச் சேர்ந்த மனோஜ் இமானுவேல் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தெற்கு ரெயில்வே தரப்பில் ஆஜரான வக்கீல் ராம்குமார், 'ரெயில் மோதி யானைகள் உயிரிழப்பை தடுக்கும் வகையில் சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாடு மற்றும் கேரள வனத்துறையுடன் இணைந்து தெற்கு ரெயில்வே நிர்வாகம் கோவை, பாலக்காடு ஒட்டிய வனப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது.

    யானைகள் ரெயில் தண்டவாளங்களை கடக்கும் 11 இடங்கள் அடையாளம் காணப்பட்டது. இதில் 9 இடங்களில் சுரங்க வழித்தடங்கள் அமைக்கப்பட்டு தண்டவாளங்களுக்கு அடியில் யானைகள் கடந்து செல்லும் வகையில் வழி அமைக்கப்பட்டுள்ளது. 2 இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல போத்தனூர் - மதுக்கரை பகுதிகளில் தண்டவாளத்தை ஒட்டிய பகுதிகளில் யானை நடமாட்டத்தைக் கண்டறியும் வகையில் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் 12 உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொன்றிலும் 2 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

    இந்த நவீன கேமராக்கள் யானைகள் ரெயில் தண்டவாளங்களுக்கு அருகில் உள்ள 150 மீட்டர் தூர சுற்றளவுக்குள் வந்தால் உடனடியாக அருகில் உள்ள ரெயில் நிலைய மேலாளர் மற்றும் ரெயி்ல் ஓட்டுநர்களுக்கு தகவல்களை அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

    தெற்கு ரெயில்வே நிர்வாகத்தின் இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக பாலக்காடு - போத்தனூர் வழித்தடத்தில் கடந்த 27 மாதங்களாக ரெயில் மோதி ஒரு யானை கூட சாகவில்லை.'' என்று கூறினார்.

    இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இதுகுறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி தெற்கு ரெயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட்டனர்.

    • முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 'சூரிய மகள் 2025' என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது.
    • இந்த நிகழ்ச்சியில் நடிகர் சதயராஜ் மற்றும் நடிகர் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 'சூரிய மகள் 2025' என்ற தலைப்பில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சதயராஜ் மற்றும் நடிகர் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சத்யராஜ், மு.க.ஸ்டாலின் என்றால் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றும் சொல்லலாம். முதுகெலும்புள்ள களப்போராளி ஸ்டாலின் என்றும் சொல்லலாம் என தெரிவித்தார்.

    சமீபத்தில் நடந்த த.வெ.க. பொதுக்குழுவில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.... மாண்புமிகு திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே... பெயரை மட்டும் வீராப்பா சொன்னா பத்தாது. செயலையும், ஆட்சியிலும் அதை காட்டணும் அவர்களே என காட்டமாகத் தெரிவித்தார்.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் சத்யராஜ் மேற்கண்டவாறு கூறியுள்ளார் என கருதப்படுகிறது.

    • கச்சத்தீவை திரும்பப்பெற அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வலியுறுத்தி தீர்மானம்.
    • இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்கிட இதுவே நிரந்தரத் தீர்வாக அமையும்.

    தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாளை கச்சத்தீவை திரும்பப்பெற அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வலியுறுத்தி, பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வருகிறார்.

    இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்கிட இதுவே நிரந்தரத் தீர்வாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.

    • பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ஏப்ரல் 6-ம் தேதி தமிழகம் வருகிறார்.
    • அதன்பின், பிரதமர் மோடி ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்கிறார்.

    ராமேஸ்வரம்:

    ராமநவமியான வருகிற 6-ம் தேதி அன்று பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு விழா நடைபெற உள்ளது. ராமாயணத்துடன் நெருங்கிய தொடர்புடைய ராமேசுவரத்தில் நடைபெறும் இந்த பிரமாண்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பாம்பன் புதிய பாலத்தில் ரெயில் போக்குவரத்தைத் தொடங்கி வைக்கிறார்.

    பாம்பன் ரெயில்வே பாலம் திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் தமிழக எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பா.ஜ.க. மூத்த தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் கலந்துகொள்ள உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தெற்கு ரெயில்வே செய்து வருகிறது.

    பாம்பன் புதிய பாலம் திறப்புக்கு பின், பிரதமர் மோடி ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்கிறார்.

    இந்நிலையில் , பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏப்ரல் 4 முதல் 6 வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பாம்பனில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகளை குந்துகால் துறைமுகத்திற்கு மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டுப்படகுகளை பாம்பனை விட்டு அப்புறப்படுத்தி தங்கச்சிமடம் பகுதியில் நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • கபாலீசுவரர் கோவில் பங்குனி பெருவிழாவையொட்டி மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
    • மாட வீதிகளில் வாகனங்களை நிறுத்தக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    கபாலீசுவரர் கோவில் பங்குனி பெருவிழாவையொட்டி மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதுதொடர்பாக,

    சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் வருடாந்திர பங்குனி பெருவிழா வரும் 3-ம் தேதி முதல் ஏப்ரல் 12-ம் தேதி வரை நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்களின் போக்குவரத்து வசதியை கருதி தேவைப்படும் நேரங்களில் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும். மேற்கண்ட நாட்களில் கபாலீசுவரர் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கோவிலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

    அதாவது தேவடி தெருவில் இருந்து - நடுத்தெரு மற்றும் சித்ரகுளம் வடக்கு நோக்கி, நடுத்தெரு மற்றும் சுந்தரேஸ்வரர் தெருவில் இருந்து கிழக்கு மாட தெரு நோக்கி, வடக்கு சித்ரகுளத்தில் இருந்து கிழக்கு மாட தெரு நோக்கி, மேற்கு சித்ரகுளம் தெரு, டி.எஸ்.வி. கோவில் தெரு, ஆடம்ஸ் தெரு மற்றும் ஆர்.கே. மடம் சாலையில் இருந்து தெற்கு மாட தெரு நோக்கி, ஆர்.கே.மடம் சாலையில் இருந்து வடக்கு மாட தெரு நோக்கி, கச்சேரி சாலையில் இருந்து மத்தள நாராயணன் தெரு நோக்கி, புனிதமேரி சாலையில் இருந்து ஆர்.கே.மடம் சாலையில் தெற்கு மாடவீதி நோக்கி, டாக்டர் ரங்கா சாலையில் இருந்து வெங்கடேச அக்ரஹாரம் சாலை நோக்கி, முண்டக கன்னியம்மன் கோவில் தெருவில் இருந்து கல்விவாரு தெரு நோக்கியும் வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

    ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக அடையாறு செல்லும் வாகனங்கள் லஸ் சர்ச் ரோடு, டிசில்வா ரோடு, பக்தவத்சலம் ரோடு, ரங்கா ரோடு, சி.பி.ராமசாமி சாலை, காளியப்பா சந்திப்பு, காமராஜ் சாலை, ஸ்ரீனிவாச அவென்யு, ஆர்.கே.மடம் சாலை வழியாக கிரீன்வேஸ் சந்திப்பை அடையலாம்.

    அடையாறில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக ராயப்பேட்டை செல்லும் வாகனங்கள் ஆர்.கே.மடம் ரோடு, திருவேங்கடம் தெரு, வெங்கட கிருஷ்ணா ரோடு, சிருங்கேரி மடம் சாலை, வாரன்ரோடு, ரங்கா ரோடு, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யூ, அமிர்தாஞ்சன் சந்திப்பு, கற்பகாம்பாள் நகர், பி.எஸ்.சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக இலக்கை அடையலாம்.

    ஆழ்வார்ப்பேட்டை சந்திப்பில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக செல்லும் வாகனங்கள் ஆலிவர் சாலை, பி.எஸ்.சிவசாமி சாலை சந்திப்பு, விவேகானந்தர் கல்லூரி, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக இலக்கை அடையலாம்.

    வருகிற 5-ம் தேதி அதிகாரநந்தி திருவிழா காலை 5 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும், ஏப்ரல் 9-ம் தேதி தேர் திருவிழா காலை 5 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும் மற்றும் ஏப்ரல் 10-ம் தேதி அறுபத்து மூவர் திருவிழா பகல் 1 மணி முதல் நிகழ்ச்சி நிறைவடையும் வரையிலும் மேற்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செயல்படுத்தப்படும்.

    வருகிற 5 மற்றும் ஏப்ரல் 9,10-ம் தேதிகளில் சன்னதி தெரு, கிழக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி, ராமகிருஷ்ணா மடம் சாலை, மேற்கு மாடவீதி மற்றும் வடக்கு மாடவீதி ஆகிய இடங்களில் எந்த வாகனமும் நிறுத்த அனுமதியில்லை. அந்த நாட்களில் கீழ்கண்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதன் விவரம் வருமாறு:-

    கிழக்கு அபிராமபுரத்தில் இருந்து வரும் பக்தர்களின் வாகனங்கள் சாய்பாபா கோவில் அருகில், வெங்கடேச அக்ரஹாரம், திருமயிலை பறக்கும் ரெயில்வே நிலைய மேம்பாலத்தின் கீழ் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. (100 இருசக்கர வாகனங்கள் மற்றும் 30 கார்)

    ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இருந்து மயிலாப்பூர் குளம் நோக்கி வரும் பக்தர்களின் வாகனங்கள் லஸ் சர்ச் ரோடு, காமதேனு கல்யாண மண்டபம் எதிரில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. (100 இருசக்கர வாகனங்கள் மற்றும் 15 கார்)

    செயின்ட் மேரீஸ் சாலை மற்றும் மந்தவெளி வீதியில் இருந்து மயிலாப்பூர் குளம் நோக்கி வரும் வாகனங்கள் பி.எஸ். பள்ளி அருகே கபாலீசுவரர் கோவில் மைதானத்தில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. (400 இருசக்கர வாகனங்கள் மற்றும் 80 கார்)

    காவல்துறை வாகனங்கள் சுந்தரேஸ்வரர் தெருவில் உள்ள ரசிக ரஞ்சனி சபா வளாகத்தில் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. (100 இருசக்கர வாகனங்கள் மற்றும் 20 கார்)

    வாகன ஓட்டுனர்களும், பொதுமக்களும் மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    • மாநிலம் முழுவதும் 1-ஆம் வகுப்பிற்கு 1,05,286 மழலையர் சேர்ந்துள்ளனர்.
    • ஏனைய வகுப்புகளும் சேர்த்து மொத்தம் 1,17,310 மாணவச் செல்வங்கள் சேர்ந்துள்ளனர்.

    தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் 2025- 2026-ஆம் ஆண்டிற்காக மாணவச் சேர்க்கையை மார்ச் 1-ஆம் தேதி சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அன்றிலிருந்து ஏராளமான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஆர்வமுடன் அரசுப்பள்ளிகளில் சேர்த்து வருகிறார்கள்.

    சேர்க்கை தொடங்கியது முதல் கடந்த ஒரு மாதத்தில் மாநிலம் முழுவதும் 1-ஆம் வகுப்பிற்கு 1,05,286 மழலையர் உட்பட ஏனைய வகுப்புகளும் சேர்த்து மொத்தம் 1,17,310 மாணவச் செல்வங்கள் சேர்ந்துள்ளனர். அனைவருக்கும் வாழ்த்துகள்.

    தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கல்வியின் துணை கொண்டு உலகை வெல்ல நம் அரசுப்பள்ளிகளே தலைசிறந்த முறையில் அடித்தளமிடும்.

    இவ்வாறு அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

    • கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி 57,200 ரூபாயாக இருந்தது. ஜனவரி 15ஆம் தேதி 58720 ஆக அதிகரித்தது.
    • பிப்ரவரி 1ஆம் தேதி 61,960 ஆக அதிகரித்தது. பிப்ரவரி 15ஆம் தேதி 63,520 ஆக உயர்ந்தது.

    சென்னையில் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது. இப்படி சென்றால் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயை தொட்டு விடுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இன்னும் சில வருடங்களில் கட்டாயம் ஒரு லட்சத்தை தொட்டு விட வாய்ப்புள்ளது.

    தங்கத்தின் மீதான அதிக ஆர்வம், உலகப் பொருளாதாரம், கச்சா எண்ணெய், தங்கத்தின் மீதான முதலீடு ஆகியவை தங்க விலை அதிகரிக்க முக்கிய காரணிகளாக விளங்குகின்றன.

    இந்த நிலையில் சென்னையில் கடந்த 3 மாதங்களில் தங்கம் விலை சவரனுக்கு 10,880 ரூபாய் அதிகரித்துள்ளது.

    கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி 57,200 ரூபாயாக இருந்தது. ஜனவரி 15ஆம் தேதி 58720 ஆக அதிகரித்தது.

    பிப்ரவரி 1ஆம் தேதி 61,960 ஆக அதிகரித்தது. பிப்ரவரி 15ஆம் தேதி 63,520 ஆக உயர்ந்தது,

    மார்ச் 1ஆம் தேதி 65,760 ஆக உயர்ந்தது. ஏப்ரல் 1ஆம் தேதியான இன்று 68,080 ஆக அதிகரித்துள்ளது.

    கடந்த 3 மாதங்களில் ஒரு சவரனுக்கு 10,880 ரூபாய் அதிகரித்துள்ளது.

    • கோவையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்தித்தார்.
    • அப்போது தன்னைப் பற்றி அவதூறாக பேசியதாக கே.சி.பழனிசாமி கோவையில் வழக்கு தொடர்ந்தார்.

    சென்னை:

    கோவையில் செய்தியாளர் சந்திப்பின்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னைப் பற்றி அவதூறாக பேசியதாக கே.சி.பழனிசாமி கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கே.சி.பழனிசாமி சார்பில் வழக்கறிஞர் சிவக்குமார் ஆஜரானார்.

    இதையடுத்து, அவதூறு வழக்கு தொடர்பான விசாரணைக்காக எடப்பாடி பழனிசாமி வரும் 15-ம் தேதி ஆஜராக வேண்டும் என கோவை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்றம் இன்று சம்மன் அனுப்பியுள்ளது.

    ×