search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pamban Bridge"

    • கடந்த 2019 ஆம் ஆண்டு ரூ.520 கோடி மதிப்பிட்டில் புதிய வடிவமைப்பில் ரெயில் பாலம் அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
    • 2024 ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதால் ரெயில் பாலப்பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ராமேசுவரம்:

    தென்னகத்து காசி என்று போற்றப்படும் ராமேசுவரத்திற்கு தமிழகம் மட்டுமின்றி வடமாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் புனித யாத்திரையாக வருகை தருகிறார்கள். அவர்கள் அக்னி தீர்த்த கடல் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள 21 புண்ணிய தீர்த்தங்களில் நீராடி ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளை வழிபட்டு செல்கிறார்கள்.

    இதற்கிடையே மண்டபம்-ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் வாராவதி கடல் பகுதியில் 2.2 கிலோ மீட்டர் தொலைவில் 1914 ஆம் ஆண்டு கப்பல்கள் வந்து செல்லும் வகையில் ரெயில் பாலம் அமைக்கப்பட்டது.

    இந்த ரெயில் பாலத்தின் மையப்பகுதி கப்பல்கள் வந்து செல்லும் போது திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இந்த பாலம் இந்தியாவின் முதல் கடல் பாலம் என்ற பெருமையை பெற்றது. அத்துடன் நாட்டின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலமாகவும் அடையாளம் காணப்பட்டது.

    இந்த தூக்கு பாலம் ஒரு பொறியாளர் தலைமையில் ரெயில்வே ஊழியர்கள் மூலம் பாரமரிக்கப்பட்டு வந்தது. தூக்கு பாலத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் உடனடியாக அதில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் எச்சரிக்கை கருவி ஒலி எழுப்பும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது. தமிழகத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் இந்த பாலம் அமைந்திருந்தது.

    105 ஆண்டுகள் கடந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பாம்பன் ரெயில் பாலத்தின் உறுதித் தன்மை தொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி. குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், பாம்பன் ரெயில் பாலம் அருகே புதிய ரெயில் பாலம் அமைக்க திட்டமிட்டு கடந்த 2019 ஆம் ஆண்டு ரூ.520 கோடி மதிப்பிட்டில் புதிய வடிவமைப்பில் ரெயில் பாலம் அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதனைத்தொடர்ந்து நவம்பர் மாதம் பூமி பூஜையுடன் அதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கியது.

    இதனைத்தொடர்ந்து, பாம்பன் கடல் பகுதியில் துளையிட்டு மண் ஆய்வுப் பணி தொடங்கியது. விறுவிறுப்பாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில் 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பணிகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டது.

    இதன் பின்னர் 6 மாதம் கழித்து குறிப்பிட்ட பணியாளர்கள் மூலம் மீண்டும் பணிகள் தொடங்கியது. 2024 ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதால் ரெயில் பாலப்பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பாலத்தின் மையப்பகுதியில் மேல்நோக்கி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட தூக்கு பாலம் பொருத்தும் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. இந்த பணிகள் முடிவடைந்தவுடன் தண்டவாளம் பொருத்தப்பட்டு மையப்பகுதிக்கு இழுத்துச்செல்லப்பட்டு இருபுறமும் தூண்கள் அமைப்படும். இன்னும் 6 மாதங்களில் பணிகள் நிறைவடையும் என பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.

    • மதுரை-ராமேசுவரம் இடையேயான பாசஞ்சர் ரெயில் சேவைக்காக மட்டும் 6 ரெயில்கள் அந்த பாலத்தை தினமும் கடந்து செல்கின்றன.
    • அதிர்வுகள் மற்றும் உப்புகாற்றை தாங்க இயலாத பாலம் அடிக்கடி பழுதடைந்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்துக்கு ஏற்றதாக இல்லை.

    ராமேசுவரம்:

    மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட மதுரை-ராமேசுவரம் ரெயில் பாதையில் மண்டபத்தில் இருந்து மன்னார்வளைகுடாவில் உள்ள ராமேசுவரம் தீவை ரெயில் மூலம் இணைப்பதற்கு பாம்பன் பாலம் கடலின் நடுவே அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தின் போது கட்டப்பட்டது. முற்றிலும் இரும்பு பொருளால் ஆன பாலம் என்பதால் நூற்றாண்டை கடந்தும் செயல்பாட்டில் இருந்து வருகிறது.

    இருப்பினும், உப்புத்தன்மையுடன் கூடிய கடல்காற்று, சுற்றுச்சூழல், புயல் உள்ளிட்ட இயற்கை காரணங்கள் ஆகியவற்றால் பாலம் வலுவிழந்து காணப்படுகிறது. இதற்காக சென்னை ஐ.ஐ.டி. குழுவினர் பாலத்தின் அதிர்வுகளை கண்டறியும் கருவியை பொருத்தி கண்காணித்து வருகின்றனர். இந்த கருவியில், கடந்த 22-ந் தேதி அளவுக்கதிகமான அதிர்வுகள் பதிவானதால் 23-ந் தேதி முதல் பாம்பன் ரெயில்பாதையில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. இந்த தடை வருகிற 10-ந் தேதி வரை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பாம்பன் பாலத்தை பொறுத்தமட்டில் இயற்கை காரணங்கள் தவிர, அதிகமான ரெயில் போக்குவரத்தும் பாலத்தின் உறுதித்தன்மைக்கு அச்சுறுத்தல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாலம் மீட்டர் கேஜ் ரெயில் இயக்கத்துக்கு ஏற்ப 1914-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது. வடிவமைத்த ரெயில்வே என்ஜினீயர் ஸ்கெர்சர் பெயர் சூட்டப்பட்டது. அவரது தொழில்நுட்பத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் மூலம் 2,058 மீட்டர் நீளத்துக்கு 146 இரும்பு கர்டர்களை கொண்டு கடல் நீர் மட்டத்தில் இருந்து 3 மீட்டர் உயரத்தில் தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

    அதிக உயரம் கொண்ட படகுகள் அந்த பாதையை கடக்கும் போது பாலத்தின் நடுப்பகுதி 2-ஆக பிரிந்து விடும். அப்போது, அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 2 ரெயில்கள் மட்டும் அந்த பாலத்தை கடந்து சென்றது. பின்னர், அகலப்பாதையாக மாற்றம் செய்யப்பட்ட பின்னர் நாள் ஒன்றுக்கு 10-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்பட்டன. தற்போது சுற்றுலா பயணிகளின் வருகை, வடமாநிலத்தவர்களின் வருகை ஆகியன காரணமாக ரெயில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    மதுரை-ராமேசுவரம் இடையேயான பாசஞ்சர் ரெயில் சேவைக்காக மட்டும் 6 ரெயில்கள் அந்த பாலத்தை தினமும் கடந்து செல்கின்றன. இதனால் அதிர்வுகள் மற்றும் உப்புகாற்றை தாங்க இயலாத பாலம் அடிக்கடி பழுதடைந்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்துக்கு ஏற்றதாக இல்லை. இதற்காக ரெயில்வே என்ஜினீயர்கள் குழு 24 மணி நேரமும் பாலத்தை கண்காணித்து வருகிறது. இருப்பினும் பாலம் 108 ஆண்டுகளை கடந்து விட்டதால், உறுதித்தன்மை குறைந்துள்ளது. இதனால் வருகிற 31-ந் தேதி வரை அந்த பாதையில் ரெயில்கள் இயக்க சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது.

    தற்போது ராமநாதபுரத்தில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் மூலம் ஏற்கனவே ராமேசுவரம் வரை முன்பதிவு செய்த பயணிகளுக்கு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, ரெயில்வே வாரியத்தின் தொழில்நுட்ப அறிவுரை மற்றும் ஆலோசனை குழுவான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவின் (ஆர்.டி.எஸ்.ஓ.) நேரடி மேற்பார்வையில் பாலத்தின் பழுதுகள் சரிசெய்யப்பட்டு, பாதுகாப்பாக ரெயில்கள் இயக்குவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    இதற்கிடையே, ரெயில்வே துணை நிறுவனமான ஆர்.வி.என்.எல். எலெக்ட்ரோ மெக்கானிக்கல் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பாம்பன் பால கட்டுமான பணிகளில் 84 சதவீதம் முடிந்துள்ளது. புதிய பாலம் நவீன தொழில்நுட்பத்தில், கடலின் நடுவே லிப்டு போல செயல்படும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. அத்துடன், மின் ரெயில் பாதை மற்றும் இரட்டை அகலப்பாதைக்கு ஏற்ற வகையில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் வருகிற மார்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், வருகிற செப்டம்பர் மாதம் தான் புதிய பாலப்பணிகள் முடிவடையும் என்று தெரிகிறது.

    • முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில் போக்குவரத்துக்கு தற்காலிகமாக தடை செய்யப்பட்டது.
    • 2-வது நாளாக இன்றும் பழுதை சரிசெய்யும் பணி நடப்பதால் மண்டபம், ராமநாதபுரம் ரெயில் நிலையங்களில் இருந்து இன்று ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பன் ரெயில் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. பழமையான இந்த பாலத்தில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருவதால் இதன் அருகிலேயே பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய ரெயில் பாலம் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பாம்பன் ரெயில் பாலத்தில் அதிர்வுகளை கண்டறிய 84 இடங்களில் சென்சார் கருவி பொருத்தப்பட்டு உள்ளது. இவை ரெயில்கள் ஒவ்வொரு முறையும் பாலத்தை கடக்கும்போது அதிர்வுகளை பதிவு செய்யும். அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு ரெயில் பாம்பன் பாலத்தை கடந்தபோது தூக்குப்பாலத்தில் உள்ள சென்சார் கருவியில் இருந்து எச்சரிக்கை ஒலி எழுப்பியது.

    இதுதொடர்பாக தகவலறிந்த அதிகாரிகள் அங்கு வந்து ஆய்வு செய்தபோது பாலத்தில் வழக்கத்தை விட அதிர்வுகள் இருப்பதாக சென்சாரில் பதிவாகி உள்ளது தெரிய வந்தது. இதனை எச்சரிக்கும் வகையில் ஒலி எழுப்பியுள்ளது.

    இதையடுத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில் போக்குவரத்துக்கு தற்காலிகமாக தடை செய்யப்பட்டது. சென்னை, மதுரை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ரெயில்கள் மண்டபம் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. அங்கிருந்து பயணிகள் அரசு பஸ், ஆட்டோ மூலம் ராமேசுவரம் சென்றனர். மேலும் ராமேசுவரத்தில் இருந்து இயக்கப்படவிருந்த ரெயில்களும் ரத்து செய்யப்பட்டன.

    ரெயில் பாலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய மதுரையில் இருந்து அதிகாரிகள் குழுவினர் பாம்பனுக்கு சென்றனர். அவர்கள் ரெயில் பாலத்தில் உள்ள தூக்குபாலத்தில் ஆய்வு நடத்தினர். ஆனால் பழுதை உடனடியாக சரிசெய்ய இயலவில்லை.

    இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து இன்று ஐ.ஐ.டி. குழுவினர் வருகின்றனர். அவர்கள் பாலத்தின் உறுதித்தன்மையை ஆராய்ந்து தொழில்நுட்ப கோளாறை சரிசெய்தபின் பாம்பன் ரெயில் பாலத்தில் போக்குவரத்து தொடங்கும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ரெயில் பாலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று முதல் அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து இயக்கப்பட்டன. மேலும் சென்னை மற்றும் வட மாநிலங்களில் இருந்து வந்த ரெயில்களும் மண்டபத்தில் நிறுத்தப்பட்டன.

    ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் 20-க்கும் மேற்பட்ட காலி பெட்டிகளுடன் நிறுத்தப்பட்டிருந்த ரெயில் பாம்பன் ரெயில் பாலத்தை மெதுவாக கடந்து மண்டபம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து அந்த ரெயில் பயணிகளுடன் செகந்திராபாத்துக்கு புறப்பட்டு சென்றது.

    2-வது நாளாக இன்றும் பழுதை சரிசெய்யும் பணி நடப்பதால் மண்டபம், ராமநாதபுரம் ரெயில் நிலையங்களில் இருந்து இன்று ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபால் வெளியூர்களில் இருந்து வரும் ரெயில்களும் மண்டபத்திலேயே நிறுத்தப்படுகின்றன.

    பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து 84 நாட்களுக்கு பிறகு பாம்பன் தூக்குப்பாலம் வழியாக ராமேசுவரத்துக்கு மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது. #PambanBridge #PambanRailwayBridge
    ராமேசுவரம்:

    மண்டபத்தையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பனில் 3 கிலோ மீட்டருக்கு கடலில் ரெயில் மேம்பாலம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது.

    இந்த பாலத்தில் ராமேசுவரத்துக்கு நாள்தோறும் 10-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதேநேரத்தில் கப்பல் போக்குவரத்துக்கும் ஏற்றவகையில் இருபிரிவுகளாக திறக்கும்படி பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே ராமேசுவரம் பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தில் கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி விரிசல் ஏற்பட்டது.  இதையடுத்து அந்த வழி தடத்தில் ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டன.



    பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தில் பராமரிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில், 84 நாட்களுக்கு பிறகு தற்போது ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 6.5 டன் துருப்பிடிக்காத இரும்பு ராடுகளை கொண்டு விரிசல் சரிசெய்யப்பட்டதையடுத்த தற்போது மீண்டும் ரயில் சேவையை ரயில்வே தொடங்கியுள்ளது.

    புவனேஸ்வர், சேது, கோவை உள்ளிட்ட விரைவு ரயில்கள் 10 கிமீ வேகத்தில் ரயில் பாலத்தில் சென்றதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. #PambanBridge #PambanRailwayBridge

    பாம்பன் ரெயில் பாலத்தில் வருகிற 26-ந்தேதி முதல் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தில் கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து பராமரிப்பு பணிகள் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக நடைபெற்று முழுமையாக முடிவடைந்துள்ளன. ஆனால் இதுவரை பாம்பன் ரெயில் பாலம் வழியாக பயணிகளுடன் ரெயில் போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

    இந்தநிலையில் பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலத்தை நேற்று தெற்கு ரெயில்வேயின் உதவி தலைமை பொறியாளர் ஸ்ரீகுமார் தலைமையிலான அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது.

    இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலத்தில் நடைபெற்று வந்த பராமரிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்துவிட்டன. ரெயில் பாலம் அமைக்கப்பட்டு 100 ஆண்டுகளை கடந்துவிட்டதால் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்க வேண்டிய பாலமாகும். அதில் பொருத்தப்பட்டுள்ள இரும்புகளில் துருப்பிடிக்காமல் இருக்க 6 மாதங்களுக்கு ஒரு முறை அலுமினிய பெயிண்ட் அடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தூக்குப்பாலம் மிகவும் பழமையாகி விட்டதால் இனி மூன்று மாதத்திற்கு ஒருமுறை பெயிண்ட் அடிக்க முடிவு செய்துள்ளோம்.

    புதிய ரெயில்வே பாலம் கட்டி முடிக்கப்படும் வரை தற்போது உள்ள ரெயில்வே பாலத்தில் கூடுதல் கவனம் செலுத்தி பராமரிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும்.

    பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள் முடிந்து பாதுகாப்பாக உள்ளது. எனவே அந்த பாலத்தில் வருகிற 26 அல்லது 27-ந்தேதி முதல் மீண்டும் ராமேசுவரத்திற்கு பயணிகளுடன் ரெயில் போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பலத்த காற்றில் நங்கூரம் அறுந்ததால் அலையில் அடித்துவரப்பட்ட விசைப்படகினால் பாம்பன் ரெயில் பாலத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அந்த படகை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. #PambanBridge #Boat
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் பாம்பன் ரெயில் பாலத்தில் உள்ள தூக்குப்பாலத்தில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து அதன் வழியாக ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் அங்கு பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றது. பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில் ராமேசுவரத்துக்கு இன்னும் ஓரிரு நாட்களில் பாம்பன் பாலம் வழியாக பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கப்படக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியில் இருந்து வந்த ஒரு படகு பாலத்தை கடக்கும்போது, பாலத்தின் தூணில் லேசாக மோதியது. ஆனால் இதில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.

    இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு பாம்பனை சேர்ந்த ரைஜன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு வடக்கு கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்தது.

    திடீரென பலத்த காற்று மற்றும் கடல் அலையின் வேகத்தில் நங்கூரம் அறுந்ததால், அந்த படகு பாலத்தை நோக்கி அடித்து வரப்பட்டது. ஆனால் பாலத்தின் அருகில் உள்ள பாறையில் முட்டி நின்றது. பாலத்துக்கும், அந்த பாறைக்கும் மிகவும் குறைந்த இடைவெளி மட்டுமே உள்ளது. எனவே மீண்டும் பலத்த காற்று வீசினால் அந்த படகு அங்கிருந்து நகர்ந்து பாலத்தில் மோதும் அபாயம் உள்ளது.

    எனவே அந்த படகை நேற்று காலை 3 விசைப்படகுகளில் 30-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வந்து, பாறையில் இருந்து மீட்பதற்காக போராடி வருகின்றனர். பலத்த காற்று மற்றும் கடல் அலையின் வேகம் காரணமாக மதியம் வரை இந்த படகு மீட்கப்படவில்லை. தொடர்ந்து மீனவர்கள் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

    இந்த படகு ரெயில் பாலத்தில் மோதும் ஆபத்து உள்ளதால் உடனடியாக கடலோர காவல்படை மூலம் அந்த படகை அதிகாரிகள் மீட்க வேண்டும் என்று மீனவர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். #PambanBridge #Boat
    ராமேசுவரத்துக்கு செல்லும் பாம்பன் ரெயில் பாலத்துக்கு பதிலாக ரூ.250 கோடியில் புதிய பாலம் கட்டப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. #PambanBridge
    புதுடெல்லி:

    ராமேசுவரத்துக்கு செல்லும் பாம்பன் ரெயில் பாலம், 1914–ம் ஆண்டு கட்டப்பட்டது. 104 ஆண்டுகள் பழமையான இப்பாலம், 2006–ம் ஆண்டு அகல பாதையாக மாற்றப்பட்டது. இப்பாதையில் சென்னையில் இருந்தும், வடமாநிலங்களில் இருந்தும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

    சமீபத்தில், பாம்பன் தூக்கு பாலத்தில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து, ராமேசுவரத்துக்கு செல்ல வேண்டிய ரெயில்கள், மண்டபத்துடன் நிறுத்தப்படுகின்றன.
    இந்நிலையில், புத்தாண்டு பரிசாக, பாம்பன் பாலத்துக்கு பதிலாக புதிய ரெயில் பாலம் கட்டப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் நேற்று அறிவித்தது. பழைய பாலம் 104 ஆண்டுகள் பழையதாக இருப்பதாலும், தூக்கு பாலத்தில் விரிசல் விழுந்திருப்பதாலும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    ரூ.250 கோடி செலவில் இந்த பாலம் கட்டப்படுகிறது. இதற்கான ஆய்வு பணிகள் முடிவடைந்து விட்டன.

    தற்போதைய பாலத்துக்கு அருகிலேயே அதைவிட 3 மீட்டர் அதிக உயரத்தில் புதிய பாலம் கட்டப்படுகிறது. அதனால் ஒரே நேரத்தில் 2 கப்பல்கள் கடந்து செல்ல முடியும்.
    புதிய பாலத்தின் நீளம் இரண்டரை கி.மீ. ஆக இருக்கும். இரட்டை ரெயில் பாதையாக இப்பாலம் அமையும். இதில், 63 மீட்டர் நீள தூக்கு பாலமும் இடம்பெறும். இந்த தூக்கு பாலம், செங்குத்தாக திறந்து மூடும்வகையில் இருக்கும். மின்மோட்டார் மூலம் தானியங்கி முறையில் தூக்கு பாலம் செயல்படும்.

    இந்தியாவிலேயே இத்தகைய தொழில்நுட்பத்தில் தூக்கு பாலம் அமைக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.

    கடல் நீரால் அரிப்பு ஏற்படாதவகையில் துருப்பிடிக்காத உருக்கு கம்பிகளை கொண்டு புதிய பாலம் கட்டப்படுகிறது. ஸ்லீப்பர் கட்டைகளும் பல்வேறு உலோகங்கள் கலந்த கலவையால் அமைக்கப்படும். இதுவும் துருப்பிடிக்காத வகையில் இருக்கும்.

    இந்த புதிய பாலம் கட்டும் பணி அடுத்த மாதம் தொடங்குகிறது. பாலத்தை கட்டி முடிக்க 4 அல்லது 5 ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.#PambanBridge
    பாம்பன் ரெயில் பாலத்தில் கர்டர்களை தூக்கும் சக்கரத்தில் பழுது ஏற்பட்டதால் 3-வது நாளாக இன்றும் ரெயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. #pambanBridge
    ராமேசுவரம்:

    மண்டபம் - ராமேசுவரத்தை இணைக்கும் வகையில் கடலில் 3 கி.மீ. தூரத்துக்கு ரெயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் பாலத்தை 146 தூண்கள் தாங்குகின்றன. பாலத்தின் மத்தியில் கப்பல்கள் செல்ல வசதியாக தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

    இதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து மதுரை, காரைக்குடியில் இருந்து ரெயில்வே என்ஜினீயர்கள் வரவழைக்கப்பட்டு இரவு-பகலாக சீரமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணி நேற்று வரை முடியவில்லை.

    இந்த நிலையில் பாலத்தின் உறுதித் தன்மையை சோதிக்கும் வகையில் நேற்று ராமேசுவரத்தில் இருந்து பாம்பனுக்கு 5 கி.மீ., 15 கி.மீ. வேகத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டன. இதனை தென்னக ரெயில்வே பாலம் தலைமை பொறியாளர் ரவீந்திரபாபு, மதுரை கோட்ட ரெயில்வே கூடுதல் மேலாளர் லலித் குமார்மனுஷ்கான் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    அப்போது பாலத்தில் அதிர்வு ஏற்பட்டது. இதனால் ரெயிலை இயக்க தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். 3-வது நாளான இன்று பெங்களூரில் இருந்து ரெயில்வே என்ஜினீயர்கள் பாம்பனுக்கு வருகின்றனர். அவர்கள் முன்னிலையில் உறுதித்தன்மையை ஆய்வு செய்யும் சிறப்பு ரெயில் என்ஜின் பாம்பன் பாலத்தில் இயக்கப்பட உள்ளது. அதன் பின் ரெயில்கள் இயக்குவது குறித்து அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.

    இன்று 3-வது நாளாக பாம்பன் ரெயில் பாலத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதன் காரணமாக 3-வது நாளாக இன்றும் ராமேசுவரத்துக்கு ரெயில்கள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வழக்கமாக வடமாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் ராமேசுவரத்துக்கு ரெயில் மூலம் வருவார்கள். பாலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக தற்போது மண்டபத்திலேயே ரெயில்கள் நிறுத்தப்படுவதால் அங்கிருந்து யாத்ரீகர்கள் மற்றும் பொதுமக்கள் பஸ்களில் ராமேசுவரம் செல்கின்றனர். இதனால் பஸ்களில் கூட்டம் அலை மோதுகிறது. #pambanBridge
    பாம்பன் தூக்குபாலத்தில் விரிசலை சரிசெய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் ராமேசுவரத்துக்கு ரெயில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. #PambanBridge #Ramanathapuram

    ராமேசுவரம்:

    மண்டபத்தையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பனில் 3 கிலோ மீட்டருக்கு கடலில் ரெயில் பாலம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பாலத்தில் ராமேசுவரத்துக்கு நாள் தோறும் 10-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகிறது. இருபிரிவுகளாக உள்ள இந்த பாலத்தில் கப்பல்கள் செல்லும்போது திறக்கப்படும்.

    கஜா புயல் காரணமாக தூக்குப்பாலத்தை திறக்க பயன்படுத்தப்படும் சுழலும் பல்சக்கரங்களில் பழுது ஏற்பட்டது. அப்போது ரெயில்வே ஊழியர்கள் இதனை தற்காலிகமாக சரிசெய்தனர்.

    இந்த நிலையில் நேற்று பாம்பன் தூக்குப்பாலம் இணையும் இடத்தில் பாலம் ஒன்றுக்கொன்று சேராமல் சற்று விரிசல் ஏற்பட்டு தூக்கிக்கொண்டு இருந்தது. தண்டவாளங்கள் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.


    இதுகுறித்து தகவலறிந்த ராமேசுவரம் ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து விரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அவர்களால் முடியவில்லை.இதையடுத்து மதுரை ரெயில்வே கோட்ட என்ஜினீயர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையில் மதுரை- ராமேசுவரம் வந்த பாசஞ்சர் ரெயில் மண்டபத்துடன் நிறுத்தப்பட்டது. இதேபோல் ராமேசுவரம்- திருச்சி பாசஞ்சர் ரெயில் மண்டபத்தில் இருந்து இயக்கப்பட்டது. இதன்காரணமாக பயணிகள் கடும் அவதியடைந்தனர். அவர்கள் மண்டபத்தில் இருந்து பஸ் மூலம் ராமேசுவரம் சென்றனர்.

    மதுரையில் இருந்து வந்த பொறியாளர்கள் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேற்று மாலை முதல் பாம்பன் பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இரவு வரை இந்த பணி நீடித்தது. ஆனால் பணி முடியவில்லை

    இதன் காரணமாக நேற்று மாலை முதல் இன்று காலை வரை அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் நிறுத்தப்பட்டு, பின்னர் அங்கிருந்தே மற்ற பகுதிகளுக்கு இயக்கப்பட்டன. இதனால் ராமேசுவரம் ரெயில் நிலையம் வெறிச் சோடியது.

    இந்த நிலையில் இன்று காலை மீண்டும் தூக்குப் பால விரிசலை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இன்று மதியத்துக்குள் சீரமைப்பு பணி முடிந்தால் என்ஜின் சோதனை ஓட்டம் நடத்தப்படும். அதன்பின்னர் ரெயில்கள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  #PambanBridge #Ramanathapuram

    பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் பாம்பனில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லதடை விதிக்கப்பட்டுள்ளது.
    ராமேசுவரம்:

    பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் பாம்பனில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லதடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் படகுகள் துறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ராமேசுவரம் பகுதியில் நேற்று காலை முதலே வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் சாலைகளில் மணல் புழுதியாக பறந்து சென்றதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதியடைந்தனர். இதேபோல பாம்பன் பகுதியிலும் வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறவாளி காற்று வீசியது.

    இந்தநிலையில் பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் இருந்து நேற்று விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தயாராகி இருந்தனர். ஆனால் மீன் துறை அதிகாரிகள் 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதோடு கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் மூலம் எச்சரிக்கை வந்துள்ளதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல டோக்கன் வழங்காமல் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதித்தனர்.

    இந்த திடீர் தடை உத்தரவால் 100-க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகள் மன்னார் வளைகுடா கடல் பகுதியான தென்கடலில் மீன்பிடிக்க செல்லாமல் தெற்குவாடி துறைமுக பகுதியிலேயே நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீன்துறை அதிகாரிகளின் தடை உத்தரவால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் நேற்று சுமார் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை வாய்ப்பை இழந்தனர். இதேபோல மண்டபம் பகுதியிலும் நேற்று மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தெற்கு துறைமுக பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால், 2-வது நாளாக 800-க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் துறைமுக பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
    ராமேசுவரத்தை இணைக்கும் பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து மெட்டல் டிடெக்டர் மூலம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். #PambanBridge #BombThreat
    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பன் ரெயில் பாலம், சாலை பாலம் உள்ளது.

    நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ராமேசுவரம் வந்து செல்வதால் சாலை பாலம் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். சுற்றுலா பயணிகள் அந்த பாலத்தில் வாகனத்தை நிறுத்தி கடலை பார்த்து ரசிப்பது வழக்கம்.



    இந்த நிலையில் இந்த பாலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலைபேசி வந்தது. அதில் பேசியவன், “பாம்பன் பாலத்தை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்” என கூறி விட்டு போனை வைத்து விட்டான்.

    இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனாவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அவரது உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டு மகேஷ் மற்றும் போலீசார் பாம்பன் பாலம் விரைந்தனர். அவர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.

    போனில் பேசிய மர்ம மனிதன் பாம்பன் பாலம் என்று மட்டுமே கூறிய நிலையில் எந்த பாலம் என்ற சந்தேகம் ஏற்பட்டதால் போலீசார் ரெயில் மற்றும் சாலை பாலங்களை அதிரடியாக சோதனை செய்தனர். இதன் காரணமாக பாம்பன் பாலம் பகுதியில் இன்று பரபரப்பு காணப்பட்டது. #PambanBridge #BombThreat
    பாம்பன் ரெயில்வே பாலத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையின் வெடிகுண்டு தடுப்புப்பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்நிலையில் பாம்பன் ரெயில் பாலத்திற்கு நேற்று மதுரையில் இருந்து வந்த ரெயில்வே பாதுகாப்பு படையின் வெடிகுண்டு தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ராமேசுவரம் ரெயில்வே பாதுகாப்பு படை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பர்சாபிரவீன் மற்றும் 5 பேர் கொண்ட வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் வருகை தந்தனர்.

    அங்கு அவர்கள் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் நவீன கருவி மற்றும் மோப்ப நாய் மாயா உதவியுடன் 2 கிலோ மீட்டர் நீளமுடைய ரெயில் பாலத்தில் தண்டவாளம், இரும்பு கர்டர் உள்ளிட்ட பாலம் முழுவதும் தீவிர சோதனை செய்தனர். சுமார் 1½ மணி நேரத்திற்கு மேலாக இந்த சோதனை நடத்தப்பட்டது.

    சோதனையின் போது ரெயில் பாலத்தில் தூண்டில் நரம்பு மற்றும் வலை வீசி மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களை ரெயில்வே பாதுகாப்பு படை பிரிவு போலீசார் பாலத்தில் உள்ளே வந்து மீன் பிடிக்க அனுமதி கிடையாது என எச்சரிக்கை செய்து பாலத்தை விட்டு வெளியேற்றினார்கள்.

    இதுபற்றி ரெயில்வே பாதுகாப்பு படை பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:- மதுரை ரெயில்வே பாதுகாப்பு படை பிரிவு கட்டுப்பாட்டில் பாம்பன் ரெயில்பாலம், மதுரை வைகை ரெயில் பாலம், சாத்தூரில் உள்ள ரெயில் பாலம் மற்றும் நெல்லை தாமிரபரணி ஆற்றில் உள்ள பாலம் முக்கியத்துவம் வாய்ந்த பாலங்கள். அதிலும் கடலில் உள்ள பழமையான பாம்பன் ரெயில் பாலம் அதிக முக்கியத்துவம் வாய்ந்த பாலமாகும்.

    முக்கிய பாலங்களில் ரெயில்வே பாதுகாப்பு படை பிரிவின் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மூலமாக சோதனை நடத்தப்படுவது வழக்கம். அதுபோல் பாம்பன் ரெயில் பாலத்தில் முழுமையாக வெடிகுண்டுகளை கண்டு பிடிக்கும் கருவிகள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டுஉள்ளது.இதில் சந்தேகப்படும் படியான எந்தவொரு ஒரு பொருளும் இல்லை என்பது சோதனையில் தெரியவந்தது.

    இவ்வாறு அவர் கூறினார். பாம்பன் ரெயில் பாலத்தில் இதுவரையிலும் ரெயில்வே பாதுகாப்பு படை பிரிவின் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் மூலம் திடீரென சோதனை நடத்திஉள்ளது. பாலத்திற்கு வேறு ஏதேனும் எச்சரிக்கை வந்திருக்கலாம். அதன் அடிப்படையிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 
    ×