என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அவதூறு வழக்கை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
    • வழக்கு விசாரணையை ஜூலை 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    திருச்சி:

    திருச்சி சரக டிஐஜி வருண்குமார், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது அவர் குறித்தும், அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களைப் பதிவுசெய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    அதோடு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் வருண்குமார் குறித்து சமூக வலைதளங்களிலும், செய்தியாளர் சந்திப்பிலும் அவதூறாக பேசியதாக வருண்குமார் தரப்பு குற்றம்சாட்டி வந்தது.

    இதையடுத்து, சீமான் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி வருண்குமார் திருச்சி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    இதற்கிடையே, தன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரிக்க தகுந்தது அல்ல எனக்கூறி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மனு தாக்கல் செய்தார்.

    இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சீமான் மீது டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கை விசாரிக்க அனுமதி அளித்தது.

    அவதூறு வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் எனக்கூறிய நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூலை 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அத்துடன், அன்றைய தினம் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, சீமானின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    • தமிழ்நாடு பெரும் பின்னடைவை சந்தித்திருப்பதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
    • போட்டித்தேர்வுகளையும், நுழைவுத்தேர்வுகளையும் எதிர்கொள்வதற்கு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தமிழக அரசு கூறி வருகிறது.

    ஐஐடி நுழைவுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு கடைசியிலிருந்து மூன்றாம் இடம் பெற்றுள்ளதை தொடர்ந்து, மாநில பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஐ.ஐ.டி மாணவர் சேர்க்கைக்கான ஜே.இ.இ. - அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு கடைசியிலிருந்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

    கல்வியில் பெரும் புரட்சி செய்துவிட்டதாக திமுக அரசு போலி பெருமிதம் தெரிவித்து வரும் நிலையில், ஐஐடி நுழைவுத்தேர்வில் தமிழ்நாடு பெரும் பின்னடைவை சந்தித்திருப்பதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

    ஜே.இ.இ. - அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வில் மேற்கு வங்கம் 35.3 விழுக்காட்டுடன் முதலிடம் பிடித்துள்ளது. பஞ்சாப் 34.70%, ராஜஸ்தான் 34.50%, மராட்டியம் 32.40%, ஹரியானா 32.30% என அடுத்த நான்கு இடங்களைப் பிடித்துள்ள நிலையில், தமிழ்நாடு 23.90% தேர்ச்சி விகிதத்துடன் கடைசியிலிருந்து மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாட்டிலிருந்து இந்தத் தேர்வை எழுதிய 7,787 பேரில் 1,859 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். கேரளம், பிகார் ஆகிய இரு மாநிலங்கள் மட்டும் தான் தமிழ்நாட்டைவிட பின் தங்கியுள்ளன.

    ஐஐடி நுழைவுத்தேர்வுகளில் தமிழ்நாடு மிகவும் பின் தங்கியிருப்பதற்கு காரணம், அத்தேர்வுகளை எதிர்கொள்ளும் அளவுக்கு மாநிலப் பாடத்திட்டம் வலிமையாக இல்லாதது தான்.

    கடந்த பல ஆண்டுகளாகவே ஐஐடி நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு இணையாக மாநிலப் பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வரும் போதிலும் அதற்கான நடவடிக்கைகளை தமிழகத்தை ஆளும் அரசுகள் எடுக்கத்தவறிவிட்டன. அதனால் தான் ஐஐடி நுழைவுத்தேர்வு தேர்ச்சி விகிதங்களில் தமிழகத்தின் நிலைமை இந்த அளவுக்கு மோசமடைந்துள்ளது.

    போட்டித்தேர்வுகளையும், நுழைவுத்தேர்வுகளையும் எதிர்கொள்வதற்கு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தமிழக அரசு கூறி வருகிறது. ஆனால், அதற்கான பயன்கள் எதுவும் களத்தில் தெரிவதில்லை. இந்த நிலையை மாற்றும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவ, மாணவியருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் மாநிலப் பாடத்த்திட்டத்தை மத்திய பாடத்திட்டத்திற்கு இணையாக வலுப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்வதால் அவர்கள் விரும்பும் திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்க உதவ முடியும்.
    • சுய தொழில் திட்டங்களில் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும்.

    சென்னை:

    சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் ஆகியோர்களுக்கான நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 8-வது தளத்தில் வருகிற 12-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

    இம்முகாமில் கலந்து கொள்ள பயனாளிகள் தொலைபேசி எண், குடும்ப அட்டை நகல், ஆதார் நகல், அலைபேசி ஆகியவற்றை எடுத்து வந்து www.tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களை உறுப்பினராக பதிவு செய்து கொண்டு பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்வதால் அவர்கள் விரும்பும் திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்க உதவ முடியும். இத்திறன் பயிற்சி மேற்கொள்ளுதல் வாயிலாக சுய தொழில் புரிய மாவட்ட தொழில் மையம் (DIC) மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (TADHCO)ன் கீழ் செயல்படுத்தப்படும் சுய தொழில் திட்டங்களில் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

    எனவே, சென்னை மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர் கன்னிகள் ஆகியோர் இம்முகாமில் கலந்து கொண்டு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினர் ஆகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வந்தது.
    • கிழக்கு ரத வீதயில் தேர் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது.

    சிவகாசி:

    சிவகாசியில் பழமை வாய்ந்த விஸ்வநாத ஸ்வாமி கோவில் உள்ளது இந்த கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் விசுவநாத ஸ்வாமி, விசாலாட்சி அம்மன் ரிஷப வாகனம், குதிரை வாகனம், காமதேனு, வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி யளித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வந்தது. தேர் எல்லையை நோக்கி வந்து கொண்டிருந்தபோது அறநிலையத்துறை சார்பில் கோவில் தேரை வடக்கு ரத வீதியில் நிறுத்த வேண்டும் என கூறினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் கோவில் மண்டகப்படிதாரர்கள் கோவில் முன்புதான் தேரை நிறுத்த வேண்டும் என்று காவல்துறையினர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் கிழக்கு ரத வீதயில் தேர் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து தற்காலிகமாக கோவில் முன்பு தேரை நிறுத்துவதற்கு அதிகாரிகள் ஒப்புதல் தெரிவித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். அதன் பின்னர் தேர் நிலையை வந்து அடைந்தது. சுமார் 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • சோதனை செய்தபோது ஹைட்ரோபோனிக் என்ற போதை பொருள் கடத்தப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பப்பட்டது.
    • பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கே.கே. நகர்:

    திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் போதைப்பொருட்கள், தங்கம், அரிய வகை உயிரினங்களை கடத்தி வருவது தொடர் கதையாக உள்ளது.

    திருச்சி விமான நிலையத்திற்கு பேங்காங்கில் இருந்து நேரடி விமான சேவை இயக்கப்பட்டபோது அதிக அளவிலான போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

    தற்போது பேங்காங்கில் இருந்து நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து போதை பொருள் கடத்தல் குறைந்து இருந்தது. இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் விமானம் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது.

    அப்போது அந்த விமானத்தில் பேங்காங்கில் இருந்து சிங்கப்பூர் வழியாக திருச்சிக்கு பயணம் செய்த பயணி ஒருவரின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த பொருட்கள் இருந்ததை கண்டறிந்து அதனை சோதனை செய்தபோது ஹைட்ரோபோனிக் என்ற போதை பொருள் கடத்தப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பப்பட்டது.

    இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் 9.82 கோடி இருக்கும் என தெரிகிறது. இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்தப் பயணியை கைது செய்து அவரிடம் தொடர்பு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மலேசியத்தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் விமானம் நேற்று முன்தினம் இரவு திருச்சி வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரது உடமைகளை மீண்டும் சோதனை செய்தபோது அவர் தனது உடமையில் மறைத்து அரிய வகை உடும்புகளை மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனைத் தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சோதனைக்கு பின்பு அந்த உடும்பானது மீண்டும் கோலாலம்பூருக்கு அனுப்புவதா என்பது குறித்து முடிவு மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • பா.ம.க., தே.மு.தி.க.வை குறிவைத்து கூட்டணி காய்களை த.வெ.க. நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • பா.ம.க.வும் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை உறுதி செய்யவில்லை.

    பா.ம.க.வுடன் விஜயின் த.வெ.க. கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி தரப்புடன் த.வெ.க. தரப்பில் கட்சியின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஜான் ஆரோக்கியசாமி, 2016-ல் மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என பா.ம.க.விற்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்து பணியாற்றி உள்ளார்.

    தற்போது த.வெ.க. கட்சியின் அரசியல் வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமி பா.ம.க., தே.மு.தி.க.வை குறிவைத்து கூட்டணி காய்களை நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு விரித்த வலை வேலை செய்யாததால் பா.ம.க. பக்கம் த.வெ.க. தாவி உள்ளதாக கூறப்படுகிறது.

    அக்.27-ந்தேதி த.வெ.க. தலைமையில் கூட்டணி என அக்கட்சியின் தலைவர் விஜய் குறிப்பிட்டார். 7 மாதங்களாகியும் எந்த கட்சியும் த.வெ.க.வுடன் கூட்டணியை உறுதி செய்யவில்லை.

    ஒரு சதவீதம் வாக்கு வங்கி உள்ள கட்சிகள் கூட த.வெ.க.வுடன் கூட்டணி பேச்சு நடத்தவில்லை. எனவே தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிகளுக்கு மாற்றாக பா.ம.க.வை இணைத்து கூட்டணி அமைக்க த.வெ.க. திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    பா.ம.க.வும் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை உறுதி செய்யாத நிலையில், த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    • 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்.
    • கமலுக்கோ அவரது கட்சிக்கோ பா.ஜ.க. ஆதரவு கிடையாது. ஆனால் தமிழுக்கு எப்போதும் ஆதரவு உண்டு.

    புதுக்கோட்டையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்குள் நாங்கள் செல்ல விரும்பவில்லை. யார் அந்த சார்? என்று ஒவ்வொருவர் மனதிலும் இருக்கிறது. ஆனால் காவல்துறை சரியாக விசாரிக்கவில்லை.

    குற்றப்பத்திரிகை தெளிவில்லாமல் இருக்கிறது. தெளிவுபடுத்த வேண்டியது தமிழ்நாடு முதலமைச்சரின் பொறுப்பு.

    தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மோசமாக உள்ளது. நவீன வகையான போதை மருந்து நடமாட்டம் தமிழகத்தில் தான் இருக்கிறது.

    தி.மு.க. தோல்வி பயத்தில் இருக்கிறது. அதனால் தான் எங்கள் கூட்டணியை விமர்சனம் செய்கின்றனர். அவர்கள் உறுதியாக இருந்தால் எங்கள் கூட்டணியை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது.

    தற்போது வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ். உள்ளிட்டவர்கள் இருக்கின்றனர். வரக்கூடிய தேர்தலை அனைவரும் சேர்ந்து சந்திக்க எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்களிடம் பேசி ஒருமித்த முடிவு எடுக்கப்படும். அவர் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

    தமிழை உயர்த்தி பேசினால் நாங்கள் வரவேற்போம் . ஆனால் ஒரு மொழியை சிறுமைப்படுத்தி, ஒரு மொழியை உயர்த்திப் பேசினால் தேவையில்லாத விவகாரங்கள் வரும் அதை தான் கமல்ஹாசன் செய்துள்ளார்

    தமிழ் 5000 வருடத்திற்கு முன்பானது என்பதை யாரும் மறுப்பதற்கு கிடையாது. ஆனால் அதற்காக மற்றொரு மொழி சிறுமை என்று கூற முடியாது. அனைத்து மொழியுமே உயர்ந்தது. கமலுக்கோ அவரது கட்சிக்கோ பா.ஜ.க. ஆதரவு கிடையாது. ஆனால் தமிழுக்கு எப்போதும் ஆதரவு உண்டு.

    மத்திய மந்திரி அமித்ஷா வருகின்ற 8-ந் தேதி மதுரைக்கு வருகை தர உள்ளார். ஒவ்வொரு நிர்வாகிகளையும் சந்தித்து பேச உள்ளார். அண்ணா மலை குடும்பத்தினருடன் சிங்கப்பூர் சென்று திரும்பி உள்ளார். தொடர்ந்து இனி வரக்கூடிய நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பார்.

    அனைத்து எதிர்கட்சிகளும் தி.மு.க.வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய வேண்டும். தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. மற்றும் பா.ம.க. ஆகிய கட்சிகளை செல்வப் பெருந்தகை அழைத்து உள்ளார். இது குறித்து அந்தந்த கட்சிகள்தான் முடிவு எடுக்க வேண்டும்.

    இதுவரை தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்பது இல்லை. வரக்கூடிய காலங்களில் அது சாத்தியமா என்று பார்க்கலாம். ஆனால் 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அண்ணாமலை மாநில தலைவராக இருந்தபோது தமிழ்நாடு அரசியல் களம் அதிரடியாக இருந்தது. தற்போது அமைதியாக உள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அணுகுமுறை உண்டு அவர் அதிரடியான அணுகுமுறை கையாண்டார். நான் அமைதியான அரசியல் செய்ய விரும்புகிறேன். அதிரடி அரசியல் வேண்டாம் என்றார்.

    • திருச்சி அரசு மருத்துவமனையிலும் அதற்காக சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் உள்ளது.
    • தமிழக அரசை வேறு குறை கூற முடியாது என்பதால் இந்த குறையை அண்ணாமலை கூறுகிறார்.

    திருச்சி:

    அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கொரோனா பரவி வருகின்ற காரணத்தால் அதனை எதிர்கொள்ள தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

    அனைத்து துறை செயலாளர்களையும் அழைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். திருச்சி அரசு மருத்துவமனையிலும் அதற்காக சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் உள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில் கடைமடை வரை தண்ணீர் செல்வதற்கு ஏற்ற வகையில் தூர்வாரச் சொல்லி அதற்கான பணி நடைபெற்று வருகிறது.

    மொழி விவகாரத்தில் யாரும் கமல் மன்னிப்பு கேட்பதை விரும்பவில்லை. அவர் சொன்னதில் என்ன தவறு உள்ளது. தமிழ் மொழியில் இருந்து தான் தெலுங்கு, மலையாளம் எல்லாம் வந்தது. அவர் சொன்னதில் எதுவும் தப்பில்லை.

    மாணவி பாலியல் வழக்கில் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், சேகர் பாபு அதற்குரிய பதிலை அளித்துள்ளனர் .

    தமிழக அரசை வேறு குறை கூற முடியாது என்பதால் இந்த குறையை அண்ணாமலை கூறுகிறார்.

    பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை பொறுத்தவரை வருகின்ற 17-ந்தேதி பராமரிப்பு டெண்டர் தொடர்பான கூட்டம் நடைபெற உள்ளது. அது முடிந்தவுடன் பேருந்து நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான வேலைகள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

    • நியூஸ் பேப்பர் போன்ற அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருளில் நேரடியாகப்படும் வகையில் பரிமாறவோ / பொட்டலமிடவோ கூடாது.
    • உணவை கையாள்பவர்கள் கையுறை மற்றும் தலைமுடி கவசம் போன்றவற்றை தவறாமல் அணிய வேண்டும்.

    சென்னை:

    உணவு பாதுகாப்புத் துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * அனைத்து உணவு வணிகர்களும் http://foscos.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

    * அனைத்து உணவு வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு டைபாய்டு மற்றும் மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தி மருத்துவ தகுதி சான்றிதழ் பெற வேண்டும்.

    * உணவு வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரை பகுப்பாய்வு செய்து வைத்திருக்க வேண்டும்.

    * உணவுப் பொருட்களில் ஈக்கள், பூச்சிகள் மெய்க்காத வண்ணம் கண்ணாடி பெட்டியில் மூடி வைத்து காட்சிப்படுத்த வேண்டும்.

    * உணவு எண்ணெயை ஒரு முறை சமைக்க பயன்படுத்த வேண்டும். மீதமான பயன்படுத்திய உணவு எண்ணெயை FSSAI அங்கீகரித்த கொள்முதலாளருக்கு மட்டும் விற்க வேண்டும்.

    * விற்பனையாகாமல் மீதமான உணவை நுகர்வோருக்கு வழங்காமல் அப்புறப்படுத்திடல் வேண்டும்.

    * நியூஸ் பேப்பர் போன்ற அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருளில் நேரடியாகப்படும் வகையில் பரிமாறவோ / பொட்டலமிடவோ கூடாது.

    * அனுமதிக்கப்படாத நெகிழியில் (பிளாஸ்டிக்) உணவுப்பொருட்களை சூடாகவோ அல்லது இயல்பு நிலையிலோ பொட்டலமிடக்கூடாது.

    * உணவகங்களில் உணவு பரிமாற வாழை இலை அல்லது அனுமதிக்கப்பட்ட பார்ச்மெண்ட் பேப்பர் அலுமினியம் பாயில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    * எவ்வகை உணவு எண்ணெய்களையும் லேபிள் விபரங்களின்றியும், பொட்டலமிடாமல் சில்லறை அடிப்படையிலும் நுகர்வோருக்கு விற்பனை செய்தல் கூடாது.

    * உணவை கையாள்பவர்கள் கையுறை மற்றும் தலைமுடி கவசம் போன்றவற்றை தவறாமல் அணிய வேண்டும்.

    * பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்கள் கொள்முதல் விற்பனை செய்யும்போது எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. உரிமை எண்ணுடன் கூடிய முழுமையான லேபிள் விவரங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    * உணவு சமைக்க மற்றும் நொறுக்குத் தீனிகள் தயாரிக்க அயோடின் கலந்த உப்பு மட்டுமே பயன்படுத்த வேண்டும். உணவகங்கள் / பேக்கரி / இனிப்பகங்கள் உள்ளிட்ட உணவு நிறுவனங்களில் அயோடின் கலக்காத உப்பு இருக்கக்கூடாது.

    * சிக்கன்-65, பஜ்ஜி, கோபி-65 போன்ற உணவு வகைகளில் செயற்கை நிறமிகள் சேர்க்கக்கூடாது.

    என்பது உள்பட 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.

    உணவு கடைகளில், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் உணவு விற்பனை செய்தாலோ? அல்லது தயாரித்தாலோ? உணவு கடையின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உணவு பாதுகாப்புத்துறை சட்டத்தின்படி கடையின் உரிமம் ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நாளை முதல் 9-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    10-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இன்று முதல் 6-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • காரின் உதிரி பாகங்கள் சேமித்து வைத்திருந்த இடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வன்னியடிகளார் நகர் பகுதியில் குப்பன் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு பொருட்கள் குடோன் உள்ளது.

    இங்கு காரின் உதிரி பாகங்கள் சேமித்து வைத்திருந்த இடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த பொருட்களில் தீ பரவியது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் கடும் புகைமூட்டம் எழுந்தது.

    இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    • நிதி நிறுவனங்கள் நடத்தி மோசடியில் ஈடுபடுவது ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது.
    • போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள புள்ளி விவரங்களை பார்க்கும்போது 39 சதவீத சொத்துக்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மதுரை:

    கோவையைச் சேர்ந்த ரவிச்சந்திரன், மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2023 ஆண்டு தக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

    மதுரையை தலைமையிடமாக கொண்டு அப்சல் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனத்தினரின் ஆசை வார்த்தையை நம்பி, நான் உள்பட ஏராளமானவர்கள் பல கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தோம். எங்கள் பணத்தை அந்த நிறுவனம் மோசடி செய்தது. இதுகுறித்து புகார் அளித்ததால் 2017-ல் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்நிலையில் முதலீடு செய்து ஏமாந்த முதலீட்டாளர்கள் தொகையை திரும்ப பெற்றுத்தர ஓய்வு பெற்ற நீதிபதி சுதந்திரம் தலைமையில் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர், அப்சல் நிறுவன மேலாளர் ஆகியோர் அடங்கிய குழுவை உயர் நீதிமன்றம் நியமித்தது.

    அந்த குழு, நிதி நிறுவனத்தின் சொத்துகளை மீட்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை. நிறுவனத்தினர் இதற்கு ஒத்துழைக்கவும் இல்லை. இதற்கிடையே அப்சல் நிறுவன நிர்வாகி செந்தில்வேல் இறந்துவிட்டார். நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்யவோ, வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவோ போலீசார் கடந்த 5 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் தப்பிக்க போலீசார் உடந்தையாக உள்ளனர். குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுவதற்கு உதவியாகவும் போலீசார் உள்ளனர். எனவே அப்சல் நிதி நிறுவன மோசடி வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனுவை நீதிபதி புகழேந்தி விசாரித்தார். இதற்கிடையே போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருந்ததாவது:-

    தமிழகத்தில் இதுவரை நிதி நிறுவன மோசடி பிரிவின் கீழ் 1,249 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் 6,90,166 நபர்கள் முதலீடு செய்துள்ளனர். இதற்காக இதுவரை 366 அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுமார் 827 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் வழக்கில் இணைக்கப்பட்டு உள்ளது.

    பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் சுமார் ரூ.50 கோடியே 71 லட்சம் வைப்புத் தொகையாக வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் 373 கோடி ரூபாய் வைப்புத்தொகை வைக்கப்பட்டுள்ளது. இதில் 264 கோடி ரூபாய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

    முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

    இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்கனவே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணையை முடிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் குற்றவாளிகள் போதிய ஒத்துழைப்பு தரவில்லை. 7 ஆண்டுகளாக குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டது போல இந்த வழக்கு உள்ளது. இனியும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறும் காரணங்களை ஏற்க முடியாது.

    போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள புள்ளி விவரங்களை பார்க்கும்போது 39 சதவீத சொத்துக்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் நிதி நிறுவனங்கள் நடத்தி மோசடியில் ஈடுபடுவது ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. இதில் பாதிக்கப்படுபவர்கள் ஏழை மற்றும் படிப்பறிவு இல்லாத பொதுமக்கள் தான்.

    எனவே அரசு இந்த விவகாரங்களை எளிதாக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் குழு அமைத்தால் மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனங்களிடமிருந்து சொத்துக்களை மீட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் நடவடிக்கை விரிவுபடுத்தப்படும்.

    பொருளாதார மோசடியில் சிக்கியவர்கள் எவ்வளவு பெரிய உயர்ந்த பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு விசாரணையை நம்பி தான் உள்ளனர். எனவே இந்த வழக்கை ஆறு மாதத்தில் விசாரணை செய்து முடிக்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    ×