என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்- நயினார் நாகேந்திரன்
    X

    தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்- நயினார் நாகேந்திரன்

    • 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்.
    • கமலுக்கோ அவரது கட்சிக்கோ பா.ஜ.க. ஆதரவு கிடையாது. ஆனால் தமிழுக்கு எப்போதும் ஆதரவு உண்டு.

    புதுக்கோட்டையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்குள் நாங்கள் செல்ல விரும்பவில்லை. யார் அந்த சார்? என்று ஒவ்வொருவர் மனதிலும் இருக்கிறது. ஆனால் காவல்துறை சரியாக விசாரிக்கவில்லை.

    குற்றப்பத்திரிகை தெளிவில்லாமல் இருக்கிறது. தெளிவுபடுத்த வேண்டியது தமிழ்நாடு முதலமைச்சரின் பொறுப்பு.

    தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மோசமாக உள்ளது. நவீன வகையான போதை மருந்து நடமாட்டம் தமிழகத்தில் தான் இருக்கிறது.

    தி.மு.க. தோல்வி பயத்தில் இருக்கிறது. அதனால் தான் எங்கள் கூட்டணியை விமர்சனம் செய்கின்றனர். அவர்கள் உறுதியாக இருந்தால் எங்கள் கூட்டணியை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது.

    தற்போது வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ். உள்ளிட்டவர்கள் இருக்கின்றனர். வரக்கூடிய தேர்தலை அனைவரும் சேர்ந்து சந்திக்க எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்களிடம் பேசி ஒருமித்த முடிவு எடுக்கப்படும். அவர் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

    தமிழை உயர்த்தி பேசினால் நாங்கள் வரவேற்போம் . ஆனால் ஒரு மொழியை சிறுமைப்படுத்தி, ஒரு மொழியை உயர்த்திப் பேசினால் தேவையில்லாத விவகாரங்கள் வரும் அதை தான் கமல்ஹாசன் செய்துள்ளார்

    தமிழ் 5000 வருடத்திற்கு முன்பானது என்பதை யாரும் மறுப்பதற்கு கிடையாது. ஆனால் அதற்காக மற்றொரு மொழி சிறுமை என்று கூற முடியாது. அனைத்து மொழியுமே உயர்ந்தது. கமலுக்கோ அவரது கட்சிக்கோ பா.ஜ.க. ஆதரவு கிடையாது. ஆனால் தமிழுக்கு எப்போதும் ஆதரவு உண்டு.

    மத்திய மந்திரி அமித்ஷா வருகின்ற 8-ந் தேதி மதுரைக்கு வருகை தர உள்ளார். ஒவ்வொரு நிர்வாகிகளையும் சந்தித்து பேச உள்ளார். அண்ணா மலை குடும்பத்தினருடன் சிங்கப்பூர் சென்று திரும்பி உள்ளார். தொடர்ந்து இனி வரக்கூடிய நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பார்.

    அனைத்து எதிர்கட்சிகளும் தி.மு.க.வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய வேண்டும். தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. மற்றும் பா.ம.க. ஆகிய கட்சிகளை செல்வப் பெருந்தகை அழைத்து உள்ளார். இது குறித்து அந்தந்த கட்சிகள்தான் முடிவு எடுக்க வேண்டும்.

    இதுவரை தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்பது இல்லை. வரக்கூடிய காலங்களில் அது சாத்தியமா என்று பார்க்கலாம். ஆனால் 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அண்ணாமலை மாநில தலைவராக இருந்தபோது தமிழ்நாடு அரசியல் களம் அதிரடியாக இருந்தது. தற்போது அமைதியாக உள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அணுகுமுறை உண்டு அவர் அதிரடியான அணுகுமுறை கையாண்டார். நான் அமைதியான அரசியல் செய்ய விரும்புகிறேன். அதிரடி அரசியல் வேண்டாம் என்றார்.

    Next Story
    ×