என் மலர்
உள்ளூர் செய்திகள்
- நத்தம் விசுவநாதன், ஊ. பொன்னையன், பொள்ளாச்சி ஏ. ஜெயராமன், டி. ஜெயக்குமார்.
- சி.வி. சண்முகம், செ. செம்மலை, பா. வளர்மதி, ஓ.எஸ். மணியன், ஆர்.பி. உதயகுமார், எஸ்.எஸ். வைகைச்செல்வன்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ் நாட்டில் 17-வது சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக சார்பில், மக்களுக்கு பல்வேறு வகைகளில் நலம் பயக்கும் வகையிலான
தேர்தல் அறிக்கையினை தயார் செய்வதற்காக, அதிமுக சார்பில் பின்வருமாறு குழு அமைக்கப்படுகிறது.
நத்தம் விசுவநாதன், ஊ. பொன்னையன், பொள்ளாச்சி ஏ. ஜெயராமன், டி. ஜெயக்குமார், சி.வி. சண்முகம், செ. செம்மலை, பா. வளர்மதி, ஓ.எஸ். மணியன், ஆர்.பி. உதயகுமார், எஸ்.எஸ். வைகைச்செல்வன்
மேற்கண்ட குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, பல்வவேறு தரப்பட்ட மக்களின் கருத்துகளையும், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய தரவுகளையும் பெற்று வரும் வகையிலான சுற்றுப் பயணத் திட்டம் விரைவில் வெளியிடப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
- டாக்டர் ராமதாஸ் பொதுக்குழு மற்றும் செயற்குழுவை நடத்த அதிகாரமில்லை என்பது எவ்வளவு அநாகரீகமானது.
- செயற்குழு, பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி சரியாக நடக்கும்.
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் 29-ந்தேதி சேலத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்திற்கு பா.ம.க. பெயரில் அனுமதி வழங்கக் கூடாது என அன்புமணி தரப்பினர் சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இந்த நிலையில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே. மணி இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* வருகிற 29-ந்தேதி சேலத்தில் பாமக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.
* தமிழ்நாடு, புதுச்சேரி மாநில கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
* செயற்குழு, பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி சரியாக நடக்கும்.
* 2026 சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி குறித்து டாக்டர் ராமதாஸ் அறிவிப்பார் என்று மாநில அளவிலும், தேசிய அளவிலும் பார்க்கப்படுகிற முக்கியமான கூட்டமாக கருதப்படுகிறது.
* கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கிறோம்.
* டாக்டர் ராமதாஸை கொச்சைப்படுத்தாதீர்கள். அவமானப்படுத்தாதீர்கள். அவர்கள் வேதனைப்படுகிறார். கண் கலங்குகிறார். அதோடு வேகமாகிறார். நீங்கள் பேச பேச மக்கள் மத்தியில் டாக்டர் ராமதாஸ் வலிமை அதிகரித்து வருகிறது.
* டாக்டர் ராமதாஸ் பொதுக்குழு மற்றும் செயற்குழுவை நடத்த அதிகாரமில்லை என்பது எவ்வளவு அநாகரீகமானது. வெட்கக்கேடானது. வன்மையாக கண்டிக்கிறேன்.
இவ்வாறு ஜி.கே. மணி தெரிவித்தார்.
- NDA-வில் தேமுதிக-விற்கு வெறும் 6 இடங்கள் என தகவல் வெளியிட்ட கட்சிக்கு அழிவு காலம் ஆரம்பமாகிவிட்டது.
- தேமுதிக குறித்து செய்தி வெளியிடுவதாக இருந்தால், எங்கள் அனுமதி இல்லாமல் போடக்கூடாது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒவ்வொரு கட்சியும் தேர்தல் பணியை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது. அந்த வகையில் திமுக- அதிமுக, தவெக ஆகிய கட்சிகள் தங்களது கூட்டணியை பலப்படுத்த காய் நகர்த்தி வருகின்றன.
இந்த நிலையில் அதிமுக- பாஜக இடையே கூட்டணி அமைந்துள்ள நிலையில், தமிழக பாஜக-வின் தேர்தல் பொறுப்பாளராக பியூஸ் கோயல் கடந்த வாரம் சென்னை வந்தார். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியோடு ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது கூட்டணிக்கு வரவுள்ள புதிய கட்சிகள், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படவுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அதிமுக 170 தொகுதிகளிலும், பாஜக 25 தொகுதிகளிலும், பாமகவிற்கு 23 தொகுதிகளும், தேமுதிக-விற்கு 6 தொகுதிகள் என தகவல் வெளியானது.
ஆனால் இந்த தகவலை அதிமுக மற்றும் பாஜக மறுத்தது. தவறான தகவல் என விளக்கம் அளித்து இருந்தது.
இந்த நிலையில் சென்னையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேமுதிக சார்பாக நடைபெற்ற விழாவில் அக்கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், பியூஸ் கோயல் இபிஎஸ் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பிரேமலதா விஜயகாந்த் பதில் அளித்ததாவது:-
அந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் சேர்ந்து கலந்து ஆலோசித்து இருக்கிறார்கள். அதை நாங்கள் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. அதிமுக- பாஜக இரண்டும்தான் தற்போது கூட்டணியாக உள்ளனர். அன்றைய கூட்டத்திற்கு பிறகு இந்தந்த கட்சிக்கு இத்தனை சீட்டு என்று அதிகாரப்பூர்வமாக யார் வந்து பத்திரிகையாளர்களுக்கு கொடுத்தார்கள்.
அதிகாரப்பூர்வமாக அந்த லிஸ்டை யார் கொடுத்தார்கள் என்று சொல்ல வேண்டும். அதன் பின்னர் பதில் சொல்கிறேன். சமூக வலைதள மூலமாக அன்று வெளியான அந்த ஒரு செய்தியை வைத்துக்கொண்டு அன்று முழுவதும் தொலைக்காட்சிகளில் விவாதம் செய்தவர்களுக்கு நான் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக-விற்கு வெறும் 6 இடங்கள் என தகவல் வெளியிட்ட கட்சிக்கு அழிவு காலம் ஆரம்பமாகிவிட்டது. தேமுதிக குறித்து செய்தி வெளியிடுவதாக இருந்தால், எங்கள் அனுமதி இல்லாமல் போடக்கூடாது.
ஜனவரி 9 மாநாடு அன்று யாருடன் கூட்டணி குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பேன் என்று சொல்லி இருக்கிறேன். நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர்கள் அனைவரிடமும் கலந்து ஆலோசனை செய்த பிறகுதான் கூட்டணி குறித்து ஒரு தெளிவான முடிவு எடுப்போம்.
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
- தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார்.
- ஆனால் சாமுவேல்ராஜ் என்பவருக்கு வழங்கப்பட்டதால் விஜய் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி ரீதியாக 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களை த.வெ.க. தலைவர் விஜய் நியமனம் செய்தார். தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அறிவிப்பு இதுவரை வெளியிடபடாமல் இருந்தது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கான புதிய நிர்வாகிகள் பட்டியலை நேற்றுமுன்தினம் கட்சி தலைவர் விஜய் வெளியிட்டார். தூத்துக்குடி மத்திய மாவட்டத்திற்கு எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ், வடகிழக்கு மாவட்டத்திற்கு ஏ.கே. மகேஷ்வரன், புறநகர் மாவட்டத்திற்கு மதன்ராஜா, தெற்கு மாவட்டத்திற்கு விர்ஜின் ஆரோக்கிய பிரைட்டர், வடக்கு மாவட்டத்திற்கு பாலசுப்பிரமணியன் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டனர்.
மேலும் மாவட்ட இணைச் செயலாளர், பொருளாளர், 2 துணைச் செயலாளர் பதவிகளையும் கட்சி தலைவர் விஜய் நேற்று அறிவித்து புதிய நிர்வாகிகளுக்கு பனையூர் கட்சி அலுவலகத்தில் சான்றிதழை வழங்கினார்.
தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் பதவி தனக்கு கிடைக்கும் என தூத்துக்குடியை சேர்ந்த அஜிதா ஆக்னல் எதிர்பார்த்து இருந்தார்.
ஆனால் அந்த பதவிக்கு சாமுவேல்ராஜ் நியமனம் செய்யப்படுவதை அறிந்து பனையூர் த.வெ.க. தலைமை அலுவலகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன் கட்சி அலுவலகம் வந்த விஜய் காரை தனது ஆதரவாளர்களுடன் மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பாதுகாவலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் போராட்டக்காரர்களை விலக்கி விஜய் காரை தலைமை அலுவலகத்திற்குள் அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து அஜிதா ஆக்னல் கட்சி அலுவலகத்தின் நுழைவு வாயிலில் தர்ணா போராட்டம் நடத்தினார். தொடர்ந்து த.வெ.க. நிர்வாகிகள் அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் அஜிதா ஆக்னல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் அளவுக்கு அதிகமாக தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடல்நிலை மோசமானால் தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே அஜிதா ஆக்னல் "இறுதி மூச்சு உள்ளவரை என் தாய் கழகமான தமிழக வெற்றிக் கழகத்தோடும் எம் தலைவர் தளபதி விஜய் யோடு மட்டும்தான் எனது அரசியல் பயணம் தொடரும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
- திருமங்கலம் நகர் போலீஸ் நிலையம் அருகே வந்தபோது மருமகன் அஷ்வந்த் வாகனத்தினை வழிமறித்து கவிராஜன் தகராறு செய்துள்ளார்.
- தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் சோழவந்தான் ரோட்டினை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் அஷ்வந்த்(வயது 25). திருமங்கலம் பழனியாபுரத்தினை சேர்ந்த கவிராஜன் மகள் அனிதா(23). இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தநிலையில் கடந்த 4 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் காதல் திருமணத்தினை அனிதா வீட்டில் ஏற்கவில்லை. அதனால் இரண்டு குடும்பத்திற்கும் முன்விரோதம் ஏற்பட்டது.
போலீஸ் நிலையத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் அனிதா பெற்றோரிடம் செல்ல மறுத்து கணவர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் 2 தரப்பினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து செல்வம் ஏற்கனவே திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்துள்ளார்.
இந்த நிலையில் செல்வத்தின் மூத்த மகள் பிரியதர்ஷினியின் மாமியார் உடல் நலக்குறைவால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று அவரை பார்த்துவிட்டு மீண்டும் திருமங்கலத்திற்கு திரும்பினர்.
திருமங்கலம் நகர் போலீஸ் நிலையம் அருகே வந்தபோது மருமகன் அஷ்வந்த் வாகனத்தினை வழிமறித்து கவிராஜன் தகராறு செய்துள்ளார். இதில் கல்லை எடுத்து எறிந்ததில் செல்வம், அவரது பேத்திக்கு காயம் ஏற்பட்டது. அங்கு இருந்தவர்கள் இவர்களின் தகராறினை தடுத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் செல்வம் அவரது பேத்தியை அழைத்து கொண்டு அனைவரும் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.
இந்தநிலையில் இரவு 11 மணியளவில் திருமங்கலம் எட்டுபட்டரை மாரியம்மன் கோவில் அருகேயுள்ள அஷ்வந்த் சகோதரி பிரியதர்ஷினி வீட்டின் பின்புற ஜன்னல் வழியாக மர்மநபர் ஒருவர் பெட்ரோல் நிரம்பிய பாட்டிலை வீசி தப்பியோடிவிட்டார். அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் இல்லை. அதே நேரத்தில் வீடு முழுவதும் தீ பரவி அங்கிருந்த கட்டில், பீரோ, பிரியதர்ஷினியின் மாமியாரின் மருத்துவ செலவிற்கு வைத்திருந்த ரொக்கபணம் 2 லட்சம் மற்றும் சுமார் 35 பவுன் நகைகள் எரிந்து நாசமாகின.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அரைமணி நேரம் போராடி அணைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து செல்வம் திருமங்கலம் டவுன் போலீசுக்கு புகார் கொடுத்தார். தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பிரியதர்ஷனியின் கணவர் பாலமுருகன் கொடுத்த புகாரில் பெட்ரோல் குண்டு வீசியது கவிராஜன் அவரது மகன் கௌசிக் ஆகியோர் தான் காரணம் என தெரிவித்து உள்ளார். இதன் அடிப்படையில் திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் திருமங்கலத்தில் நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளை உணர்த்துகிறது.
- கலவரக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டியது நம் அனைவரது பொறுப்பும் கடமையுமாகும்!
சென்னை :
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சிறுபான்மையினர் அச்சமின்றி வாழத் துணையிருப்பதில்தான் பெரும்பான்மையினரின் பலமும் இருக்கிறது; குணமும் இருக்கிறது!
பெரும்பான்மை என்ற பெயரில் சில வலதுசாரி வன்முறைக் கும்பல்கள் தாக்குதல்களிலும் கலவரங்களிலும் ஈடுபடுவது, அதுவும் - மாண்புமிகு பிரதமர் அவர்கள் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கெடுக்கும்போதே ஈடுபடுவது, நாட்டு மக்களுக்குத் தவறான செய்தியையே கொண்டு சேர்க்கும்.
மணிப்பூர் கலவரங்களைத் தொடர்ந்து, இப்போது ஜபல்பூர் - ராய்பூர் மற்றும் பிற இடங்களிலும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் என்பதை நல்லிணக்கத்தை விரும்பும் நாட்டு மக்கள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒன்றிய பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் 74% அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படும் புள்ளிவிவரங்கள், எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளை உணர்த்துகிறது.
எனவே, நாட்டுமக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் கலவரக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டியது நம் அனைவரது பொறுப்பும் கடமையுமாகும்! என்று கூறியுள்ளார்.
- மகேந்திரா சிட்டி அருகே உள்ள சிக்னலில் நின்று கொண்டு இருந்த ஒரு அரசு பஸ்சின் பின்னால் மாணவர்கள் தங்களது மோட்டார் சைக்கிளில் காத்திருந்தனர்.
- விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வண்டலூர்:
காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தவர் லோகேஷ் (வயது22) நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்.
இதே கல்லூரியில் வந்தவாசியை சேர்ந்த சாஹித் பாரான்(22) என்பவரும் படித்து வந்தார். நண்பர்களான இருவரும் தனியாக வீடு எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வந்தனர்.
நேற்று இரவு லோகேசும், சாஹித் பாரானும் மகேந்திரா சிட்டி அடுத்து உள்ள வணிக நிறுனத்திற்கு சென்று விட்டு ஒரே மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்தனர். மகேந்திரா சிட்டி அருகே உள்ள சிக்னலில் நின்று கொண்டு இருந்த ஒரு அரசு பஸ்சின் பின்னால் மாணவர்கள் தங்களது மோட்டார் சைக்கிளில் காத்திருந்தனர்.
அப்போது பின்னால் திண்டிவனத்தில் இருந்து மாதவரம் நோக்கி வந்த மற்றொரு பஸ் மாணவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இழுத்து செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் நின்று கொண்டு இருந்த அரசு பஸ்சுக்கும், மோதிய அரசு பஸ்சுக்கும் இடையே சிக்கிக் கொண்டது. இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் லோகேசும், சாஹித் பாரானும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
பொத்தேரி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
- கடலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
திருச்செந்தூர்:
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது.
இங்கு முருகனை வழிபடக் கூடிய உகந்த நாளான வளர்பிறை சஷ்டி மற்றும் பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை முன்னிட்டு இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அதிகாலை 1 மணி முதல் கடலில் புனித நீராடி நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராட சுமார் 500 மீட்டர் தூரம் வரை காத்திருந்து புனித நீராடி வருகின்றனர்.
மேலும் பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் சுமார் 8 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த தரிசன வரிசையானது கோவில் வளாகத்தில் இருந்து பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் மூத்த குடிமக்கள் வரிசையில் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்து வருகின்றனர்.
கோவில் வளாகத்தின் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காட்சியளித்து வருகிறது. கடலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் திருவிழா போல காட்சியளித்தது. மேலும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் வந்திருந்ததால் திருச்செந்தூர் நகர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும் புதிய வாகன நிற்கும் இடங்கள் இல்லாமல் ஆங்காங்கே சாலை ஓரத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், நகர் பகுதி மக்கள் அவசர தேவைகளுக்கு கூட வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
- ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடி வெற்றி கண்ட இந்தியாவின் முதல் அரசி வீரமங்கை ராணி வேலு நாச்சியார்.
- சமய நல்லிணக்கத்தைப் பேணிய எங்கள் கொள்கைத் தலைவர், வீரமங்கை ராணி வேலு நாச்சியார்.
வீரமங்கை ராணி வேலு நாச்சியார் நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
வீரத்தின் விளைநிலமான தமிழ் மண்ணிலிருந்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடி வெற்றி கண்ட இந்தியாவின் முதல் அரசி, சமூக, சமய நல்லிணக்கத்தைப் பேணிய எங்கள் கொள்கைத் தலைவர், வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்தும் மலர்தூவியும் மரியாதை செலுத்தினேன் என்று தெரிவித்துள்ளார்.
- ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம், கள்ளக்குறிச்சியில் 250 மெட்ரிக் டன் விதை சேமிப்புக் கிடங்கு ரூ.1 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் திறக்கப்படுகிறது.
- 62 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டம் செல்கிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சென்று வீரசோழபுரத்தில் அனைத்து வசதிகளுடனும், அரசின் அனைத்துத் துறைகளும் ஒரே இடத்தில் செயல்படும் வகையில் ரூ.139.41 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 தளங்கள் கொண்ட மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.
இந்த மாவட்ட கலெக்டர் அலவலகக் கட்டிடம் 13.86 ஏக்கர் பரப்பளவில் (மாவட்ட ஆட்சியரகம் தவிர்த்து பிற அலுவலகம் அமைப்பதற்கான மொத்த இடப் பரப்பளவு 39.81 ஏக்கர்) பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ரூ.100 கோடியே 80 லட்சத்து 85 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 2525 திட்டப் பணிகள் திறந்து வைக்கப்படுகின்றன. ரூ.81 கோடியே 59 லட்சத்து 24 ஆயிரம் செலவில் கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள் திறக்கப்படுகின்றன.
ரூ.7 கோடியே 19 லட்சத்து 34 ஆயிரம் செலவிலான ஆரம்ப சுகாதார மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், வட்டாரப் பொது சுகாதார ஆய்வக கட்டிடங்கள், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குடிநீர் திட்டப் பணி ரூ.6 கோடியே 62 லட்சம் மதிப்பீடு திறக்கப்படுகின்றன.
ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம், கள்ளக்குறிச்சியில் 250 மெட்ரிக் டன் விதை சேமிப்புக் கிடங்கு ரூ.1 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் திறக்கப்படுகிறது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், சங்கராபுரம் பேரூராட்சியில் கட்டப்பட்டு உள்ள ரூ.1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய பேரூராட்சி அலுவலகக் கட்டிடம் திறக்கப்படுகிறது.
ரூ.386 கோடியே 48 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பீட்டிலான 62 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் கீழ் மொத்தம் ரூ.1,045 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2 லட்சத்து 16 ஆயிரத்து 56 பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
நாளை மறுநாள் (27-ந்தேதி) திருவண்ணாமலை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு, மலப்பாம்பாடி கலைஞர் திடலில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.631 கோடியே 48 லட்சத்து 69 ஆயிரம் செலவிலான 314 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.63 கோடியே 74 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 46 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 194 பயனாளிகளுக்கு ரூ.1400 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
243 முடிவுற்றப் பணிகள் உட்பட மொத்தம் ரூ.571 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் செலவிலான 312 திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
ரூ.63 கோடியே 74 ஆயிரம் மதிப்பீட்டிலான 46 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் ரூ.1,400 கோடியே 57 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2 லட்சத்து 66 ஆயிரத்து 194 பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்கள்.
இத்தகைய பல்வேறு திட்டங்களுக்குப் பெருமை சேர்த்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் விதமாக இந்த கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களிலும் மக்கள் எழுச்சி கொண்டுள்ளனர். அதனால், விழாக்கோலம் பூண்டுள்ளது.
- பலத்த காயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- அரசு பேருந்து ஓட்டுநர் தாஹா அலியை கைது செய்த ராமநத்தம் காவல்துறையினர் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார்கள் மீது அரசு விரைவுப் பேருந்து மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலத்த காயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் அஜாக்கிரதையாக பேருந்தை இயக்கியதாக ஓட்டுநர் தாஹா அலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர்.
அரசு பேருந்து ஓட்டுநர் தாஹா அலியை கைது செய்த ராமநத்தம் காவல்துறையினர் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
பேருந்தை இயக்குவதற்கு முன்பாக உரிய முறையில் சோதனை செய்யத் தவறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
- அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரளா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
27 மற்றும் 28-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
29 மற்றும் 31-ந்தேதிகளில் தென்கடலோர தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
இதனிடையே, இன்று முதல் 29-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.
உறைபனி எச்சரிக்கை:
இன்று மற்றும் நாளை தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 29-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.






