என் மலர்
உள்ளூர் செய்திகள்
- விஜய் பா.ஜ.க.வை கொள்கை எதிரி என்று கூறினாலும் அவர் எப்போதும் என் தம்பிதான்.
- தி.மு.க. ஆட்சியில் எத்தகைய தவறுகள் நடக்கிறது என்பது விஜய்க்கு நன்றாக தெரியும்.
சென்னை:
தமிழக பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் பட்டியல் நேற்று வெளியானது. இதில் நடிகை குஷ்புவுக்கு துணை தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. துணை தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள குஷ்பு கூறியதாவது:-
இந்தப் பதவி நான் எதிர்பாராதது. எதிர்பாராத மகிழ்ச்சியை கொடுத்து உள்ளது. இதற்காக கட்சிக்கு எனது இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பா.ஜ.க.வை பொறுத்தவரை முன்பு சரியான பதவி தரப்படவில்லை என்று சொல்வது ஏற்புடையதல்ல. நான் பா.ஜ.க.வில் இணைந்த உடனேயே சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் பிறகு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார்கள்.அதன்பிறகும் தேசிய செயற்குழு உறுப்பினர், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் என்ற பதவிகளை எல்லாம் வழங்கினார்கள்.
என்னைப் பொருத்தவரை பா.ஜ.க.வில் கொடுக்கும் பொறுப்பில் இருந்து தனது வேலையை அமைதியாக செய்தாலே போதும் கட்சித் தலைமை மகுடம் சூட்டி மகிழும்.
தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இனி மாநில தலைவர் முறையான பயிற்சிகளையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்குவார். அதன்படி மக்களிடம் கட்சியை வளர்க்கவும் பிரதமர் மோடி செயல்படுத்தியுள்ள நல்ல திட்டங்கள் பற்றியும், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் முன்னேற்றத்திற்கும் பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள திட்டங்கள் பற்றியும் மக்களிடம் எடுத்துச் சொல்வோம்.
முன்பெல்லாம் வறுமை, ஊழல் மலிந்த தேசமாகவே இந்தியாவை மற்ற நாடுகள் பார்த்தன. ஆனால் இப்போது இந்தியாவின் வளர்ச்சியையும், கட்டமைப்பையும் ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்க்கின்றன.உலக அளவில் முதலாவது 5 நாடுகளில் ஒன்றாக இந்தியா வளர்ந்துள்ளது.
பிரதமர் மோடியை பார்த்து இப்படி ஒரு தலைவரை பார்த்தது இல்லை என்று உலக நாடுகள் எல்லாம் வியக்கின்றன. பிரதமர் மோடி பற்றி நான் தமிழகம் முழுவதும் சென்று பேசுவேன்.
தமிழ்நாட்டில் மக்களின் வாழ்வாதாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இதற்காக பிரதமர் மோடி நிறைய செய்து இருக்கிறார். இதுபற்றி அனைத்து தொகுதிகளுக்கும் சென்று பேசுவேன்.
நடிகர் விஜய் பா.ஜ.க.வை கொள்கை எதிரி என்று கூறினாலும் அவர் எப்போதும் என் தம்பிதான். அரசியல் ரீதியாக அவர் வேறு இடத்தில் இருந்தாலும் அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் தேர்தலில் அவர் வெற்றி பெறுவாரா? என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள்.
அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்து இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த கூட்டணிக்கு மேலும் கட்சிகள் வருவது பற்றி அ.தி.மு.க.-பா.ஜ.க. மேலிட தலைவர்கள் பேசி முடிவு செய்வார்கள். மற்றபடி கூட்டணி விவகாரங்கள் பற்றி நான் மேலிட அனுமதி இல்லாமல் பேச இயலாது.
என்றாலும் தம்பி என்ற முறையில் விஜய்க்கு அழைப்பு விடுக்கிறேன். விஜய் கட்சியின் முக்கிய குறிக்கோளே தி.மு.க.வை வருகிற தேர்தலில் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான்.
இதே கொள்கையுடன்தான் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியும் இருக்கிறது. நீங்கள் தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்று நினைத்தால் நாம் அனைவரும் ஒரே அணியில் கைகோர்க்க வேண்டும்.
தி.மு.க. ஆட்சியில் எத்தகைய தவறுகள் நடக்கிறது என்பது விஜய்க்கு நன்றாக தெரியும். தி.மு.க. அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியை தழுவி இருப்பதும் தெரியும். எனவே அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணிக்கு விஜய் வருவதுதான் சரியான முடிவாக இருக்கும் என்பது எனது கருத்தாகும்.
இந்த தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வரும். ஆனால் இப்போதும் முதல்வர் கண்ணை கட்டிக்கொண்டு சுற்றி இருப்பவர்கள் சொல்லிக் கொடுப்பதை கேட்டு எல்லாம் நன்றாக நடக்கிறது என்று பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த 4 ஆண்டுகளில் திமுக செய்த சாதனைகள் என்ன? தினமும் கொலை, கொள்ளை, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள், போதை பழக்கங்கள் அதிகரிப்பு என்று தமிழகம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பது போதும் எங்கள் வெற்றிக்கு என்று தி.மு.க.வினர் கூறுகிறார்கள். ஆனால் பெண்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சிக்கு வரும்போது அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் சொன்னபடி செய்தார் களா? பலருக்கு அந்த பணம் கிடைக்கவில்லை.
இப்போது கணக்கெடுக்கும் போது தான் கள நிலவரம் கலவரமாக இருக்கிறதே என்று கலங்கி போய் இருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் கணக்கெடுப்பதை ஆட்சிக்கு வந்ததும் முறையாக கணக் கெடுத்து எல்லா பெண்களுக்கும் வழங்கி இருக்கலாமே. ஏன் செய்யவில்லை? இதுதான் தி.மு.க.வின் தேர்தல் ஏமாற்று வேலை. ஆனால் இந்த முறை மக்கள் ஏமாற மாட்டார்கள்
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. அரசு எப்போதும் ஏழை எளிய மக்களின் குறிப்பாக வணிகர்களுக்கு துணைநிற்கும் அரசாகும்.
- புதிய சட்டத்தை நடைமுறைபடுத்துவது குறித்து முடிவு மேற்கொள்ளப்படும்.
சென்னை:
கிராம பகுதிகளில் தொழில் செய்பவர்கள் கட்டாயம் லைசென்ஸ் வாங்க வேண்டும் என்றும், இது டீக்கடை முதல் அனைவருக்கும் பொருந்தும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. இதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து இருந்தார்.
அவருக்கு பதில் அளிக்கும் வகையில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தொழில் உரிமம் பெறுவதற்கான சட்டப்பிரிவு பல ஆண்டுகளாக இருந்த போதும் முறையான விதிகள் இல்லாததால் ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் தங்களது தீர்மானத்தின் அடிப்படையில் பல்வேறு விதமான கட்டணங்கள் நிர்ணயம் செய்து அதிக அளவில் கட்டணங்களை வசூலித்து வந்தன.
இந்த குறைகளை நீக்கும்பொருட்டு பல்வேறு வணிகர்களின் கோரிக்கைகளை ஏற்று இப்போது புதிதாக விதிகள் உருவாக்கப்பட்டு அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. அரசு எப்போதும் ஏழை எளிய மக்களின் குறிப்பாக வணிகர்களுக்கு துணைநிற்கும் அரசாகும். வணிகர் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ள திராவிட மாடல் அரசின் நல்லெண்ணத்தின் மீது பழிபோட பழனிசாமி பகல் கனவு காண வேண்டாம்.
இந்நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக உரிமம் பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துவது குறித்து கோரிக்கை மனுவை முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளனர். இந்த அதில் லைசென்ஸ் விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக துறை அலுவலர்கள் மற்றும் வணிகர் சங்க அமைப்புகளின் பிரதிநிதிகளை கொண்ட ஆலோசனைக் குழு ஒன்றை அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தக்குழு, கிராமப்புறங்களில் சிறு வணிகர்கள் வணிக உரிமம் பெறுவது குறித்த நடைமுறையை எளிமைப்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு பரிந்துரைகளை வழங்கும். அதன் அடிப்படையில் புதிய சட்டத்தை நடைமுறைபடுத்துவது குறித்து முடிவு மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் கிராமங்களில் தொழில் செய்ய லைசென்ஸ் வாங்க வேண்டும் என்ற அரசு உத்தரவு ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆலோசனை குழு சமர்ப்பித்த பிறகு இதில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஊராட்சி மன்ற தலைவர், செயலாளர் ஆகியோர் இணைந்து இலவச வீடு திட்டத்தில் போலி ஆவணங்களை பயன்படுத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர்.
- அரசின் திட்டங்களை பெற லஞ்சம் கொடுக்கும்படி ஏழை, எளியோரை கட்டாயப்படுத்துகிறார்.
மதுரை:
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த துரைசாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கல்வார்பட்டி ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் மற்றும் மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் கிராம ஊராட்சியில் உள்ள மக்கள் பயன் பெற்றனர். இந்நிலையில் கல்வார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் இணைந்து இலவச வீடு திட்டத்தில் போலி ஆவணங்களை பயன்படுத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்து உள்ளனர்.
அதேபோல 100 நாள் வேலை திட்டத்தில் பங்கேற்று வேலை செய்யாதவர்கள் பெயரில் நிதி ஒதுக்கி ஏராளமான தொகையை ஊராட்சி செயலாளர் மோசடி செய்து உள்ளார். அரசின் திட்டங்களை பெற லஞ்சம் கொடுக்கும்படி ஏழை, எளியோரை கட்டாயப்படுத்துகிறார். இந்த மோசடி குறித்து அரசு அதிகாரிகளுக்கு மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கல்வார்பட்டி ஊராட்சி நிதியை முறைகேடு செய்த விவகாரத்தில் ஊராட்சி தலைவர், செயலர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, கல்வார்பட்டி ஊராட்சியில் வண்டிப்பாதை ஆக்கிரமிப்புக்கு ஊராட்சி தலைவரும், செயலரும் ஆதரவு அளித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இது போல பல்வேறு மோசடியில் அவர்கள் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
இது சம்பந்தமாக உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வாதாடினார். விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து சம்பந்தப்பட்டவர்கள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும். மேலும் இது குறித்து அதிகாரிகளிடம் உரிய விளக்கம் பெற்று அரசு வழக்கில் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள், உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.
- தமிழ்நாடு முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
- தற்போது வரை எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை.
சென்னை:
சென்னை ஆழ்வார்பேட்டையில் ஆதரவாளர்களுடன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். இதன்பின் பண்ருட்டி ராமச்சந்திரன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதாவது:-
* இன்று காலை முதல் நடைபெற்ற ஆலோசனையில் 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
* தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தொண்டர்கள் உரிமை மீட்பு குழு விலகுகிறது.
* தமிழ்நாடு முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
* தற்போது வரை எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை என்றார்.
எதிர்கால கூட்டணி குறித்து காலசூழலுக்கு ஏற்ப முடிவு என ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
- மாணவிகள் ஆங்கில ஆசிரியரின் அத்துமீறல் குறித்து 1098 என்ற எண்ணுக்கு புகார் தெரிவித்தனர்.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ரஞ்சித்குமார். இவர் வகுப்பறையில் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் அவர் வகுப்புக்கு வந்தாலே மாணவிகள் அச்சமடையும் நிலை ஏற்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அதிகாரிகள் வகுப்பறை மற்றும் குடியிருப்புகளில் தங்களுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல் குறித்து புகார் தெரிவிக்க 1098 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து மாணவிகள் ஆங்கில ஆசிரியரின் அத்துமீறல் குறித்து 1098 என்ற எண்ணுக்கு புகார் தெரிவித்தனர். அதன் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு வந்த மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவிகள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்ததால் ஆங்கில ஆசிரியர் ரஞ்சித்குமார் மீது ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
- வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் டெங்கு பரவல் அதிகமாகி வருகிறது. இதனால் தினந்தோறும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் மருத்துவமனைகளிலும் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் 10 மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், கடலூர், கோவை, தஞ்சாவூர், தெனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளது.
எனவே டெங்கு பாதிப்பு அதிகமாகும் என்பதால் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து துரிதமாக செயல்பட்டு ATS கொசுக்களை அழிக்கவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
- 2024-ம் ஆண்டு சாதிக்கட்சிகளை இணைத்து பா.ஜ.க. கூட்டணி அமைத்தது.
- இந்த உலகத்தில் எப்படி கூட்டி கழித்தாலும் மீதம் உள்ளது அன்புதான்.
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நெல்லையில் கவின் ஆணவ கொலை செய்யப்பட்டது குறித்து கூறியதாவது:-
* 2024-ம் ஆண்டு சாதிக்கட்சிகளை இணைத்து பா.ஜ.க. கூட்டணி அமைத்தது.
* 2024-ல் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்தது பாட்டாளி மக்கள் கட்சி
* எல்லா சாதிக்கட்சிகளையும் இணைத்து ஒரு மதகட்சி தலைமை வகித்தது.
* பா.ஜ.க. ஒரு மதவாத கட்சி என்பது தெரியும்.
* சமபங்கு என்றால் மாளிகையில் இருப்பவர்களுக்கும், தாழ்தளத்தில் குடிசையில் இருக்கிறவங்களும் சம பங்கு என்று சொன்னால் ஏற்புடையதாக உள்ளதா?
* நாட்டில் அடிப்படையை தகர்த்து மறுகட்டடம் கட்டணும்னு.
* வெளிப்படையாகவே அநீதிகளால் கட்டமைக்கப்பட்ட சமூகத்தை தகர்த்து முற்றிலுமாக புதிய ஒரு சமூகம் படைப்பது தான் புரட்சி என்கிறார்கள். அதற்காகதான் நாங்கள் போராடுகிறோம்.
* அதனால் தான் நாங்கள் அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றம் என்கிறோம். இந்த அரசியலுக்குள், இந்த அமைப்புகள் ஒன்னும் செய்யமுடியாது.
* இந்த உலகத்தில் எப்படி கூட்டி கழித்தாலும் மீதம் உள்ளது அன்புதான் என்றார்.
- கள் பல நோய்களுக்கு மருந்தாக உள்ளது.
- நாம் அனைவரும் சாதியை மறந்து ஒன்றாக கை கொடுக்க வேண்டும்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள சக்தி நகரில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கள் விடுதலை இயக்க மாநாடு நடைபெற்றது.
பனையேறிகள் பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு கள் இயக்க தலைவர் நல்லசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
சீமான் பேசும்போது கூறியதாவது:
கள் பல நோய்களுக்கு மருந்தாக உள்ளது. இது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
பீர், விஸ்கி, பிராந்தி குடிப்பதால் உடல் நலமாகும் என சொல்ல முடியுமா? தி.மு.க.வின் பகுத்தறிவில் தீயை வைத்து கொளுத்த வேண்டும்.
கள் இறக்குவதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் அரசுக்கு வருமானம் கிடைக்கும்.
கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் கள்ளுக்கு தடை இல்லை. காரணம் ஆட்சியாளர்கள் அங்கு ஆலைகளை நடத்த வில்லை.
தமிழ்நாட்டில் மதுபான ஆலை அதிபர்கள் நலனுக்க கவே அரசு கள் இறக்குவதற்கு தடை விதித்துள்ளது. இந்த தடையை நீக்க வேண்டும்.
தமிழகத்தில் மகளிருக்கு பேருந்து கட்டணம் இலவசம் ஆனால் கல்வி கட்டணம் ரூ.10 லட்சம். ஆகையால் தான் பஸ்ஸில் இலவசம் வேண்டாம். கல்வியை இலவசமாக கொடுங்கள் என கேட்கிறோம்.
3500 அரசு காலிப்பணியிடங்களுக்கு 13 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். அப்படி என்றால் 13 லட்சம் பேரும் வேலை இல்லாமல் இங்கு தெருவில் நிற்கிறார்கள்.
மாதந்தோறும் மாணவர்களுக்கு ரூ. 1000, மகளிருக்கு ரூ.1000 உதவித்தொகை தருவதற்கு பதிலாக படித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும்.
இந்த திட்டங்களுக்கு மட்டும் ஆண்டுக்கு அரசு 24,000 கோடி செலவழிக்கிறது.
தமிழ்நாட்டில் ஆணவ படுகொலைகள் அதிகரித்துள்ளது. இதனை தடுப்பதற்கு அரசு கடுமையான சட்டம் இயற்ற வேண்டும். மாடுகளுடன் பேசுவதாக சொல்கிறார்கள் அதற்கு அறிவு இருப்பதால் பேசுகிறேன்.
இன்றைக்கு என்னை எதிர்த்து போராடும் அளவிற்கு எல்லா கட்சிகளும் வந்துவிட்டது.
பனைமரம் ஏறினால் இவன் இந்த சாதிக்காரன் என முத்திரை குத்துகிறார்கள் மரத்திற்கும் அரசு சாதியை புகுத்துகிறது. சாதியை வைத்து மக்களை பிளவுபடுத்தும் வேலை நடந்து வருகிறது.
ஆகவே நாம் அனைவரும் சாதியை மறந்து ஒன்றாக கை கொடுக்க வேண்டும்.
ரோடு சோ நடத்தி மக்களுக்கு டாட்டா காண்பிக்கும் அரசியல்வாதிகளுக்கு இன்னும் ஆறு மாதத்தில் மக்கள் டாடா காண்பிப்பார்கள்.
இந்த ஆட்சி அதிகாரம் இன்னும் 500 ஆண்டுகள் ஆயிரம் ஆண்டுகள் இருக்கப் போவதில்லை. இன்னும் சரியாக 6 மாதத்தில் மாறிவிடும். உலகில் மாறாது என்ற ஒரு சொல்லைத் தவிர அனைத்தும் மாறி விடும்.
வரலாற்றின் சக்கரங்கள் அனைத்தும் சுழன்று கொண்டே இருக்கும். கீழே இருப்பது மேலே வரும். சிம்மாசனத்தில் இருப்பவன் வீதிக்கு வருவான் வீதியில் இருந்து போராடுபவன் அந்த அதிகாரத்துக்கு செல்வான்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் மணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிட உள்ள நாம் தமிழர் கட்சி வேட்பாளரை சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.
மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது 10 இளைஞர்கள் அங்கிருந்த பனைமரத்தில் வரிசையாக ஏறி நாம் தமிழர் கட்சியின் கொடியினை கையில் பிடித்தபடி நின்றனர். மேடையில் சீமான் உள்ளிட்டவர்கள் கள் அருந்தினர்.
- அ.தி.மு.க. ஆட்சியின் போது தமிழக மக்களின் நலன் காக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம்.
- தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் தொடர்ந்து சிறைப்பிடிக்கப்பட்டு வருவது கவலையளிக்கிறது.
ராமநாதபுரம்:
"மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற கொள்கையுடன் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தென் மாவட்டங்களில் முதலாவதாக சிவகங்கையில் நேற்று முன்தினம் பிரசாரத்தை தொடங்கினார். நேற்று மாலை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்த அவர் பரமக்குடி, திருவாடானை தொகுதிக்குட்பட்ட ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய இடங்களில் திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் பேசினார்.
இதனை தொடர்ந்து இன்று காலை ராமேசுவரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் மகாலில் மீனவர்கள், நெசவாளர்கள், தற்காலிக ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியின் போது தமிழக மக்களின் நலன் காக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம். அதன்மூலம் பொதுமக்கள் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் கண்டனர். விவசாயிகள், தொழிலாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் உள்ளிட்டோர் தங்களது வாழ்வில் வளம் பெற்றனர்.
அவ்வாறு நடைமுறையில் இருந்த மக்கள் நலத்திட்டங்களை தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்ததும் நிறுத்தி விட்டது. தி.மு.க. ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் அ.தி.மு.க. ஆட்சி வந்ததும் மீண்டும் கொண்டுவரப்படும். அதன்மூலம் தமிழகம் பசுமையாக மாறும். நெசவாளர்கள் இன்று பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பை ஏற்றதும் அவர்களின் பிரச்சனைகள் முழுமையாக தீர்க்கப்படும். நலவாரியம் மூலம் சலுகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் தொடர்ந்து சிறைப்பிடிக்கப்பட்டு வருவது கவலையளிக்கிறது. கச்சத்தீவு மீட்பு மட்டுமே இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக அமையும். அதனை கருத்தில் கொண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கச்சத்தீவு மீட்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்த தனிக்கவனம் செலுத்துவோம். மேலும் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.
தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு "சொல்வதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம்" என்று பெயரளவுக்கு மட்டும் கூறிவிட்டு ஆட்சிக்கு வந்ததும் மக்கள் பிரச்சனைகளை மறந்து விடுகிறது. ஆனால் அ.தி.மு.க. மக்கள் நலன் ஒன்றே அரசின் குறிக்கோள் என்ற அடிப்படையில் தற்போது வரை செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக எடப்பாடி பழனிசாமி ராமநாதபுரம் அரண்மனைக்கு சென்றார். அங்கு சமீபத்தில் அ.தி.மு.க.வில் இணைந்த ராமநாதபுரம் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதியை நேரில் சந்தித்தார். அதைத்தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு ராமநாதபுரம் ரோமன் சர்ச் பகுதியில் இருந்து அரண்மனை வரை எடப்பாடி பழனிசாமி ரோடு-ஷோ நடத்துகிறார்.
குறிப்பிட்ட சில இடங்களில் வாகனத்தில் இருந்து இறங்கி பொது மக்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ள அவர் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொள்கிறார். மேலும் பிரசார வாகனத்தின் மீது நின்று பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேசுகிறார். அதனை தொடர்ந்து ராமநாதபுரம் அரண்மனை முன்பு உரையாற்றுகிறார்.
- காதலன் விக்னேசுக்கு போன் செய்து தான் வீட்டை விட்டு வெளியேறி தக்கலை வந்து விட்டதாக தெரிவித்தார்.
- பெண்ணின் குடும்பத்தினர் காதல் திருமணத்தை ஏற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
தக்கலை:
குமரி மாவட்டம் பத்மநாபபுரம் சன்னதி தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 29), லேத் பட்டறை தொழிலாளி. இவருக்கும் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் நாகூர்பாளையம் பகுதியை சேர்ந்த ஜனனிஸ்ரீ (21) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் காதலாக மாற இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் ஜனனிஸ்ரீக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். அப்போது அவர் தனது காதலை தெரிவித்துள்ளார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 27-ந்தேதி வீட்டில் இருந்து வெளியேறிய ஜனனிஸ்ரீ, பஸ் மூலம் தக்கலை வந்துள்ளார்.
பின்னர் தனது காதலன் விக்னேசுக்கு போன் செய்து தான் வீட்டை விட்டு வெளியேறி தக்கலை வந்து விட்டதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து விக்னேஷ் தக்கலை சென்று ஜனனிஸ்ரீயை சந்தித்தார். பின்னர் அவரை அழைத்துச் சென்று 28-ந் தேதி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து மறுநாள் காதல் ஜோடியினர், தக்கலை போலீஸ் நிலையம் வந்து சரண் அடைந்தனர்.
அப்போது அவர்கள் ராஜாக்கமங்கலம் பகுதியில் உள்ள ஒரு இந்துக் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், அதனை பதிவு செய்ய இருப்பதாகவும், இதற்கு பெண் குடும்பத்தினர் எதிர்ப்பு இருப்பதால் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கூறினர். இதனை தொடர்ந்து இருவரது குடும்பத்திற்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் போலீஸ் நிலையம் வந்ததும் பேச்சுவார்த்தை நடந்தது.
பெண்ணின் குடும்பத்தினர் காதல் திருமணத்தை ஏற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஜனனிஸ்ரீயை போலீசார் காதல் கணவர் விக்னேசுடன் அனுப்பி வைத்தனர்.
- பிரேமலதா விஜயகாந்த் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
- பிரேமலதாவை நேரில் சந்தித்தபோது எடுத்த புகைப்படத்துடன் எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் பதிவிட்டுள்ளார்.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
இந்த நிலையில், நேரில் சந்தித்து நலம் விசாரித்த பிரேமலதாவிற்கு நன்றி என எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
நட்புடன் நலம் விசாரித்தமைக்கு நன்றி! என பிரேமலதாவை நேரில் சந்தித்தபோது எடுத்த புகைப்படத்துடன் எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
- கலைஞருக்கும், கேப்டனுக்கும் இடையேயான பழக்கம் நெடுங்காலமாக இருந்தது.
- ஆகஸ்ட் 3-ந்தேதி முதல் தே.மு.தி.க.வின் சுற்றுப்பயணம் தொடங்கும்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். இதையடுத்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:
* 100 சதவீதம் மரியாதை நிமித்தமாகவும், உடல்நிலை குறித்து விசாரிக்கவுமோ முதல்வரை சந்தித்தேன்.
* கலைஞருக்கும், கேப்டனுக்கும் இடையேயான பழக்கம் நெடுங்காலமாக இருந்தது.
* குடும்பம், நட்பு ரீதியாக அவரின் உடல்நலனில் அக்கறை கொண்டுள்ளதால் தான் முதலமைச்சரை சந்தித்து உடல்நிலை குறித்து நேரில் விசாரித்தேன்.
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேப்டன் சார்பாகவும் தே.மு.தி.க. சார்பாகவும் சந்தித்து நலம் விசாரித்தேன்.
* தே.மு.தி.க.வை பலப்படுத்தும் பணியில்தான் தற்போது ஈடுபட்டு வருகிறோம்.
* ஆகஸ்ட் 3-ந்தேதி முதல் தே.மு.தி.க.வின் சுற்றுப்பயணம் தொடங்கும்.
* கூட்டணி தொடர்பாக விரைவில் அறிவிப்போம்.
* 2026 ஜன.9-ல் நடைபெற உள்ள தே.மு.தி.க. மாநாடு மற்றும் கட்சியை வலுப்படுத்துவதே தற்போதைய நோக்கம்.
* யாருடன் யார் கூட்டணி என தற்போது கூற முடியாது. இன்னும் நேரம் உள்ளதால் சரியான நேரத்தில் அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.






