என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பஸ் நிலையத்தில் போதிய அளவில் இடவசதி இல்லை.
    • புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு தகுந்த இடம் கிடைக்கவில்லை.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பஸ் நிலையம் கட்டப்பட்டது. அப்போதைய காலத்தில் வருசநாடு பகுதிக்கு குறைந்த அளவிலான பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. இதனால் குறைந்த அளவிலான இடத்தில் பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வருசநாட்டில் இருந்து நாள்தோறும் 30-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

    இதனால் பஸ் நிலையத்தில் போதிய அளவில் இடவசதி இல்லை. எனவே பஸ் நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு தகுந்த இடம் கிடைக்கவில்லை. அதேபோல வருசநாடு கிராமத்தில் புதிய அரசு அலுவலகங்கள் கட்டுவதற்கும் இடங்கள் கிடைக்காத நிலை இருந்து வந்தது.

    இந்த நிலையில் சின்னமனூரைச் சேர்ந்த பரமசிவம் என்ற விவசாயி தாமாக முன்வந்து வருசநாடு கிராமத்தில் பஸ் நிலையம் மற்றும் அரசு அலுவலகங்கள் கட்டுவதற்காக தனக்குச் சொந்தமான 2.36 ஏக்கர் நிலத்தை தானமாக ஆளுநர் பெயருக்கு பத்திரம் பதிவு செய்து வழங்கினார். அதற்கான ஆவணங்களை வருசநாடு ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்துவிடம் வழங்கினார். பஸ் நிலையம் அமைக்க இடம் தானமாக வழங்கிய பரமசிவத்தின் செயலைக்கண்டு அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டு தெரிவித்தனர்.

    • அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகளில் உள்ளவர்கள் தொட்டியில் குடிநீரை சேமித்து வைத்து கொள்கின்றனர்.
    • குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 20 லாரிகள் கூடுதலாக வாடகைக்கு அமைத்துள்ளது.

    சென்னை:

    கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவகிறது. சென்னையில் குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் குறைந்து கொண்டே வந்தாலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று வாரியம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தி வருவதால் குடிநீர் பயன்பாடு அதிகரித்து உள்ளது. வீடுகளுக்கு குழாய் மூலமும் லாரிகள் வழியாகவும் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. குழாய் மூலம் தண்ணீர் கொடுக்க முடியாத பகுதிகளில் குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் லாரிகள் மூலம் கொண்டு சென்று நிரப்பி வருகிறது.

    சென்னையில் தினமும் 1 லட்சத்து 13 ஆயிரத்து 700 நடைகள் (டிரிப்) குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது அது ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 800 நடைகளாக உயர்ந்து உள்ளது. அதிகரித்து வரும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 20 லாரிகள் கூடுதலாக வாடகைக்கு அமைத்துள்ளது.

    இது குறித்து சென்னை குடிநீர் வாரிய மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்கான தேவை அதிகரித்து வருகிறது. குழாய் மூலம் குடிநீர் வழங்க முடியாத பகுதிகளில் டயல் செய்து ஆன்லைனில் புக்கிங் செய்யும் வசதி இருப்பதால் ஏராளமானவர்கள் இதன் வழியாக குடிநீருக்கு பதிவு செய்கின்றனர். பணம் செலுத்தி குடிநீர் பெறுவோர் பயன்பாடு கூடியுள்ளது.

    அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகளில் உள்ளவர்கள் தொட்டியில் குடிநீரை சேமித்து வைத்து கொள்கின்றனர்.

    மேலும், மார்ச் மாதத்தில் தெருக்களில் உள்ள தொட்டிகளை நிரப்ப 61 ஆயிரம் நடைகள் பயன்படுத்தப்பட்டன. அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த லாரி டிரிப்புகள் 24,800 ஆக அதிகரித்துள்ளது.

    இதே போல டயல் குடிநீர் தேவை 30 ஆயிரம் நடைகளை உயர்ந்துள்ளது. சென்னை குடிநீர் வாரியம் பொது மக்களின் தேவையை கருத்தில் கொண்டு லாரிகளின் டிரிப்புகளை அதிகரித்துள்ளது. தெருக்களில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகளில் இலவசமாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

    டேங்கர் லாரிகளின் பயணங்களை அதிகரிப்ப தன் மூலம் தனியார் தண்ணீர் டேங்கர் சப்ளையர்களின் ஆதிக்கத்தை மறைமுகமாக குறைத்து வருகிறோம்.

    புதிதாக சேர்க்கப்பட்ட பகுதி மக்கள் தனியார் குடிநீர் லாரிகளை நம்பி உள்ளனர். அவர்களுக்கும் 'டயல்' குடிநீர் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தாத்தா, அப்பா, கணவர், மகன், பேரன், என 5 தலைமுறையினர் மதுவுக்கும், போதைக்கும் அடிமையாகி விட்டனர்.
    • தமிழக மக்களிடம் தற்போது மவுன அலைவீசி வருகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திலகபாமாவை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக பதவியேற்பது முடிவாகி விட்டது. எனவே தமிழக மக்கள் சிந்தித்து தங்கள் வாக்கை செலுத்த வேண்டும். கடந்த தேர்தலில் தகுதி இல்லாதவரை தேர்வு செய்ததால் மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இதே போல் இந்த முறையும் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்து உங்கள் வாக்கை வீணடிக்க வேண்டாம்.

    காமராஜர், அண்ணா காலத்தில் நேர்மையானவர்களை வேட்பாளர்களாக நிறுத்தினர். அதனால் வேட்பாளர்களை பார்க்காமல் சின்னத்தை பார்த்து வாக்களிக்கும் நிலை அப்போது இருந்தது. தற்போது நல்லவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவதில்லை என்பதால் சின்னத்தை பார்த்து வாக்களிக்கும் பழக்கத்தை மக்கள் கைவிட வேண்டும்.

    கடந்த 57 ஆண்டுகளாக தி.மு.க., அ.தி.மு.க. என 2 கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து தமிழகத்தை நாசமாக்கி விட்டன. தாத்தா, அப்பா, கணவர், மகன், பேரன், என 5 தலைமுறையினர் மதுவுக்கும், போதைக்கும் அடிமையாகி விட்டனர். இந்த 2 கட்சிகள் ஆட்சிக்கும் முடிவு கட்ட 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்போம். அதற்கான முன்னோட்டம்தான் இந்த பாராளுமன்ற தேர்தல்.

    இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்த காங்கிரசோடு தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது. இது கொள்கை கூட்டணியா? எங்களைப் பார்த்து கொள்கை இல்லாத கூட்டணி என கூறுகின்றனர். தி.மு.க.வும், காங்கிரசும் சேர்ந்து கச்சத்தீவை தாரை வார்த்தது. இதனால் இதுவரை 800 மீனவர்கள் இறந்துள்ளனர். 6100 பேர் கைதாகி 1250 படகுகள் பறிபோய் உள்ளது. பா.ஜ.க. கச்சத்தீவு பற்றி பேசுவதை குறைகூறும் தி.மு.க., காங்கிரஸ் இதுவரை அந்த பிரச்சனையில் மவுனமாக இருப்பது ஏன்? கச்சத்தீவை மீட்க பிரதமர் மோடியால்தான் முடியும்.

    தி.மு.க.விற்கு உழைத்தவர்கள் புறக்கணிக்கப்பட்டு இருக்கின்றனர். 34 அமைச்சர்களில் பட்டியல் இன சமுதாயத்தைச் சேர்ந்த 3 பேர் உள்ளனர். சி.வி.கணேசன், மதிவேந்தன், கயல்விழி ஆகிய 3 பேருக்கும் அமைச்சரவை வரிசையில் முறையே 30, 33, 34-வது இடம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் சமூக நீதி பேசுவதற்கான தகுதியே இல்லாதவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். தி.மு.க. சார்பில் திண்டுக்கல் மாவட்டத்துக்கு 29 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அதில் ஒன்றைக்கூட மு.க.ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட 5 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 7 மாநிலங்களில் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு ஊழியர்களையும் வஞ்சித்து விட்டது தி.மு.க. அரசு. அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் யார் பிரதமர் என்றே சொல்ல முடியாத அளவுக்கு பிரசாரம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு அளிக்கும் வாக்கு வீண். இந்த 2 கட்சிகளுமே சமூக நீதி பற்றி பேச தகுதி இல்லாதவை. தமிழக மக்களிடம் தற்போது மவுன அலைவீசி வருகிறது. இது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக வாக்குகளாக மாறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் ஒவ்வொரு தொகுதியில் இருந்து ஒரு அதிகாரி அனுப்பப்படுவார்.
    • மாநிலம் முழுவதும் இருந்து கொண்டுவரப்படும் தபால் ஓட்டுகள் பிரிக்கப்பட்டு தொகுதி வாரியாக வழங்கப்படும்.

    திருச்சி:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பணியில் பல துறைகளை சேர்ந்த 4 லட்சம் ஊழியர்கள், அதிகாரிகள், போலீசார் ஈடுபடுகின்றனர். அவர்கள் தேர்தலில் ஓட்டளிக்க தபால் ஓட்டு வசதியையும், ஒரே தொகுதிக்குள் பணியாற்றினால் பணிபுரியும் ஓட்டுச்சாவடியிலேயே ஓட்டளிக்கும் வசதியையும் தேர்தல் கமிஷன் வழங்கியுள்ளது.

    வழக்கமாக பயிற்சி மையங்களில் பெறப்படும் தபால் ஓட்டுகளை தொகுதி வாரியாக தேர்தல் நடத்தும் அதிகாரி பிரித்து, அவர் நியமிக்கும் அதிகாரி மூலம் அந்தந்த தொகுதியின் தேர்தல் அதிகாரிக்கு அனுப்புவார். அதன் பின்னரும், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் நாளில் காலை 8 மணி வரை தபால் மூலம் அனுப்பப்படும் தபால் ஓட்டுகள் பெறப்படும்.

    அத்துடன் தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் ஒவ்வொரு தொகுதியில் இருந்து ஒரு அதிகாரி அனுப்பப்படுவார். அங்கு அவர் சென்று அந்த தொகுதிக்கான தபால் ஓட்டுகளை அளித்துவிட்டு, அவர் சார்ந்த தொகுதிக்கான தபால் ஓட்டுகளை பெற்று வருவார்.

    இந்நிலையில் இந்தப்பணியில் ஏராளமான அதிகாரிகள் ஈடுபட வேண்டியதாலும், இதனால் கால விரயம் ஏற்படுவதாலும், இந்த ஆண்டு தேர்தலில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் பரிந்துரையை ஏற்று, தபால் ஓட்டுகளை மையப்படுத்தி ஒருங்கிணைந்து, தொகுதிகளுக்கு பிரிந்து அனுப்பும் புதிய நடைமுறையை தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்துள்ளது.

    அதன்படி, இந்தியாவில் முதல் முறையாக, தமிழகத்தில் திருச்சி கலையரங்கம் திருமண்டபத்தில் தபால் ஓட்டுகளுக்கான ஒருங்கிணைப்பு மையம் அமைக்கப்படுள்ளது.


    இங்கு இன்று காலை 9 மணியில் இருந்து, மாநிலம் முழுவதும் இருந்து கொண்டுவரப்படும் தபால் ஓட்டுகள் பிரிக்கப்பட்டு தொகுதி வாரியாக வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரியான திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தேர்தல் கமிஷனின் தபால் ஓட்டுகளுக்கான இந்த புதிய நடைமுறையின் படி திருச்சியில் தபால் ஓட்டுகளுக்கான ஒருங்கிணைப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுவோர் செலுத்திய தபால் ஓட்டுகளுடன் 39 தொகுதிகளில் இருந்தும் அதிகாரிகள் வந்து, திருச்சி மையத்தில் ஒப்படைப்பார்கள்.

    இங்கு தொகுதி வாரியாக ஓட்டுகள் பிரிக்கப்பட்டு, அவர்கள் சார்ந்த தொகுதிக்கான தபால் ஓட்டுகளை பெற்றுச் சென்று தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைப்பார்கள் அதன்படி நேற்று வரை பெறப்பட்ட எல்லா தபால் ஓட்டுகளும் திருச்சி மையத்துக்கு இன்று கொண்டு வரப்பட்டு, உடனடியாக எல்லா தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடமும் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகாரிகளுக்கு வீண் அலைச்சல் கால விரயம் கூடுதல் செலவு ஆகியவை தவிர்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கருப்பு பணத்தை ஒழிக்க போகிறோம் என்று கூறி பணமதிப்பிழப்பு செய்ததை நான் அண்ணாந்து பார்த்தேன்.
    • ஜி.எஸ்.டி.யால் கோவையில் நூற்பாலைகள் பஞ்சாய் பறந்து விட்டது.

    கோவை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், கோவையில் முகாமிட்டு கடந்த 3 நாட்களாக பிரசாரத்தில் ஈடுபட்டார். நேற்று இரவு அவர் கோவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து ராஜவீதியில் பிரசாரம் செய்தார்.

    கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எனக்கு தோல்வி என்றார்கள். கையில் பணமின்றி மக்களின் அன்பை மட்டுமே முதலீடாக வைத்து கிடைத்த வாக்கை நான் தோல்வியாக பார்க்கவில்லை.

    காமராஜருக்கு தோல்வி கிடையாது. அவர் தோற்றாலும் அவரின் ஆட்சியை பின்பற்றுவதாக கூறிய கட்சிகள் ஏராளம். நான் கருணாநிதியிடம் கற்றுக் கொண்டவன். பெரியாரின் சீடன். என்னிடம் தோல்வியை காட்டி பயமுறுத்த முடியாது. மக்கள் தலைநிமிர்ந்து நடமாடும் இந்த ராஜவீதியில் நான் நடந்து இருக்கிறேன். மீண்டும் நடப்பேன்.

    இப்போது நாம் எடுத்து இருக்கும் பாதை நாட்டிற்கானது. கருப்பு பணத்தை ஒழிக்க போகிறோம் என்று கூறி பணமதிப்பிழப்பு செய்ததை நான் அண்ணாந்து பார்த்தேன். அது மக்கள் தலையில் விழுந்த இடி. 70 கோடி மக்களின் சொத்தை 21 நபர்களின் கையில் கொண்டு சேர்த்தது பாரதிய ஜனதா அரசு. அதை பகிரங்கமாக கேட்டவன் நான்.

    தன் வீட்டை நாட்டுக்கு எழுதிக் கொடுத்த நேரு வாழ்ந்த நாடு இது. தமிழத்துக்கு நீதி கேட்டால் ஏற்கனவே கொடுத்தது பிச்சை என்று கூறுகிறார்கள். ஜி.எஸ்.டி.யால் கோவையில் நூற்பாலைகள் பஞ்சாய் பறந்து விட்டது.

    கடந்த 75 ஆண்டுகளாக நாம் போட்ட உரத்தால் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. வரி செலுத்தாத பீகார் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு நிதியை அள்ளி கொடுக்குறீர்கள். அங்கும் முன்னேற்றம் இல்லை. அங்கிருந்து இங்கு வேலைக்கு வருகிறார்கள்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செங்கல்லை எடுத்து காட்டினால் உங்களுக்கு கோபம் வருகிறது. மத்திய அரசு ஒவ்வொரு ஊரிலும் செங்கல்லை மட்டும் வைத்து செல்கிறது. அதை உதயநிதி ஸ்டாலின் இன்னொரு கோட்டையை உருவாக்கி விடுவார்.

    பாராளுமன்றத்தில் தமிழனுக்கான குரல் கேட்க வேண்டும். இந்த தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல் ஆகும். உலகிலேயே சக்தி வாய்ந்த தேர்தல் இந்தியாவில் தற்போது நடக்கின்ற தேர்தல் தான். எந்த காரணத்தை கொண்டும் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்து விடக் கூடாது. சனாதனத்தை நாம் அனுமதிக்க கூடாது. திராவிட மாடல் ஆட்சி இந்தியா முழுமைக்கும் தொடர வேண்டும். சுயமரியாதையை காக்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எளிய வானியல் நிகழ்வை அவரவர் வீடுகளிலேயே செய்து பார்க்கலாம்.
    • உரிய நேரத்தில் சமதள பரப்பளவில் ஏதேனும் ஒரு உருளையான பொருளை செங்குத்தாக வைத்து அதன் நிழல் விழவில்லையா என்பதை பார்க்கலாம்.

    திருச்சி:

    தினமும் சூரியன் நமக்கு மேல் உச்சியில் செல்வதுபோல தெரிந்தாலும், ஆண்டுக்கு 2 நாட்கள் மட்டுமே மிகச் சரியாக உச்சியில் வரும். அப்போது ஒரு பொருளின் மேல் விழும் சூரிய வெளிச்சத்தின் விளைவாக, நிழல் அப்பொருளின் பரப்புக்கு உள்ளேயே விழுவதால் அதன் நிழலைப் பார்க்க முடியாது.

    இந்த நிகழ்வு வெறும் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே நடைபெறும். இந்த நாட்களை நிழல் இல்லா நாள் அல்லது பூஜ்ய நிழல் நாள் என்கின்றனர்

    இதன்படி நடப்பாண்டு திருச்சி மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) திருச்சி, மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி, மணிகண்டம், திருவெறும்பூர் பகுதிகளிலும் நாளை ( வியாழக்கிழமை) புள்ளம்பாடி, லால்குடி, மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம், முசிறி, தா.பேட்டை, தொட்டியம் பகுதிகளிலும், நாளை மறுநாள் (19-ந்தேதி) துறையூர் உப்பிலியபுரம் பகுதிகளிலும் நிழல் இல்லா நாள் அமைகிறது.

    இது தொடர்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்க திருச்சி மாவட்ட செயலாளர் மணிகண்டன் கூறுகையில்,

    இந்த எளிய வானியல் நிகழ்வை அவரவர் வீடுகளிலேயே செய்து பார்க்கலாம். உரிய நேரத்தில் சமதள பரப்பளவில் ஏதேனும் ஒரு உருளையான பொருளை செங்குத்தாக வைத்து அதன் நிழல் விழவில்லையா என்பதை பார்க்கலாம்.

    உங்கள் ஊரில் எப்போது நிழல் இல்லா நேரம் என்பதை அறிந்து கொள்ள https:// alokm.com/zsd.html என்ற இணையதளத்தில் சென்று, ஊர் பெயரை தட்டச்சு செய்தால் உரிய நேர விவரம் கிடைக்கும் என்றார்.

    • தமிழகம்-புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.
    • தேர்தலையொட்டி பிரதமர் மோடி 9 முறை தமிழகத்துக்கு வந்து இருக்கிறார்.

    கோவை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, கோவை வி.கே.கே.மேனன் சாலையில் நடந்த இந்தியா கூட்டணி கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து செயல்படுத்திய திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் தமிழகம்-புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். இதை யாராலும் மாற்ற முடியாது.

    தேர்தலையொட்டி பிரதமர் மோடி 9 முறை தமிழகத்துக்கு வந்து இருக்கிறார். அவர் 9 முறை அல்ல, 100 முறை தமிழகம் வந்தாலும் எதுவும் செய்ய முடியாது.

    தமிழகம் வந்த பிரதமர் மோடி, திராவிட இயக்கத்தை அழித்து விடுவேன் என்று பேசி உள்ளார். ஒரு பெரிய பதவியில் இருந்து கொண்டு இப்படி பேசுவது அந்த பதவிக்கு அழகல்ல. இந்த திராவிட இயக்கம் ரத்தம் சிந்தி தோன்றியது. ஆதிக்கவாதிகளிடம் இருந்து மக்களை பாதுகாக்க தோன்றிய இந்த இயக்கத்தை காப்பதற்கு பலர் தங்களது இன்னுயிர்களை சிந்தி உள்ளனர். இந்த இயக்கத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள்.


    திராவிட இயக்கம் என்றால் அண்ணா தொடங்கிய தி.மு.க., எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க. மற்றும் ம.தி.மு.க. தான். இந்த இயக்கத்தை எவராலும் அழிக்க முடியாது. நமது நாட்டில் பிரதமர் என்ற பதவியில் பலர் இருந்துள்ளனர். பாரதிய ஜனதாவைச் சேர்ந்த வாஜ்பாயும் இருந்துள்ளார். அவர் அற்புதமான தலைவர். ஆனால் தற்போது இருக்கும் பிரதமர் மோடி, ஆணவத்தில் இருக்கிறார். இப்படிப்பட்ட பிரதமரை நாங்கள் இதுவரை பார்த்ததே இல்லை.

    நாங்கள் இதுபோன்று எத்தனையோ பேரை பார்த்து விட்டோம். உங்கள் பயமுறுத்தல் எல்லாம் எங்களிடம் பலிக்காது. இங்கு அந்த கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தேர்தல் விதிகளை மீறி பேசி வருகிறார். அவர் முன்னாள் போலீஸ் அதிகாரியாக இருந்தவர். அவருக்கு விதிமுறைகள் எல்லாம் தெரியாதா?

    தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ள காலை உணவுத்திட்டம், கனடா நாட்டில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இப்படி பிற மாநிலத்துக்கு மட்டுமல்லாமல் வெளிநாட்டை சேர்ந்தவர்களும் கடைபிடிக்கும் திட்டமாக இருக்கிறது. கோவை மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்கள். இது தொழிலாளர்களின் கோட்டை. எனவே நீங்கள் அனைவரும் உதய சூரியனுக்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிலிண்டர்கள் வெடித்ததில் கட்டிடம் முழுவதும் சேதம் அடைந்துள்ளது.
    • விபத்து குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை வடபழனியில் உணவகத்தில் கேஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து விபத்துக்குள்ளானது.

    சிலிண்டர்கள் வெடித்ததில் கட்டிடம் முழுவதும் சேதம் அடைந்துள்ளது.

    இந்த விபத்தில், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    காலை நேரத்தில், பரபரப்பாக இயங்கிக்கும் கொண்டிருக்கும் வடபழனி பகுதியில் திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மலைவாழ் மக்களின் வசதிக்காக பஸ் மற்றும் மின்சார வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.
    • ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பள்ளிக்கூடங்கள் அமைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

    நாகர்கோவில்:

    இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் காலை விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார். பழங்குடியின மக்கள் மற்றும் மலைவாழ் மக்கள் வசிக்கக்கூடிய கற்றுவா, பத்துகாணி, ஆறுகாணி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேட்பாளர் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் தாரகை கத்பர்ட் ஆகியோர் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

    இந்த பிரசாரத்தில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பினுலால் சிங், முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது மலைவாழ் மக்கள் மத்தியில் பேசிய வேட்பாளர் விஜய் வசந்த் கூறியதாவது:-

    மத்தியில் மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் பா.ஜனதா அரசை விரட்டியடிக்க நீங்கள் அனைவரும் எங்கள் இருவருக்கும் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். பழங்குடியின மக்கள் வாழக்கூடிய மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின மக்கள் மீது அங்கு ஆளும் பா.ஜனதா அரசு கலவரங்களை ஏற்படுத்தி தாக்குதல் நடத்தியது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

    மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் சொல்ல முடியாத சித்ரவதைகளுக்கு ஆளாகினர். இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து வந்து அதை வீடியோவாக வெளியிட்ட அவல நிலை பா.ஜனதா ஆளுகிற மாநிலத்தில் நடைபெற்றது. நம் நாட்டில் அமைதியும், சமாதானமும், ஒற்றுமையும் நிலவ மக்கள் அனைவரும் அன்புடனும், சந்தோஷத்துடன் வாழ்வதற்கு இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக அமர வேண்டும். அப்போதுதான் நமது நாட்டின் ஜனநாயகமும், அரசியலமைப்புச் சட்டமும் காப்பாற்றப்படும்.

    குமரி மாவட்ட ரப்பர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் ரப்பர் தொழிற்சாலை விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்படும். மலைவாழ் மக்களின் வசதிக்காக பஸ் மற்றும் மின்சார வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பள்ளிக்கூடங்கள் அமைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். எனவே இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் உங்கள் விஜய் வசந்த் ஆகிய எனக்கும், விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தாரகை கத்பர்ட்டுக்கும் கை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் இன்று (புதன்கிழமை) காலை மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இருந்து இறுதிக்கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார். பின்னர் அவர் மண்டைக்காடு புதூர், மணலிவிளை, கூட்டுமங்கலம், கல்லத்திவிளை, காட்டுவிளை, நடுவூர்க்கரை, சேரமங்கலம், பரப்பற்று, பெரியவிளை, மணவாளக்குறிச்சி, முட்டம், அம்மாண்டிவிளை, திருநயினார்குறிச்சி, வெள்ளிமலை, வெள்ளிச்சந்தை, ஈத்தங்காடு, மேலமணக்குடி, கொட்டாரம், அஞ்சுகிராமம் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். நாகர்கோவிலில் மாலை அவர் இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

    • 19-ந்தேதி நடக்கும் வாக்குப்பதிவை முன்னிட்டு இன்றும், நாளையும் 10 ஆயிரத்து 214 பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடக்கிறது. இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குகள் பதிவாக வேண்டும் என்பதற்காக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    அந்த வகையில் வாக்களிக்க சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை இயக்குகிறது. பயணிகள் முறையாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

    சென்னையில் இருந்து நாளை (வியாழக்கிழமை) மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு ஊர்களுக்கு புறப்பட உள்ள 2 ஆயிரத்து 92 வழக்கமான சேவைகள் மற்றும் 1,785 சிறப்பு சேவைகளில் கிட்டத்தட்ட 95 சதவீத இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    தொடர்ந்து இன்று (புதன்கிழமை) புறப்படும் பஸ்களிலும் போதுமான இருக்கைகள் காலியாக இருக்கின்றன. நாளை (வியாழக்கிழமை) சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள், கூட்ட நெரிசலை தவிர்க்க, தங்கள் பயணத் திட்டங்களை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

    19-ந்தேதி நடக்கும் வாக்குப்பதிவை முன்னிட்டு இன்றும், நாளையும் 10 ஆயிரத்து 214 பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த 2 நாட்களில் மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து 3 ஆயிரத்து 60 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதேபோல், தேர்தல் முடிந்து, வருகிற 20 மற்றும் 21-ந் தேதிகளில் 8 ஆயிரத்து 304 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு, திருவண்ணாமலை, அரியலூர், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும்.

    சென்னையில் இருந்து 6 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு செல்வதாக இருந்தால் போதுமான பஸ்களை இயக்க போக்குவரத்து துறை தயாராக இருக்கிறது. தற்போது நெல்லை, நாகர்கோவிலுக்கு அதிக போட்டி ஏற்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பெண்கள், இளைஞர்களிடையேயும், எளிய மக்களிடத்திலும் பா.ஜனதாவிற்கான ஆதரவு அதிகரித்துள்ளது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாகன பிரசாரத்தின்போது விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னை, தண்டையார்பேட்டையில் உள்ள பா.ஜனதா தேர்தல் அலுவலகத்தில், வடசென்னை பாராளுமன்றத் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பால் கனகராஜ் வடசென்னை தொகுதிக்கான தனது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். நிகழ்ச்சிக்கு, தமிழக பா.ஜனதா மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி முன்னிலை வகித்தார்.

    பின்னர், சுதாகர் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் பா.ஜனதாவிற்கும், பா.ஜனதா வேட்பாளர்களுக்கும் மிகச்சிறப்பான ஆதரவு கிடைத்து வருகிறது. குறிப்பாக பெண்கள், இளைஞர்களிடையேயும், எளிய மக்களிடத்திலும் பா.ஜனதாவிற்கான ஆதரவு அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகத்திற்கு வருகை தரும்போதும், பொதுக்கூட்டங்கள் மற்றும் வாகன பிரசாரத்தில் ஈடுபடும் போதும் ஏராளமான மக்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்து வருகின்றனர். எனவே, தமிழ்நாட்டில் பா.ஜனதாவில் இருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் அதிகளவிலான வேட்பாளர்கள் வெற்றி பெற்று எம்.பி.க்களாக பாராளுமன்றம் செல்வார்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாகன பிரசாரத்தின்போது விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், பிரதமர் மோடியின் வாகன பிரசாரத்தின்போது விளம்பர பதாகைகள் வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சருக்கு ஒரு சட்டம், பிரதமருக்கு ஒரு சட்டமா?. தி.மு.க.வுக்கு வாக்கு வங்கி அரசியல் தான் முக்கியம். பிரதமர் மோடி தேர்தல் அறிக்கையில் கூறியதை கண்டிப்பாக நிறைவேற்றுவார். தமிழகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாடு முழுவதும் 102 தொகுதிகளிலும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
    • விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்தால் 2 ஆண்டு சிறை தண்டனை என எச்சரிக்கை.

    நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக வரும் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் கட்டமாக தமிழகம்- புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் (19-ந் தேதி) தேர்தல் நடைபெறுகிறது.

    நாடு முழுவதும் மொத்தம் 21 மாநிலங்களுக்கு உட்பட்ட 102 தொகுதிகள் முதல்கட்ட தேர்தலை சந்திக்கின்றன. இந்த 102 தொகுதிகளிலும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான அணியில் தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன.

    அ.தி.மு.க. தலைமையிலான அணியில் அ.தி.மு.க., தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ. மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

    பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., த.மா.கா, அ.ம.மு.க., முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. தொண்டர் உரிமை மீட்புக்குழு, புதிய நீதிக்கட்சி, ஐ.ஜே.கே., தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் களம் காண்கின்றன.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.கடந்த 4 வாரங்களாக நடைபெற்று வரும் அனல் பறக்கும் பிரசாரம் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணியுடன் ஓய்கிறது.

    இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைய உள்ளநிலையில் விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்தால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×