என் மலர்
உள்ளூர் செய்திகள்
- முகவர்கள் வாக்குப் பதிவை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.
- வாக்குப் பதிவு நாளன்று வாக்காளப் பெருமக்கள் அனைவரும் அன்று காலை 7 மணி முதலே வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்குமாறு செய்திடல் வேண்டும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பாராளுமன்ற தேர்தலையொட்டி, ''தமிழர் உரிமை மீட்போம்; தமிழ்நாடு காப்போம்'', "ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்" என்ற தாரக மந்திரத்தை குறிக்கோளாகக் கொண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டேன்.
எனது இந்த சுற்றுப் பயணத்தின்போது, மக்களைப் பாதுகாக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான் என்பதை நிரூபிக்கின்ற வகையில் கோடானு கோடி மக்கள் திரண்டிருந்து, எங்கள் வாக்கு இரட்டை இலைக்கே, முரசு சின்னத்திற்கே என விண்ணதிர முழக்கமிட்டது, இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
கழக உடன்பிறப்புகளும், தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களும், வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வாக்குச்சாவடிக்கு வரும் பொதுமக்களிடம் பண்போடும், பாசத்தோடும் கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கக் கோர வேண்டும். மேலும், நம் முகவர்கள் வாக்குப் பதிவை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.
வாக்குப் பதிவு நாளன்று வாக்காளப் பெருமக்கள் அனைவரும் அன்று காலை 7 மணி முதலே வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்குமாறு செய்திடல் வேண்டும். வாக்குப்பதிவு நிறைவுபெற்று அதனை சீலிட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டுசென்று சேர்க்கும் வரையிலும் மிகவும் கவனமாகவும், விழிப்புடனும் இருந்திடல் வேண்டும்.
எனதருமை வாக்காளப் பெருமக்களே,
அ.தி.மு.க.சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரின் வெற்றிச் சின்னமாம் ''இரட்டை இலை'' சின்னத்திலும்; தே.மு.க.வின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ''முரசு'' சின்னத்திலும்; விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளருக்கு ''இரட்டை இலை'' சின்னத்திலும், உங்களது பொன்னான வாக்குகளை அளித்து, வேட்பாளர்கள் அனைவரையும் மகத்தான வெற்றி பெறச் செய்து, புதிய வரலாற்றுச் சாதனையை படைத்திட வேண்டும் என்று, வாக்காளப் பெருமக்களாகிய உங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி மிகுந்த பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அனைத்து மக்களிடமும் சகஜமாக பழகக் கூடியவன் நான். மக்கள் என்னை ஆதரிப்பார்கள்.
- சுயேட்சைகள் வெற்றி பெற முடியாது என சொல்கிறார்கள்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலையொட்டி வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார்.
தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வரும் மன்சூர் அலிகான் இன்று கடைசிநாள் பிரசாரத்துக்கிடையே அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-
ஆள்பலம், பணபலம் இல்லாமல் தேர்தலில் நான் வேலூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறேன். 1980-ல் பள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜனாப் அப்துல்சமது சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றார்.
அதே பள்ளப்பட்டி தான் எனக்கு சொந்த ஊர். அங்கு தான் நான் படித்து வளர்ந்தேன். மக்கள் எனக்கு மிகுந்த ஆதரவினை கொடுத்து வருகிறார்கள். எனவே நான் சுமார் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெறுவேன். பாரதிய ஜனதாவிடம் பணம் வாங்கி கொண்டு வாக்குகளை பிரிப்பதற்காக தேர்தலில் நிற்கிறேன் என வதந்தி பரப்புகிறார்கள்.
ஆரம்பத்தில் இருந்தே பிரதமர் மோடியை விமர்சித்து வருகிறேன். சுயேட்சைகள் வெற்றி பெற முடியாது என சொல்கிறார்கள். பல பேர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று மந்திரியாக உள்ளனர். அனைத்து மக்களிடமும் சகஜமாக பழகக் கூடியவன் நான். மக்கள் என்னை ஆதரிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
- துணை ராணுவ படையினர், ஓய்வுபெற்ற ராணுவத்தினர், காவல் துறையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
சென்னை:
தமிழகம் மற்றும் புதுவையில் பாராளுமன்ற தேர்தல் நாளை மறுநாள் (19-ந்தேதி) நடைபெறுகிறது. அமைதியான முறையில் தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகளை முழுவீச்சில் செய்துள்ள நிலையில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள். தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைவதை தொடர்ந்து தொகுதிகளில் தங்கியுள்ள வெளி மாவட்டத்தினர் அனைவரும் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் மீறி வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களுக்கு தொடர்பில்லாத தொகுதிகளில் தங்கியிருந்தால் அவர்களை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக இன்று மாலை 6 மணிக்கு பிறகு லாட்ஜூகள் மற்றும் தங்கும் விடுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இதற்கான பணிகளை போலீசார் மேற்கொள்கிறார்கள்.
நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தமிழகம் முழுவதும் 1½ லட்சம் காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் இருந்தும் 10 ஆயிரம் போலீசார் இன்று வருகை தருகிறார்கள். இவர்களும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இவர்களை தவிர துணை ராணுவ படையினர், ஓய்வுபெற்ற ராணுவத்தினர், காவல் துறையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இப்படி ஒட்டுமொத்தமாகவே 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் தேர்தல் பாதுகாப்பு பணிகளை கவனிக்க உள்ளனர்.
தேர்தல் பாதுகாப்புக்காக 200 கம்பெனி துணை ராணுவ படையினரை அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தது. இதில் 190 கம்பெனி துணை ராணுவ படையினர் ஏற்கனவே வந்துவிட்டனர். இவர்கள் அனைவரும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவ படையினர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மீதமுள்ள 10 கம்பெனி துணை ராணுவ படையினரையும் அனுப்பி வைக்க வேண்டும் என்று மாநில போலீஸ் சார்பில் 2 நாட்களுக்கு முன்பு கோரிக்கை விடுக்கப்பட்டது. அவர்களும் இன்று வருகை தருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 611 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்பது தெரிய வந்துள்ளது.
மதுரையில் 511 சாவடிகளும், இதற்கு அடுத்தபடியாக தேனியில் 381 வாக்கு சாவடிகளும் பதற்றமானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற சாவடிகள் அனைத்திலும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினருடன் கூடுதல் போலீசாரும் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகிறார்கள்.
பதற்றமான சாவடிகள் மற்றும் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் இடங்களில் இன்று மாலையில் துணை ராணுவ படையினர் மற்றும் கொடி அணிவகுப்பு நடத்தப்படுகிறது. வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டுப்போடுவதை உறுதி செய்வதற்காகவே இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்படுகிறது.
இன்று மாலையுடன் பிரசாரம் ஓயும் நிலையில் நாளை யாரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபடக்கூடாது என்பதால் அதனை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்றும், நாளையும் சந்தேக நபர்கள் மற்றும் ரவுடிகளை பிடிக்கவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.
இதற்காக வாகன சோதனை மற்றும் லாட்ஜூகளில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. முன்எச்சரிக்கையாக மாநிலம் முழுவதும் 21 ஆயிரம் ரவுடிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். தேர்தல் நாளில் பிரச்சனைகள் ஏற்படாத வகையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
- நானா, நானி என்ற முதியோர் இல்லத்திற்கு சென்றார்.
- பாராளுமன்ற தேர்தல் பரப்புரை காரணமாக உங்களை சந்திக்க முடியாமல் போய்விட்டது.
பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை கஸ்தூரிநாயக்கன்பாளையத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அங்குள்ள நானா, நானி என்ற முதியோர் இல்லத்திற்கு சென்றார். அவர்கள் அவருக்கு மாலை அணிவித்து, பூரண கும்ப மரியாதையும் அளித்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் மத்தியில் அண்ணாமலை பேசியதாவது:-
நான் இங்கு உங்களிடம் வாக்கு சேகரிப்பதற்காக வரவில்லை. உங்களை சந்திக்க வேண்டும் என்பதற்காக வந்துள்ளேன். கடந்த ஒரு வருடகாலமாகவே உங்களை சந்திக்க வேண்டும். உங்களுடன் நேரத்தை செலவிட வேண்டும் என பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தேன்.
இருப்பினும் என் மண், என் மக்கள் யாத்திரை, பாராளுமன்ற தேர்தல் பரப்புரை காரணமாக உங்களை சந்திக்க முடியாமல் போய்விட்டது. இறுதிகட்ட பிரசாரமான நாளை எங்கும் செல்லக்கூடாது. உங்களை சந்திக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதன்படி உங்களை பார்ப்பதற்காகவே இன்று வந்துள்ளேன். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். மற்றொரு நாளில் உங்களை வந்து கட்டாயமாக சந்திக்கிறேன் என்றார்.
இந்த வார்த்தையை பேசியபோது, அண்ணாமலை திடீரென கண் கலங்கி விட்டார். இதனை பார்த்த முதியோர்கள் அவரை ஆறுதல் படுத்தினர். ஜெய்ஸ்ரீராம் என கோஷம் எழுப்பி அவருக்கு ஆறுதல் கூறி உற்சாகப்படுத்தினர்.
- 'தென்னக அயோத்தி' என்று அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராம் ராம்.. சீதா ராம்... என பக்தி கோஷம் விண்ணதிர தேரை வடம் பிடித்தனர்.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ராமசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ராமபிரான் பட்டாபிஷேக கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இங்கு ராமபிரான் சீதாதேவியுடன் அமர்ந்திருக்க, சத்ருக்கனன் சாமரம் வீச, லட்சுமணன் தன்னுடைய, அண்ணன் ராமனுடைய வில்லினையும் ஏந்தியிருக்க, பரதன் குடை சமர்ப்பிக்க வேறு எங்கும் காண முடியாத வகையில் அனுமன் ஒரு கையில் வீணையும், மறுகையில் ராமாயண சுவடியும் ஏந்தியபடி காட்சி அளிக்கிறார். 'தென்னக அயோத்தி' என்று அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான ராமநவமி பெருவிழா கடந்த (9-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் காலை மங்கல இன்னிசையுடன் பல்லக்கிலும், மாலை வண்ண மின் விளக்குகள் ஒளிர இந்திர விமானம், சூரியபிரபை, சேஷம், கருடர், அனுமன், யானை உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. முன்னதாக ராமபிரான், சீதாதேவி, லட்சுமணர், அனுமன் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் தொடங்கியது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராம் ராம்.. சீதா ராம்... என பக்தி கோஷம் விண்ணதிர தேரை வடம் பிடித்தனர். தேரானது 4 ரத வீதிகளிலும் அசைந்தாடியபடி வலம் வந்து நிலையை வந்தடைந்தது.
அதனைத் தொடர்ந்து, நாளை (வியாழக்கிழமை) திருமஞ்சனமும், புஷ்பயாகமும், மறுநாள் 21-ந்தேதி ராஜ உபசார திருமஞ்சனமும் நடைபெற உள்ளது.
- மூன்றாண்டு கால தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் விளையவில்லை.
- தி.மு.க. அரசின் சாதனை என்று சொல்லிக் கொள்வதற்கு ஒன்று கூட இல்லை.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தான் மத்தியில் மீண்டும் அமைய வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் விருப்பம் ஆகும். இந்தியா முழுவதும் வீசும் அதே மோடி ஆதரவு அலை தான் தமிழ்நாட்டிலும் வீசுகிறது. தமிழகத்தின் பெரும் பான்மையான பகுதிகளுக்கு பரப்புரை சென்று வந்ததன் மூலம் மோடி ஆதரவு அலையை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் 90 விழுக்காடு தமிழ்நாட்டு மக்கள் தங்களின் வாக்கு யாருக்கு? என்பதை முடிவு செய்து விட்டார்கள்.
கடந்த பத்தாண்டுகளில் 2014-ம் ஆண்டில் தமிழ் நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க.வைச் சேர்ந்த 37 உறுப்பினர்களும், 2019-ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. அணியைச் சேர்ந்த 38 உறுப்பினர்களும் சமூக நீதிக்காகவோ, தமிழக நலன்களுக்காகவோ குரல் கொடுக்கவில்லை.
பா.ம.க. போட்டியிடும் 10 இடங்களிலும் வெற்றி பெற்றால் தான் தமிழகத்தின் குரல் பாராளுமன்றத்தில் வலிமையாக ஒலிக்கும்; உரிமைகள் கிடைக்கும்.

மூன்றாண்டு கால தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் விளையவில்லை. மாறாக, மின்கட்டணம் உயர்வு, சொத்துவரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, மோட்டார் வாகன வரி உயர்வு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, 10 முறை பால் விலை உயர்வு ஆகியவை தான் வாக்களித்த மக்களுக்கு தி.மு.க. அரசு அளித்த பரிசு ஆகும். தி.மு.க. அரசின் சாதனை என்று சொல்லிக் கொள்வதற்கு ஒன்று கூட இல்லை. வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை என்பதில் இருந்தே மக்களை தி.மு.க. அரசு மதிக்கவில்லை என்பது தெளிவாகிறது. மக்களை மதிக்காத தி.மு.க.வுக்கு மக்கள் அளிக்க வேண்டிய சரியான தண்டனை தோல்வி தான். அதை தி.மு.க.வுக்கு நீங்கள் அளிக்க வேண்டும்.
தமிழக வாக்காளர்களுக்கு ஒரே தேர்தலில் இரு இலக்குகளை சாதிக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளன. மத்தியில் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான நல்லாட்சியை மீண்டும் ஏற்படுத்துவது, தமிழ் நாட்டில் மக்களை வாட்டும் தி.மு.க. அரசை தண்டிப்பது ஆகியவை தான் அந்த இரு இலக்குகள். இந்த இலக்குகளை சாதிக்க நாளை மறுநாள் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் பா.ம.க., பாஜக மற்றும் அவற்றின் கூட்டணிக் கட்சிகளுக்கு மாம்பழம், தாமரை, சைக்கிள், குக்கர், பலாப்பழம் ஆகிய சின்னங்களில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்; அதன்மூலம் தமிழ்நாட்டை தீமைகளில் இருந்து மீட்டெடுக்கவும், தமிழ்நாட்டின் உரிமைகளைவென்றெடுக்கவும் வகை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- திருச்செந்தூர் பகுதியில் நகராட்சி அருகே உள்ள சாக்கடை கால்வாயை சுத்தப்படுத்தி அதை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
- சுங்கச்சாவடிகள் மூடப்படும். 1 லிட்டர் பெட்ரோல் ரூ.75-க்கும், டீசல் ரூ.65-க்கும் வழங்கப்படும்.
திருச்செந்தூர்:
தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று காலை திருச்செந்தூரில் பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:-
ஏழை-எளிய, நடுத்தர மாணவர்களை நுழைவுத் தேர்வு கொண்டு வந்து படிக்க விடாமல் தடுக்கிறார்கள். ஆதிக்க சக்தியை மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கிறார்கள். அதை தடுக்க நீங்கள் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும். எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.
இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகை வழங்கி வருகிறார். இதுவரை வழங்கப்படாத பெண்களுக்கு தேர்தல் முடிந்ததும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சுங்கச்சாவடிகள் மூடப்படும். 1 லிட்டர் பெட்ரோல் ரூ.75-க்கும், டீசல் ரூ.65-க்கும் வழங்கப்படும்.
திருச்செந்தூர் கோவிலில் அரசின் சார்பில் ரூ.100 கோடி, தனியார் பங்களிப்பாக ரூ.200 கோடி என ரூ.300 கோடியில் உலகமே வியக்கும் வகையில் திருப்பதி கோவிலை விட மேலாக சாமி தரிசனம் செய்வதற்கு தரம் உயர்த்தப்பட பெறும் திட்ட வளாகப்பணி நடந்து வருகிறது. இந்த பணியை தந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த பகுதி மக்களுக்காக குடிநீர் வசதியை மேம்படுத்த ரூ.500 கோடியில் சரி செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் தந்துள்ளார். இந்த திட்டம் தேர்தல் முடிந்ததும் தொடங்கப்படும்.
திருச்செந்தூர் பகுதியில் நகராட்சி அருகே உள்ள சாக்கடை கால்வாயை சுத்தப்படுத்தி அதை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நகராட்சி சொத்து வரி குறைக்கப்படும். தூத்துக்குடி எனது 2-வது தாய் வீடு. எனவே அனைத்து நல்ல திட்டங்களை செய்ய எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையிலும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை.
- இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உரிய நிதி வழங்கப்படவில்லை.
சென்னை:
சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அதிமுக ஆட்சியில் தான் மக்கள் நலன் காக்கும் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
* திமுக அரசின் 520 அறிவிப்புகள் இதுவரை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையில் சுமார் 10 சதவீத அறிவிப்புகளே நிறைவேற்றப்பட்டுள்ளது.
* முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழக தலைவருமான ஸ்டாலின், அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிக்கைகள் 98 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக பச்சை பொய்யை தேர்தல் பிரசார கூட்டத்தில் சொல்லி வருகிறார்.
* தமிழகத்தில் நதிநீர் பிரச்சனை, போதைப்பொருள் நடமாட்டம், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு என்று பல பிரச்சனைகள் நிலவிக்கொண்டிருக்கிறது. இதையெல்லாம் கட்டுப்படுத்த தவறிய அரசு விடியா திமுக அரசு.
* மத்தியில் ஆளும் பாஜக அரசும் அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
* கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையிலும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை.
* பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வந்து சென்றதால் எந்த பயனுமில்லை.
* வாக்குகளை மட்டும் குறி வைத்து வருகிறார் பிரதமர் மோடி.
* இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உரிய நிதி வழங்கப்படவில்லை.
* அதிமுக-வை அழிக்க இதுவரை யாரும் பிறக்கவில்லை.
* பெட்ரோல், டீசல், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
* பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்கள் எதையும், தமிழகத்திற்கு 10 ஆண்டுகளாக தரவில்லை.
* இயற்கை சீற்றங்களின்போது கேட்கப்படும் நிதியை முழுமையாக வழங்குவதில்லை.
* திமுக அரசுக்கு நிர்வாக திறமையின்மை; அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மது விற்பனை அதிக அளவில் இருந்துள்ளது.
- இன்று முதல் 3 நாட்கள் மூடப்பட்டுள்ள மதுக்கடைகள் மீண்டும் வருகிற 20-ந்தேதி திறக்கப்படும்.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி இன்று முதல் 3 நாட்களுக்கு (19-ந்தேதி வரை) டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படுகிறது.
இன்று கடைசி நாள் பிரசாரம் நடைபெறுவதையொட்டியும், நாளை மறுநாள் தேர்தல் அன்று மதுபோதையால் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கும் வகையிலும் தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது.
இதையடுத்து நேற்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. அனைத்து மதுபான கடைகளிலும் குடிமகன்கள் மது குடிப்பதற்காக குவிந்தனர். இன்று முதல் 3 நாட்களும் மதுகுடிக்க முடியாது என்பதால் பலர் கூடுதல் மதுபாட்டில்களை வாங்கி வயிறு முட்ட குடித்தனர்.
மேலும் பலர் நன்றாக மது குடித்து விட்டு தங்களது தேவைக்காக மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். ஒருவருக்கு ஒரே நேரத்தில் ஒரு பீர், 3 குவார்ட்டர் பாட்டில்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். இதை மீறி கூடுதல் மது பாட்டில்களை விற்பனை செய்யக்கூடாது.
ஆனால் டாஸ்மாக் கடைகளில் நேற்று குவிந்த மது பிரியர்கள் மூன்று, மூன்று பாட்டில்களாக வாங்கி தங்களுக்கு தேவையான மது பாட்டில்களை வாங்கி குவித்து மொத்தமாக மறைத்து அள்ளிச் சென்றுள்ளனர்.
இது போன்று வாங்கிச் சென்ற மதுபாட்டில்களை திருட்டுத் தனமாக கூடுதல் விலைக்கும் அவர்கள் விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது.
இதைத் தொடர்ந்து அது போன்ற மது விற்பனையை தடுப்பதற்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நேற்று ஒரே நாளில் மட்டும் வழக்கமான விற்பனையை விட 2½ மடங்கு கூடுதலாக மது விற்பனை நடைபெற்றிருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டாஸ்மாக் கடைகளில் தினசரி மது விற்பனை ரூ.150 கோடி அளவுக்கு இருக்கும் என்றும் 2½ மடங்கு அளவுக்கு நேற்று கூடுதலாக மது விற்பனை நடைபெற்றிருப்பதால் ரூ.400 கோடி அளவுக்கு மது விற்பனையாகி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மது விற்பனை அதிக அளவில் இருந்துள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக் பார் உரிமையாளர் ஒருவர் கூறும்போது, சென்னையில் சில கடைகளில் 4 மடங்கு வரை கூடுதலாக மது விற்பனையாகி இருப்பதாக தெரிவித்தார்.
இன்று முதல் 3 நாட்கள் மூடப்பட்டுள்ள மதுக்கடைகள் மீண்டும் வருகிற 20-ந்தேதி திறக்கப்படும். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மகாவீர் ஜெயந்தி அன்று மதுக்கடைகள் மீண்டும் மூடப்படும். இதனால் தேர்தலுக்கு மறுநாளான சனிக்கிழமை அன்றும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோத வாய்ப்பு உள்ளது. அன்றும் மது விற்பனை அதிக அளவில் நடைபெறும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்படி தொடர்ச்சியாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் நாட்களில் கூடுதல் விலைக்கு மது விற்பவர்களை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
- பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- உரிய ஆவணமும் இல்லாமல் ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 200 ரூபாய்எடுத்து சென்றது தெரிய வந்தது.
கோவில்பட்டி:
பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி பகுதியில் நேற்று நள்ளிரவில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரும், நிலையான கண்காணிப்புக் குழு அலுவலருமான ஜவஹர் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுடலைமணி தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே வந்த கோவில்பட்டி கிருஷ்ணா நகரை சேர்ந்த பிஸ்கட் வியாபாரி வீரபாண்டியன் என்பவரின் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் ரூ.1 லட்சத்து 99 ஆயிரம் ரொக்கப்பணம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் அதற்கான ஆவணங்ளை கேட்டனர். ஆனால் அவரிடம் அதற்கான உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை என்பதால் அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கோவில்பட்டி வட்ட வழங்கல் அலுவலர் பாண்டி யராஜனிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல் கோவில்பட்டி அருகே கயத்தார்-கடம்பூர் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அந்த வழியாக மினி லோடு ஆட்டோ வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அந்த வாகனத்தில் கடம்பூரை சேர்ந்த மசாலா பொருட்கள் வியாபாரி முத்துக்குமார் என்பவர் எவ்வித உரிய ஆவணமும் இல்லாமல் ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 200 ரூபாய்எடுத்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் அந்தப் பணத்தை பறிமுதல் செய்து கோவில்பட்டி வட்ட வழங்கல் அலுவலர் பாண்டியராஜிடம் ஒப்படைத்தனர்.
- 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரெயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.
- விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மதுரை:
பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக சென்னையில் இருந்து கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல் வழியாக கோவைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி தாம்பரம்-கன்னியாகுமரி சிறப்பு ரெயில் (06001) ஏப்ரல் 18 மற்றும் 20-ந்தேதி ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.40 மணிக்கு கன்னியாகுமரி சென்று சேரும்.
மறு மார்க்கத்தில் கன்னியாகுமரி-தாம்பரம் சிறப்பு ரெயில் (06002) ஏப்ரல் 19 மற்றும் 21-ந்தேதி ஆகிய நாட்களில் கன்னியாகுமரியில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.
இந்த ரெயில்கள் நாகர்கோவில், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயில்களில் 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 19 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரெயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.
சென்னை எழும்பூர்-கோயம்புத்தூர் சிறப்பு ரெயில் (06003) சென்னையில் இருந்து ஏப்ரல் 18 மற்றும் 20 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து மாலை 4.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.20 மணிக்கு கோயம்புத்தூர் சென்று சேரும்.
மறு மார்க்கத்தில் கோயம்புத்தூர் சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் (06004) ஏப்ரல் 19 மற்றும் 21 ஆகிய நாட்களில் கோயம்புத்தூரில் இருந்து இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.05 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.
இந்த ரெயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரெயில்களில் 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 சரக்கு மற்றும் ரெயில் மேலாளர் பெட்டிகள் இணைக்கப்படும்.
இந்த தகவலை தெற்கு ரெயில்வே மதுரை கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
- பஸ் நிலையத்தில் போதிய அளவில் இடவசதி இல்லை.
- புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு தகுந்த இடம் கிடைக்கவில்லை.
வருசநாடு:
தேனி மாவட்டம் வருசநாடு கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பஸ் நிலையம் கட்டப்பட்டது. அப்போதைய காலத்தில் வருசநாடு பகுதிக்கு குறைந்த அளவிலான பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. இதனால் குறைந்த அளவிலான இடத்தில் பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வருசநாட்டில் இருந்து நாள்தோறும் 30-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் பஸ் நிலையத்தில் போதிய அளவில் இடவசதி இல்லை. எனவே பஸ் நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு தகுந்த இடம் கிடைக்கவில்லை. அதேபோல வருசநாடு கிராமத்தில் புதிய அரசு அலுவலகங்கள் கட்டுவதற்கும் இடங்கள் கிடைக்காத நிலை இருந்து வந்தது.
இந்த நிலையில் சின்னமனூரைச் சேர்ந்த பரமசிவம் என்ற விவசாயி தாமாக முன்வந்து வருசநாடு கிராமத்தில் பஸ் நிலையம் மற்றும் அரசு அலுவலகங்கள் கட்டுவதற்காக தனக்குச் சொந்தமான 2.36 ஏக்கர் நிலத்தை தானமாக ஆளுநர் பெயருக்கு பத்திரம் பதிவு செய்து வழங்கினார். அதற்கான ஆவணங்களை வருசநாடு ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்துவிடம் வழங்கினார். பஸ் நிலையம் அமைக்க இடம் தானமாக வழங்கிய பரமசிவத்தின் செயலைக்கண்டு அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டு தெரிவித்தனர்.






