என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வாக்காளர்கள் சொந்த ஊர் செல்ல ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
- தேர்தலை முன்னிட்டு பயணிகள் தங்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கான தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆயிரக்கணக்கான பேருந்துகளை போக்குவரத்துத்துறை இயக்கி வருகிறது.
இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக சென்னை தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை தாம்பரத்தில் இருந்து இந்த சிறப்பு ரெயில் (06007) இன்றிரவு 9.50 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கமாக நாளை இரவு 7 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில் (06008) இயக்கப்படுகிறது.
- இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத அளவிற்கு மோடி எதிர்ப்பு அலை உருவாகி இருக்கிறது.
- இந்தியா கூட்டணியை சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெறுகிற வகையில் உங்கள் ஆதரவை வழங்க வேண்டும்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நாட்டில் இதுவரை நடை பெற்ற மக்களவை தேர்தல்களிலேயே மிகமிக முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக வருகிற மக்களவைத் தேர்தல் அமைந்திருக்கிறது. இது இந்தியாவின் எதிர்காலத்தையும், நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் நிர்ணயிக்கப் போகிற தேர்தலாகும்.
இந்தியாவில் ஜனநாயகம் நீடிக்கப் போகிறதா? சர்வாதிகாரம் நீடிக்கப் போகிறதா? என்பது குறித்து வாக்காளப் பெருமக்கள் முடிவு செய்ய வேண்டிய தேர்தல். சுதந்திர இந்தியா காணாத வகையில் இந்திய அரசமைப்புச் சட்டம் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது.
அதனை சீர்குலைத்து புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க பாரதிய ஜனதா கட்சி தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய பேராபத்துகளில் இருந்து நாட்டை மீட்க ஜனநாயக அடிப்படையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்கிற வகையில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இந்தியா கூட்டணியை அமைத்திருக்கின்றன.
இந்தியா முழுவதும் பா.ஜ.க. எதிர்ப்பு அலை வீசிக் கொண்டிருக்கிறது. வட மாநிலங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது என்ற நிலையில் 9 முறை தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரை நிகழ்த்த வேண்டிய பலகீனமான நிலையில் பிரதமர் மோடி இருக்கிறார். ஆனால், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத அளவிற்கு மோடி எதிர்ப்பு அலை உருவாகி இருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளாக தமிழகம் அனைத்து நிலைகளிலும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. பா.ஜ.க.வின் தென்மாநிலங்கள் புறக்கணிப்பு அரசியலில் தமிழகம் கடுமையாக வஞ்சிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் மீது தலைவர் ராகுல்காந்தி அளவற்ற அன்பையும், பாசத்தையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி வெளியிட்ட நியாய பத்திரம் என்ற தேர்தல் அறிக்கையில் சமூகநீதி, பெண்களுக்கான சமஉரிமை, சமவாய்ப்பு, விவசாயிகள் நலன், சிறுபான்மையினர் பாதுகாப்பு, மாநில உரிமைகள், கருத்து சுதந்திரம், மீனவர் நலன், கல்விக் கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து, 100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூபாய் 400 ஆக உயர்வு, சாதிவாரி கணக்கெடுப்பு, அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு, பெண்களுக்கு ஆண்டு ரூபாய் 1 லட்சம் வழங்குகிற மகாலட்சுமி திட்டம், மீனவர்களுக்கு மீண்டும் டீசல் மானியம், 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மதிய உணவு, மூத்த குடிமக்களுக்கு ரெயில்களில் மீண்டும் கட்டண சலுகை, நாடு முழுவதும் ஒன்றிய அரசு பணியிடங்களில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும், விவசாயிகளுக்கு எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதரவுப்படி சட்டப் பாதுகாப்பு என மக்கள் நலன் சார்ந்த வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
எனவே, இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க, இந்திய அரச மைப்புச் சட்டத்தை பாதுகாக்க, மோடியின் பாசிச, சர்வாதிகார ஆட்சியை வீழ்த்திட, இந்தியா கூட்டணி தலைமையில் ஜனநாயக ஆட்சி மீண்டும் மலர்ந்திட, மக்கள் நலன்சார்ந்த நல்லாட்சி அமைந்திட காங்கி ரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியை சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெறுகிற வகையில் உங்கள் ஆதரவை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நாளை தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
20.04.2024: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
21.04.2024 மற்றும் 22.04.2024: தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
23.04.2024 மற்றும் 24.04.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
18.04.2024 முதல் 22.04.2024 வரை : அடுத்த இரண்டு தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் படிப்படியாக 2° செல்சியஸ் உயரக்கூடும். அதற்கு அடுத்த மூன்று தினங்களில் 2°- 3° செல்சியஸ் சற்றே குறையக்கூடும்.
18.04.2024 முதல் 22.04.2024 வரை : காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-85 % ஆகவும் இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
18.04.2024 மற்றும் 19.04.2024: வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
19.04.2024 மற்றும் 20.04.2024: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
- தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி நேற்று மாலையுடன் தொகுதிக்கு சம்பந்தமில்லாத நபர்கள் தொகுதியை விட்டு வெளியேறி இருக்க வேண்டும்.
- கோவை பாராளுமன்ற பாஜக தேர்தல் அலுவலகத்தில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தற்போதும் தங்கி உள்ளனர்.
கோவை:
தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்றுடன் பிரசாரம் முடிவடைந்த நிலையில் நாளை வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
இந்நிலையில் கோவை வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியின் அமைப்பாளர் பத்ரி (எ) க. பழனிச்சாமி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்துள்ளார். அதில்,
கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக வாக்காளர்களுக்கு அலைபேசி மூலம் அழைத்து, தனக்கு வாக்களிக்குமாறு கேட்டு G Pay மூலம் பணம் அனுப்பி வருகிறார்.
மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி நேற்று மாலையுடன் தொகுதிக்கு சம்பந்தமில்லாத நபர்கள் தொகுதியை விட்டு வெளியேறி இருக்க வேண்டும். ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக சட்டவிரோதமாக கோவை பாராளுமன்ற பாஜக தேர்தல் அலுவலகத்தில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தற்போதும் தங்கி இருந்து வாக்காளர்களுக்கு போன் செய்து தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு G Pay மூலம் ஓட்டுக்கு பணம் வினியோகம் செய்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

- பதற்றமான வாக்குச் சாவடிகளில் தலா 4 துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணி மேற்கொள்கிறார்கள்.
- வாக்குச்சாவடிகளில் மொத்தம் 7,470 அரசு ஊழியர்கள் தேர்தல் வாக்குப் பதிவு பணியில் ஈடுபடுகின்றனர்.
நெல்லை:
தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடை பெறுகிறது. இதையொட்டி அனைத்து தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தேர்தல் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. நெல்லை பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை இங்குள்ள 6 தொகுதிகளிலும் மொத்தமாக 8 லட்சத்து 6 ஆயிரத்து 96 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 44 ஆயிரத்து 254 பெண் வாக்காளர்களும், 152 இதர பாலினத்தவர் என மொத்தம் 16 லட்சத்து 50 ஆயிரத்து 532 வாக்காளர்கள் உள்ளனர்.
நெல்லை சட்டமன்ற தொகுதியில் 314 வாக்குச் சாவடிகளும், பாளையில் 270 வாக்குச்சாவடிகளும், நாங்குநேரியில் 306 வாக்குச் சாவடிகளும், ராதாபுரத்தில் 307 வாக்குச்சாவடிகளும், ஆலங்குளத்தில் 319 வாக்குச் சாவடிகளும், அம்பையில் 294 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 1,810 வாக்குச் சாவடிகள் உள்ளன.
இதில் 333 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அந்த வாக்குச்சாவடிகளில் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 13 மிக பதற்றமான வாக்குச் சாவடிகளில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பதற்றமான வாக்குச் சாவடிகளில் தலா 4 துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணி மேற்கொள்கிறார்கள்.
நெல்லை பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை மொத்தம் 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதன் காரணமாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள், தலா ஒரு கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் எந்திரங்கள் வீதம் மொத்தம் 4,354 வாக்குப்பதிவு எந்திரங்களும், 2177 கட்டுப்பாட்டு எந்திரங்களும், அதே எண்ணிக்கையில் வி.வி.பேட் எந்திரங்களும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் உள்ள தாலுகா அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அவை அனைத்தும் இன்று போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றி அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவை 249 வாகனங்களில் இன்று எடுத்துச்செல்லப்படுகிறது. மொத்தம் உள்ள 1,810 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு பணியில் 9,236 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் 7 லட்சத்து 13 ஆயிரத்து 388 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 44 ஆயிரத்து 826 பெண் வாக்காளர்கள், 216 பேர் 3-ம் பாலினத்தவர்கள் என மொத்தம் 14 லட்சத்து 58 ஆயிரத்து 430 பேர் வாக்களிக்க தயாராக உள்ளனர்.
இதற்காக தொகுதி முழுவதும் மொத்தம் 1,624 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அவை முழுவதுமாக போலீசாரின் தீவிர கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது. இந்த வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவதற்காக 8,026 அரசு ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் ஏற்கனவே சட்டமன்ற தொகுதிகளில் உள்ள தாலுகா அலுவலகங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்ட நிலையில், இன்று அவை வாக்குச்சாவடிகளுக்கு எடுத்து செல்லப்படுகிறது.
இதற்காக துணை தாசில்தார் தலைமையில் 136 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்று வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் 136 வாகனங்கள் மூலமாக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது.
தென்காசி(தனி) பாராளுமன்ற தொகுதியில் 7 லட்சத்து 42 ஆயிரத்து 158 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 73 ஆயிரத்து 822 பெண் வாக்காளர்கள், 3-ம் பாலினத்தவர்கள் 203 பேர் என மொத்தம் 15 லட்சத்து 16 ஆயிரத்து 183 வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி முழுவதும் மொத்தம் 1,743 வாக்குச்சாவடிகள் உள்ளன.
இதில் 106 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனவும், 14 வாக்குச்சாவடிகள் மிக பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டு உள்ளது. அந்த வாக்குச் சாவடிகளில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
மேலும் சி.சி.டி.வி. கேமிராக்களும் பொருத்தப்பட்டு போலீசாரின் நேரடி கண்காணிப்பில் இருந்து வருகிறது. இந்த வாக்குச்சாவடிகளில் மொத்தம் 7,470 அரசு ஊழி யர்கள் தேர்தல் வாக்குப் பதிவு பணியில் ஈடுபடுகின்றனர்.
நாளை வாக்குப்பதிவையொட்டி இன்று தாலுகா அலுவலகங்களில் இருந்து அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு போலீசாரின் பாதுகாப்புடன் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்து செல்லப்படுகிறது.
- உளவுத்துறையினர் ஒட்டு கேட்டு ஆளுங்கட்சியினருக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர்.
- உளவு அமைப்பை போதை பொருட்கள் நடமாட்டம், ரவுடிகளை பிடிப்பதில் கவனம் செலுத்தாமல் அடியாட்கள் போல பயன்படுத்தி வருகின்றனர்.
நெல்லை:
அ.தி.மு.க மாநில வக்கீல் பிரிவு செயலாளர் இன்ப துரை நெல்லையில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக உளவுத்துறையினர் அ.தி.மு.க தலைவர்கள் முதல் வட்ட செயலாளர்கள் வரை செல்போனில் பேசுவதை ஒட்டு கேட்கும் விவகாரம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதற்காக ரூ. 40 கோடி மதிப்பில் உளவு சாதனம் ஒன்றை இறக்குமதி செய்து நாங்கள் பேசுவதை கண்காணித்து ஆளுங்கட்சியினருக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக நான் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து 5 நாட்கள் ஆகிவிட்டது. தேர்தல் ஆணையமோ, உள்துறை செயலாளரோ, தமிழக முதலமைச்சரோ யாரும் இதுவரை பதில் அளிக்கவில்லை.
எனது புகார் மனு மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாங்கள் தேர்தல் சமயத்தில் எங்களது வெற்றிக்கு பல்வேறு வியூகங்கள் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் உரையாடல் நடத்துவோம். அதனை உளவுத்துறையினர் ஒட்டு கேட்டு ஆளுங்கட்சியினருக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர்.
உளவு அமைப்பை போதை பொருட்கள் நடமாட்டம், ரவுடிகளை பிடிப்பதில் கவனம் செலுத்தாமல் அடியாட்கள் போல பயன்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணைய அதிகாரியிடம் செல்போனில் இன்று காலை தொடர்பு கொண்டு கேட்டபோது இன்று மாலைக்குள் தமிழக தேர்தல் ஆணையம் பதில் தெரிவிப்பதாக கூறியுள்ளார்கள்.
இன்று மாலைக்குள் பதில் தெரிவிக்க வேண்டும். அதே நேரத்தில் நேற்று நெல்லையில் இருந்து நாங்குநேரி வழியாக ராதாபுரம் தொகுதிக்கு ஒரு கோடி ரூபாய் மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ராதாபுரத்தை சேர்ந்த ஒரு முக்கிய நிர்வாகிக்கு இந்த பணம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அதனை பறக்கும் படையினர் சோதனை செய்யவில்லை.
அதே நேரத்தில் நாங்குநேரி போலீசில் பிடிபட்ட அந்த பணத்தின் மதிப்பு ரூ. 28 லட்சம் வரை மட்டுமே கணக்கு காட்டப்பட்டுள்ளது.
இது குறித்தும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். அந்த பணம் யாருடையது? எதற்காக கொண்டு செல்லப்பட்டது? என்பது குறித்து விரிவான விசாரணை தேவை. அந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் முறையான விசாரணை நடத்தி உண்மைத்தன்மையை தெரிவிக்க வேண்டும்.
அ.தி.மு.க.வினரின் செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு நான் கெடு விதிக்கிறேன். நான் கொடுத்த புகார் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை செயலாளரும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சின்னமலையூரில் ஆண் வாக்காளர்கள் 116 பேர், பெண் வாக்காளர்கள் 109 பேர் என மொத்தம் 225 வாக்காளர்கள் உள்ளனர்.
- வாக்குப்பெட்டிகள் தாசில்தார் சுகந்தி மேற்பார்வையில் மலைக்கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதியில் 327 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் மலைப்பகுதி கிராமங்களான எல்லைப்பாறை மலை அடிவாரத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் லிங்கவாடி-மலையூர் மலை உச்சியில் உள்ளது. இங்கு வருடந்தோறும் பாதை வசதி இல்லாமல் கரடு முரடான கற்கள் நிறைந்த பாதையை கடந்து செல்ல வேண்டும். அதன்படி நாளை நடைபெறும் தேர்தலுக்காக இன்று காலை குதிரைகளில் 2 ஓட்டுப்பெட்டிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், எழுதுபொருட்கள் அடங்கிய பெட்டிகளும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் 3 குதிரைகளில் அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் இந்த மலையூரில் ஒரே ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது. 4 தேர்தல் உதவி அலுவலர்களும், 4 காவல்துறையை சேர்ந்தவர்களும் இதற்காக சென்றுள்ளனர். இதில் ஆண் வாக்காளர் 237 பேரும், பெண் வாக்காளர்கள் 247 பேரும் மொத்தம் 484 வாக்காளர்களும் உள்ளனர். இதைபோலவே நத்தம் அருகே குட்டுப்பட்டி அருகில் கரந்தமலை மலை உச்சியில் அடிவாரத்திலிருந்து சுமார் 10கி.மீ தொலைவில் பெரிய மலையூர், சின்னமலையூர் மற்றும் வலசு ஆகிய 3 மலை கிராமங்கள் உள்ளது. இங்கு 3 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. இதில் பெரிய மலையூரில் ஆண் வாக்காளர்கள் 340 பேர், பெண் வாக்காளர்கள் 320 பேர் என மொத்தம் 660 வாக்காளர்கள் உள்ளனர்.
சின்னமலையூரில் ஆண் வாக்காளர்கள் 116 பேர், பெண் வாக்காளர்கள் 109 பேர் என மொத்தம் 225 வாக்காளர்கள் உள்ளனர். வலசையில் ஆண் வாக்காளர்கள் 181 பேர், பெண் வாக்காளர்கள் 179 பேர் என மொத்தம் 360 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு மினி பிக்-அப் வேனில் வைத்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மலை கிராமங்களுக்கு ஓட்டுப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டது. இதில் 4 காவல்துறை அதிகாரிகள், தேர்தல் உதவி அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர்கள், வனத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட 25 பேர் குழுவினர் 3 வாக்குச்சாவடிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த வாக்குப்பெட்டிகள் தாசில்தார் சுகந்தி மேற்பார்வையில் மலைக்கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் டி.எஸ்.பி. உதயகுமார், நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி உள்பட 500க்கும் மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- இந்த ஆண்டு கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும்.
- பலர் நேர்த்திக்கடன் வைத்து தண்ணீர் பீய்ச்சுவர்.
மதுரை:
மதுரையை சேர்ந்த ரஞ்சித் குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அதிலும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் சிறப்பானது. அழகர் ஆற்றில் இறங்கும்போது அவர் மீது தண்ணீர் பீய்ச்சுவதை நேர்த்திக்கடனாக வைத்து பக்தர்கள் செய்வது வழக்கம்.
இந்நிலையில் இந்த ஆண்டு கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும். பாரம்பரிய முறையில் மட்டுமே தண்ணீர் பீய்ச்ச வேண்டும் என தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி கள்ளழகர் கோவிலின் இணை ஆணையரால் அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே எதிர்சேவை நிகழ்வின்போது கள்ளழகரின் மீது தண்ணீரை பீய்ச்ச இயலும்.
இதனால் என் போன்றோர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இது தனிநபரின் வழிபடும் உரிமைக்கு எதிரானது. ஆகவே முறையாக முன் அனுமதி பெற்றவர்கள் மட்டும், பாரம்பரிய முறையில் கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கள்ளழகரின் சிலை, ஆபரணங்கள், குருக்கள் மீது தண்ணீரை அதிக அழுத்தத்தில் பீய்ச்சுவதை தடுக்க வேண்டும். ஆனால் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதை எவ்வாறு தடுப்பது? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் ஆஜராகி, தோல் பைகளில் தண்ணீர் நிரப்பி, இடுப்பில் கட்டிக்கொண்டு அழுத்தம் கொடுத்தே தண்ணீர் பீய்ச்சுவர். கோடை காலத்தில் தண்ணீர் பீய்ச்சுவது அனைவருக்கும் இதமாகவே அமையும். கள்ளழகரின் ஆசி பெரும் வகையிலேயே தண்ணீர் அனைவரின் மீதும் பீய்ச்சப்படுகிறது.
இதன் காரணமாகவே, தண்ணீர் பீய்ச்சுபவர்கள் பெரும்பாலும் அழகர் வேடமணிந்திருப்பர். மாவட்ட கலெக்டர் உத்தரவால் பக்தர்கள் மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளாகி உள்ளனர் எனவே தண்ணீர் பீச்சி அடிக்கும் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என வாதிட்டார்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தின்போது, பிற மாவட்டங்கள் மட்டுமன்றி பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வந்து கலந்து கொள்வர். கோடை காலத்தில் வெப்பத்தை குறைக்கும் விதமாகவே தண்ணீர் பீய்ச்சப்படுகிறது. இந்த வழக்கம் வேறு பல கோவில்களிலும் நடைமுறையில் உள்ளது. இதனால் பலர் நேர்த்திக்கடன் வைத்து தண்ணீர் பீய்ச்சுவர்.
மாவட்ட கலெக்டரின் இந்த உத்தரவால், தற்போது வரை 7 பேர் மட்டுமே தண்ணீர் பீய்ச்ச அனுமதி பெற்றுள்ளனர். இது பாரம்பரிய நடைமுறையை பாதிப்பதோடு, பக்தர்களின் மனதையும் புண்படுத்தும் என கருதுவதால் மாவட்ட கலெக்டர் உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது.
எதனடிப்படையில் நபர்களை தேர்வு செய்கிறார்கள்? என்பது குறித்து கள்ளழகர் கோவிலின் இணை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மதுரை மாவட்ட கலெக்டர் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் இந்த உத்தரவை பிறப்பித்தார்? சட்ட அலுவலர் அல்லது கோவில் நிர்வாகத்திடம் ஆலோசிக்கப்பட்டதா? என்பது குறித்து விளக்கமளிக்கும் வகையில் அவர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை வருகிற 22-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
- ஒவ்வொரு தொகுதி வாரியாக தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டு அந்தந்த தொகுதி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
- குறிப்பாக பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு பிற மாவட்டங்களில் இருந்து ஒரு தபால் வாக்கு கூட பதிவாகவில்லை.
திருச்சி:
தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் நாளை(வெள்ளிக்கிழமை) பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், காவல்துறையினர் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் பதிவு செய்தனர்.
இதனை பிரித்து அனுப்புவதில் புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்தது. அதன்படி திருச்சி கலையரங்கில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த மையத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுவோர் செலுத்திய தபால் வாக்குகளுடன் அந்தந்த தொகுதிகளில் இருந்து வந்த அதிகாரிகள் தபால் வாக்குகளை ஒப்படைத்தனர்.
அதன் பின்னர் தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டது. பின்னர் ஒவ்வொரு தொகுதி வாரியாக தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டு அந்தந்த தொகுதி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
அதன்படி 39 தொகுதிகளிலும் மொத்தம் 94 ஆயிரம் வாக்குகள் பிரிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு உரிய வாக்குகள் அந்தந்த அலுவலர்களுடன் போலீஸ் பாதுகாப்புடன் திருச்சியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் அதிகபட்சமாக தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து அதிகபட்சமாக 5 ஆயிரத்து 445 தபால் வாக்குகள் பதிவாகி இருந்தன குறைந்தபட்சமாக கன்னியாகுமரி தொகுதிக்கு 434 தபால் வாக்குகள் பதிவாகி இருந்தது.
குறிப்பாக பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு பிற மாவட்டங்களில் இருந்து ஒரு தபால் வாக்கு கூட பதிவாகவில்லை. திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு பிற மாவட்டங்களில் இருந்து 5031 வாக்குகள் பதிவாகின பெரம்பலூரில் இருந்து அதிகமாக வந்திருக்கிறது.
அதில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியிலிருந்து 2493 வாக்குகள் பதிவாகி இருந்தது. மேலும் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 4117 தபால் வாக்குகள் பதிவாகின. அதில் 2674 வாக்குகள் பிற மாவட்டங்களுக்கு பதிவாகி இருந்தது.
திருச்சிக்கு மட்டும் 1443 வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த வாக்கினையும் பிற மாவட்டங்களில் திருச்சிக்கு பதிவான 5031 வாக்குகளையும் சேர்த்தால் திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு 6474 தபால் வாக்குகள் மொத்தம் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிற மாவட்டங்களில் இருந்து தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் விவரம்;-
திருவள்ளூர்-4547, வடசென்னை-4023, மத்திய சென்னை -3,639, ஸ்ரீபெரும்புதூர்-3385, காஞ்சிபுரம் -949, அரக்கோணம் -926, வேலூர்-1863 கிருஷ்ணகிரி-6984 தருமபுரி-597 திருவண்ணாமலை-6551, அரணி-889, விழுப்புரம்-798 , கள்ளக்குறிச்சி-2243, சேலம்-4961, நாமக்கல்-1516 ஈரோடு-2908, திருப்பூர்-4947, நீலகிரி-1450, கோவை-4545, திண்டுக்கல்-1254 கரூர்-2970, பெரம்பலூர்-3028 கடலூர்-2322 சிதம்பரம்-2819 , மயிலாடுதுறை-1408 , நாகப்பட்டினம்-1814 தஞ்சாவூர்-1812 சிவகங்கை-3167 மதுரை-3552 , தேனி-500 , விருதுநகர்-2524 ராமநாதபுரம்-1948, தூத்துக்குடி-1667 தென்காசி-1879 திருநெல்வேலி-2303 கன்னியக்குமரி-434.
- தகவல் அறிந்த நேசமணிநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற் கொண்டனர்.
- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அரசு பஸ் டிரைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணி மனையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். வீட்டில் இருந்து சிறிது தூரம் வந்த நிலையில் அங்கு வந்த ஒருவர் திடீரென டிரைவரை தடுத்து நிறுத்தி தகராறு செய்தார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை டிரைவர் மீது வீசினார். இதில் டிரைவருக்கு படுகாயம் ஏற்பட்டது. பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
இதைத் தொடர்ந்து வலியால் துடித்துக் கொண்டிருந்த டிரைவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்த நேசமணிநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற் கொண்டனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அரசு பஸ் டிரைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. போலீசார் நடத்திய முதற் கட்ட விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் அரசு பஸ் டிரைவர் மீது ஆசிட் வீசப்பட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
- ஒரு நோட்டா உட்பட 14 சின்னங்கள் வாக்குப்பதிவு எந்திரத்தில் இருக்கும்.
திருப்பூர்:
திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் திருப்பூர் வடக்கு, தெற்கு, ஈரோடு மாவட்டம் அந்தியூர், பவானி, பெருந்துறை, கோபிசெட்டிப்பாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் பெருந்துறையில் 264 வாக்குச்சாவடிகள், பவானியில் 289, அந்தியூரில் 262, கோபிசெட்டிபாளையத்தில் 296, திருப்பூர் வடக்கு 385, தெற்கு 248 என மொத்தம் 1745 வாக்குச்சாவடிகள் உள்ளன.
திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் 7 லட்சத்து 91 ஆயிரத்து 24 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 17 ஆயிரத்து 245 பெண் வாக்காளர்களும், 252 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 16 லட்சத்து 8 ஆயிரத்து 521 பேர் உள்ளனர். நாளை 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு வாக்குச்சாவடிகளில் பணியாற்றுகிறவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டு, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒரு நோட்டா உட்பட 14 சின்னங்கள் வாக்குப்பதிவு எந்திரத்தில் இருக்கும். இதில் வேட்பாளரை வாக்காளர்கள் தேர்வு செய்வார்கள்.
வாக்குப்பதிவு நாளை மாலை நிறைவடைந்ததும், வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரிக்கு ஜிபிஎஸ்., பொருத்தப்பட்ட வாகனத்தில் துணை ராணுவத்தினர் மற்றும் பலத்த போலீசார் பாதுகாப்புடன் எடுத்து வரப்படும்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான கிறிஸ்து ராஜ், நேற்று சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி மையத்தை ஆய்வு செய்தார். திருப்பூர் தொகுதியில் 293 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் கூடுதலாக ஈடுபடுவதுடன், அந்த மையங்கள் முழுவதும் சிசிடிவி., கேமரா மூலம் கண்காணிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
- விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள்.
- வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்.
சென்னை :
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18-ஆவது பாராளுமன்ற பொதுத்தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.
மார்ச் 22-ஆம் தேதி தீரர் கோட்டமாம் திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம், ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும்.
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள், முழுமையான போர் வீரர்கள்.
இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன்.
காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும்.
அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும்.
விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.






