என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • முந்தைய 10 ஆண்டு கால ஆட்சியில் மொத்தம் ரூ.3,819 கோடி மதிப்பிலான நிலங்கள் மட்டுமே மீட்கப்பட்டன.
    • இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்த ஆண்டு 1,014 கோவில்களில், ரூ.970 கோடி மதிப்பீட்டில் 1,240 பணிகள் நடைபெற உள்ளன.

    சென்னை:

    சட்டசபையில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து துறையின் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது:-

    அடுத்தவன் சொத்தை அபகரித்தால் ஆண்டவன் தான் கேட்க வேண்டும். ஆண்டவன் சொத்தை அபகரித்தால் ஆள்பவர் தானே கேட்க வேண்டும். அந்த வகையில், திராவிடமாடல் ஆட்சியில் இதுவரை ரூ.6,004 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய 10 ஆண்டு கால ஆட்சியில் மொத்தம் ரூ.3,819 கோடி மதிப்பிலான நிலங்கள் மட்டுமே மீட்கப்பட்டன.

    இந்த 3 ஆண்டுகளில் தெய்வங்களாக இருக்கின்ற சிலைகள், கலைப்பொருட்கள் மொத்தம் 420 இனங்கள் மீட்கப்பட்டுள்ளன. சிலைகளுக்கு பாதுகாப்பு அறைகள் கட்டி பாதுகாக்கப்படுகின்றன. இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் திருப்பணிகள் இதிகாச காலத்திற்கு இணையானது. வரலாற்றுப் பக்கங்களில் இடம் பெறுகிற அளவிற்கு 8,962 கோவில் திருப்பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    மொத்த திருப்பணிகள் 20,166 மதிப்பீட்டுத் தொகை ரூ.5,097 கோடி இதுவரை நிறைவுற்ற பணிகள் 7,648 எங்கள் முதல்வரின் காலம் பக்தர்களின் நற்காலம். ஆம், கடந்த 3 ஆண்டுகளில் 1,810 கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றது. 15 கோவில்களில் ரூ.1,405 கோடிகளில் திருப்பணிகள் நடைபெறுகின்றன. இத்திட்டம் முழுமையடைந்து பயன்பாட்டிற்கு வரும்போது திராவிட மாடலின் மாட்சி புரியும்.

    திருவிழாக்களின் கம்பீரம் திருத்தேர்கள். தங்கத் தேர்கள் 68, வெள்ளித் தேர்கள் 55, மரத்தேர்கள் 1,097, இதில் தங்க, வெள்ளித்தேர்கள் உலா வருகின்றன. 41 மரத்தேர்கள் 8 கோடி ரூபாயில் பழுது நீக்கப்பட்டு 1,097 மரத்தேர்களும் திருவீதி உலா வருகின்றன. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்த ஆண்டு 1,014 கோவில்களில், ரூ.970 கோடி மதிப்பீட்டில் 1,240 பணிகள் நடைபெற உள்ளன.

    இந்திய ஒன்றியத்திலேயே தமிழ்நாட்டில்தான் கோவில்கள் அதிகம். காரணம், நாம் கோவில்களை வைத்து கலை வளர்த்தோம், கலவரத்தை வளர்க்கவில்லை. பண்பாட்டை வளர்த்தோம், பாகுபாட்டை வளர்க்கவில்லை. எந்த மதம் இருந்தாலும் அன்பு கொள்வதே இந்து மதம். கடவுளை கோவிலில் வைத்து வணங்கலாம். பிரசாரத்திற்கு அழைத்து வராதீர்கள்.

    இறைவனிடம் வரம் கேளுங்கள். இறைவனை வைத்து வாக்கு கேட்காதீர்கள். உலகிற்கே பொதுமறையும், பொது நீதியும் வழங்கிய அன்னைத் தமிழ்நாட்டில் ஆன்மிகத்தை அரசியலாக்கும் சூழ்ச்சிகள் தகர்க்கப்படும். மனித நேயம் ஒருபோதும் இம்மண்ணை விட்டு அகலாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • விடுமுறை நாளை ஈடுசெய்யும் பொருட்டு ஆகஸ்ட் மாதம் 10-ந்தேதி அன்று பணிநாளாக அறிவிக்கப்படுகிறது.

    திருவள்ளூர்:

    திருத்தணியில் அமைந்துள்ள திருமுருகப்பெருமானின் ஐந்தாம்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அடுத்த மாதம் 29-ந்தேதி நடைபெறவிருக்கும் ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார்நிலைக் கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு ஜூலை 29-ந்தேதி செயல்படவேணடும்.

    இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் பொருட்டு ஆகஸ்ட் மாதம் 10-ந்தேதி அன்று பணிநாளாக அறிவிக்கப்படுகிறது.

    • பள்ளியின் தலைமை ஆசிரியை தமிழரசி, அந்த மாணவியை அழைத்து தனது இருக்கையில் அமர வைத்து, வாழ்த்தினார்.
    • தற்போது நிஜத்திலும் சில இடங்களில் ஒரு நாள் கலெக்டர், ஒரு நாள் போலீஸ் அதிகாரி என உயர் பதவிகளில் சிலர் அமர வைக்கப்படும் சம்பவமும் நடந்து வருகிறது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் ராணியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளின் படிப்பு மட்டுமில்லாமல் திறமையை ஊக்குவிப்பதற்காகவும், தலைமை பண்பை உருவாக்கும் வகையிலும் அவர்களில் சிறந்த மாணவி ஒருவரை தேர்ந்தெடுத்து அவரை பள்ளியின் தலைமை ஆசிரியையாக ஒரு நாள் பணியமர்த்த ஆசிரியர்கள் திட்டமிட்டனர். இதில் அந்த பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு உயிரியியல் பாடப்பிரிவில் ஆங்கில வழியில் படித்து வரும் மாணவி மெய்வர்சிதா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த பள்ளியில் அவர் 6-ம் வகுப்பு முதல் படித்து வருகிற நிலையில், படிப்பு மற்றும் தனித்திறமையில் சிறந்து விளங்கியதாக அவரை ஆசிரியர்கள் தேர்வு செய்தனர். மேலும் நேற்று பள்ளியின் ஒரு நாள் தலைமை ஆசிரியராக மாணவி மெய்வர்சிதா பணியமர்த்தப்பட்டார்.

    பள்ளியின் தலைமை ஆசிரியை தமிழரசி, அந்த மாணவியை அழைத்து தனது இருக்கையில் அமர வைத்து, வாழ்த்தினார். மேலும் ஆசிரியர், ஆசிரியைகளும் சக மாணவிகளும் அவரை பாராட்டி வாழ்த்தினர். தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர்ந்த மாணவி மெய்வர்சிதா, ஆசிரியர்கள் வருகைப்பதிவேடு மற்றும் தலைமை ஆசிரியர் மேற்கொள்ளும் அன்றாட பணிகளை பார்வையிட்டார்.

    அதன்பின் வகுப்பறைகளுக்கு சென்று மாணவிகள் மத்தியில் அவர் பேசினார். அப்போது மாணவி மெய்வர்சிதா பேசுகையில், ``ஒரு நாள் தலைமை ஆசிரியையாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். மாணவிகள் அனைவரும் நம்மிடம் உள்ள தனித்திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    பள்ளியோடு மாணவிகள் படிப்பை நிறுத்திவிடாமல் உயர்கல்வி படிக்க வேண்டும். ஆசிரியர், நீதிபதி உள்ளிட்ட பணிகளுக்கு வர வேண்டும். வாழ்க்கையில் முன்னேறி சாதிக்க வேண்டும். நீங்களும் ஒரு நாள் தலைமை ஆசிரியராக பணியாற்றக்கூடிய வகையில் திறமையை வளர்க்க வேண்டும்'' என்றார்.

    தமிழ் திரைப்பட நடிகர் அர்ஜூன் நடித்த `முதல்வன்' திரைப்படத்தில் ஒரு நாள் முதல்-அமைச்சராக அவர் பதவியேற்று செயல்படுவது போல காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இந்த காட்சி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. `ஒரு நாள் முதல்-அமைச்சர்' என இன்றளவும் பேசும்பொருளாக உள்ளது. இதேபோல நடிகை ஜோதிகா நடித்த `ராட்சசி' திரைப்படத்தில் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக அவர் பணிபுரிவது போலவும், அந்த பள்ளியை சிறந்த பள்ளியாக மாற்றும் முயற்சியில் பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்வது போன்றும், மாணவ-மாணவிகளை சுழற்சி முறையில் ஒரு நாள் தலைமை ஆசிரியராக பணியில் இருப்பது போன்றும், அந்த மாணவ-மாணவிகள் பள்ளியை வழி நடத்துவது போலவும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இந்த காட்சிகளும் மக்களிடம் வரவேற்பை பெற்றது.

    தற்போது நிஜத்திலும் சில இடங்களில் ஒரு நாள் கலெக்டர், ஒரு நாள் போலீஸ் அதிகாரி என உயர் பதவிகளில் சிலர் அமர வைக்கப்படும் சம்பவமும் நடந்து வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டையில் அரசு பள்ளியில் ஒரு நாள் தலைமை ஆசிரியராக மாணவி ஒருவர் பணியாற்றியது மற்ற மாணவிகளிடம் ஊக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது.

    • கூடலூரில் இருந்து கேரளா மற்றும் கர்நாடகா செல்லும் சாலைகளில் மூங்கில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • தொடர் மழையால் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து இருந்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு முதல் ஊட்டி, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக ஊட்டி அருகே அத்திக்கல், புது தோட்டம், மஞ்சனக்கொரை, எம்.பாலாடா ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் தாவரவியல் பூங்கா அருகே ராஜ்பவன் மாளிகை சாலையிலும் மரம் விழுந்தது.

    கூடலூரில் இருந்து கேரளா மற்றும் கர்நாடகா செல்லும் சாலைகளில் மூங்கில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தொடர் மழையால் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொரப்பள்ளி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இருவயல் கிராமத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் குழந்தைகளுடன் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் கடும் குளிர் நிலவுவதால், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    நீலகிரியில் கனமழை காரணமாக பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதோடு ஆங்காங்கே மின் வினியோகமும் தடைபட்டது. குறிப்பாக கூடலூர், பந்தலூரில் அதிக பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த தாலுகா பகுதிகளில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், பந்தலூரில் பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அளித்து கலெக்டர் அருணா உத்தரவிட்டார்.

    • கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை 63 போ் உயிாிழந்தனா்.
    • கள்ளச்சாராய மரணங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அஇஅதிமுகவின் போராட்டம் தொடரும்.

    கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சோி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை 63 போ் உயிாிழந்தனா். இச்சம்பவம் தொடா்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    இந்நிலையில், கள்ளச்சாராய மரணங்கள் குறித்து CBI விசாரணை கோரி நாளை அதிமுக உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளது.

    இது சம்பந்தமாக தனது எக்ஸ் பக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டுள்ளார். அதில், "கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து நேர்மையான விவாதம் மறுக்கப்பட்டு, அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது அடிப்படை ஜனநாயகத்திற்கு விரோதமானது

    எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மடைமாற்ற அரசியலால் கடந்துவிட முயற்சிக்கும் திமுக அரசிற்கு எனது கடும் கண்டனம்.

    எனவே, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி வழங்காததைக் கண்டித்தும், கள்ளச்சாராய மரணங்கள் குறித்து CBI விசாரணை கோரியும் எனது தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை (27.06.2024- வியாழக்கிழமை) சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அடையாள உண்ணாவிரத அறப்போராட்டம் மேற்கொள்ளவுள்ளோம்!

    கள்ளச்சாராய மரணங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அஇஅதிமுகவின் போராட்டம் தொடரும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் வலுக்கின்றன.
    • சமூகமாக நாம் இதற்காக வெட்கப்பட வேண்டும்.

    கள்ளக்குறிச்சியில் ஏற்பட்டுள்ள கள்ளச்சாராய மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் வலுத்து வருகின்றன.

    இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக பதிவிட்டுள்ள, பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் பிரதீப், மணிப்பூர் விவகாரம் குறித்து பேசிய பிரபலங்கள் தற்போது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து வாய் திறக்காமல் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

    எவ்வளவு நாட்களுக்குத் தான் தமிழ்நாடு இதுபோன்ற மோசமான விஷயங்களை தாங்கிக்கொள்ளப்போகிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

    அதேபோல் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா தனது எக்ஸ் தள பக்கத்தில், "தமிழகத்தில் தற்போது 14,63,000 விதவைகள் உள்ளனர். இவர்களின் கணவர்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் இறந்தவர்கள். டாஸ்மாக் என்ற கொலை இயந்திரம் அடுத்தடுத்த ஆட்சிகளில் வளர்ந்து வருகிறது. ஒரு சமூகமாக நாம் இதற்காக வெட்கப்பட வேண்டும். விழித்துக்கொள்ளுங்கள் தமிழர்களே," என பதிவிட்டுள்ளார்.

    • காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பாக்ஸ்கான் நிறுவனம் உள்ளது.
    • உதிரிபாகங்களை கொண்டு ஐபோன் செல்போன்களை தயாரித்து வருகிறது.

    தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் பாக்ஸ்கான் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் உதிரி பாகங்களை கொண்டு ஐ-போன் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். உலகின் முன்னணி நிறுவனமாக உள்ளது.

    இந்த நிறுவனம் வேலைவாய்ப்பு தொடர்பாக விளம்பரம் செய்துள்ளது. அப்போது திருமணம் ஆன இரண்டு பெண்கள் வேலை கேட்டு நேரில் சென்றுள்ளனர். அப்போது கேட் அருகில் நின்ற அதிகாரிகள் திருமணம் ஆகிவிட்டதா? என்ற கேட்டுள்ளனர். அப்போது அந்த இரண்டு பெண்களும் திருமணம் ஆகிவிட்டதாக தெரிவித்துள்ளனர். அப்படி என்றால் இங்கு வேலை கிடையாது எனத் தெரிவித்துள்ளனர்.

    இது அந்த பெண்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இது தொடர்பான செய்தி மெல்லமெல்ல பரவியது. ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் இந்த செய்தியை மிகப்பெரிய அளவில் கட்டுரையாக எழுதி உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் திருமணம் செய்த பெண்களுக்கு வேலைகிடையாது என்ற பாகுபாடு கடைபிடிக்கப்படுவதாக விமர்சித்திருந்தனர்.

    இந்த சம்பவம் தற்போது சர்ச்சையாகியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசிடம் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்யும்படி கேட்டுள்ளது. மண்டல தலைமை தொழிலாளர் அலுவலக ஆணையரும் அறிக்கை தாக்கல் செய்ய கேட்டுக்கொண்டுள்ளது.

    திருமணமான பெண்களுக்கு வீட்டு பொறுப்பின் காரணமாக அடிக்கடி விடுமுறை எடுக்க வேண்டியிருக்கும் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வேலை மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதேவேளையில் ஐ-போன், பாக்ஸ்கான் நிறுவனங்கள் இதுபோன்ற நடைமுறை எங்கள் நிறுவனத்தில் இல்லை என இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

    சம ஊதியச் சட்டம் 1976-இன் பிரிவு 5 ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களை பணியமர்த்துவதில் எந்தவித பாகுபாடும் காட்டக்கூடாது என்று தெளிவாக குறிப்பிடுகிறது என்று தொழிலாளர் அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    • மத்திய அரசு இனியும் காலந்தாழ்த்தாமல் உடனடியாக நடத்திட வேண்டும்.
    • தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

    சாதிவாரிக் கணக்கெடுப்புடன் கூடிய மக்கள்தொகைக் கணக்கெடுப்டை உடனே நடத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோவுடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் இடஒதுக்கீட்டுக்கு அடிப்படையான சாதிவாரிக் கணக்கெடுப்பையும் ஒன்றிய அரசு இனியும் காலந்தாழ்த்தாமல் உடனடியாக நடத்திட வேண்டும்.

    ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் எண்ணமாக இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கவனத்தில் கொண்டு அதற்கான முன்னெடுப்புகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும்!

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
    • புதிய குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மாநில அரசின் ஊக்கத் தொகை 01.09.2024 முதல் நடைமுறைக்கு வரும்.

    தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன் கருதி 2024-25 ஆம் ஆண்டு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் காரீப் கொள்முதல் பருவத்திற்கு சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105/-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130/-ம் கூடுதல் ஊக்கத் தொகையாக தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் காரீப் 2024-25 நெல் கொள்முதல் பருவத்திற்கு ஆதார விலையுடன் ஊக்கத்தொகையும் சேர்த்து விவசாயிகளுக்கு வழங்குவது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (26.06.2024) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், கடந்த 2023-2024 காரீப் கொள்முதல் பருவத்தில் 25.06.2024 வரையில் 3,175 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 3,72,310 விவசாயிகளிடமிருந்து 29,91,954 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.6,442.80 கோடி விற்பனை தொகையாக வழங்கப்பட்டது ஆகிய விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும், அதே அடிப்படையில், இந்த ஆண்டும் காரீப் கொள்முதல் 2024-2025 பருவத்தில் தேவையான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.

    இந்த ஆண்டு 12.06.2024 அன்று மேட்டூர் அணை திறக்கப்பட இயலாத சூழ்நிலையில், டெல்டா மாவட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ.78.67 கோடி மதிப்பீட்டில் குறுவைத் தொகுப்பு திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்திட உத்தரவிட்டார்.

    இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் விவசாயிகளின் நலன் கருதி காரீப் 2024-2025 பருவத்திற்கான நெல் கொள்முதலினை 01.09.2024 முதல் மேற்கொள்ள மத்திய அரசை, இவ்வரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க மத்திய அரசு தமிழ்நாட்டில் காரீப்2024-2025 பருவத்திற்கான நெல் கொள்முதலினை 01.09.2024 முதல் மேற்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது.

    மத்திய அரசு அண்மையில் காரீப் 2024-2025 பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையாக சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,300/-என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2.320/- என்றும் நிர்ணயித்துள்ளது.

    இந்நிலையில் தமிழ்நாட்டில் நெல் உற்பத்தியினைப் பெருக்கும் வகையிலும், விவசாயிகளின் வாழ்வை வளப்படுத்தி அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடு, 2024-2025 காரீப் கொள்முதல் பருவத்திற்கு (Kharif Marketing Season) சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105/-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130/-ம் கூடுதல் ஊக்கத் தொகையாக தமிழ்நாடு அரசின் நிதியிலிருந்து வழங்கிடவும், அதன்படி விவசாயிகளிடமிருந்து சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2.405/- என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,450/- என்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தவிட்டுள்ளார்.

    இந்த புதிய குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மாநில அரசின் ஊக்கத் தொகை 01.09.2024 முதல் நடைமுறைக்கு வரும்.

    அத்துடன், தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு, அடுத்துவரும் 2025-26 நிதியாண்டில், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500/- என்ற வீதத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு வழங்கிடவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • சிபிஐ விசாரணை தேவையில்லை. திமுக ஒருபோதும் கேட்டதும் இல்லை.
    • இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு விவகாரத்திலும், நாங்கள் சிபிஐ விசாரணை கோரவில்லை.

    சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது;-

    உண்மைக்கு புறம்பான தகவல்களை இபிஎஸ் பரப்பி வருகிறார். உண்மையை விளக்க வேண்டியது திமுகவின் கடமை. இபிஎஸ் தான் உத்தம புத்திரர் போல பேசுகிறார்.

    இபிஎஸ் ஆட்சியில் இருந்த காலத்தில் அவரது உறவினர்களுக்கு முறைகேடாக நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டது.

    அது மீது எந்த ஒரு விசாரணையும் நடைபெறாத நிலையில் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

    சிபிஐ விசாரணை தேவையில்லை. திமுக ஒருபோதும் கேட்டதும் இல்லை.

    சிபிஐ விசாரணை இருந்தால் வழக்கு தாமதமாகும் என்பதால்தான் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை செய்யப்பட்டு வருகிறதுற.

    இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு விவகாரத்திலும், நாங்கள் சிபிஐ விசாரணை கோரவில்லை.

    சிபிஐ என்றால் என்னவென்று எங்களுக்கும் தெரியும். டெண்டர் முறைகேடு விவகாரத்தில் நிரபராதி என விடுவித்தது போல இபிஎஸ் பேசி வருகிறார்.

    இபிஎஸ்க்கு வரலாறு தெரிந்திருக்க நியாயமில்லை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னையில் வரும் 28ம் மற்றும் ஜூலை 3ம் தேதி நடைபெற உள்ளது.
    • பாராட்டு விழாவில் செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.

    சென்னையில் வரும் 28ம் மற்றும் ஜூலை 3ம் தேதி நடைபெற உள்ளது.

    பாராட்டு விழாவில் நடிகர் விஜய் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டும் நிலையில் விழாவுக்கான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, பாராட்டு விழாவில் செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பேப்பர்,பேனா கொண்டு வரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    விழாவில் மாணவர்களுடன் பெற்றோர், உடன் பிறந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • வேட்புமனுக்களின் மீதான பரிசீலனை நடைபெற்றது.
    • வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு இன்று கடைசி நாளாகும்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ந் தேதி இறந்தார். இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியை இந்திய தேர்தல் ஆணையம் காலியாக அறிவித்தது. பாராளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10-ந் தேதி நடைபெறம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பில் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர். அபிநயா ஆகியோர் உட்பட பலர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

    தேர்தல் நடத்தும் அதிகாரி சந்திரசேகர் கூறியிருப்பதாவது:-


    வேட்புமனுக்களின் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில் 29 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு இன்று கடைசி நாளாகும்.

    இன்று ஒருவர் கூட வாபஸ் பெறாததால் 29 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    அவர் அறிவித்துள்ளார்.

    வாக்கு எண்ணிக்கை 13-ம் தேதி நடைபெற உள்ளது.

    ×