என் மலர்
உள்ளூர் செய்திகள்
- காயமடைந்தவர்களுக்கு, உயரிய சிகிச்சை அளிக்க, மாவட்ட நிர்வாகத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.
- விதிமுறைகளை மீறியும், உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமலும் ஆலை செயல்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், ஆறு பேர் உயிரிழந்திருக்கும் செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர்கள் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு, உயரிய சிகிச்சை அளிக்க, மாவட்ட நிர்வாகத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.
விதிமுறைகளை மீறியும், உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமலும் ஆலை செயல்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே, அனைத்து பட்டாசு ஆலைகளிலும், உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்று சோதனை நடத்துமாறு, திமுக அரசை வலியுறுத்தியிருந்தோம். ஆனால், இது தொடர்பாக, திமுக அரசு எந்த நடவடிக்கைகளும் எடுத்ததாகத் தெரியவில்லை.
இனியும் தாமதிக்காமல், அனைத்து பட்டாசு ஆலைகளிலும், தொழிலாளர்களுக்கு உரியப் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என்று சோதனை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்க, திமுக அரசை வலியுறுத்துகிறோம் என தெரிவித்துள்ளார்.
- எல்.கே.ஜி படிக்கும் குழந்தையை கவனமாக பார்த்துக் கொள்வது தனியார் பள்ளியின் கடமையாகும்.
- குழந்தையின் இறப்பிற்கு தனியார் பள்ளி முழு பொறுப்பேற்க வேண்டும்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி படித்து வந்த மூன்றரை வயது சிறுமி லியா லட்சுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்துள்ள செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். எல்.கே.ஜி படிக்கும் குழந்தையை கவனமாக பார்த்துக் கொள்வது தனியார் பள்ளியின் கடமையாகும். குழந்தையின் இறப்பிற்கு தனியார் பள்ளி முழு பொறுப்பேற்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகம் விரும்பத்தகாத சம்பவம் ஏற்படுத்திய பள்ளியின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தையின் பெற்றோருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன். குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- காசியின் தந்தை தங்கபாண்டியனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
- இடைத்தரகர் நாராயணன் என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் காசி மற்றும் அவரது தந்தை தங்கபாண்டியன் ஆகிய இருவர் மீது கந்துவட்டி புகார் அளிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பான வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அவரது தந்தை தங்கபாண்டியனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் இடைத்தரகர் நாராயணன் என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில், நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தண்டனை, ரூ. 1 லட்சத்து அபராதமும் விதித்து மகளிர் சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
- உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் .
- இனியாவது பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
சென்னை:
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
விருதுநகர் மாவட்டம் அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் .
முறையான பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொள்ளாமல், பட்டாசு ஆலை பாதுகாப்பில் தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்படும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
பட்டாசு ஆலை விபத்தால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் அளிப்பதுடன்; இனியாவது பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதிசெய்யுமாறு மு.க.ஸ்டாலின்
மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- விபத்தினால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த மோட்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் மேல்மருவத்தூர் ஆதிபாராசக்தி கோவிலுக்கு மாலை அணிவித்து விரதம் இருந்து வந்தனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று தனியார் பஸ் மூலம் சுமார் 60 பேர் மேல்மருவத்தூர் ஆதிபரா சக்தி கோவிலுக்கு சென்று விட்டு பின்னர் மேல்மலை யனூர் அங்காளம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து கிளம்பினர்.
இதனையடுத்து நேற்று இரவு திருவண்ணாமலை மணலூர்பேட்டை வழியாக சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். இரவு 11 மணி அளவில் அந்த பஸ் மணலூர்பேட்டை-மாடாம்பூண்டி கூட்ரோடு இடையே வரும்பொழுது அருதங்குடி கிராமம் அருகே பஸ் திடீரென சாலை ஓரம் இருந்த மின்கம்பத்தில் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனால் பஸ்சில் இருந்த பக்தர்கள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்த பொது மக்கள் ஓடி வந்து கவிழ்ந்து கிடந்த பஸ்சில் இருந்த பக்தர்களை மீட்டனர். இதில் சுமார் 20 பக்தர்கள் பலத்த காயமடைந்தனர்.
விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ மற்றும் திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கும் பணியில் பொதுமக்கள் மற்றும் போலீசாருடன் இணைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈடுபட்டனர்.
இதனையடுத்து உயிர் தப்பிய பக்தர்களை மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு வேன் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணியையும் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. செய்தார். இந்த விபத்தினால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது.
இதனையடுத்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பஸ் டிரைவர் கண் அசைந்து தூங்கியதே விபத்துக்கான காரணம் என தெரியவந்தது. மேலும் இந்த விபத்து குறித்து திருப்பால பந்தல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விபத்து குறித்து இன்று காலை மாவட்ட கலெக்டர் பிரசாந்த், தாசில்தார் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
- பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக 4 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ.1 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அப்பையநாயக்கன்பட்டியில் செயல்பட்டு வந்த சாய்நாத் பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இந்த வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர்கள் பாலாஜி, சசிபாலன், மேலாளர் தாஸ், போர்மேன் பிரகாஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கும் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில்,
வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்ச ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு ரூ.1 லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
- இச்சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு விசாரித்து வருகிறது.
- தொலைப்பேசி அழைப்பு வந்தபோது தான் மிரட்டிவிட்டு வந்துவிடுவேன் என ஞானசேரகன் பேசினார்.
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.
இதனிடையே, மாணவி அளித்த புகாரில், ஞானசேகரன் பாலியல் வன்கொடுமை செய்ததையும், அப்போது ஞானசேகரன் 'சார்' என்று யாரையோ குறிப்பிட்டு பேசினார் என்று கூறியிருந்தார். இதனால் எதிர்க்கட்சிகள் 'யார் அந்த சார்' என்று கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே 'சார்' என்று யாரும் இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் மாணவி விவகாரத்தில் அரசியல் செய்வதாக கூறிவந்தனர்.
இந்த நிலையில், ஞானசேகரன் செல்போனில் ஒருவரை தொடர்பு கொண்டு பேசினார் என்று சிறப்பு விசாரணை குழுவிடம் மாணவி திட்டவட்டமாக கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. தொலைப்பேசி அழைப்பு வந்தபோது தான் மிரட்டிவிட்டு வந்துவிடுவேன் என ஞானசேரகன் பேசியதாகவும் 4 முறைக்கு மேல் ஞானசேகரன வேறு ஒரு சாரிடமும் இருக்க வேண்டும் என்று மிரட்டியதாக மாணவி கூறியுள்ளார்.
இதனிடையே, ஞானசேகரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனை ஆய்வு செய்தபோது ஆபாச வீடியோக்கள் இருந்தது. அந்த வீடியோக்களில் இருந்த பெண்கள் மற்றும் மாணவிகள் என 4 பேரை சிறப்பு விசாரணைக்குழு கண்டறிந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர்களிடம் புகார் பெற சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
- போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
- விசாரணையில் சிறுமிக்கு டீ மாஸ்டர் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.
பல்லடம்:
திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் குமார் (வயது 34). இவர் திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை அடுத்த வேலம்பட்டி பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவினாசிபாளையம் போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சிறுமிக்கு டீ மாஸ்டர் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தில் டீ மாஸ்டர் குமாரை கைது செய்தனர்.
இதே போல் வடக்கு அவினாசிபாளையம் வேலம்பட்டியைச் சேர்ந்த மகேஷ் குமார் (28) மற்றும் சூலூர் கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரது மகன் குட்டி என்ற சிரஞ்சீவி (19) ஆகியோரும் அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தில் மகேஷ்குமார் மற்றும் குட்டி என்கிற சிரஞ்சீவி ஆகியோரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
- தமிழக அரசு அறிவித்த ரூ.3 லட்சம் நிவாரண நிதியை சிறுமியின் பெற்றோரிடம் அமைச்சர் பொன்முடி வழங்கினார்.
- தவறு செய்தவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து 3½ வயது சிறுமி லியோ லட்சுமி பலியானதாக கூறப்படுகிறது. இறந்த சிறுமியின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் சிறுமியின் உடல் சொந்த ஊரான விக்கிரவாண்டிக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
சிறுமியின் உடலுக்கு வனத்துறை அமைச்சர் பொன்முடி, விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா மற்றும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தமிழக அரசு அறிவித்த ரூ.3 லட்சம் நிவாரண நிதியை சிறுமியின் பெற்றோரிடம் அமைச்சர் பொன்முடி வழங்கினார்.
சிறுமி பலியான சம்பவம் மனவருத்ததை ஏற்படுத்தியுள்ளது. இதனை அறிந்த தமிழக முதலமைச்சர் ரூ.3 லட்சம் வழங்கியுள்ளார். இந்த சம்பவத்தில் பள்ளி நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தவறு செய்தவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். சிறுமியின் குடும்பத்திற்கு யாருக்காவது அரசு வேலை வழங்குவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.
- தந்தைக்கும் ரிவன்ராஜாவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
- மகனை வெட்டிக்கொன்ற தமிழனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் வருசநாடு அருகில் உள்ள சிங்கராஜபுரத்தை சேர்ந்தவர் தமிழன் (வயது55). இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு ரிவன்ராஜா (30) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
ரிவன்ராஜா குடிபழக்கத்திற்கு அடிமையானதால் யாரும் பெண் தர மறுத்துள்ளனர். இதனால் எந்த வேலைக்கும் செல்லாமல் தினமும் குடித்து விட்டு வீட்டில் தனது பெற்றோரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
மேலும் தனது தாயிடம் மது குடிக்க பணம் தருமாறு கேட்டும் தொந்தரவு செய்து வந்துள்ளார். நேற்று இரவும் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்தார். இதனால் அவரது தந்தைக்கும் ரிவன்ராஜாவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் குடிபோதையில் ரிவன்ராஜா தூங்க சென்று விட்டார். நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த தனது மகனை தமிழன் அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இன்று அதிகாலை வருசநாடு போலீஸ் நிலையத்திற்கு சென்ற தமிழன் தான் வெட்டிய அரிவாளுடன் சரண் அடைந்தார். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட வாலிபர் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மகனை வெட்டிக்கொன்ற தமிழனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வெடி விபத்தில் மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
- ஆலை உரிமையாளர்கள் பாலாஜி, சசிபாலன், மேலாளர் தாஸ், போர்மேன் பிரகாஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அப்பையநாயக்கன்பட்டியில் சாய்நாத் பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகிறார்கள். தற்போது பட்டாசு ஆலையில் வெடிகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இன்று காலை பட்டாசு ஆலையில் உள்ள ஒரு அறையில் மருந்து கலக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது உராய்வு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன், நாகராஜ், கண்ணன், சிவக்குமார், காமராஜ், மீனாட்சிசுந்தரம் ஆகிய 6 தொழிலாளர்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் இடிபாடுகளில் சிதறி கிடந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைகளுக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆலை உரிமையாளர்கள் பாலாஜி, சசிபாலன், மேலாளர் தாஸ், போர்மேன் பிரகாஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அஜாக்கிரதையாக செயல்பட்டு உயிரிழப்பு ஏற்படுத்தியது, உரிய பாதுகாப்பின்றி தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- திமுக ஆட்சியில் எவ்வளவோ போராட்டங்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- போராட்டம் நடத்துபவர்களை ரிமாண்ட் செய்யும் சூழ்நிலை கூட ஏற்படுவதில்லை.
சென்னை:
தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியால் சில நாட்களாக தி.மு.க. கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேச்சால் தி.மு.க. கூட்டணியில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 24-வது மாநில மாநாடு பேசிய கே. பாலகிருஷ்ணன், ஒரு ஆர்ப்பாட்டம், ஊர்வலம், போராட்டம் என்று சொன்னால் காவல்துறை வழக்கு போடுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நான் கேட்க விரும்புகிறேன். தமிழ்நாட்டில் என்ன அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்திவிட்டீர்களா நீங்கள்? எப்படி காவல்துறை இப்படி கட்டுப்பாடில்லாமல் செயல்படுகிறது. போராட்டத்தை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டிய அவசியம் என்ன? ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தால் அதற்கு அனுமதியை ரத்து செய்து, கைது செய்துவிட்டால் முடக்கிவிட முடியுமா? சீப்பை ஒளித்துவிடுவதனால் கல்யாணத்தை நிறுத்திவிட முடியுமா? எனவே, இப்படிப்பட்ட போக்கை காவல்துறை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தி.மு.க. அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-
நேற்றுவரை ஆட்சியை பாராட்டியவர் பாலகிருஷ்ணன். அவருக்கு என்ன நெருடல் என புரியவில்லை. அவர் எந்த கண்ணோட்டத்தில் பேசுகிறார் என்பதும் தெரியவில்லை. குற்றம்சாட்ட வேண்டுமென்ற நோக்கில் குறைசொன்னால் அதற்கெல்லாம் பதில் தர முடியாது. பாலகிருஷ்ணனின் கோரிக்கைகள் என்னவென்று அறிந்து நிவர்த்தி செய்வோம். திமுக ஆட்சியில் எவ்வளவோ போராட்டங்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. போராட்டங்களின்போது மக்கள் பாதிக்கக்கூடாது என்பதே அரசின் நோக்கம்.
அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடந்தது கடந்த ஆட்சிக்காலம். போராட்டம் நடத்துபவர்களை ரிமாண்ட் செய்யும் சூழ்நிலை கூட ஏற்படுவதில்லை என்று கூறினார்.






