என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மக்கள், பத்திரிக்கையாளர்களை விஜய் சந்தித்து பேச வேண்டும் என்றார் பிரேமலதா விஜயகாந்த்.
    • யாரோடு கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கப் போகிறார் என்பதை விஜய் தான் தெளிவுப்படுத்த வேண்டும்.

    மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    தமிழ்நாட்டில் முதல்முறையாக யாருடைய கூட்டணியும் இல்லாமல் தனித்துப் போட்டியிட்டு சாதனை செய்தது தேமுதிக மட்டும்தான்.

    தமிழ்நாட்டில் தொடர்ந்து சிறு குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

    விஜயை செந்தூரப்பாண்டி படம் மூலம் தமிழகம் முழுவதும் கொண்டு சேர்த்தவர் கேப்டன் விஜயகாந்த். விஜய் எங்கள் வீட்டு பிள்ளை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், சினிமா வேறு அரசியல் வேறு.

    மக்களை சந்தித்து, பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினால் தான் அரசியலில் விஜய் நிலைத்து நிற்க முடியும். யாரோடு கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கப் போகிறார் என்பதை விஜய் தான் தெளிவுப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சுற்று பயணத்திற்கான முழு தரவுகளையும் ஆதவ் அர்ஜூனா தயார் செய்வதாக கூறப்படுகிறது.
    • கட்சி மாவட்ட செயலாளர்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நியமித்திருந்தார்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் சுற்று பயணத்திற்கான முழு தரவுகளையும் ஆதவ் அர்ஜூனா தயார் செய்வதாக கூறப்படுகிறது.

    தமிழகம் முழுவதும் மக்களை நேரடியாக சென்று சந்திக்க தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சமீபத்தில் நேர்காணல்களை நடத்தி கட்சி மாவட்ட செயலாளர்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நியமித்திருந்தார்.

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் கழக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்பதில் உங்களைப் போலவே உங்களில் ஒருவனான நானும் உறுதியாக இருந்தேன்.
    • கடலூரில் கடலெனத் திரண்டு வரவேற்கக் காத்திருக்கும் பொதுமக்கள், உடன்பிறப்புகளின் மலர்ந்த முகங்களை இப்போதே என் மனக்கண்களில் காண்கிறேன்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    நம் உயிரினும் மேலான தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் நன்றி மடல்.

    தந்தை பெரியார் மண்ணான தமிழ்நாட்டில், அவர் பிறந்த ஈரோட்டின் கிழக்குத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்டு, முத்தமிழறிஞர் கலைஞரால் பேணிப் பாதுகாக்கப்பட்டு, அவர்தம் உடன்பிறப்புகளால் வளர்க்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்ட திரு. வி.சி.சந்திரகுமார் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலே வாக்களித்து மகத்தான வெற்றியை மக்கள் வழங்கியிருக்கிறார்கள். இது திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அளித்திருக்கும் மற்றொரு நற்சான்றிதழ்.

    நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரை இயற்கை நம்மிடம் இருந்து பறித்துக்கொண்டதால், நிரந்தர ஓய்வெடுக்க அலைகள் தாலாட்டும் வங்கக் கடற்கரைக்கு நம் தங்கத் தலைவர் சென்றபிறகு, அவருடைய அன்பு உடன்பிறப்புகளான நீங்கள், கழகத் தலைவர் என்ற பொறுப்பை என் தோளில் சுமத்தினீர்கள்.

    கழகத்தைத் தோளிலும், தலைவர் கலைஞரையும் - அவருடைய உடன்பிறப்புகளான உங்களையும் நெஞ்சிலும் சுமந்துகொண்டு தொடர்ந்து பயணிக்கிறேன். இந்தப் பயணத்தில் எதிர்கொண்ட தேர்தல் களங்களில் எல்லாம் வெற்றியன்றி வேறில்லை என்கிற வகையில் தொடர்ச்சியான வெற்றியைத் திராவிட முன்னேற்றக் கழகம் பெற்று வருகிறது. அந்த வரிசையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் கழக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்பதில் உங்களைப் போலவே உங்களில் ஒருவனான நானும் உறுதியாக இருந்தேன்.

    இடைத்தேர்தல் பணிகளைக் கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும், தோழமைக் கட்சிப் பிரமுகர்களும் கவனித்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் திராவிட மாடல் அரசின் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களையும், அவை உரிய முறையில் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான ஆய்வுப் பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன். பிப்ரவரி 6, 7 தேதிகளில் அரசுத் திட்டங்களின் ஆய்வுப் பணிகளுக்காகவும், கழக நிர்வாகிகள் - உடன்பிறப்புகளின் செயல்பாடுகளை அறிந்துகொள்ளவும் நெல்லை மாவட்டத்திற்கு உங்களில் ஒருவனான நான் மேற்கொண்ட பயணம் எல்லையில்லா மகிழ்ச்சியை எனக்கு அளித்தது.

    ஒவ்வொரு மாவட்டமாக நடைபெறும் ஆய்வுப் பணிகள் மற்றும் கழக நிர்வாகிகளுடனான சந்திப்புக்காக அந்தந்த மாவட்டங்களுக்குச் செல்லும்போது ஒன்றையொன்று விஞ்சி நிற்கும் வகையிலே மக்களின் பேரன்பும், தாய்மார்களின் பாசமும், உடன்பிறப்புகளின் கொள்கை உணர்வும் பொங்கிப் பெருகுவதைக் காண்கிறேன். அதில் நெல்லைப் பயணம் மிகுந்த உற்சாகத்தை எனக்கு அளித்துள்ளது.

    வழிநெடுகத் திரண்டிருந்த மக்கள், குறிப்பாகப் பெண்கள் சகோதரப் பாசத்துடன் அன்பைப் பொழிந்து அகம் மகிழச் செய்தனர். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் சீர் செய்கிற அண்ணனாக, விடியல் பயணம் திட்டத்தின் மூலம் தங்கள் வேலை சார்ந்த பயணத்தை எளிதாக்கிய சகோதரனாக என் மீது அவர்கள் அன்பு காட்டினார்கள். மாணவியர் பலரும் வாழ்த்து முழக்கங்களை எழுப்பியதுடன், செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கும் மாணவிகளுக்கும் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு அவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாகக் கழக அரசு இருப்பதால், மாணவிகள் பலரும் திட்டங்களின் பெயர்களைச் சொல்லி, "இவையெல்லாம் எங்களுக்கு ரொம்பவும் பலன் தருகிறது" என்று தெரிவித்ததைக் கேட்டதைவிட, உங்களில் ஒருவனான எனக்கு வேறு என்ன பேறு வேண்டும்? "அப்பா.. அப்பா.." என்று மாணவிகள் காட்டிய பாசத்தின்போது, அவர்களுக்கு நான் எவ்வளவு கடமைப்பட்டிருக்கிறேன் என்பதை உணர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றம்தான் கழக ஆட்சியின் ஒரே இலட்சியம் என்ற மன உறுதியையும் பெற்றேன்.

    நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் டாடா பவர் குழுமத்தின் சேலார் நிறுவனத்தைத் தொடங்கி வைத்ததன் மூலம், சூரிய ஒளி மின்கல உற்பத்தித் துறையில் தமிழ்நாடு புதிய பாய்ச்சலை மேற்கொள்ளவிருப்பதுடன், நெல்லை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 4000 பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் அமையும் நல்ல சூழலும் உருவாகியுள்ளது. அரசு நலத்திட்ட விழாவில் திருநெல்வேலி மாவட்டத்தில் 1304.66 கோடி ரூபாய் செலவில் முடிவுற்ற 23 பணிகளைத் தொடங்கி வைத்து, 309.05 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 20 புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி நெல்லை மக்களின் நலன் காப்பதில் திராவிட மாடல் அரசு உறுதியாக இருப்பதைச் சொல்லால் மட்டுமின்றி செயலாலும் மெய்ப்பித்துள்ளேன், உங்களில் ஒருவனான நான்.

    மாவட்டக் கழகத்திற்குட்பட்ட அனைத்து நிர்வாகிகள், சார்பு அணிகளைச் சார்ந்தவர்கள், தொகுதிப் பார்வையாளர்கள் என நெல்லை மாவட்ட உடன்பிறப்புகளைச் சந்தித்து அவர்களின் கழகப் பணிகளை ஆய்வு செய்தபோது, ஆட்சியின் அடித்தளமாக இருக்கின்ற கட்சியின் செயல்வீரர்களில் ஆற்றல் மிக்கவர்களை அடையாளம் கண்டுணர்ந்து கொள்ள முடிந்ததது. ஆற்றல்மிக்கவர்கள் ஒருங்கிணைந்து தொடர்ந்து செயல்பட்டால் நெல்லை மாவட்டம் என்றும் கழகக் கோட்டையாக இருக்கும் என்பதை அவர்களுக்கு அறிவுறுத்தும் வாய்ப்பும் கிடைத்தது.

    நெல்லை மாவட்டச் சுற்றுப்பயணத்தில் தனக்கேயுரிய ஆற்றலுடன் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும் கழகத்தின் முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு அவர்கள். சொந்த மாவட்டமான திருச்சியாக இருந்தாலும், அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள எந்த மாவட்டமாக இருந்தாலும் எதையும் நேர் செய்துவிடக்கூடியவர் நேரு என்பதை நெல்லை மாவட்ட விழா மேடையிலேயே தெரிவித்தேன். சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அவர்கள், மாவட்டக் கழகப் பொறுப்பாளர் திரு.டி.பி.எம்.மைதீன்கான் அவர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் நெல்லை மாவட்ட நிகழ்ச்சிகள் சிறப்புடன் நிறைவேற முழு ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.

    நெல்லை மாவட்டச் சுற்றுப்பயணம் என்பது இருட்டுக்கடை அல்வாவின் இனிய சுவையாக நெஞ்சில் இனித்த வேளையில்தான், பிப்ரவரி 8ஆம் நாள் காலை முதலே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களத்திலிருந்து இனிப்பான வெற்றிச் செய்தி வந்து கொண்டிருந்தது. முதல் சுற்றில் தொடங்கி வாக்கு எண்ணிக்கை முடியும்வரை எல்லாச் சுற்றுகளிலும் கழக வேட்பாளர் சந்திரகுமார் கூடுதலான வாக்குகளைப் பெற்றுக் கொண்டே இருந்தார். இந்த இடைத்தேர்தல் களத்தைச் சட்டமன்றத்தின் முதன்மை எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும், அது மறைமுகக் கூட்டணி வைத்திருக்கிற பா.ஜ.க.வும் திட்டமிட்டுப் புறக்கணித்துவிட்டு, உதிரிகளை முன்னிறுத்தித் தி.மு.க.வை எதிர்த்தன.

    மக்களுக்குத் தேவையானவை குறித்து எதுவும் பேசாமல், மகத்தான தலைவர் தந்தை பெரியார் மீது அவதூறுகளை அள்ளி வீசிய கைக்கூலிகளுக்கு டெபாசிட் பறிபோகும் வகையில் ஈரோடு கிழக்குத் தொகுதி மக்கள் சரியான பாடம் புகட்டியிருக்கிறார்கள். இது என்றென்றும் பெரியார் மண் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.

    திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை மாண்புமிகு அமைச்சர் சு.முத்துசாமி அவர்களும் மற்ற நிர்வாகிகளும் தோழமைக் கட்சியினருடன் இணைந்து நின்று திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளையும், அதனால் தொகுதியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் அடைந்துள்ள பயன்களையும் எடுத்துரைத்து வாக்குகளைச் சேகரித்தார்கள். மக்கள் வைத்த கோரிக்கைகளைச் செவிமடுத்தார்கள். உங்களில் ஒருவனான நான் நேரடியாகச் சென்று பிரசாரம் செய்யவில்லை என்றாலும், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மூன்றாண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டிருக்கிற திட்டங்களைப் பட்டியலிட்டு, கழக வேட்பாளரை ஆதரிக்குமாறு வாக்களார்களுக்குக் கடிதம் வாயிலாக வேண்டுகோள் விடுத்தேன்.

    மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. அதைவிட மக்களுக்கு என் மீது அதிக நம்பிக்கை உள்ளது. அதனால்தான் நேரடிப் பிரசாரத்துக்கு வர இயலாதபோதும், என் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு உதயசூரியன் சின்னத்திற்குப் பெருவாரியான வாக்குகளை அளித்து, தி.மு.கழக வேட்பாளரை 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, எதிர்த்து நின்ற மற்ற அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்திருக்கிறார்கள்.

    இந்த மகத்தான வெற்றியை வழங்கிய ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும், இந்த வெற்றிக்காக உழைத்த மாண்புமிகு அமைச்சர் முத்துசாமி தலைமையிலான கழக நிர்வாகிகள் – செயல்வீரர்கள் - உடன்பிறப்புகள் அனைவருக்கும், தோழமைக் கட்சியினருக்கும் என் மனமார்ந்த நன்றியினையும், கழகத்தின் வெற்றி வேட்பாளர் சந்திரகுமார் அவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக அணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன், 'வெல்வோம் இருநூறு - படைப்போம் வரலாறு' என்ற முழக்கத்தை உங்களில் ஒருவனான நான் முன்வைத்தேன். 'இருநூறு இலக்கு' என்பதற்கான தொடக்க வெற்றியாக அமைந்திருக்கிறது இடைத்தேர்தல் கண்ட ஈரோடு கிழக்கு. மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்கள். அந்த மக்களுக்குரிய திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் திராவிட மாடல் அரசு, ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசுடன் அன்றாடம் போராடிக் கொண்டிருக்கிறது.

    அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய பா.ஜ.க. அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து, நேற்றைய நாளில் (பிப்ரவரி 8) மாநிலம் முழுவதும் கழகத்தின் சார்பில் கண்டனப் பொதுக்கூட்டங்கள் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளன. திருவள்ளூர் மத்திய மாவட்டம் ஆவடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் நான் பங்கேற்று, தமிழ்நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கவும், தமிழ்நாட்டு மக்களின் நலன்களைக் கெடுக்கும் வகையிலும் ஒன்றிய பா.ஜ.க. அரசு தன் வஞ்சகப் போக்கைத் தொடர்ந்து மேற்கொள்வதைச் சுட்டிக்காட்டினேன். உங்களில் ஒருவனான நான் என்ன உணர்வுடன் ஆவடிப் பொதுக்கூட்டத்தில் பேசினேனோ, அதே உணர்வுடன் தமிழ்நாடு முழுவதும் கழக மாவட்டங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் கழகத்தினர் பேசிய செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

    ஒன்றிய பா.ஜ.க அரசிடம் நிதியும் இல்லை, நீதியும் இல்லை என்று நெல்லையில் நடந்த விழாவில் நான் சுட்டிக்காட்டியதுபோலவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் புள்ளிவிவரங்களுடன் நம்முடைய கழகத்தினர் உரையாற்றியிருக்கிறார்கள். இது வெறும் கண்டனக் கூட்டமாக முடிந்துவிடாமல், நல்லாட்சி தரும் திராவிட மாடல் அரசை முடக்குவதாக நினைத்து தமிழ்நாட்டை பா.ஜ.க அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதையும், தமிழ்நாட்டில் பா.ஜ.க.வினர் வெற்றிபெற முடியாது என்பதால் அமைதியைக் கெடுக்கும் வேலைகளைத் தூண்டி விடுவதையும் மக்கள் மனதில் அழுத்தமாகப் பதிய வைத்து, அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களின் நல்லிணக்க நிலமாக தமிழ்நாடு என்றும் தொடரவேண்டும் என்கிற உறுதியை ஏற்கக்கூடிய வகையிலே பொதுக்கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.

    வஞ்சிப்பது பா.ஜ.க. அரசின் பழக்கம். அதனையும் எதிர்கொண்டு, தமிழ்நாட்டை வாழவைப்பது தி.மு.கழகத்தின் வழக்கம் என்பதை ஆவடிப் பொதுக்கூட்டத்தில் உங்களில் ஒருவனான நான் உரையாற்றியபடி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான நம்முடைய பணிகள் தொடரும். மாநில உரிமைக்கான துணிச்சலான குரல் தொடர்ந்து ஒலிக்கும். சட்டத்தின் வழியே ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில் தி.மு.கழகம் முன்னணியில் இருக்கும். அதற்கான நம்பிக்கையை ஈரோடு கிழக்குத் தொகுதியின் வெற்றி நமக்கு அளித்திருக்கிறது.

    இந்த வெற்றிப்பயணம் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்ந்திடும் வகையில் தி.மு.கழக அரசின் செயல்பாடுகள் அமைந்திடும். அவை சரியாக நிறைவேறுவதை உறுதி செய்யும் வகையில், மாவட்டந்தோறும் மேற்கொள்ளப்படும் ஆய்வுப் பணிகளின் அடுத்தகட்டமாக பிப்ரவரி 21, 22 ஆகிய நாட்களில் கடலூர் மாவட்டத்திற்குப் பயணிக்க இருக்கிறேன். எங்கு சென்றாலும் மக்களின் மலர்ந்த முகம் கண்டு மகிழ்கிறேன். கடலூரில் கடலெனத் திரண்டு வரவேற்கக் காத்திருக்கும் பொதுமக்கள், உடன்பிறப்புகளின் மலர்ந்த முகங்களை இப்போதே என் மனக்கண்களில் காண்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • செயல்படுத்தப்படாத ஒரு திட்டத்திற்கு, மத்திய அரசு எவ்வாறு நிதி வழங்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
    • உலகத்தரம் வாய்ந்த கல்வியையும் கிடைக்காமல் செய்ததற்காக, மு.க.ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்.

    தமிழகத்திற்கான நிதியை மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விடப்படுகிறது என்ற பொய்யைப் பரப்ப உங்களுக்கு வெட்கமாக இல்லையா ? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழகம் தனது பெருமையைத் தொலைத்து, எண் கணிதத்திலும், தாய்மொழி அறிவிலும் (தமிழ்) கடைசி இடத்தில் உள்ளது.

    கல்வியை அரசியலாக்கி, கல்வியின் தரத்தை குறைத்து, தமிழகக் குழந்தைகளுக்கு, சமமான வாய்ப்புகளையும், உலகத்தரம் வாய்ந்த கல்வியையும் கிடைக்காமல் செய்ததற்காக, மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது கட்சியினர் வெட்கப்பட வேண்டும்.

    இந்தக் கல்வியாண்டின் தொடக்கத்திலிருந்தே PMSHRI உட்பட சமக்ர சிக்ஷாவின் அனைத்து அம்சங்களையும் செயல்படுத்துவதாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசு உறுதியளித்தது. இந்த உறுதிமொழியை நீங்கள் நிறைவேற்றினீர்களா இல்லையா, மு.க.ஸ்டாலின் அவர்களே?

    செயல்படுத்தப்படாத ஒரு திட்டத்திற்கு, மத்திய அரசு எவ்வாறு நிதி வழங்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

    சமக்ர சிக்ஷாவின் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு சமீபத்தில் வழங்கப்பட்ட நிதி அறிக்கையின்படி, 36 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில், 35 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இன்னும் 2024-25 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீடு நிதி விடுவிக்கப்படவில்லை. அப்படி இருக்கையில், தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி, மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விடப்படுகிறது என்ற பொய்யைப் பரப்ப உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மின்சார ரெயிலில் பயணம் செய்யும் பெண்களிடம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • அவசர உதவி எண் 1512, ரெயில்வே துறை எண் 139 ஆகியவற்றில் உடனடியாக தொடர்பு கொள்ளவும் அவர்கள் அறிவுறுத்தினர்.

    ராயபுரம்:

    ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் கடந்த 6-ந்தேதி கோவையில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு ரெயிலில் பயணம் செய்தார்.

    கே.வி.குப்பம் அருகே ரெயில் வந்து கொண்டிருந்த போது ஹேமராஜ் என்பவர் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ரெயிலில் இருந்து கீழே தள்ளவிட்டார். இதில் அந்த பெண்ணுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் வயிற்றில் இருந்த 4 மாத சிசு உயிரிழந்தது.

    இதைத்தொடர்ந்து ரெயிலில் செல்லும் பணிகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து ரெயில்வே போலீஸ் இயக்குனர் வன்னிய பெருமாள் உத்தரவின் படி, ரெயில்வே ஐ.ஜி. பாபு, சூப்பிரண்டு ஈஸ்வரன் தலைமையில் அதிகாரிகள் சென்னை சென்ட்ரல், கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி, ராயபுரம் ரெயில் நிலையங்களில் ஆய்வு செய்தனர்.

    அப்போது விரைவு ரெயில் மற்றும் மின்சார ரெயிலில் பயணம் செய்யும் பெண்களிடம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மகளிர் பெட்டியில் தனிநபராக பயணம் செய்யும் சூழ்நிலை இருந்தால் மற்ற பெட்டியில் சக பயணிகளோடு பயணம் மேற்கொள்ளவும், மர்ம நபர்கள் யாரேனும் தவறாக நடக்க முயற்சி செய்தால் ரெயில் பெட்டியில் உள்ள அவசரநிலை செயினை பிடித்து இழுக்கவும், அவசர உதவி எண் 1512, ரெயில்வே துறை எண் 139 ஆகியவற்றில் உடனடியாக தொடர்பு கொள்ளவும் அவர்கள் அறிவுறுத்தினர்.

    • ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • அவ்வழியே ரெயில்கள் வந்தால் பெரிய அளவில் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி இருக்கும்.

    திருவொற்றியூர்:

    சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் நோக்கி செல்லும் மின்சார ரெயில்கள் மற்றும் விரைவு ரெயில்கள் திருவொற்றியூர் ரெயில் நிலையம் வழியாக கடந்து செல்லும். இதில் திருவொற்றியூர்- விம்கோ நகர் இடையே பிரதான தண்டவாளத்தில் இருந்து பிரியும் லூப் லைன் பாதை உள்ளது.

    இந்த இணைப்பு தண்டவாளத்தின் இடையே பெரிய இரும்பு துண்டு மற்றும் கற்களை மர்ம நபர்கள் வைத்து சென்று விட்டனர். அவ்வழியே ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை ஆய்வு செய்ய சென்ற போது இணைப்பு தண்டவாளத்தில் இரும்பு துண்டு, கற்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவற்றை அகற்றினர்.

    சரியான நேரத்தில் இணைப்பு தண்டவாளத்தில் இருந்து அவை அகற்றப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இல்லையெனில் லூப்லைனை மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டு அந்த நேரத்தில் அவ்வழியே ரெயில்கள் வந்தால் பெரிய அளவில் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி இருக்கும்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோல் கவரப்பேட்டை ரெயில் நிலையத்தில் லூப்லைனில் ஏற்பட்ட பிரச்சனையால் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

    இதையடுத்து ரெயில் விபத்து ஏற்படுத்தும் வகையில் இணைப்பு தண்டவாளத்தில் இரும்பு துண்டு மற்றும் கற்களை வைத்து சென்ற மர்ம நபர்கள் குறித்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை அள்ளினர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த மேட்டுப்பாளையம் சாணார் பாளையத்தில் பெருமாள் கோவில் உள்ளது. இரவு பூஜை முடிந்ததும் வழக்கம்போல் கோவிலை பூசாரி பூட்டிச் சென்றார். இந்த நிலையில் நள்ளிரவில் வந்த மர்மகும்பல் கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை அள்ளினர்.

    மேலும் பூஜை அறையில் இருந்த பித்தளை பூஜை பொருட்களையும் சுருட்டி சென்று விட்டனர்.

    பொன்னேரி அடுத்த திருவாயர் பாடி பகுதியை சேர்ந்தவர் சுதா. இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.3 ஆயிரம ரொக்கம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை மர்ம கும்பல் அள்ளி சென்று இருந்தனர்.

    இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ரூ.21.14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தினையும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு அவர் திறந்து வைத்தார்.
    • மேயர் பிரியா, நாகவள்ளி, பொற்கொடி, உமா, டாக்டர் பூர்ணிமா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    அம்பத்தூர் வெங்கடாபுரம், பள்ளிக்கூட சாலையில் மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.18.86 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள பல்நோக்கு மைய கட்டிடத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு திறந்து வைத்தார்.

    தொடர்ந்து ரூ.21.14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தினையும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு அவர் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் மேயர் பிரியா, அம்பத்தூர் எம்.எல்.ஏ. ஜோசப் சாமுவேல், மத்திய வட்டார துணை ஆணையாளர் பிரவீன் குமார், நிலை குழு தலைவர் (பொது சுகாதாரம்) சாந்தகுமாரி, அம்பத்தூர் மண்டலக் குழுத் தலைவர் மூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் சேகர், கமல், ராஜகோபால், நாகவள்ளி, பொற்கொடி, உமா, டாக்டர் பூர்ணிமா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பாபர் மசூதி, அஜ்மீர் தர்கா என வரிசையாக இத்தகைய பிளவுவாத அரசியலைச் செய்து வருகின்றனர்.
    • பாரதிய ஜனதாவின் தேர்தல் அறுவடைக்காக தமிழ்நாட்டின் ஒற்றுமையை சீர்குலைத்திட திட்டம்.

    திருப்பரங்குன்றத்தை மையபடுத்தி, மதவெறித் திட்டத்தை பாஜக, சங்பரிவார அமைப்புகளும் அரங்கேற்றியுள்ளன என திமுக கூட்டணி கட்சிகள் கூட்டாக தெரிவித்துள்ளன.

    இதுகுறித்து மதச்சார்பற்ற கட்சிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இந்தியாவின் பன்மைத்துவத்திற்கும், மத நல்லிணக்கத்திற்கும் சிறந்ததோர் எடுத்துக்காட்டுகளில் ஒன்று தமிழ்நாடாகும். தமிழ்நாட்டின் ஆன்மீகத் தலங்களான பழனியாண்டவர் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட இந்துமத திருத்தலங்கள், அன்னை வேளாங்கண்ணி ஆலயம், நாகூர் தர்கா, ஏர்வாடி தர்கா போன்ற அனைத்து வழிபாட்டுத் தளங்களிலும் மத வேறுபாடு இன்றி பொதுமக்கள் வழிபடுவதே இதற்கு சான்று.

    இத்தகைய தமிழ்நாட்டில் மத வேறுபாடுகளை விதைத்து மக்களைப் பிரித்து அரசியல் ஆதாயம் தேடுவதற்கு சில அமைப்புகள் தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

    மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி அதில் அரசியல் ஆதாயம் தேடுவதை பாஜகவும் அதன் துணை அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ், விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் திட்டமிட்டு செய்து வருவது வழக்கமாகி இருக்கிறது. பாபர் மசூதி, அஜ்மீர் தர்கா என வரிசையாக இத்தகைய பிளவுவாத அரசியலைச் செய்து வருகின்றனர். அவர்களின் அடுத்த குறி தமிழ்நாடாக இருக்கிறது.

    தமிழ்நாட்டிலும் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சிறு சிறு வலது சாரி அமைப்புகள் பாஜகவின் ஆதரவில் முளைவிட்டு வளரத் தொடங்கியிருந்தன. கடந்த மூன்றாண்டுகளாக அடங்கியிருந்தவர்கள் தேர்தலை கவனத்தில் கொண்டு தங்களின் பிளவுவாத அரசியலை தொடங்கியிருக்கின்றனர். பாரதிய ஜனதாவின் தேர்தல் அறுவடைக்காக தமிழ்நாட்டின் ஒற்றுமையை சீர்குலைத்திட திட்டமிட்டு சதிகளை அரங்கேற்றி வருகின்றன.

    பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய அரசை நடத்துகிற வாய்ப்பு கிடைத்தும் கூட பாஜக தமிழ்நாட்டின் நலன்களுக்கான நடவடிக்கை எதையும் சொல்லிக் கொள்ளும்படியாக செய்திடவில்லை என்பதை தமிழ்நாடு அறியும். 2025 ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் கூட தமிழ்நாட்டின் ரயில்வே மேம்பாட்டிற்கோ, கோவை - மதுரை புதிய மெட்ரோ ரயில் திட்ட அறிவிப்போ, தமிழகத்திற்கு உரிய நிதி பங்கீடோ, பேரிடர் கால பாதிப்பு நிதியோ அல்லது மாநிலத்தின் தொழில், வர்த்தக, வேளாண் வளர்ச்சிக்கோ ஒரு சிறு துரும்பையும் கூட கிள்ளிப் போடவில்லை இந்த பா.ஜ.க.

    சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் டெல்டா மாவட்டங்கள் தொடர்ச்சியாக அடுத்தடுத்து வெள்ளப் பெருக்கினாலும், பெரும் புயல்களாலும் தாக்கப்பட்டு, மக்கள் சொல்லொணா துயரங்களை எதிர்கொண்ட போதும் தமிழ்நாடு அரசு கோரிய நிதியை ஒதுக்காமல் தமிழ்நாட்டின் மீது வஞ்சனையோடு செயல்படுகிறது பா.ஜ.க. எனவே, தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து இவர்களைப் புறக்கணித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தை மையப்படுத்தி தற்போது தனது அடுத்தகட்ட மதவெறித் திட்டத்தை பாஜகவும், அதன் சங்பரிவார அமைப்புகளும் அரங்கேற்றியுள்ளன. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக இருக்கிறது. திருப்பரங்குன்றம் மலைஅடிவாரத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலும், மலையின் தென்புறம் காசி விஸ்வநாதர் கோவிலும், கீழ்புறம் உச்சிப்பிள்ளையார் கோவிலும் அமைந்துள்ளன.

    2000 ஆண்டுகளுக்கு முன்பாக சமணம் இருந்திருக்கிறது. திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்க்கா அமைந்துள்ளது. இங்கு நீண்ட காலமாக மக்கள் எவ்வித பிரச்சனையுமின்றி வழிபாடு செய்து வருகின்றனர்.

    நேர்மையும், அறவுணர்வும் கொண்ட நமது முன்னோர்கள் காலத்தில் இருந்தே அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் பூசைகளும், சிக்கந்தர் தர்காவில் அவ்வப்போது நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ஆடு, கோழிகளை காணிக்கையாக செலுத்தி அன்னதானம் (கந்தூரி) செய்வதும் வழக்கமாக இருந்துள்ளது. இஸ்லாமியர்கள் மட்டுமின்றி இந்துக்களும் தர்க்காவிற்கு சென்று நேர்த்திக்கடன் நிறைவேற்றி வருகின்றனர்.

    மேற்கண்ட வழிபாட்டு முறைகள் குறித்து உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பி மக்கள் மத்தியில் பதற்றத்தை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா அமைப்புகள் ஏற்படுத்தி வருகின்றன. திருப்பரங்குன்றத்தில் இருக்கிற சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு ஏதோ ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பொய் செய்திகளைப் பரப்பி பிப்ரவரி 4ம் தேதி திருப்பரங்குன்றத்தில் கூடுமாறு அழைப்பு விடுத்தது. சமூக வலைதளங்களில் மதவெறிப் பிரச்சாரங்களில் ஈடுபட்டது.

    இந்நிலையில் திருப்பரங்குன்றத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் ஒன்றிணைந்து பதற்றத்தை உருவாக்க முனைந்துள்ள மதவெறி சக்திகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினர். மாவட்ட நிர்வாகமும் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொண்டன.

    அதே நேரத்தில் தமிழ்நாட்டு மக்கள் இவ்வமைப்புகளின் பொய்யையும், புரட்டையும் நம்பவில்லை; முற்றிலுமாக புறக்கணித்துள்ளனர். எனினும், அங்கு கூடிய மதவெறி அமைப்பினர் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும் வெறியூட்டக்கூடிய விதத்திலும் பேசி தங்களது பிளவுவாதத் திட்டத்தை பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.

    மேலும், தமிழ்நாட்டின் பொது அமைதியையும், ஒற்றுமையையும் உயர்த்திப்பிடித்த திருப்பரங்குன்றம் உள்ளிட்டு மதுரை மக்களுக்கும், மதச்சார்பற்ற அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    மிகப்பழமையான நகரமான மதுரை எப்போதும் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. மதுரை மக்கள் அனைத்து மத நம்பிக்கைகளை மதித்தும், அனைத்து மத விழாக்களிலும் பங்கேற்று வருகின்றனர்.

    மதவெறி சக்திகளின் சூழ்ச்சிகளை முறியடித்து மக்கள் ஒற்றுமையையும், அனைத்து பகுதி மக்களின் வழிபாட்டு உரிமையையும் பாதுகாக்க திருப்பரங்குன்றத்தின் அனைத்துப் பகுதி மக்களும் இப்போதுபோல் எப்போதும் உறுதிகாட்ட வேண்டும் எனவும், தமிழ்நாடு இத்தகைய மதவெறி அமைப்புகளை முழுமையாக புறக்கணித்திட வேண்டும் எனவும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

    அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் மதச்சார்பின்மை மற்றும் மக்கள் ஒற்றுமை காப்பதில் உறுதியுடன் செயல்பட்டு அனைத்து மக்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாப்போம் என்று உறுதி கூறுகிறோம்

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • பாலாஜி தனது நண்பர்களுடன் சேர்ந்து மேலாளார் சாய்பிரசாத்தை கொலை செய்து இருப்பது தெரிய வந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவொற்றியூர்:

    ஆந்திர மாநிலம் குடூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாய் பிரசாத் (வயது 45) இவர் கடந்த 5 ஆண்டுகளாக மணலி புதுநகர் அடுத்த விச்சூர், வெள்ளி வாயலில் உள்ள கண்டெய்னர் யார்டில் மேலாளராக வேலை பார்த்து வந்தார் சாய்பிரசாத்(வயது45). நேற்று முன்தினம் இரவு அவர் தங்கி இருந்த அறையில் சுத்தியலால் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    விசாரணையில் அங்கு வேலை பார்த்து வந்த தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த டில்லி பாலாஜி கடந்த 6-ந் தேதி வேலை நேரம் முடிவதற்குள் பாதியிலே சென்று விட்டதாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாலாஜியை மேலாளர் சாய்பிரசாத் வேலைக்கு வரவேண்டாம் என்று கூறி உள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பாலாஜி தனது நண்பர்களுடன்சேர்ந்து மேலாளார் சாய்பிரசாத்தை கொடூரமாக கொலை செய்து இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து பாலாஜி மற்றும் அவரது நண்பர்களான அங்கு வேலை பார்த்து வந்த முகிலன், பழைய நாபாளையத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி,ஷாம்,கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த மணிமாறன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கட்டுமான பணி கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.
    • நீதிமன்ற வளாகத்தை சுற்றிலும் அகலமான சாலை வசதி உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் வருகின்றன.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த பஞ்செட்டி சென்னை-கும்மிடிப்பூண்டி தேசிய நெடுஞ்சாலையில் ரூ.49.28 கோடி செலவில் 4 மாடியில் புதிய ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகம் கட்டப்படுகிறது.

    சுமார் 6.35 ஏக்கர் பரப்பளவில் 6 நீதிமன்ற வளாகங்கள் இதில் வருகின்றன. இதற்கான கட்டுமான பணி கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.

    இந்த ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஏ.டி.எம். மையம், தபால் நிலையம், கேண்டீன் ஓய்வறை, கழிவறை வசதி, வாகன நிறுத்துமிடம், நீதிமன்ற வளாகத்தை சுற்றிலும் அகலமான சாலை வசதி உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் வருகின்றன.

    கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொன்னேரி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கவிதா, பொன்னேரி எம்.எல்.ஏ. துரை, சந்திரசேகர் மற்றும் அதிகாரிகள் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டுமான பணிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது குறித்த காலத்தில் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என்று ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினர். ஆய்வின் போது உதவி பொறியாளர்கள் ஜெகதீஷ், தர்மதுரை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.
    • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி அரசை செயல்படவிடாமல் முடக்கியது.

    டெல்லி தேர்தல் முடிவு இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை வலியுறுத்துகிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    டெல்லி மாநிலத் தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி தோல்வி அடைந்து பாஜக ஆட்சி அமைக்கிறது. இது ஆம் ஆத்மி கட்சியின் தோல்வி மட்டுமல்ல இந்தியா கூட்டணியின் தோல்வி ஆகும். இதிலிருந்து இந்தியா கூட்டணி பாடம் கற்க வேண்டும். டெல்லி மாநிலத் தேர்தல் முடிவு இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை வலியுறுத்துகிறது என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுட்டிக் காட்டுகிறோம்.

    இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி உடனடியாக இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.

    டெல்லியில் ஆட்சி நடத்தி வந்த ஆம் ஆத்மியை அதிகாரத்திலிருந்து இறக்குவதற்காக பாஜக தனது அத்தனை பலத்தையும் பயன்படுத்தியது. முதலமைச்சராக இருந்த அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டவர்கள் மீதும் அமைச்சர்கள் மீதும் வழக்குகள் போடப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர்.

    அதிகாரிகள் நியமனம், அன்றாட நிர்வாகம் ஆகியவற்றைச் செய்வதற்கு டெல்லி அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்தத் தீர்ப்பை ரத்து செய்வதற்காக நாடாளுமன்றத்தைப் பயன்படுத்தி உடனடியாக சட்டத்திருத்தத்தை பாஜக அரசு கொண்டு வந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி அரசை செயல்படவிடாமல் முடக்கியது.

    இந்த அடாவடிகளுக்கு இந்தியா கூட்டணியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ் கட்சி பெரிதாக எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சி தனக்கு போட்டியாக ஆம் ஆத்மியைப் பார்த்ததும், காங்கிரஸ் கட்சி பலவீனமாவது தனக்கு சாதகம் என ஆம் ஆத்மி கருதியதுமே இதற்குக் காரணம்.

    இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி இடம் பெற்ற போதும் அது பொருந்தாக் கூட்டணியாகவே இருந்தது. டெல்லியில் இப்போது பாஜக ஆட்சி அமைப்பதற்கு ஆம் ஆத்மி- காங்கிரஸ் கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லை என்பதே முதன்மையான காரணம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கருதுகிறது.

    டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மியை விட சுமார் இரண்டு சதவீத வாக்குகளையே பாஜக கூடுதலாகப் பெற்றிருக்கிறது. அங்கு தனியாகப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி சுமார் ஏழு சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது. அர்விந்த் கெஜ்ரிவால் போட்டியிட்ட தொகுதி உட்பட 13 தொகுதிகளில் ஆம் ஆத்மியின் தோல்விக்கு காங்கிரஸ் பெற்ற வாக்குகளே காரணமாகியுள்ளன.

    டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு இந்தியா கூட்டணியில் இருக்கும் சமாஜ்வாதி, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. ஆதரவு தெரிவித்த அந்தக் கட்சிகளுக்கு டெல்லியில் வாக்கு வங்கி எதுவும் இல்லை. எனவே அது காங்கிரஸ் அல்லாத அணி ஒன்றை உருவாக்கும் முயற்சியாகவே பார்க்கப்பட்டது.

    டெல்லி தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் எப்படி காரணமாக அமைந்துவிட்டதோ, அப்படி இந்தியா கூட்டணியில் இருந்த பிற கட்சிகளின் இந்த அணுகுமுறையும் ஒருவிதத்தில் காரணமாகியுள்ளன.

    நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததற்குப் பிறகு இந்தியா கூட்டணி கூட்டத்தைக் கூட்டுவதில் காங்கிரஸ் கட்சி அக்கறை காட்டவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைப்பதைத் தடுத்த போதிலும் அதன் பிறகு நடைபெற்ற மாநிலத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெறுவதற்கு இந்தியா கூட்டணியே வழி வகுத்தது என்பதே கசப்பான உண்மையாகும்.

    மக்கள் நலனை விடத் தத்தமது கட்சிகளின் வெற்றியையே இந்தியா கூட்டணி கட்சிகள் முதன்மையாகக் கருதுகின்றன என்பதையே இது காட்டுகிறது. இதே நிலை நீடித்தால் அடுத்தடுத்து பீகாரிலும் உத்தரப்பிரதேசத்திலும் நடைபெறவிருக்கும் தேர்தல்களிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது சாத்தியமில்லாமல் ஆகிவிடும். மக்களும்கூட நம்பிக்கை இழந்து விடுவார்கள். எனவே டெல்லி தேர்தல் முடிவுகளை இந்தியா கூட்டணி கட்சிகள் ஒரு படிப்பினையாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியா கூட்டணியின் கலந்தாய்வுக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு காங்கிரஸ் கட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

    தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறது. தொடர் வெற்றியை சாதித்திருக்கும் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இந்த இடைத்தேர்தலில் தமிழகத்தின் முதன்மையான எதிர்க்கட்சியாக விளங்குகிற அதிமுக போட்டியாடாமல் பின்வாங்கியது. பாஜகவும் அதே நிலைபாட்டை எடுத்தது. எதிர்க்கட்சிகளின் வாக்குகளைச் சிதறடிக்க விரும்பாமல், இவ்விரு கட்சிகளும் இணைந்து நாதகவுக்கு ஆதரவை நல்குவது என்கிற மறைமுக உடன்பாடு செய்துகொண்டனரோ என்கிற அய்யத்தை எழுப்புகிறது.

    அதாவது, நாதக மற்றும் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளிடையே மறைமுகமான கூட்டணி ஒரு சோதனை முயற்சியாக மேற்கொள்ளப் பட்டுள்ளது என்றே எண்ணத் தோன்றுகிறது.

    இதுவரை தமிழ்நாட்டில் இல்லாத அளவுக்கு வெளிப்படையான வெறுப்பு அரசியலை நாதக முன்னெடுத்தது. குறிப்பாக, தந்தை பெரியாரை மிகவும் அநாகரிகமான முறையிலே பொது வெளியில் கொச்சைப்படுத்தியது. ஆனாலும் அதனை அதிமுக கண்டும் காணாமல் கடந்து சென்ற போக்கு அதிர்ச்சியளித்தது. அதேவேளையில், பாஜக வரிந்து கட்டிக்கொண்டு நாதகவின் வெறுப்பு அரசியலை வரவேற்றது. இவ்விரு கட்சிகளின் இந்தப் போக்கு அவர்களுக்கிடையிலான மறைமுக உடனபாட்டினை உறுதிப்படுத்துவதாகவே விளங்கியது.

    தந்தை பெரியாருக்கு எதிரான நாதக'வின் இந்த அணுகுமுறை பாஜகவின் ஃபாசிச அணுகுமுறையின் இன்னொரு வடிவமே என்பதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியது.

    பாஜக மற்றும் சங் பரிவார்களைப் பின்பற்றியே தந்தை பெரியார் அவர்களைக் கொச்சைப்படுத்தும் நடவடிக்கையில் நாதக இறங்கியது. அதன்மூலம் பாஜகவின் வாக்குகளை ஈர்ப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. அத்துடன், அதிமுகவின் திமுக எதிர்ப்பு வாக்குகளையும் இயல்பாக பெற்றுவிட முடியுமென நாதக கணக்குப் போட்டது.

    ஆனால், வழக்கம்போல அந்தக் கட்சிக்கு வைப்புத் தொகையைக் கூட கிடைக்க விடாமல் செய்துள்ளனர் ஈரோடு கிழக்குத் தொகுதி மக்கள்.

    இதன்மூலம், பாஜக, அதிமுக மற்றும் நாதக ஆகிய கட்சிகளின் சூது அரசியலை முறியடித்துள்ளனர். குறிப்பாக, தந்தைபெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் ஆகியோர் முன்னெடுத்த சமூகநீதிக்கான மண்ணே தமிழ்நாடு என்பதை உணர்த்தி, நாதகவுக்கு மறைமுகமாகத் துணைபோன பாஜக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கு உரிய பாடத்தைப் புகட்டியுள்ளனர்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×