என் மலர்tooltip icon

    கேரளா

    • அஞ்சலியை காதலிக்கும் வாலிபர் தனது நண்பர்கள் சிலருடன் அவர் வீட்டுக்கு பெண் கேட்டு வந்தார்.
    • . இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சத்தியபாலன் மற்றும் அஞ்சலி இருவரும் ஸ்ரீஜாவை காப்பாற்ற முயன்றனர்.

    கேரளா மாநிலம் எருமேலி பகுதியைச் சேர்ந்தவர் சத்யபாலன்(56). இவரது மனைவி ஸ்ரீஜா(48). இந்த தம்பதியினருக்கு அஞ்சலி(27) என்ற மகளும் அகிலேஷ்(24) என்ற மகனும் இருந்தனர்.

    சத்தியபாலன் அந்த பகுதியில் ஒலிப்பெருக்கி நிலையம் நடத்தி வந்தார். மகள் அஞ்சலி வெளிநாட்டில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.

    இவர் விடுமுறைக்கு அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வார். அஞ்சலி தனது தந்தையின் கடைக்கு அருகில் ஒரு கடையில் வேலை பார்த்து வந்த ஒருவரை காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

    இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அஞ்சலி வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் மதியம் அஞ்சலியை காதலிக்கும் வாலிபர் தனது நண்பர்கள் சிலருடன் அஞ்சலி வீட்டுக்கு பெண் கேட்டு வந்தார். இதனால் அஞ்சலியின் பெற்றோர் ஆத்திரடைந்தனர். அவர்களை அனுப்பி வைத்துவிட்டு அஞ்சலியை கண்டித்து பெற்றோர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அப்போது ஆத்திரமடைந்த தாய் ஸ்ரீஜா, வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சத்தியபாலன் மற்றும் அஞ்சலி ஆகிய இருவரும் ஸ்ரீஜாவை காப்பாற்ற முயன்றனர்.

    அப்போது அவர்களின் மீதும் தீப்பற்றி கொண்டது. இதனால் 3 பேரும் உடல் கருகி பலத்த தீக்காயம் அடைந்தனர். குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த ஸ்ரீஜாவின் மகன் அகிலேசும் பலத்த தீக்காயம் அடைந்தார்.

    வீடு தீப்பற்றி எரிவதை கண்டு அக்கம்பத்தினர் தீயணைப்பு துறைக்கும் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அனைத்து காயங்களுடன் கிடந்த 4 போரையும் மீட்டு கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியில் ஸ்ரீஜா பரிதாபமாக உயிரிழந்தார். சத்தியபாலனும், அஞ்சலியும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். படுகாயமடைந்த அகிலேசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு பின் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து எருமேலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • 2 நீதிபதிகள் அமர்ந்து கொண்டு அரசமைப்பின் விதியை தீர்மானிப்பது ஏற்புடையதல்ல.
    • பிரதமர் நரேந்திர மோடி ஆளுநர்களைப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை பின் கதவு வழியாகக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்.

    மசோதாக்கள், துணைவேந்தர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் கவர்னருக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணையில் கடந்த 8 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆளுநரின் செயல்கள் சட்டவிரோதம் என்று கண்டித்ததுடன் நிலுவையில் இருந்த தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கும் சிறப்பு அதிகாரத்தின்மூலம் தாங்களே ஒப்புதல் வழங்குவதாக தெரிவித்தனர்.

    மேலும் அரசு அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு காலக்கெடுவும் நிர்ணயித்தனர். அதுமட்டுமின்றி வரலாற்றில் முதல் முறையாக, ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க நாட்டின் ஜனாதிபதிக்கு 3 மாதம் காலக்கெடு விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை விமர்சித்து கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லெக்கர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

    உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்தும் அவர் கூறியதாவது, "மசோதாக்கள் மீது ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்கு அரசியல் சாசனம் எந்த காலக் கெடுவும் விதிக்கவில்லை.

    உச்ச நீதிமன்றம் அதற்கான காலத்தை நிர்ணயிப்பது அரசமைப்புச் சட்டத் திருத்தமாக கருதப்படும், இதை நீதிமன்றம் செய்யும் பட்சத்தில், பிறகு சட்டமன்றமும், நாடாளுமன்றமும் எதற்கு?.

    அரசமைப்பில் திருத்தங்கள் செய்ய, நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை பெற வேண்டும், ஆனால் 2 நீதிபதிகள் அமர்ந்து கொண்டு அரசமைப்பின் விதியை தீர்மானிப்பது ஏற்புடையதல்ல. இது உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பு மீறல்" என விமர்சித்துள்ளார்.

     கேரள ஆளுநர் உச்சநீதிமன்றத்தை விமர்சித்ததற்கு குறித்து சிபிஎம் மற்றும் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து வருகிறது.

    டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் தேசிய பொதுச்செயலாளர் பேபி, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனாதிபதி உட்பட அனைவருக்கும் பொருந்தும். பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஜனாதிபதி கூட தாமதப்படுத்துவது இல்லை. அப்படியானால், ஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் ஆளுநர்களுக்கு எப்படி இருக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.

    மேலும் காங்கிரஸ் தலைவர் வேணுகோபால் இதுகுறித்து பேசுகையில், "பாராளுமன்றத்தின் சட்டங்களை இயற்றும் அதிகாரத்தை ஆளுநர் அர்லேகர் மகிமைப்படுத்துகிறார், ஆனால் சட்டமன்றத்தின் அதிகாரத்தை மதிக்கவில்லை.

    பிரதமர் நரேந்திர மோடி ஆளுநர்களைப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை பின் கதவு வழியாகக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறார். உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பு சங் பரிவாரங்களுக்கு எதிரான "சில்வர் லைன்" என்று தெரிவித்தார்.

    • ராணாவுக்கு உதவியதாக கொச்சியில் ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்து உள்ளனர்.
    • ராணாவையும் கொச்சி அழைத்து வந்து விசாரிக்க என்.ஐ.ஏ. திட்டமிட்டு உள்ளது.

    மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவா் பாகிஸ்தான்- அமெரிக்க பயங்கரவாதி டேவிட் ஹெட்லி. இவனது நெருங்கிய நண்பராக இருந்தவர் தஹாவூா் ராணா. இவனது ஆலோசனை மூலம்தான், மும்பை தாக்குதல் சம்பவம் நடந்தது விசாரணையில் உறுதிபடுத்தப்பட்டது.

    அமெரிக்க சிறையில் இருந்த ராணா, நாடு கடத்தப்பட்டதை தொடர்ந்து அவரை இந்தியா அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். அவரிடம் கோர்ட்டு உத்தரவுப்படி என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மும்பை தாக்குதலுக்கு முன்பு ஹாபூா், ஆக்ரா, டெல்லி, கொச்சி, அகமதாபாத், மும்பை ஆகிய நகரங்களுக்கு ராணா தன் மனைவி சம்ராஸ் ராணா அக்தருடன் சென்றதாக விசாரணையில் தெரிய வந்தது.

    இதன் அடிப்படையில் ராணாவுக்கு உதவியதாக கொச்சியில் ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்து உள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கொச்சியில் ராணா 13 பேருடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. அவர்கள் யார்? எங்கு சந்தித்தனர்? என விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதன் அடிப்படையில் ராணாவையும் கொச்சி அழைத்து வந்து விசாரிக்க என்.ஐ.ஏ. திட்டமிட்டு உள்ளது.

    • மற்றொரு நோயாளியை இறக்கிவிட்டு, பந்தளம் செல்லும் வழியில் ஆம்புலன்ஸை ஆளில்லாத பகுதியில் நிறுத்தினார்
    • கடந்த 5 வருடங்களாக பாலியல் வன்கொடுமை மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு விசாரணை நடைபெற்றது.

    கேரளாவில் 2020இல் கோவிட் தொற்று பாதித்த 19 வயது பெண்ணை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பாலியல் வன்கொடுமை செய்த ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    கோவிட் பெருந்தொற்று சமயமான 2020 இல் செப்டம்பர் 5 ஆம் தேதி பத்தினம்திட்டா மாவட்டத்தின் அடூர் பொது மருத்துவமனையில் இருந்து பந்தளத்தில் உள்ள அர்ச்சனா மருத்துவமனை கோவிட் சிறப்பு வார்டுக்கு தொற்று பாதித்த 19 வயது பெண் ஆம்புலன்சில் மற்றொரு நோயாளியுடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

    மற்றொரு நோயாளியை பாதி வழியில் இறக்கிவிட்டுவிட்டு, பந்தளம் செல்லும் வழியில் ஆம்புலன்ஸை ஆளில்லாத பகுதியில் நிறுத்தி 19 வயது பெண்ணை ஆம்புலன்ஸ் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்தார். அதன்பின் அப்பெண்ணை கொண்டு சேர்க்கவேண்டிய பந்தளம் மருத்துவமனையில் இறக்கிவிட்டுவிட்டு ஆம்புலன்ஸ் டிரைவர் தப்பியோடினார்.

    பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்ததை மருத்துவமனை ஊழியர்களிடமும் பெற்றோரிடமும் முறையிட்டார். இதைத்தொடர்ந்து வழங்கப்பட புகாரில், அடுத்த நாளே அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் நௌபல் (Noufal) கைது செய்யப்பட்டார்.

    கடந்த 5 வருடங்களாக பாலியல் வன்கொடுமை மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த காலகட்டத்தில் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இந்நிலையில் வழக்கு விசாரணை முடிந்து நேற்று அவர் குற்றவாளி என உறுதி செய்து ஆயுள் தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. 

    • தற்போது பங்குனி உத்திர ஆராட்டு விழா நடைபெற்று வருகிறது.
    • 1, 2, 4, 6, 8 கிராம்களில் டாலர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    கூடலூர்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் நடை திறக்கப்பட்டு மண்டல, மகர விளக்கு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வழிபாட்டில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும், வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்களும் கலந்து கொள்கின்றனர்.

    இது தவிர ஒவ்வொரு மாத பிறப்பன்றும் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. தற்போது பங்குனி உத்திர ஆராட்டு விழா நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த 1-ந் தேதி முதல் கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் 70-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு ஐயப்ப சுவாமி உருவம் பொறித்த தங்க டாலர்களை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 1, 2, 4, 6, 8 கிராம்களில் டாலர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    மலையாள ஆண்டு பிறப்பான விஷூ பண்டிகை தினமான ஏப்ரல் 14-ந் தேதி முதல் இந்த டாலர்கள் விற்பனைக்கு வருகின்றன. இது குறித்து தேவசம்போர்டு தலைவர் கூறுகையில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அய்யப்பன் உருவம் பொறித்த தங்க டாலர்கள் விற்பனை செய்யப்பட்டது.

    அதன் பின்னர் இச்சேவை நிறுத்தப்பட்டது. தற்போது இதனை தொடர வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி கேட்டுக் கொண்டதன் பெயரில் 1, 2, 4, 6, 8 கிராம் என 5 வகையான டாலர்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. முன்னணி தங்க நகை நிறுவனங்கள் இவற்றை வடிவமைத்து தந்துள்ளன.

    இதன் தரம் உறுதி செய்யப்பட்டு 916 தர முத்திரையுடன் விற்பனை செய்யப்பட உள்ளது. சித்திரை விஷூ தினமாக வருகிற 14-ந் தேதி சபரிமலையில் இந்த டாலர்கள் விற்பனை தொடங்க உள்ளது. ஆன்லைன் மற்றும் தேவசம்போர்டு அலுவலகத்தில் பணம் செலுத்தி இவற்றை வாங்கி கொள்ளலாம்.

    சன்னிதானத்தில் பூஜை செய்த பிறகு இந்த டாலர்கள் விற்பனைக்கு அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார். 12 ஆண்டுகளுக்கு முன்பு அய்யப்ப சுவாமி உருவம் பொறித்த டாலர் ரூ.500க்கு விற்கப்பட்டது. தற்போது ஒவ்வொரு கிராம் எடைக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.

    தற்போது கேரளாவில் குருவாயூர் கோவிலில் மட்டுமே இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் சபரிமலையில் மீண்டும் தங்க டாலர் விற்பனை அறிமுகப்ப டுத்தப்பட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்நிலையில் புனித நீராடலுக்காக உற்சவ மூர்த்தி இன்று பம்பை வருகை தருகிறார். எனவே சன்னிதானத்தில் காலை 8 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மீண்டும் இரவு 8 மணிக்கு சன்னிதானத்தில் தரிசனம் தொடங்கும் என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

    • பள்ளியின் மேல் தளத்தின் ஜன்னல் ஓரத்தில் அந்த பருந்து வசதியாக அமர்ந்துகொண்டது.
    • கீழே திரண்டிருந்த கூட்டத்தினரின் கூச்சலுக்கு மத்தியிலும், பருந்து அசையாமல் இருந்தது.

    கேரளாவில் அரசு ஊழியர் துறைத் தேர்வில், செம்பருந்து பறவை தேர்வரின் ஹால்டிக்கெட்டை தூக்கிச் சென்ற விசித்திர சம்பவம் அரங்கேறி உள்ளது.

    கேரளாவின் காசர்கோடு பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளி ஒன்றில் நேற்று அரசு ஊழியர் துறைத் தேர்வு நடைபெற்றது. தேர்வுக்கு முன் காலை 7.20 மணியளவில் தேர்வறைக்கு வெளியே படித்துக்கொண்டிருந்த பெண் தேர்வரிடம் இருந்து ஹால்டிக்கெட்டை பருந்து பறித்துப் கொண்டு பறந்தது.

     ஹால்டிக்கெட்டை பிடித்தபடி பள்ளியின் மேல் தளத்தின் ஜன்னல் ஓரத்தில் அந்த பருந்து வசதியாக அமர்ந்துகொண்டது.

    கீழே திரண்டிருந்த கூட்டத்தினரின் கூச்சலுக்கு மத்தியிலும், பருந்து அசையாமல் இருந்து, ஹால்டிக்கெட்டை பல நிமிடங்கள் பிடித்துக் கொண்டிருந்தது.

    இருப்பினும் தேர்வு தொடங்கும் முன் அந்த பருந்து இறுதியில் ஹால்டிக்கெட்டை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து பறந்து சென்றது. இதனால் அந்த பெண் தேர்வர் குறித்த நேரத்தில் தேர்வு எழுத முடிந்தது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. 

    • வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகள், நிலங்கள், வாழ்வாதாரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் இழந்து விட்டார்கள்.
    • வயநாடு சகோதர சகோதரிகளுடன் தோளோடு தோள் நிற்போம்.

    கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை மற்றும் சூரமலைப் பகுதிகளில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பெரும்பாலான பகுதிகள் முற்றிலும் அழிந்துபோன அளவிற்கு சேதம் ஏற்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயத்துடன் மீட்கப்பட்டனர். 32 மாயமாகியுள்ளனர்.

    இந்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களின் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய உத்தர விடக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு தொடர்பாக மத்திய அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பேரிடர் தொடர்பான ஆர்பிஐ-யின் வழிக்காட்டுதலின்படி வங்கி கடனை மறுசீரமைக்க மட்டுமே முடியும் எனத் தெரிவித்துள்ளது.

    மத்திய அரசின் இந்த முடிவு நிலச்சரிவால் பாதிக்கப்பட் மக்களுக்கான துரோகம் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பிரியங்கா காந்தி தனது பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகள், நிலங்கள், வாழ்வாதாரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் இழந்து விட்டார்கள். இதுவரை, மத்திய அரசு கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறது. மாறாக, வெறுமன கடனுக்கான மறுசீரமைப்பை மட்டுமே பெற்றுள்ளனர். இது நிவாரணம் அல்ல. இது துரோகம்.

    இந்த அக்கறையின்மையை வன்மையாகக் கண்டித்து, வயநாட்டில் உள்ள நமது சகோதர சகோதரிகளுடன் தோளோடு தோள் நிற்போம். அவர்களின் வலி புறக்கணிக்கப்படாது. நீதி கிடைக்கும் வரை எல்லா இடங்களிலும் நாங்கள் அவர்களின் குரல்களை எழுப்புவோம்" என்றார்.

    • பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக கோர்ட்டில் சிறுமி புகார்.
    • விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு கோர்ட் உத்தரவு.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் போத்தன்கோடு பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனால் அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.

    11 வயதில் மகள் இருக்கும் நிலையில், அவர்கள் இருவரும் விவாகரத்து கேட்டு குடும்பநல கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அவர்களது விவாகரத்து தொடர்பான ஆலோசனை குடும்ப நல கோர்ட்டில் நடந்தது. மனுதாக்கல் செய்த தம்பதியிடம் குடும்பநல கோர்ட்டு உறுப்பினர்கள் தனித்தனியாக விசாரண நடத்தினர்.

    மேலும் அவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கினர். அது மட்டுமின்றி அந்த தம்பதியின் மகளான 11 வயது சிறுமியிடமும் வாக்கு மூலம் பெறப்பட்டது. அப்போது தனது தாய்க்கு ஆண் நண்பர் ஒருவர் இருப்பதாவும், தனது தந்தை இல்லாத நேரத்தில் தாயை பார்க்க வீட்டிற்கு வந்து சென்ற அவர் தன்னிடம் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும் கோர்ட்டில் சிறுமி தெரிவித்தார்.

    அதுகுறித்து தனது தாயிடம் தெரிவித்ததாகவும், ஆனால் அதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என்று தாய் கூறிவிட்டதாகவும் கோர்ட்டில் அந்த சிறுமி கூறியிருக்கிறார். அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பநல கோர்ட்டு உறுப்பினர்கள், அதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

    கோர்ட்டு உத்தரவின் பேரில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளான விவகாரம் தொடர்பாக வஞ்சியூர் போலீசார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தாயின் ஆண் நண்பர் முதல் குற்றவாளியாகவும், சிறுமியின் தாய் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளான சம்பவம் போத்தன்கோடு பகுதியில் நடந்திருப்பதால், அந்த வழக்கு போத்தன்கோடு போலீஸ் நிலையத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    போத்தன் கோடு போலீசார் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டபிறகு, இந்த சம்பவத்தில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மோதிரத்தை காண்பித்து ஏமாற்றி சிறுமிக்கு பாலியல் தொல்லை.
    • சாபம் விட்டு விடுவேன் என்று சிறுமியை மிரட்டியிருக்கிறார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் அலகோடு உதயகிரி பகுதியை சேர்ந்தவர் முகமது ரபி. அந்த பகுதியில் உள்ள மதரசா ஒன்றில் ஆசிரியராக இருந்துவந்த அவர், 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.

    கொரோனா ஊரடங்கு காலமான கடந்த 2020-2021 ஆண்டுகளில் மோதிரத்தை காண்பித்து ஏமாற்றி சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தபடி இருந்திருக்கிறார். மேலும் அதுபற்றி யாரிடமாவது கூறினால், "சாபம் விட்டு விடுவேன்" என்று சிறுமியை மிரட்டியிருக்கிறார்.

    இதுகுறித்து பழையங்காடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் முகமது ரபி மீது போக்சோ வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கேரளா தளிப்பரம்பா போக்சோ விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி ராஜேஷ், குற்றம் சாட்டப்பட்ட முகமது ரபிக்கு 187 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் அவருக்கு ரூ.9 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து முகமதுரபியை சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    போக்சோ வழக்கில் 187 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் முகமது ரபி, இதற்கு முன்பு 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 26 ஆண்டுகள் தண்டனை பெற்றுள்ளார். அந்த வழக்கில் ஜாமீனில் வெளியே இருந்து வந்த நிலையில் தான், 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பேன்சி நம்பர் அவற்றின் இலக்கங்கள், எழுத்துக்களின் வரிசைகளுக்காக தேர்வு செய்யப்படுகின்றன.
    • பேன்சி நம்பர்களைப் பெறுவதற்கு போக்குவரத்து துறை ஆன்லைன் வாயிலாக ஏலம் நடத்துகிறது.

    திருவனந்தபுரம்:

    எளிய முறையில் நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் பேன்சி நம்பர் கொண்ட நம்பர் பிளேட்களை வாங்குகின்றனர்.

    இந்த வகையிலான பேன்சி நம்பர் அவற்றின் இலக்கங்கள், எழுத்துக்களின் வரிசைகளுக்காக தேர்வு செய்யப்படுகின்றன. இவை தனிப்பட்ட விருப்பத் தேர்வுகள், அதிர்ஷ்ட எண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றன.

    இதற்கிடையே, வாகனங்களுக்கான பேன்சி நம்பர்களைப் பெறுவதற்கு திருவனந்தபுரம் போக்குவரத்து துறை ஆன்லைன் வாயிலாக ஏலம் நடத்துகிறது.

    இந்நிலையில், திருவனந்தபுரம் போக்குவரத்துத்துறை நடத்திய ஏலத்தில் KL 07 DG 0007 என்ற பேன்சி எண் 45 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. இது அம்மாநிலத்தில் வாகனப் பதிவெண் விற்பனையிலேயே அதிகபட்சமாக பதிவாகியுள்ளது.

    இதேபோல், KL 07 DG 0001 என்ற மற்றொரு பதிவு எண் 25 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.

    • காரில் பெட்ரோல் நிரப்பியபிறகு அங்கிருந்த கழிவறைக்கு ஜெயகுமாரி சென்றார்.
    • பத்தினம்திட்டா நுகர்வோர் கோர்ட்டில் ஜெயகுமாரி வழக்கு தொடர்ந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் எழம்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயகுமாரி. பள்ளி ஆசிரியையான இவர், கடந்த ஆண்டு மே மாதம் 8-ந்தேதி தனது காரில் காசர்கோட்டில் இருந்து எழம்குளத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இரவு 11 மணியளவில் கோழிக்கோடு பய்யோலி தேனாங்கல் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்றார்.

    காரில் பெட்ரோல் நிரப்பியபிறகு அங்கிருந்த கழிவறைக்கு ஜெயகுமாரி சென்றார். ஆனால் அவரை கழிப்பறையை பயன்படுத்த பங்க் ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. இதுகுறித்து பத்தினம்திட்டா நுகர்வோர் கோர்ட்டில் ஜெயகுமாரி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை நடந்துவந்த நிலையில் தற்போது தீர்ப்பு கூறப்பட்டது.

    வாடிக்கையாளரை கழிப்பறையை பயன்படுத்த அனுமதிக்காததால் பெட்ரோல் பங்கின் உரிமையாளரான பாத்திமா ஹன்னாவுக்கு ரூ1.65 லட்சம் அபராதம் விதித்து ஆணைய தலைவர் பேபிச்சன் வெச்சச்சிரா, உறுப்பினர் நிஷாத் தங்கப்பன் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். அதில் ரூ1.50 லட்சத்தை இழப்பீடாகவும், ரூ.15 ஆயிரத்தை கோர்ட்டு செலவுக்காகவும் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    • வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
    • வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது

    எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார்.

    வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

    வக்பு வாரிய சட்டமசோதாவிற்கு கேரளா முதலமைச்சர் பினாரயி விஜயன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதிகமான முஸ்லிம் மக்கள் வாழும் கேரளாவில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்புஎழுந்துள்ளது .

    இந்நிலையில், புதிதாக நிறைவேற்றப்பட்ட வக்பு வாரிய சட்டத்தின்படி, புதிய வக்பு வாரியத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறையை அரசாங்கம் விரைவில் முடிக்கும் என்று கேர்ளா வக்பு அமைச்சர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

    இதன்மூலம் புதிய சட்டத்தின் கீழ் வக்பு வாரியம் அமைக்கப்படவுள்ள முதல் மாநிலமாக கேரளா மாறும் என்று கூறப்படுகிறது.

    கேரளாவில் வக்பு வாரியத்தில் பதவிக்காலம் கடந்தாண்டு டிசம்பர் 19 அன்று முடிவடைந்தது. பின்னர் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    ×