என் மலர்tooltip icon

    டெல்லி

    • உலகப் புகழ்பெற்ற 'வாலண்டினோ' பேஷன் நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்.
    • இது பேஷன் உலகில் 'வாலண்டினோ ரெட்' என்றே அழைக்கப்படுகிறது.

    உலகின் தலைசிறந்த பேஷன் ஆடை வடிவமைப்பாளர்களில் ஒருவரான வாலண்டினோ கரவானி வயது முதிர்வு காரணமாக நேற்று தனது 93-வது வயதில் காலமானார்.

    இத்தாலியைச் சேர்ந்த இவர், உலகப் புகழ்பெற்ற 'வாலண்டினோ' பேஷன் நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்.

    ஹாலிவுட் நட்சத்திரங்கள் முதல் அரச குடும்பத்தினர் வரை பலரும் வாலண்டினோவின் வாடிக்கையளர்கள் ஆவர்.

    ஆடைகளில் தனித்துவமான சிவப்பு நிறத்தைப் பயன்படுத்துவதில் இவர் உலகப் புகழ் பெற்றவர். இது பேஷன் உலகில் 'வாலண்டினோ ரெட்' என்றே அழைக்கப்படுகிறது.

    1960-களில் இருந்து பேஷன் துறையில் கொடிகட்டிப் பறந்த இவர் 2008-ஆம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்தார்.

    வாலன்டினோவின் வடிவமைப்புகள் இன்றும் பேஷன் உலகில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகின்றன.  

    • நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம் நடைபெறுகிறது.
    • கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை மிகப் பெரிய கிரிக்கெட் பிரியர் ஆவார்.

    புதுடெல்லி:

    19-வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் மாதம் 15-ம் தேதி தொடங்கி மே 31-ம் தேதி வரை நடக்கிறது.

    இந்நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் முக்கிய ஸ்பான்சராக சுந்தர் பிச்சையின் கூகுள் ஜெமினி களத்தில் இறங்கியுள்ளது.

    உலகளவில் ஏஐ போட்டியில் முன்னணியில் உள்ள கூகுள் நிறுவனத்தின் ஜெமினி, இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் ஸ்பான்சராக 3 ஆண்டுக்கு ரூ.270 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

    இது ஐ.பி.எல். வரலாற்றில் AI தளங்களுடன் செய்யப்பட்ட மிகப்பெரிய ஒப்பந்தங்களில் ஒன்றாகும். இந்த ஒப்பந்தம் கிரிக்கெட்டில் AI நிறுவனங்களின் ஆர்வம் வேகமாக அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகிறது.

    ஏற்கனவே, பெண்கள் பிரீமியர் லீக் உடன் சாட் ஜிபிடி ரூ.16 கோடி மதிப்பிலான 2 ஆண்டு விளம்பர ஒப்பந்தம் செய்தது.

    கூகுள் நிறுவனத்தின் சிஇஓவான சுந்தர் பிச்சை மிகப் பெரிய கிரிக்கெட் பிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அவருடைய போட்காஸ்ட்-ஐ கேட்டீர்களா?. அவரோட பாடி லாங்குவேஜ் என்ன?
    • அவர் என்ன சொன்னார்? எப்படி சொன்னார்?

    தெரு நாய்கள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று அந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி. அஞ்சாரியா ஆகியோர் கொண்ட அமர்வு முன் என்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிமன்றம் விலங்குகள் ஆர்வலர் மட்டும் முன்னாள் மத்திய அமைச்சர் காந்தியை கடுமையாக கண்டித்தது.

    மேனாகா காந்தி கருத்து குறித்து நீதிபதிகள் கூறுகையில் "நீங்கள் (மேனகா காந்திக்காக வாதாடிய வழக்கறிஞர்) நீதிமன்றத்தில், நாங்கள் எச்சரிக்கையுடன் கருத்து தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கிறீர்கள். அதே நேரத்தில் உங்களுடைய கட்சிக்காரர் எந்த மாதிரியான கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார் என்பதை நீங்கள் கண்டுபிடித்தீர்களா?. ஆனால் அவர் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏனென்றால் நாங்கள் பெருந்தன்மையுடன் உள்ளோம்.

    அவருடைய போட்காஸ்ட்-ஐ கேட்டீர்களா?. அவரோட பாடி லாங்குவேஜ் என்ன? அவர் என்ன சொன்னார்? எப்படி சொன்னார்? எச்சரிக்கையுடன் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்று கூறிவிட்டு, உங்கள் கட்சிக்காரர் யார் மீதும், எதன் மீதும் தனக்குப் பிடித்தமான எல்லாவிதமான கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்" என்றனர்.

    • கடந்த மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 58 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தது.
    • இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது

    புதுடெல்லி:

    மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் 'தர்க்கரீதியான முரண்பாடுகள்' பிரிவின் கீழ் வரும் வாக்காளர்களின் பெயர்களை வெளியிடுமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

    ஆட்சேபணைக்குரிய 1.25 கோடி வாக்காளர்களின் பெயர்களைக் கிராம பஞ்சாயத்து அலுவலகங்கள், வட்டார அலுவலகங்கள் மற்றும் வார்டு அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    மேலும், இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் தங்கள் ஆட்சேபணைகளைத் தெரிவிக்கவும், தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும் 10 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் மற்றும் துணைத்தலைவர் எம்.பி.

    சகரிகா கோஸ் ஆகியோர் இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

    திரிணாமுல் காங்கிரஸ் (TMC), மேற்கு வங்காளத்தில் தேர்தல் ஆணையம் நடத்தும் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை (SIR) குறித்து, வாக்காளர் பட்டியலில் உள்ள முரண்பாடுகளை நீக்க, நீதிமன்றத்தின் தலையீட்டை வரவேற்று, இதை

    நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை வெளியிடுமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது தங்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.

    இந்த SIR நடவடிக்கை மென்பொருள் சார்ந்த முறைகேடு (Software Intensive Rigging) ஆகும். வாக்காளர்களின் உரிமைகளைப் பறிக்க முயல்கிறது. இது பாஜகவின் சதி என குற்றம் சாட்டினர்.

    • பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்றுக் கொண்டார்.
    • அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    புதுடெல்லி:

    பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவராக நிதின் நபின் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து பேசியதாவது:

    உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியான பா.ஜ.க.வின் தலைவராக பொறுப்பேற்ற நிதின் நபினுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கட்சியை வலுப்படுத்த பங்களித்த பா.ஜ.க.வின் அனைத்து முன்னாள் தலைவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை கூறிக் கொள்கிறேன்.

    கட்சி என்று வரும்போது நிதின் நவீன்தான் தலைவர். நான் ஒரு கட்சித் தொண்டன்.

    நிதின் நபின் இப்போது நமது தலைவராக இருக்கிறார். அவரது பொறுப்பு பா.ஜ.க.வுக்கு மட்டுமின்றி தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பை உறுதி செய்வதாகும்.

    நிதின் நபின் தனக்கு கொடுக்கப்பட்ட அனைத்துப் பணிகளையும் முழு பொறுப்புடன் வெற்றிகரமாக முடித்து தன்னை நிரூபித்துள்ளார். அவரிடம் இளமைத்துடிப்புடன் கூடிய ஆற்றலும், நிறுவனங்களில் பணியாற்றிய நீண்ட அனுபவமும் உள்ளது. இது ஒவ்வொரு கட்சித் தொண்டனுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

    பா.ஜ.க.வில் தலைவர்கள் மாறுகிறார்கள். ஆனால் கொள்கைகள் மாறுவதில்லை. தலைமை மாறுகிறது. ஆனால் திசை மாறுவதில்லை.

    பா.ஜ.க. ஒரு தனித்துவமான கட்சியாக உருவெடுத்தது. இப்போது அது ஒரு ஆளும் கட்சி என்பதை நிரூபித்துள்ளது.

    மக்களுக்கு சேவை செய்வதே எப்போதும் எங்களது முதன்மையான முன்னுரிமையாக இருந்து வருகிறது. அதிகாரத்தை நாங்கள் சேவைக்காக மாற்றியுள்ளோம். அதனால் தான் பா.ஜ.க. மீதான மக்களின் நம்பிக்கை தொடர்ச்சியாக வலுப்பெற்று வருகிறது.

    கடந்த 11 ஆண்டுகளில் அரியானா, அசாம், திரிபுரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. தனது சொந்த பலத்தால் முதன்முறையாக ஆட்சி அமைத்துள்ளது. மேற்கு வங்கம், தெலுங்கானாவில் பா.ஜ.க. மக்களின் ஒரு முக்கிய குரலாக உருவெடுத்துள்ளது என தெரிவித்தார்.

    • டெல்லி கர்தவ்ய பாதையில் குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன.
    • இதில் வந்தே மாதரம் தேசிய பாடலின் 150 ஆண்டு கால கொண்டாட்டமும் நடைபெறுகிறது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் 77-வது குடியரசு தினம் வரும் 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. டெல்லி கர்தவ்ய பாதையில் குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் வந்தே மாதரம் தேசிய பாடலின் 150 ஆண்டு கால கொண்டாட்டமும் நடைபெறுகிறது.

    ராணுவத்தின் வலிமை மற்றும் கலாசார பன்முக தன்மையின் வளமை ஆகியவற்றை பறைசாற்றுவதுடன் இந்நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    இதற்காக நேற்று முதல் 26-ம் தேதி வரை இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல் படை மற்றும் பிற மத்திய ஆயுத படைகள் இணைந்து வந்தே மாதரம் தொடர்பாக இந்தியா முழுவதும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

    குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையாளர் உர்சுலா வான்டர் லெயன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

    இந்நிலையில், குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில் பங்கேற்க வரும்படி தேச கட்டமைப்பில் பெரும் பங்காற்றிய, பல்வேறு நிலைகளில் உள்ளவர்களை கவுரவிக்கும் வகையில், 10,000 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

    நாட்டுக்கு வருவாய் மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கத்திற்காக பணியாற்றியவர்கள், சிறந்த புதிய கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட பலரும் இதில் அடங்குவர். அவர்கள் கடமை பாதையில் அமர வைக்கப்படுவர்.

    விமான சாகச நிகழ்ச்சிகள், 2,500 கலைஞர்கள் பங்கேற்கும் கண்கவர் கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெறும். ராணுவம், கடற்படை மற்றும் விமான படை என முப்படைகளின் அணிவகுப்பு ஆகியவற்றுடன் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள், பல்வேறு துறைகளை சேர்ந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நிதின் நபின் தற்போது பாஜகவின் 12வது தேசியத் தலைவராகியுள்ளார்.
    • அமித் ஷா தனது 49 வயதில் தேசிய தலைவர் பதவியை ஏற்றார்.

    பாஜக தேசியத் தலைவராக நிதின் நபின் பதவியேற்றார். 45 வயதான நிதின் நபின் தற்போது பாஜகவின் 12வது தேசியத் தலைவராகியுள்ளார். பாஜக தலைமையகத்தில் முறையான செயல்முறைகள் முடிந்த பிறகு, இன்று பிரதமர் மோடி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் பல மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    இதன்மூலம் பாஜகவில் குறைந்த வயதில் தேசிய தலைவர் பொறுப்பை வகிப்பவராக நிதின் நபின் மாறியுள்ளார். முன்னதாக, அமித் ஷா தனது 49 வயதில் தேசிய தலைவர் பதவியை ஏற்றார்.  ஜே.பி. நட்டா 2020 முதல் கட்சியின் தேசியத் தலைவராக இருந்தநிலையில், அவரது பதவிக்காலம் 2024 இல் முடிவடைந்தது. ஆனால் தேர்தல் போன்ற காரணங்களால் பதவி நீட்டிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பாஜக தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று (ஜன, 19 )  நடைபெற்றது. இத்தேர்தலுக்கு வேறு எந்த வேட்பாளரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் நிதின் நபின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    தேசிய தலைவராக நிதின் நபின் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு அவருக்கு இசட்-பிரிவு பாதுகாப்பை வழங்கியுள்ளது. இன்று காலை அவர் பதவியேற்பதற்கு முன்பு இந்த முடிவு எடுக்கப்பட்டது. முன்னதாக, ஜே.பி. நட்டாவும் இதே போன்ற பாதுகாப்பைப் பெற்றார். 


    • காஷ்மீர் விவகாரம் ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின்படி தீர்க்கப்பட வேண்டும் என்று போலந்து துணை பிரதமர் குறிப்பிட்டார்.
    • இந்தியா தனது தேச நலன் சார்ந்த விஷயங்களில் யாருடைய அறிவுரையையும் எதிர்பார்க்கவில்லை

    போலந்து நாட்டின் துணைப் பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி கடந்த அக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்குச் சென்றிருந்தார்.

    அப்போது பாகிஸ்தானுடன் இணைந்து அவர் வெளியிட்ட கூட்டறிக்கையில், "காஷ்மீர் விவகாரம் ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின்படி தீர்க்கப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி ஜனவரி 17 முதல் 19 வரை மூன்று நாள் டெல்லி வருகை தந்தார். அவரை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று சந்தித்து பேசினார்.

    இந்த சந்திப்பு கூட்டத்தின்போது பேசிய ஜெய்சங்கர், "சில நாடுகள் தங்களுக்குச் சாதகமான பிரச்சினைகளை மட்டும் தேர்ந்தெடுத்துப் பேசுவதும், காஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்ளிட்ட இந்தியாவின் பாதுகாப்பு விவகாரங்களை விமர்சிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

    பயங்கரவாதம் எங்கு நடந்தாலும் அது பயங்கரவாதம்தான். உக்ரைனில் நடக்கும் போரை ஒரு கண்ணோட்டத்திலும், இந்தியாவில் நடக்கும் எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை மற்றொரு கண்ணோட்டத்திலும் பார்க்க முடியாது. 

    இந்தியா தனது தேச நலன் சார்ந்த விஷயங்களில் யாருடைய அறிவுரையையும் எதிர்பார்க்கவில்லை. போலந்து அல்லது மற்ற ஐரோப்பிய நாடுகள் இந்தியாவின் நியாயமான கவலைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். போலந்து எங்கள் அண்டை நாடுகளில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கக் கூடாது" என்று தெரிவித்தார்.

    மேலும் இதன்போது ரஷிய எண்ணெய் வாங்கும் நாடுகளில் இந்தியாவை மட்டும் அமெரிக்கா குறிவைக்கிறது என ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.   

    • சாட்சியான சிறுமியின் தந்தை கஸ்டடியில் கொல்லப்பட்டார்.
    • நீண்ட காலம் சிறையில் இருக்கிறார் என்பதற்காக மட்டும் தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது.

    கடந்த 2017-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் பகுதியில் ஒரு சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக முன்னாள் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ளார்.

    இதற்கிடையில், இந்த வழக்கின் சாட்சியான சிறுமியின் தந்தை மீது பொய்ப் புகார் அளிக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு 2018-ஆம் ஆண்டு அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிறுமியின் தந்தை கொல்லப்பட்டார்.

    இந்தக் கஸ்டடி மரணம் தொடர்பாகக் குல்தீப் சிங் செங்கர் உட்பட 7 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

    இந்தத் தண்டனையை நிறுத்தி வைத்துத் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி செங்கர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

    மனுவை விசாரித்த நீதிபதி ரவீந்தர் துடேஜா, "தண்டனையை நிறுத்தி வைப்பதற்கான எந்தவொரு முகாந்திரமும் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர் நீண்ட காலம் சிறையில் இருக்கிறார் என்பதற்காக மட்டும் தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது" என்று கூறி செங்கரின் கோரிக்கையை நிராகரித்தார்.

    இந்த வழக்கு தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணை வரும் பிப்ரவரி 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.   

    • பிரதமர் மோடியும், ஷேக் முகமதும் ஒரே காரில் பயணம் செய்தனர்
    • ஊஞ்சல், வெள்ளிப் பட்டு சால்வை உள்ளிட்டவற்றை பிரதமர் மோடி பரிசளித்தார்.

    ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார்.

    விமான நிலையம் வந்திறங்கிய அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று கட்டித் தழுவி உற்சாக வரவேற்பு அளித்தார்.

    விமான நிலையத்திலிருந்து பிரதமர் மோடியும், ஷேக் முகமதும் ஒரே காரில் பயணம் செய்தனர்

    முகமதுவுக்கு பாரம்பரிய ஊஞ்சல், வெள்ளிப் பட்டு சால்வை உள்ளிட்டவற்றை பிரதமர் மோடி பரிசளித்தார். இருவரும் இரு நாட்டு உறவுகள் புதிய ஒப்பந்தங்கள் குறித்து உயர் மட்ட கூட்டத்தில் விவாவித்ததாக கூறப்படுகிறது.

    "எனது சகோதரர் ஷேக் முகமதுவின் வருகை, இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான வலுவான நட்புறவை உலகிற்கு உணர்த்துகிறது" என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  

    • பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும், அந்தந்த மாநில முக்கிய நிர்வாகிகளும் நிதின் நபினுக்கு ஆதரவாக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
    • 2006 இடைத்தேர்தலில் முதல்முறையாக பாஜக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    பாஜக தேசியத் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் இன்று டெல்லியில் உள்ள தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் பாஜகவின் செயல்தலைவராக உள்ள நிதின் நபின் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால், தலைவர் பதவிக்கு போட்டியின்றி அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

    பாஜக தேசிய தலைவராக தற்போது ஜே.பி.நட்டா இருந்து வருகிறார். அவரின் பதவிக்காலம் முடிந்த நிலையில், தேர்தல் உள்ளிட்ட சில காரணங்களால் நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தேசிய தலைவராக நிதின் நபின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் நிதின் அக்கட்சியின் தேசிய செயல்தலைவராக அறிவிக்கப்பட்டிருந்தார். அந்தப் பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டதே, தேசியத் தலைவர் பதவிக்கு பாஜக மேலிடத்தின் தேர்வாக அவர் இருக்கிறார் என்பதை மறைமுகமாக கூறத்தான்.

    இன்று மதியம் 2 மணி முதல் 4 மணிக்குள் வேட்புமனுத் தாக்கல் நிறைவுற்றது. மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 37 வேட்புமனுக்களில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்களின் கையெழுத்துகளும் இடம் பெற்றிருந்தன.

    மேலும், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் மற்றும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும், அந்தந்த மாநில முக்கிய நிர்வாகிகளும் நிதின் நபினுக்கு ஆதரவாக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.  

    பாஜகவின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் ஒட்டுமொத்த தேர்தல் செயல்முறைக்கான தேர்தல் அதிகாரியாகச் செயல்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் கே. லக்ஷ்மன் இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டதில் அனைத்து மனுக்களும் சரியாகப் பூர்த்தி செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இப்போட்டியில் நிதின் மட்டுமே வேட்பாளராக இருந்ததால், அவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். செவ்வாய்க்கிழமை (ஜனவரி 20, 2026) அன்று முறைப்படி இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என குறிப்பிட்டுள்ளார். 

    மேலும் நாளை பிரதமர் மோடி தலைமையில் நிதின் நபின் பதவியேற்பார் என பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. தொடர்ந்து பாஜகவின் தேசியக் கவுன்சில் கூட்டம் விரைவில் கூட்டப்பட வாய்ப்புள்ளது. 

    யார் இந்த நிதின் நபின்?

    பீகாரைச் சேர்ந்த முன்னாள் பாஜக எம்எல்ஏ நவீன் கிஷோர் பிரசாத் சின்ஹாவின் மகன்தான் நிதின் நபின். தந்தை மறைவால் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு முதல்முறையாக 2006-ல் பாஜக எம்எல்ஏ ஆனார். அன்றுமுதல் தற்போதுவரை பாஜக எம்எல்ஏவாக தொடர்கிறார். மேலும் பீகார் அமைச்சரவையில் 2021 முதல் 2022 வரை சாலைப் போக்குவரத்து அமைச்சராகவும், 2024 முதல் 2025 வரை நகர்ப்புற வளர்ச்சி, வீட்டுவசதி மற்றும் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

    • டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் இன்று மீண்டும் விசாரணைக்காக ஆஜரானார்.
    • குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

    கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி அன்று மேற்கொண்ட பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கை ஓய்வுபெற்ற சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி அஜஸ் ரத்தோகி கண்காணிப்பில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    இந்த வழக்கு தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள், சட்டம்- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. விஜய்க்கும் சம்மன் அனுப்பி அவரிடமும் கடந்த 12-ந்தேதி அன்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் அன்றைய தினம் காலை 11.30 மணியளவில் ஆஜரான விஜய்யிடம் பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகளுடன் 6 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தப்பட்டது.

    அவரிடம் அடுத்த நாளும் (அதாவது, 13-ந்தேதி) விசாரணை நடத்துவதற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், பொங்கல் பண்டிகை காரணமாக விஜய் தரப்பில் விசாரணையை வேறு தேதிக்கு மாற்றும்படி சி.பி.ஐ. அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    அதனையேற்று, பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் 19-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சி.பி.ஐ. தரப்பில் சம்மன் வழங்கப்பட்டது.

    இந்தநிலையில் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் இன்று மீண்டும் விசாரணைக்காக ஆஜரானார். விசாரணைக்காக விஜய் ஆஜரான நிலையில் சி.பி.ஐ. தலைமை அலுவலகம், சிஜிஓ காம்பிளக்ஸ் சாலையில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    கரூர் துயரம் தொடர்பான இன்றைய சி.பி.ஐ. விசாரணையில், பிரசாரத்திற்கு ஏன் தாமதமாக சென்றீர்கள்? என கேள்வி எழுப்பியது.

    சாலையில் வளைவுகள் நிறைய இருந்ததால் கரூர் செல்ல 7 மணி நேரம் தாமதம் என த.வெ.க. தலைவர் விஜய் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தாமதத்திற்கு வளைவுகள் தான் காரணம் என்பதற்கான ஆதாரத்தை விஜயிடம் சி.பி.ஐ. கேட்டுள்ளது. கூட்டம் அதிகமாக இருந்தபோதிலும் பிரசார வாகனம் தொடர்ந்து முன்னேறியது ஏன்? என அடுக்கடுக்கான கேள்விகளை சி.பி.ஐ. எழுப்பி உள்ளது.

    இந்த கேள்விகளுக்கு விஜய் அளித்த பதிலின் அடிப்படையில்தான் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், காலையில் இருந்து விஜயிடம் 5 மணி நேரத்திற்கு மேலாக நடந்த சிபிஐ விசாரணை நிறைவு பெற்றுள்ளது.

    பிப்ரவரி முதல் அல்லது 2-வது வாரத்தில் முதல்கட்ட குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×