என் மலர்
இந்தியா
- தாம்பரம் உதவி கமிஷனர் நெல்சன் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாயமான குமாரை தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டது.
- செஞ்சி அருகே குழி தோண்டி உடலை புதைத்திருக்கும் அதிர்ச்சி தகவலும் தெரிய வந்தது.
சென்னை:
சென்னையில் தி.மு.க. முன்னாள் எம்.பி. குப்புசாமியின் உதவியாளர் கடத்தி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இது பற்றிய விவரம் வருமாறு:-
சென்னை அயனாவரம் வசந்தம் கார்டன் 2-வது லேன் பகுதியில் வசித்து வந்தவர் குமார். 72 வயதான இவர் சென்னை மாநகராட்சியில் என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
தி.மு.க. தொழிற்சங்கமான எல்.பி.எப். உடன் இணைக்கப்பட்ட தமிழ்நாடு அனைத்து மாநகராட்சிகள் பொது ஊழியர்கள் முன்னேற்ற சங்கம் என்ற பெயரில் தொழிற்சங்கத்தையும் இவர் நடத்தி வந்தார். இந்த சங்கத்தில் மாநில பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த இவர் தி.மு.க. முன்னாள் எம்.பி. குப்புசாமியிடம் உதவியாளராகவும் இருந்துள்ளார்.
தாம்பரத்தை அடுத்த சேலையூரில் இவரது மகள் வீடு உள்ளது. அங்கு சென்று இருந்த குமார் கடந்த 16-ந்தேதி மகள் வீட்டில் இருந்து ஆட்டோவில் புறப்பட்டு உள்ளார்.
பின்னர் தாம்பரம் பஸ் நிலையத்தில் இறங்கிய அவர் அதன் பிறகு காணாமல் போய்விட்டார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் இது பற்றி தாம்பரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
தாம்பரம் உதவி கமிஷனர் நெல்சன் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாயமான குமாரை தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் குமாருக்கும் சேலையூர் பகுதியில் வசித்து வரும் ரவி என்பவருக்கும் இடையே நில பிரச்சனை இருந்து வந்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் ரவியை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது குமார் கடத்தி படுகொலை செய்யப்பட்டு இருக்கும் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
தாம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து ரவியும் அவரது கூட்டாளிகள் 7 பேரும் குமாரை காரில் கடத்திச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். செஞ்சி அருகே குழி தோண்டி உடலை புதைத்திருக்கும் அதிர்ச்சி தகவலும் தெரிய வந்தது.
இதையடுத்து இந்த கொலை சம்பவம் தொடர்பாக ரவி உள்பட 7 பேரிடம் போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.
மும்பையில் வசித்து வரும் குமாரின் உறவினர் ஒருவருக்கு சொந்தமாக கானாத்தூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தண்டியில் ஒரு கிரவுண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை குமார் தான் பாதுகாத்து வந்துள்ளார். இதன் தற்போதைய மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் நிலையில் அந்த இடத்தை ரவி தனது கள்ளக்காதலியான தனலட்சுமி என்ற பெயரில் போலியாக பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. குமாரின் உறவுக்கார பெண்ணான மகாலட்சுமி பெயரில் ஒரிஜினல் நில பத்திரம் உள்ளது.
இந்த இடத்தில் ரவி மகாலட்சுமி என்ற பெயரில் போலியாக வேறு ஒரு பெண்ணை தயார் செய்து தனது கள்ளக்காதலியான தனலட்சுமி பெயரில் இடத்தை பதிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக குமாரை கடத்திச் சென்று நிலத்துக்கான ஒரிஜினல் ஆவணங்களை கேட்டு காரில் வைத்தே தாக்கியுள்ளனர்.
இதற்கு குமார் உடன்படாததால் அவரை காருக்குள் வைத்து சித்ரவதை செய்து கழுத்தை நெரித்து கொடூரமாக கொன்றுள்ளனர். பின்னர் கொலையுண்ட குமாரின் உடலுடன் செஞ்சிக்கு சென்றுள்ளனர். பின்னர் செஞ்சி அருகே காட்டுப்பகுதியில் பெரிய குழியை தோண்டி குமாரின் உடலை போட்டு புதைத்துள்ளனர்.
பின்னர் எதுவும் தெரியாது போல ரவி வெளியில் நடமாடியுள்ளார். ஆனால் போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்தி ரவியையும் அவரது கூட்டாளிகளையும் பிடித்து உள்ளனர். சென்னை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வுபெற்ற குமார் தி.மு.க. தொழிற்சங்கத்தினர் மத்தியில் நன்கு அறிமுகமானவராவார். இவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தி.மு.க.வினர் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொலை வழக்கில் கைதாகியுள்ள ரவி பட்டதாரி வாலிபர் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். நிலம் தொடர்பான பிரச்சனை பெரிதாக உருவெடுத்ததால் பயந்து போய் காரில் கடத்திச் சென்று குமாரிடம் இருந்து ஒரிஜினல் பத்திரங்களை வாங்கிவிடலாம் என்று அவர் நினைத்திருக்கிறார்.
ஆனால் நிலைமை விபரீதம் ஆகி கொலையில் முடிந்து விட்டதால் ரவியும் அவரது கூட்டாளிகளும் சிறை செல்ல நேரிட்டுள்ளது.
- விண்வெளியில் அதிக மாரத்தான் ஓடியவரும் சுனிதா வில்லியம்ஸ் தான்.
- விண்வெளித்துறையில் மற்றவர்களுக்கு பாடமாக இருந்துள்ளார்.
கோவை:
9 மாத விண்வெளி பயணம் மேற்கொண்ட சுனிதா வில்லியம்ஸ் இன்று அதிகாலை பூமிக்கு திரும்பினார். இந்த சாதனை பயணம் குறித்து இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடித்த போது, விமான பயணம் என்பது சவாலானதாக இருந்தது. தற்போது அந்த பயணம் எளிதாகி விட்டது. அதேபோன்று தான் இப்போது விண்வெளி பயணமும் மாறியுள்ளது.
விண்வெளி பயணங்கள் என்பது ஓராண்டுக்கு முன்பே திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது. விண்வெளி நிலையத்திற்கு ஒரு மாதத்திற்கு ஒரு விண்கலம் செல்ல வேண்டும்.
சுனிதா வில்லியம்ஸ் சென்ற போயிங் விண்கலத்தில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அந்த விண்கலம் ஆளில்லாமல் திரும்பி வந்தது.
இதன் காரணமாக சுனிதா வில்லியம்ஸ் அதிக நாட்கள் விண்வெளி மையத்தில் தங்கினார். நீண்ட நாட்களாக அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த அவர் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பி இருக்கிறார். விண்வெளியில் அதிக மாரத்தான் ஓடியவரும் சுனிதா வில்லியம்ஸ் தான்.
அவரது உடல், உள்ளம், மனவலிமையே அவர் இவ்வளவு மாதம் தங்க காரணம் ஆகும். அவர் விண்வெளித்துறையில் மற்றவர்களுக்கு பாடமாக இருந்துள்ளார்.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பூமிக்கு திரும்பும் விஞ்ஞானிகளுக்கு மீண்டும் நடைமுறை வாழ்க்கை பழக்கம் ஆவதற்கு சில நாட்கள் ஆகும். அவர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு, அவர்களுக்கு போதிய பயிற்சிகள் வழங்கப்பட்டதும், நடைமுறை வாழ்க்கைக்கு திரும்புவார்கள்.
விண்வெளியில் இருந்து திரும்பி வந்துள்ள சுனிதா வில்லியம்ஸ் நடைமுறை வாழ்க்கைக்கு பழகவும், இயல்பு நிலைக்கு திரும்பவும் சில நாட்கள் ஆகும்.
தற்போது சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதற்கான காலதாமதத்தின் மூலம் செவ்வாய்க்கிரகத்திற்கு மனிதன் செல்வது சாத்தியமாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இந்திய விஞ்ஞானிகள் 3 அல்லது 4 ஆண்டுகளில் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி ஆய்வு மையத்துக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. 2 ஆண்டுகளில் ஆளில்லா விண்கலம் செல்லும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 11 உயர் ரக வெளிநாட்டு கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் மற்றும் பணத்தை தீவிரவாத தடுப்பு படையினர் வருவாய் புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் இருப்பதாக உளவுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து அந்த குடியிருப்பில் தீவிரவாத தடுப்பு படையினர் (ஏ.டி.எஸ்.) மற்றும் வருவாய் புலனாய்வு பிரிவினர் இணைந்து அதிரடி சோதனை நடத்த சென்றனர்.
அங்கு வீடு பூட்டப்பட்டு இருந்தது. விசாரணையில் அந்த வீட்டில் வசிக்கும் மேக்ஷா என்பவர் துபாயில் பங்குச்சந்தை முதலீட்டாளராக இருப்பது தெரியவந்தது.
மேலும் அவரின் உறவினர் ஒருவர் அதே குடியிருப்பில் 4-வது மாடியில் வசிப்பதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து வீட்டின் சாவியை பெற்று தீவிரவாத தடுப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் உள்ளே 87.9 கிலோ தங்க கட்டிகள், 19.6. கிலோ தங்க நகைகள் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 11 உயர் ரக வெளிநாட்டு கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் அங்கு கட்டுக்கட்டாக பணம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு சிக்கிய பணத்தின் அளவு அதிகமாக இருந்ததால் அதை எண்ணுவதற்காக எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. அதன் மூலம் வீட்டில் இருந்த ரொக்கப் பணம் ரூ.1.37 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகள், தங்க நகைகள், ரொக்கப்பணம் ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ.100 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் மற்றும் பணத்தை தீவிரவாத தடுப்பு படையினர் வருவாய் புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வீட்டில் வசிக்கும் மேக்ஷா, அவரது தந்தை மஹிந்தரஷா ஆகிய இருவருக்குமான நிதி பரிவர்த்தனைகள் போலி நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் சர்வதேச கும்பலுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் தீவிரவாத தடுப்பு படை டி.எஸ்.பி. சுனில் ஜோஷி மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஈச்சனோடை பகுதியில் பாதி எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
- கொலை செய்யப்பட்டாரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை.
மதுரை:
மதுரை அவனியாபுரத்தை அடுத்த புறவழிச்சாலையில் உள்ள ஈச்சனோடையில் கடந்த 4-ந்தேதி காலை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் சாக்கு மூடை ஒன்று கிடந்தது. அப்பகுதியை சேர்ந்தவர்கள் அருகில் சென்று பார்த்தபோது சாக்கு மூடையில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதுடன், ஒரு பெண்ணின் கால் வெளியே தெரியும் நிலையில் கிடந்தது. மேலும் சாக்கு மூட்டை முழுவதும் ரத்தக்கறையாகவும் காணப்பட்டது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சாக்கு மூட்டையில் பிணமாக கிடந்த பெண் கொலை செய்யப்பட்டதும், அவர் மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரை சேர்ந்த இந்திராணி (வயது 70) என்றும் தெரியவந்தது.
ஓய்வு பெற்ற அரசு அலுவலரான அவரை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
சி.சி.டி.வி. காமிரா காட்சிகளின் அடிப்படையில் நடந்த விசாரணையில், வில்லாபுரம் மற்றும் கீரைத்துறை பகுதியை சேர்ந்த சந்தேகப்படும்படியான சந்திரசேகர் (50), அமர்நாத் (38) இருவரை பெருங்குடி போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவரும் சேர்ந்து நகைக்காக இந்திராணியை கொலை செய்ததாக வாக்கு மூலம் அளித்திருந்தனர்.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள், இந்திராணி கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தின் அருகிலேயே நேற்று மாலை பாதி எரிந்த நிலையில் போலீஸ்காரர் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. இதுபற்றிய விபரம் வருமாறு:-
விருதுநகரை சேர்ந்தவர் மலையரசன் (வயது 36). இவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் போலீஸ் நிலையத்தில் தனிப்படை போலீஸ்காரராக பணியாற்றி வந்துள்ளார். இதற்கிடையே அவரது மனைவி கடந்த 1-ந்தேதி நடந்த சாலை விபத்தில் பலத்த காயம் அடைந்து மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மனைவியின் இறுதிச் சடங்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்ட மலையரசன், மனைவி அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தார்.
அங்கு மனைவியின் சிகிச்சை தொடர்பான கட்டண ரசீது உள்ளிட்ட ஆவணங்களை வாங்குவதற்காக வந்துள்ளார். அதன் பிறகு அவர் என்ன ஆனார், எங்கு சென்றார் என்ற விபரம் எதுவும் தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில் தான் அவர் அந்த தனியார் மருத்துவமனையில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஈச்சனோடை பகுதியில் பாதி எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் பெருங்குடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்ளும் விதமாக மாணவர்களுக்கு MEPSC சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்களின் வாயிலாக வரும் கல்வி ஆண்டில் பயிற்சி வழங்கப்படும்.
- ஆசிரியர்களைக் கொண்டு அம்மண்டலத்திற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.
சென்னை:
சென்னை பெருநகர மாநகராட்சியின் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மாநகராட்சி வரி விதிப்பு, நிலைக்குழு தலைவர் சர்பா ஜெயாதாஸ் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் வெளியாகி உள்ள அறிவிப்புகளில் சில...
* சென்னை மாநகராட்சியில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மின்னணு பலகைகள் பொருத்த திட்டம். இதற்காக மின்னணு பலகைகள் வாங்க ரூ.64.80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
* சென்னை பள்ளிகளில் 414 மழலையர் வகுப்பறைகள் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில் பயிலும் மழலையர்களுக்கென தனியே பதிவு செய்யப்பட்ட பாடங்கள், பாடல்கள் மற்றும் குட்டிக்கதைகளை அக்குழந்தைகளுக்கு மின்னணு பலகை (Display) வாயிலாக காண்பிக்க ஒவ்வொரு வகுப்பறைக்கும் ரூபாய் 40,000/- வீதம் வழங்கப்படும்.
* சென்னையில் தெருநாய்களுக்கு வெறிநாய்கடி நோய் தடுப்பூசி மற்றும் ஓட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்த ரூ.3 கோடி ஒதுக்கீடு.
* மகளிருக்கு சுய வேலை வாய்ப்பை ஏற்படுத்திடும் வகையில் இதற்கென உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி, (Standard Operating Procedure) திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளான தையல் பயிற்சி, எம்பிராய்டரி, ஆரி வேலைப்பாடுகள் மற்றும் கணினிப் பயிற்சிகள் (Tally) இலவசமாக வழங்கப்படும்.
* சென்னை பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்கள் அவர்தம் ஆங்கிலப் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ளவும், நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்ளும் விதமாக அவர்களுக்கு MEPSC சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்களின் வாயிலாக வரும் கல்வி ஆண்டில் பயிற்சி வழங்கப்படும்.
* சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தினை ஊக்குவித்து வினாடி வினாப் போட்டிகள் நடத்திட பள்ளிகளில் குழு அமைத்து வினாத்தாள்கள் தயாரித்து போட்டித் தேர்வுகள் நடத்தப்படும். அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கிட பள்ளி ஒன்றுக்கு ரூபாய் 15,000 முதல் ரூபாய் 75,000 வரை, 211 பள்ளிகளுக்கு வழங்கப்படும்.
* 81 சென்னை பள்ளிகளில் 10ஆம் வகுப்பு, 11மற்றும் 12 ஆம் வகுப்பில் படிக்கும் ஆர்வமுள்ள மாணவ மாணவியர்களை தேர்ந்தெடுத்து ஆலோசனைகள் வழங்கவும் போட்டித் தேர்விற்கு விண்ணப்பிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவ மாணவியர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளி ஒன்றுக்கு ஊக்கத்தொகையாக ரூபாய் 15,000-முதல் ரூபாய் 1,50,000 வரை வழங்குதல்.
* சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் பள்ளிகளைக் கண்டறிந்து, அப்பள்ளிகளில் விருப்பத்துடன் பணியாற்ற விரும்பும் ஆசிரியர்களைக் கொண்டு மண்டலம் வாரியாக வளமிகு ஆசிரியர் குழு (Pooling of Resource Teachers) அமைக்கப்படும். அக்குழுவின் ஆசிரியர்களைக் கொண்டு அம்மண்டலத்திற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.
* பெருநகர சென்னை மாநகராட்சியின் 69 நடுநிலைப் பள்ளிகள், 72 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தி பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ளவும், கோப்பைகளை வெல்லவும் அவர்களுக்குப் பயிற்சி அளித்து தயார்படுத்தும் விதமாக ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியர்கள் நடுநிலைப் பள்ளிகளுக்கு மாதம் ரூபாய் 15,000 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாதம் ரூபாய் 18,000/ என்ற வகையில், மொத்தம் 141 உடற்கல்வி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்டையில் பணியமர்த்தப்படுவார்கள்.
* 29 சென்னை மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் பயனடையும் வகையில் விளையாட்டு மைதானங்களில் கூடைப்பந்து, எறி பந்து, கால் பந்து, இறகுப் பந்து, கோ-கோ, கபடி, நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் ஆகிய விளையாட்டுகளில் மாணவ மாணவியர்கள் தங்களை ஈடுபடுத்தி அவ்விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ள எதுவாக அப்பள்ளிகளின் தேவைகளுக்கேற்ப விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.
* 26 சென்னை உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் பயனடையும் வகையில் கூடைப் பந்து, எறி பந்து, கால் பந்து, இறகுப் பந்து, கோ-கோ,கபடி, நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் ஆகிய விளையாட்டுகளில் தங்களை ஈடுபடுத்தி பயிற்சிகள் மேற்கொள்ள ஏதுவாக அப்பள்ளிகளின் தேவைகளுக்கேற்ப விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.
* 50 சென்னை நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவமாணவியர்கள் பயனடையும் வகையில் கூடைப்பந்து மற்றும் எறி பந்து விளையாட்டுகளில் தங்களை ஈடுபடுத்தி பயிற்சிகள் மேற்கொள்ள ஏதுவாக அப்பள்ளிகளின் தேவைகளுக்கேற்ப விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.
* மண்டலம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெறும் போது மாணவ மாணவியருக்கு பயணம் மற்றும் உணவுப்படியாக நாள் ஒன்றுக்கு தலா ரூபாய் 500/- வீதம் வழங்கப்படும்.
* முதியோர்களின் நலன் பேணும் வகையில் முதற்கட்டமாக, வடக்கு வட்டாரத்தில் பி.ஆர்.என் கார்டன் மத்திய வட்டாரத்தில் செம்பியம் மற்றும் தெற்கு வட்டாரத்தில் துரைப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா மையத்திற்கு ரூபாய் 30.00 இலட்சம் வீதம் 3 மையத்திற்கு முதியோர்களுக்கென தனிப் பிரிவு புதியதாக தொடங்கப்படும். இப்பிரிவில் ஒரு மருத்துவ ஆலோசகர் ஒரு இயன்முறை சிகிச்சை நிபுணர் மற்றும் இரண்டு உதவியாளர்கள் பணியாற்றுவார்கள்.
- நடுரோட்டில் கொலையை பார்த்த உள்ளூர் மக்கள் பீதியடைந்தனர்.
- 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கர்நாடகாவில் நடுரோட்டில் ஒருவரை கொலை செய்வது போல ரீல்ஸ் வீடியோ எடுத்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கலபுர்கி மாவட்டத்தில் நடுரோட்டில் ரத்தம் போன்ற திரவத்தை கொட்டி ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்வது போல இருவர் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர். இதனை பார்த்த உள்ளூர் மக்கள் பீதியடைந்தனர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், ரீல்ஸ் வீடியோ எடுத்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஆட்சி அதிகாரத்துக்காக உத்தவ் தாக்கரே, சத்திரபதி சிவாஜி மகாராஜின் கொள்கைகளில் இருந்து வலுவி அவுரங்கசீப்பின் சித்தாந்தத்தை பின்பற்றி காங்கிரசுடன் சேர்ந்தார்.
- அதிகார பசிக்காக ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவுக்கு என்னவெல்லாம் செய்தார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
உத்தவ் தாக்கரே பிரதமர் நரேந்திர மோடியிடம் தலை தாழ்த்தி மன்னிப்பு கேட்டதாகவும், பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவித்ததாகவும் மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
நேற்று நடந்த சட்டமேலவை கூட்டத்தின்போது பேசிய ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியிடம் தன்னை விசாரணை அமைப்புகளிடம் இருந்து காப்பாற்றுமாறு மன்றாடினார். மோடியிடம் தலைதாழ்த்தி மன்னிப்பு கேட்ட தாக்கரே மீண்டும் பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவித்தார். ஆனால் டெல்லியில் இருந்து மகாராஷ்டிரவுக்கு திரும்பியதும் தனது முடிவை உத்தவ் மாற்றிக்கொண்டார்.
ஆட்சி அதிகாரத்துக்காக உத்தவ் தாக்கரே, சத்திரபதி சிவாஜி மகாராஜின் கொள்கைகளில் இருந்து வலுவி அவுரங்கசீப்பின் சித்தாந்தத்தை பின்பற்றி காங்கிரசுடன் சேர்ந்தார்.
காங்கிரஸிடம் சிவசேனா கொடுத்த வில் அம்பை நாங்கள்தான் வீரத்துடன் மீட்டெடுத்தோம். இப்போது உத்தவ் சிவசேனா சிவாஜியை பற்றி பேச அருகதை இல்லை. ஏனெனில் அவர்கள் அவுரங்கசீப்பின் சித்தாந்தத்தை ஏற்றவர்கள் என்று தெரிவித்தார். ஏக்நாத் ஷிண்டேவின் பேச்சால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.

இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டே கூறியவற்றை உத்தவ் தாக்கரே மறுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், சிவசேனாவை உடைத்ததை நியாயப்படுத்தி வரலாற்றை திரிக்கும் முயற்சி இது. அதிகார பசிக்காக ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவுக்கு என்னவெல்லாம் செய்தார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். பாலசாகேப் தாக்கரேவின் நற்பெயரை கெடுத்து சிவசேனா சித்தாந்தத்தில் இருந்து நழுவியவர் ஷிண்டே என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 இல் சிவசேனாவை உடைத்து தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜக கூட்டணிக்கு தாவிய ஷிண்டேவுக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- 16 வகையான மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம்:
அறுபடை வீடுகளில் முருகப்பெருமானின் முத லாம் படை வீடான திருப்ப ரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனி பெருவிழாவாகும். 15 நாட்கள் நடைபெறும் இந்த விழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு முருகப்பெருமான் தெய்வானையுடன் தினமும் காலையில் பல்லக்கிலும், மாலையில் தங்கமயில் வாகனம், தங்கக்குதிரை வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.
விழாவை யொட்டி கடந்த 16-ந்தேதி மாலை கோவில் முன்பாக சூரசம்காரமும், நேற்று முன்தினம் இரவு முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகமும் நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முருகப்பெருமான், தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் மதுரையில் இருந்து பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் ஆகியோர் கலந்து கொண்டு முருகப்பெருமான் திருமணத்தை நடத்தி வைத்தனர்.
விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுப்பிரமணிய சுவாமி- தெய்வானை அம்பாளை திருமண கோலத்தில் தரிசனம் செய்து வழிபட்டனர். அதேபோல் சுமங்கலி பெண்கள் மஞ்சள் தாலி கயிறை மாற்றிக்கொண்ட னர்.
இதையடுத்து இரவு மீனாட்சி அம்மன் மற்றும் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரருக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அம்பாரி வாகனத்தில் முருகப்பெருமான் தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று காலையில் பெரிய தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 4 மணிக்கு உற்சவர் சன்னதியில் முருகன், தெய்வானைக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
தொடர்ந்து கொளுத்தும் வெயிலுக்கு ஏற்ப வெட்டி வேரால் உருவாக்கப்பட்ட மாலை அணிந்து சிறப்பு அலங்காரத்தில் காலை 6.40 மணிக்கு முருகப்பெருமான், தெய்வானை தேரில் எழுந்தருளினர்.
பின்னர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் குன்றத்து முருகனுக்கு அரோ கரா என்ற பக்தி பெருக்கு டன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் கிரிவ லப்பாதை வழியாக வயல்வெளிகளை ஒட்டிய பகுதியில் ஆடி அசைந்து சென்று பக்தர்களை பரவசப்படுத்தியது. அப்போது பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷமும், மங்கள வாத்தி யங்களின் ஒலியும் விண்ணை முட்டியது.
தேரின் முன்பாக சிறிய தேரில் விநாயகர் சென்றார். விழாவில் திருப்பரங்குன்றம், அவனியாபுரம், நிலையூர், கூத்தியார்குண்டு, தனக்கன்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், உள்ளூர், வெளியூர் பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமியை தரிசனம் செய்தனர்.
இதையடுத்து பகல் 12.45 மணிக்கு தேர் மீண்டும் நிலையத்தை வந்தடைந்தது. அப்போதும் முருகனுக்கு அரோகரா என விண்ணதிர பக்தி கோஷங்களை எழுப்பினர். தேரோட்டத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் ஆங்காங்கே பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சத்ய பிரியா பாலாஜி தலைமையில் அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணி செல்வம், பொம்மதேவன், ராமையா, கோவில் துணை ஆணையர் சூரிய நாராய ணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
- ரூ.2000 மதிப்புடைய விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர பயண அட்டையை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று அறிமுகப்படுத்தினார்.
- ரூ.1000 மதிப்பிலான விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர சலுகைப் பயண அட்டையையும் பயணிகள் பெற்றுக் கொள்ளலாம்.
சென்னை:
சென்னை, மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், குளிர்சாதன பேருந்து உட்பட அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்ய ரூ.2000 மதிப்பிலான விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர சலுகைப் பயண அட்டை இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மாநகர் போக்குவரத்துக் கழக பயணிகளின் வசதிக்காக குளிர்சாதன பேருந்து உட்பட அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்யும் வகையிலான ரூ.2000 மதிப்புடைய விருப்பம்போல் பயணம் செய்யும் (TAYPT) மாதாந்திர பயண அட்டையை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று மந்தைவெளி பேருந்து நிலையத்தில், அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர், இ.ஆ.ப., இணை மேலாண் இயக்குநர், தலைமை நிதி அலுவலர், மாநகர் போக்குவரத்துக் கழக பொது மேலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள, ரூ.1000 மதிப்பிலான விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர சலுகைப் பயண (குளிர்சாதன பேருந்து நீங்கலாக) அட்டையையும் பயணிகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- இடம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது தெரிய வந்தது.
- உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை டவுன் ஜாமியா தைக்கா தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி(வயது 60). போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த இவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக இருந்தார்.
கடந்த 2009-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்ற இவர், நெல்லை டவுன் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் முத்தவல்லியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஜாகீர் உசேன் பிஜிலி நேற்று அதிகாலையில் பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது காட்சி மண்டபம் அருகே வந்த போது ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
சம்பவஇடத்திற்கு போலீசார் விரைந்து சென்று, ஜாகீர்உசேன் பிஜிலி உடலை கைப்பற்றி விசாரணை நடததினர். இதில், ஜாகீர் உசேன் பிஜிலிக்கும், டவுன் தொட்டிப்பாலம் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற தவுபிக்(34) என்பவருக்கும் இடையே தொட்டிப்பாலம் தெரு பகுதியில் பிரதான சாலையில் உள்ள ஒரு இடம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது தெரிய வந்தது.
மேலும் இடப்பிரச்சினை காரணமாக, கிருஷ்ணமூர்த்தி, அவரது உறவினர்கள் 2 பேர் சேர்ந்து ஜாகீர் உசேனை கொலை செய்தததும் தெரிய வந்தது. இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தியின் சகோதரர் கார்த்திக், கிருஷ்ணமூர்த்தியின் மனைவி நூருன்னிஷாவின் சகோதரர் அக்பர்ஷா ஆகியோர் இந்த கொலை சம்பவம் தொடர்பாக நெல்லை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
இதுகுறித்து டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் விசாரணை நடத்தி கிருஷ்ணமூர்த்தி, நூருன்னிஷா, கார்த்திக், அக்பர்ஷா ஆகியோர் மீது புதிய குற்றவியல் நடைமுறை சட்டத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
இந்த கொலையில் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மனைவி நூருன்னிஷா ஆகியோரை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவின்பேரில் துணை கமிஷனர் கீதா மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் விமலன், அருணாச்சாலம் உள்ளிட்டோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
அவர்கள் தலைமறைவான தம்பதியை பிடிக்க மதுரை, தென்காசி, நெல்லையின் புறநகர் பகுதிகளில் தனித்தனி குழுவாக பிரிந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே கொலையாளிகளை கைது செய்ய வேண்டும், வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாகீர் உசேன் பிஜிலியின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக இஸ்லாமிய கூட்டணி என்ற அமைப்பினை ஏற்படுத்தி மற்ற அனைத்து அமைப்புகளையும் ஒன்றிணைத்து அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடலினை ஒப்படைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
- வேலை நிறுத்த நாளில் சாதாரண விடுப்பு அல்லது மருத்துவ விடுப்பு தவிர வேறு ஏதேனும் விடுப்புக்கான விண்ணப்பம் அனுமதிக்கப்படாது.
- இன்று யாரேனும் பணிக்கு வராமல் விதிகளை மீறி இருந்தால் அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
சென்னை:
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கத்தினர் 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவு காணும் வகையில் அமைச்சர்கள் அடங்கிய குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்து இருந்தார். இந்த குழுவினர் ஏற்கனவே அரசு ஊழியர்கள் சங்கங்களை அழைத்து ஆலோசனை நடத்தி இருந்தனர்.
ஆனாலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு செயல்படுத்த முன்வர வேண்டும் என்றும், சரண்டர் விடுப்பை இந்த ஆண்டு முதல் அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்காக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்த ஆலோசித்து உள்ளனர். இதில் குறிப்பிட்ட சில சங்கத்தினர் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
அப்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது என்று தமிழக அரசு இப்போது எச்சரிக்கை விடுத்து உள்ளது.
மருத்துவ விடுப்பை தவிர சாதாரண விடுப்போ, மற்ற விடுப்போ அரசு ஊழியர்கள் நாளை (இன்று) எடுக்க கூடாது என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஒவ்வொரு துறை செயலாளர்களுக்கும், மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அங்கீகரிக்கப்படாத சங்கங்கள் சில, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் (19-ந்தேதி) வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன.
இது சம்பந்தமாக மேற்கோள் காட்டப்பட்டு உள்ள குறிப்பில், அரசு முன் வைத்துள்ள அறிவுறுத்தல்களுக்கு உங்கள் கவனத்தை செலுத்தி வேலை நிறுத்த அச்சுறுத்தல் அல்லது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் அல்லது வேறு எந்த வகையான போராட்டங்களிலும் பங்கேற்பது அரசு அலுவலகங்களின் இயல்பான செயல்பாட்டை பாதிக்கும். விதிகளை மீறுவதாகும்.
எனவே தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1973-ன் விதிகளை மீறி அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு உங்கள் துறையின் அரசு பணியாளர்களின் வருகையை இன்று கவனமாக பதிவிட வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் சேவை சங்கங்களால் நடத்தப்படும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதின் விளைவாக அரசு ஊழியர்கள் எவரேனும் அலுவலகத்திற்கு வரவில்லை என்றால் அவர்கள் பணிக்கு வரவில்லை என்று கருதப்பட வேண்டும்.
பகுதி நேர பணியாளர்கள், தினசரி ஊதியம் பெறுவோர் மற்றும் ஒருங்கிணைந்த ஊதியத்தில் இருப்பவர்கள் இந்த 'ஸ்டிரைக்'கில் பங்கேற்றாலும் அவர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய வேண்டும். பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.
எனவே தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதியை எந்த அரசு ஊழியரும் மீறுவதில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
விதிகள் 1973-ன்படி ஊழியர்களால் அங்கீகரிக்கப்படாமல், பணியில் இல்லாமல் இருந்தால் உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
வேலை நிறுத்த நாளில் சாதாரண விடுப்பு அல்லது மருத்துவ விடுப்பு தவிர வேறு ஏதேனும் விடுப்புக்கான விண்ணப்பம் அனுமதிக்கப்படாது.
எனவே இன்று யாரேனும் பணிக்கு வராமல் விதிகளை மீறி இருந்தால் அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். பணிபுரியும் ஊழியர்களின் வருகை நிலை குறித்த அறிக்கையை காலை 10.15 மணிக்குள் எடுத்து இ.மெயில் மூலம் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- தமிழ் வருட தேவதைகள் 60 படிக்கட்டுகளாக அமையப்பெற்றது சிறப்பாகும்.
- பங்குனி உத்திர திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இது முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும். இங்கு பிரபவம் முதல் அட்சயம் வரையிலான தமிழ் வருட தேவதைகள் 60 படிக்கட்டுகளாக அமையப்பெற்றது சிறப்பாகும்.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான வள்ளி திருக்கல்யாண வைபவம் நேற்றிரவு நடந்தது.
முன்னதாக சுவாமிமலை காவிரியாற்று கரையில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து கும்பகோணம் மற்றும் சுவாமிமலை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த வள்ளி இன மக்கள் நூற்றுக்கணக்கானோர் மாம்பழம், பலாப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்கள், பட்டு வேட்டி, துண்டு, பட்டுச்சேலை உள்ளிட்ட வஸ்திரங்கள், சுவாமிகளுக்கு மலர் மாலைகள் மற்றும் உதிரி பூக்கள் ஆகியவற்றை சுமந்தவாறு மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக சுவாமிநாத சுவாமி கோவிலுக்கு ஊர்வலமாக வந்து சீர்வரிசை அளித்தனர்.
பின்னர், முருகப்பெருமான்-வள்ளி ஆகியோருக்கு மாலை மாற்றும் சம்பிரதாய சடங்கு நடந்தது. தொடர்ந்து, மாங்க ல்யம் அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து, மனமுருகி முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
திருக்கல்யாணத்தை முன்னிட்டு மூலவர் சுவாமிநாத சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.






