என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி"

    • இடம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது தெரிய வந்தது.
    • உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் ஜாமியா தைக்கா தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி(வயது 60). போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த இவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக இருந்தார்.

    கடந்த 2009-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்ற இவர், நெல்லை டவுன் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் முத்தவல்லியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஜாகீர் உசேன் பிஜிலி நேற்று அதிகாலையில் பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது காட்சி மண்டபம் அருகே வந்த போது ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    சம்பவஇடத்திற்கு போலீசார் விரைந்து சென்று, ஜாகீர்உசேன் பிஜிலி உடலை கைப்பற்றி விசாரணை நடததினர். இதில், ஜாகீர் உசேன் பிஜிலிக்கும், டவுன் தொட்டிப்பாலம் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற தவுபிக்(34) என்பவருக்கும் இடையே தொட்டிப்பாலம் தெரு பகுதியில் பிரதான சாலையில் உள்ள ஒரு இடம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது தெரிய வந்தது.

    மேலும் இடப்பிரச்சினை காரணமாக, கிருஷ்ணமூர்த்தி, அவரது உறவினர்கள் 2 பேர் சேர்ந்து ஜாகீர் உசேனை கொலை செய்தததும் தெரிய வந்தது. இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தியின் சகோதரர் கார்த்திக், கிருஷ்ணமூர்த்தியின் மனைவி நூருன்னிஷாவின் சகோதரர் அக்பர்ஷா ஆகியோர் இந்த கொலை சம்பவம் தொடர்பாக நெல்லை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

    இதுகுறித்து டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் விசாரணை நடத்தி கிருஷ்ணமூர்த்தி, நூருன்னிஷா, கார்த்திக், அக்பர்ஷா ஆகியோர் மீது புதிய குற்றவியல் நடைமுறை சட்டத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

    இந்த கொலையில் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மனைவி நூருன்னிஷா ஆகியோரை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவின்பேரில் துணை கமிஷனர் கீதா மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் விமலன், அருணாச்சாலம் உள்ளிட்டோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    அவர்கள் தலைமறைவான தம்பதியை பிடிக்க மதுரை, தென்காசி, நெல்லையின் புறநகர் பகுதிகளில் தனித்தனி குழுவாக பிரிந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனிடையே கொலையாளிகளை கைது செய்ய வேண்டும், வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாகீர் உசேன் பிஜிலியின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக இஸ்லாமிய கூட்டணி என்ற அமைப்பினை ஏற்படுத்தி மற்ற அனைத்து அமைப்புகளையும் ஒன்றிணைத்து அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடலினை ஒப்படைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். 

    • இன்றைய இளம் தலைமுறையினருக்கு பெற்றோர் மீதும், முன்னோர் மீதும் மதிப்பு-மரியாதை படிப்படியாக குறைந்து வருகிறது.
    • எங்கள் குடும்பத்தை சேர்ந்த வருங்கால சந்ததியினருக்கு முன்னோர்களின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும் என்று விரும்பினேன்.

    மதுரை:

    இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்கு பிறகு பெற்றோரை அவமதிப்பதும், முதியோர் இல்லங்களில் சேர்ப்பதுமான அவல நிலை நீடித்து வருகிறது. ஆனால் மதுரையை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் மறைந்த பெற்றோரின் நினைவாக உருவச்சிலை அமைத்து வீட்டிலேயே கோவில் கட்டி வழிபட்டு வருகிறார்.

    மதுரை சிந்தாமணி கதிர் அறுப்பு மண்டபம் மேட்டு புஞ்சை தெருவை சேர்ந்தவர் ரமேஷ் பாபு (வயது 56). இவர் மதுரை கீரைத்துறை, தெப்பக்குளம், தெற்குவாசல், ஜெய்ஹிந்த்புரம் ஆகிய போலீஸ் நிலையங்களில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர். தற்போது விருப்ப ஓய்வுபெற்று வீட்டில் இருந்து வருகிறார். தனது வீட்டில் தாய்-தந்தைக்கு வீட்டில் கோவில் அமைத்து வழிபடுவது தொடர்பாக ரமேஷ்பாபு கூறியதாவது:-

    எனது தந்தை பொன்னாண்டி, தாய் மீனாம்பாள். எங்கள் வீட்டில் 5 பெண்கள் உள்பட 7 பேர். இதில் நான் 4-வது பிள்ளை. எனக்கு மனைவி ரேணுகாதேவி, மகன் பொன்மணி, மகள் திவ்யபாரதி உள்ளனர். மதுரை மாநகர காவல் துறையில் 38 ஆண்டுகள் பணிபுரிந்து விட்டேன். உடல்நிலை ஒத்துழைக்காததால் பணியில் இருந்து விருப்ப ஓய்வுபெற்று வீட்டில் இருந்து வருகிறேன். எனக்கு சிறு வயது முதலே தாய்-தந்தை மீது அளப்பரிய மதிப்பு-மரியாதை உண்டு.

    தாய்-தந்தை என்போர் வாழும் தெய்வங்கள், நாம் அவர்களை மதிப்பு-மரியாதையுடன் நடத்த வேண்டும், குடும்பத்தை அரவணைத்து ஒற்றுமையுடன் வாழ வேண்டும், இன்றைய தலைமுறை சினிமா நடிகர்களுக்கு பின்னால் செல்கிறது, எனவே நாம் பிள்ளைகளுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்று தந்தை அடிக்கடி குறிப்பிடுவார்.

    எனது தாய் மீனாம்பாள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தந்தை பொன்னாண்டி 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். எனவே நாங்கள் தாய்-தந்தையின் நினைவு நாள் மற்றும் பிறந்த நாளில் அனைவரையும் வீட்டுக்கு வரவழைப்போம். குடும்பத்துடன் சாமி கும்பிட்ட பிறகு அன்னதானம் வழங்குவோம்.

    இன்றைய இளம் தலைமுறையினருக்கு பெற்றோர் மீதும், முன்னோர் மீதும் மதிப்பு-மரியாதை படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே எங்கள் குடும்பத்தை சேர்ந்த வருங்கால சந்ததியினருக்கு முன்னோர்களின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும் என்று விரும்பினேன்.

    அதன்படி என் தந்தையின் பிறந்த நாளான கடந்த 10-ம் தேதி தந்தை பொன்னாண்டி-தாய் மீனாம்பாள் சிலையை தத்ரூபமாக வடித்து வீட்டில் கோவில் அமைத்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×