search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    நவதானியங்கள்
    X
    நவதானியங்கள்

    நவதானியங்களும்.. அதில் உள்ள சிறப்புகளும்..

    நலமாக வாழ தானிய உணவுகளை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு தானியத்திலும் என்னென்ன சிறப்புகள் இருக்கின்றன. அறிந்து கொள்ளலாமா...
    நவதானியங்கள், சிறுதானியங்கள் ஒவ்வொன்றும் மருத்துவ குணம் உடையவை. நலமாக வாழ இத்தகைய தானிய உணவுகளை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு தானியத்திலும் என்னென்ன சிறப்புகள் இருக்கின்றன. அறிந்து கொள்ளலாமா...

    நெல்:- உமியுடன் கூடிய அரிசி, நெல் எனப்படுகிறது. நாம் உமியை நீக்கி அரிசியை உணவாக சமைத்து சாப்பிடுகிறோம். அரிசியானது பச்சரிசியாகவும், புழுங்கல் அரிசியாகவும் புழக்கத்தில் உள்ளது. பச்சரிசி என்பது நெல்லைக் குத்தி எடுத்து அப்படியே பயன்படுத்துவதாகும். நெல்லை முறையாக அவித்து குத்தி பெறுவது புழுங்கலரிசி.

    பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது. கொழுப்பு சத்தை அதிகமாக்கும். இதனால் உடல் பருமனாகும். உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம். வயிறு தொடர்பான நோய் உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும்.

    புழுங்கல் அரிசி உடல் நலனுக்கு ஏற்றது. இதனை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது. சம்பா அரிசி வகையில் சீரகச்சம்பா, ஆரம்பநிலை வாத நோய்களை போக்க வல்லது. பசியை தூண்டவும் செய்யும். ஈர்க்குச்சம்பா அரிசி சாப்பிடுவதற்கு ருசியானது. ஆனால் பித்தம் கூடும். குண்டு சம்பா, மிளகு சம்பா, மல்லிகை சம்பா, மணிச்சம்பா, கோரைச்சம்பா, கடைச்சம்பா, குறுஞ்சம்பா போன்றவை மருத்துவ குணம் நிறைந்தவை.

    சோளம்:- சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம் போன்ற சத்துக்கள் அடங்கி உள்ளன. சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது. உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப் போக்கும். அதேவேளையில் மூலநோயாளிகளுக்கு சோள உணவு ஒத்துக்கொள்ளாது.

    எள்:- கருப்பு எள் அதிக மருத்துவப் பண்புகள் கொண்டது. சுண்ணாம்புச்சத்தும் அதில் அதிகம் நிறைந்துள்ளது. எள்ளை லேசாக வறுத்து பொடி செய்து நெய் கலந்து சாப்பிட்டுவந்தால் மூல நோய் பாதிப்பில் இருந்துவிடுபடலாம். எள்ளில் இருந்து தயாரிக்கப்படும் நல்லெண்ணெய்யுடன் சம அளவு எலுமிச்சை சாறு கலந்து உடலில் தடவி குளித்து வந்தால் சரும நோய்கள் அணுகாது.

    கோதுமை:- அரிசியைவிட கோதுமையில் அதிகமான சத்துகள் உள்ளன. வட இந்திய மக்கள் கோதுமையை முழுநேர உணவாகப் பயன்படுத்துகின்றனர். எண்ணெய், நெய் பயன்படுத்தாமல் சப்பாத்தி தயார் செய்து சாப்பிடுவது நல்லது. கோதுமையில் புரதம், சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின், நியாசிக் போன்ற பல சத்துக்கள் உள்ளன. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது சிறந்த உணவாகும். இதனை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல் உண்டாகாது.

    வரகு:- இதில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து நிறைந்துள்ளது. மாதவிடாய் கோளாறுகளால் அவதிப்படும் பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும் வரகை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

    சாமை:- சாமை உணவு அனைத்து வயதினருக்கும் ஏற்றது. இது மலச்சிக்கலைப் போக்கும். வயிறு சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்தும். ஆண்களின் விந்து உற்பத்திக்கும், ஆண்மை குறைவை நீக்கவும் உகந்தது. நீரிழிவு நோயாளிகள் கூட சாமையில் தயாரித்த உணவை உண்ணலாம்.

    கம்பு:- பழங்காலத்தில் கம்பங்கஞ்சியும், கம்பஞ்சோளமும் சாப்பிட்டவர்கள்தான் அதிகம். இதனை பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிடலாம். இது பால் சுரப்பை அதிகரிக்க செய்யும் தன்மை கொண்டது. உடல் வலிமையையும் கூட்டும். கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துக்களும் நிறைந்துள்ளன. அரிசியைவிட பல மடங்கு சத்து மிகுந்த உணவு இது. ஜீரண சக்தியையும் அதிகப்படுத்தும். உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கவும் உதவும். கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் பருமனை குறைக்கவும் துணை புரியும்.

    கேழ்வரகு:- தானியங்களில் அதிக சத்து கொண்டது கேழ்வரகு. இதனை ராகி என்றும் அழைப்பார்கள். இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன. இது உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்க உதவும். குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகளும் கேழ்வரகால் செய்த பலகாரங்களைச் சாப்பிடலாம். கேழ்வரகை கொண்டு தயாரிக்கப்படும் ராகி மால்ட் பலதரப்பினரும் விரும்பி ருசிக்கும் பானம்.

    பார்லி:- குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடத் தகுந்தது பார்லி. நோய் பாதிப்புக்கு ஆளானவர்களும் சாப்பிடலாம். இதைக் கஞ்சியாக காய்ச்சி பருகலாம். உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையைக் குறைக்க உதவும். உடல் வறட்சியை போக்கவும் செய்யும். காய்ச்சல் வராமல் தடுக்கும். மலச்சிக்கல் பாதிப்புக்கு ஆளானவர்கள் பார்லியை சாப்பிட்டு வந்தால் நிவாரணம் பெறலாம். வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கவும் உதவும். குடல் புண்ணை ஆற்றும். இருமலைத் தணிக்கும். எலும்புகளுக்கு உறுதி தரும்.
    Next Story
    ×