search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆவணி திருவிழா: சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் வீதிஉலா
    X

    சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    ஆவணி திருவிழா: சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் வீதிஉலா

    • சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி, மகா தீபாராதனை நடந்தது.
    • நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 8-ம் நாளான நேற்று வழக்கமான பூஜைகளுக்கு பின்னர், காலை 6 மணிக்கு சுவாமி சண்முகர் வெள்ளை நிற பட்டு அணிந்து, வெள்ளை நிற மலர்கள் சூடி பெரிய வெள்ளி சப்பரத்தில் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளினார்.

    பின்னர் பிரம்மா அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் வீதிஉலா வந்து மேலக்கோவில் சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் பந்தல் மண்டபத்தில் உள்ள பச்சை சாத்தி மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி, மகா தீபாராதனை நடந்தது. பகல் 11.10 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற பட்டாடை அணிந்து, பச்சை நிற மலர்கள் சூடி பச்சை நிற கடைசல் சப்பரத்தில் வள்ளி-தெய்வானையுடன் பெருமாள் அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளினார்.

    தொடர்ந்து 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஆவணி திருவிழாவின் 10-ம் நாளான நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. முதலில் விநாயகர் எழுந்தருளிய தேர் வெளி வீதி நான்கிலும் பவனி வருகிறது. பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய தேர் வெளி வீதி நான்கிலும் பவனி வந்து நிலையை வந்து சேர்கிறது. தொடர்ந்து வள்ளியம்பாள் எழுந்தருளிய தேர் வெளி வீதி நான்கிலும் பவனி வந்து நிலையை சேர்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) அன்புமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×