search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நெல்லையப்பர் கோவிலில் பெருமை சேர்க்கும் மண்டபங்கள்
    X

    நெல்லையப்பர் கோவிலில் பெருமை சேர்க்கும் மண்டபங்கள்

    • மகாவிஷ்ணு ஆமை வடிவத்தில் வந்து இறைவனை பூஜிப்பதாக ஐதீகம்.
    • இங்குள்ள யாளி சிற்பங்கள் சிறப்புடையவை.

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் பெருமை சேர்க்கும் வகையில் பல மண்டபங்கள் உள்ளன.

    அவைகளின் விவரங்கள்:-

    ஆயிரம் கால் மண்டபம்

    இந்த மண்டபம் 520 அடி நீளமும் 63 அடி அகலமும், ஆயிரம் தூண்களையும் கொண்டுள்ளது. மண்டபத்தின் உச்சிஷ்ட கணபதி நம்மை ஈர்க்கும் தோற்றமுடையது. திருக்கல்யாணம் நடைபெறும் மண்டபம் கீழ்ப்பகுதியில் ஆமை ஒன்றினால் தாங்கப்படுவது போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. மகாவிஷ்ணுவே ஆமை வடிவத்தில் வந்து இறைவனை பூஜிப்பதாக ஐதீகம்.

    ஊஞ்சல் மண்டபம்

    96 தத்துவங்கள் தெரிவிக்கும் விதமாக 96 தூண்களை உடையது இந்த மண்டபம். திருக்கல்யாண வைபவம் முடிந்த பின் சுவாமி அம்பாள் ஊஞ்சலில் அமர்ந்த கோலமும், ஆடி மாத வளைகாப்பு திருவிழாவும் இந்த மண்டபத்தில் தான் நிகழும். இங்குள்ள யாளி சிற்பங்கள் சிறப்புடையவை.

    சோமவார மண்டபம்

    இந்த மண்டபம் சுவாமி கோவிலில் வட பக்கத்தில் அமைந்துள்ளது. கார்த்திகை சோமவார நாளில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நிகழும் மண்டபம். தற்பொழுது நவராத்திரிக்கு இங்கு வைத்து பூஜை நிகழ்கிறது. இந்த மண்டபம் 78 தூண்களை உடைய பெரிய மண்டபம் ஆகும்.

    சங்கிலி மண்டபம்

    சுவாமி கோவிலையும் அம்மன் கோவிலையும் இணைப்பதால் இந்த மண்டபம் சங்கிலி மண்டபம் என பெயர் பெற்றுள்ளது. 1647-ம் ஆண்டு வடமலையப்ப பிள்ளையன் அவர்களால் கட்டப்பட்டது. இந்த மண்டபத் தூண்களில் வாலி, சுக்ரீவன், புருஷாமிருகம், பீமன், அர்ச்சுனன் சிலைகள் கண்ணை கவரும்.

    மணிமண்டபம்

    இந்த மண்டபத்தின் மத்தியில் பெரிய மணி ஒன்று தொங்குவதால் மணிமண்டபம் என்று பெயர் பெற்றது. நின்றசீர் நெடுமாற மன்னரால் உருவாக்கப்பட்டது இந்த மண்டபம். ஒரே கல்லில் சுற்றி சுற்றி பல சிறு தூண்கள் உள்ளன. ஒவ்வொரு சிறிய தூணை தட்டினாலும் ஒவ்வொரு வாத்திய ஒலி தோன்றும். சுவரங்கள் மாறுபட்டு வரும். மரக்கட்டையில் மான் கொம்பு மாட்டி தட்டினால் அற்புதமான, சரியான சுவரம் கிடைக்கும். மொத்தம் 48 சிறிய தூண்கள் உள்ளன. தமிழ்நாட்டின் இசைத்தூண்கள் அமைந்துள்ள திருக்கோவில்களில் காலத்தால் முற்பட்ட இசை தூண்கள் இவை என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.

    வசந்த மண்டபம்

    100 தூண்களை உடைய இந்த மண்டபத்தில் கோடைகாலத்தில் வசந்த விழா நடைபெறும். சுற்றிலும் சோலையாய் மரங்கள் உள்ளன. இந்த சோலைவனம் 1756-ம் ஆண்டு திருவேங்கிட கிருஷ்ண முதலியார் அவர்களால் அமைக்கப்பட்டது.

    சிறப்பு பெற்ற சிற்ப தூண்கள்

    நெல்லையப்பர் கோவில் தூண்கள் அனைத்தும் சிற்ப வேலைபாடுகள் நிறைந்துள்ளன. ஒரு தோளில் கைக் குழந்தையை வைத்துக்கொண்டு மறுபக்கம் தன் பெரிய பிள்ளைக்கு சோறு ஊட்டும் அன்புத்தாய், அன்பர்களுக்கு அருள் பாலிக்கும் ஆஞ்சநேயர், மனைவியை வெளியே அழைத்து செல்லும் அக்கால கணவன்-மனைவியின் தோற்றம், ஐந்தறிவு ஜீவனுக்கும் தன் குழந்தை என்றால் கொள்ளை பிரியம் தான் என்பதை உணர்த்தும் சிற்பம், குழந்தை கண்ணனை கொல்ல வந்து கண்ணனால் கொல்லப்பட்ட அரக்கி கையில் குழந்தையுடன், வீரபத்திரர், கர்ணன், அர்ஜுனன் போன்ற ஒரு சிற்பங்கள் அவற்றில் செய்யப்பட்டுள்ள நுண்ணிய வேலைபாடுகள் காண்போரின் மனதை கொள்ளை கொள்ள செய்யும்.

    இந்த சிற்பங்களில் எலும்பு, நரம்பு, நகம் தெரிகிறது. அச்சிலைகள் அணிந்துள்ள அணிகலன்களின் வடிவங்கள், கை, கால், முட்டிகள், கண்களில் தெரியும் ஒளி என அவை சிலைகள் அல்ல உயிருடன் வந்த கலை என்ற எண்ணம் நமக்கு தோன்றும்.

    Next Story
    ×