search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கும்பகோணம் மகாமக குளக்கரையில் 12 சுவாமி-அம்பாள் எழுந்தருளி மாசிமக தீர்த்தவாரி
    X

    கும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் புனித நீராடிய காட்சி.

    கும்பகோணம் மகாமக குளக்கரையில் 12 சுவாமி-அம்பாள் எழுந்தருளி மாசிமக தீர்த்தவாரி

    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குளத்தில் இறங்கி புனித நீராடினர்.
    • சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    மாசி மாதம் வரும் மகம் நட்சத்திரத்தன்று மாசிமக விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த விழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வரர், சோமசுந்தரி சமேத வியாழ சோமேஸ்வரர், அமிர்தவல்லி சமேத அபிமுகேஸ்வரர், விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர், ஞானாம் பிகா சமேத காளஹஸ் தீஸ்வரர், சவுந்தரநாயகி சமேத கவுதமேஸ்வரர் ஆகிய 6 சிவன் கோவில்களில் மாசிமக தீர்த்தவாரி பெருவிழா கடந்த மாதம் 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் யானை, காமதேனு, குதிரை, கிளி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்று வந்தது. விழாவில் 5-ம் நாள் ஓலைச்சப்பரமும், 7-ம் நாள் திருக்கல்யாணமும், 9-ம் நாள் தேரோட்டமும் நடைபெற்றது.

    இதேபோல் குடந்தை கீழக்கோட்டம் பிரஹன் நாயகி சமேத நாகேஸ்வரர், சோம கமலாம்பாள் சமேத பாணபுரீஸ்வரர், ஆனந்த நிதியம்பிகா சமேத ஆதிகம்பட்ட விஸ்வநாதர், காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர், கொட்டையூர் பந்தாடுநாயகி சமேத கோடீஸ்வரர் மற்றும் சாக்கோட்டை அமிர்தவல்லி சமேத அமிர்தகலசநாதர் ஆகிய 6 சிவன் கோவில்களில் மாசிமக விழா கொண்டாடப்பட்டது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி இன்று நடைபெற்றது. விழாவை யொட்டி மேற்கண்ட 12 சிவன் கோவில்களில் இருந்து சுவாமி-அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பட்டு, ரிஷப வாகனங்களில் மகாமக குளத்தின் 4 கரைகளில் எழுந்தருளினர்.

    பின்னர், மகாமக குளபடித்துறையில் அந்தந்த கோவிலின் அஸ்திரதேவர்களுக்கு மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குளத்தில் இறங்கி புனித நீராடினர். பின்னர் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் குளத்தின் 4 கரைகளிலும் சுற்றிவந்து தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

    முன்னதாக இன்று அதிகாலை முதலே பக்தர்கள் அதிக அளவில் திரண்டு மகாமக குளக்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து புனித நீராடி வழிபட்டனர்.

    Next Story
    ×