search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அய்யா வைகுண்டர் 191-வது அவதார தினம்: நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு நாளை பிரமாண்ட ஊர்வலம்
    X

    திருச்செந்தூரில் இருந்து இன்று காலை பாலஜனாதிபதி தலைமையில் பேரணி தொடங்கிய போது எடுத்த படம்.

    அய்யா வைகுண்டர் 191-வது அவதார தினம்: நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு நாளை பிரமாண்ட ஊர்வலம்

    • திருச்செந்தூரில் இருந்து பக்தர்கள் பேரணி இன்று தொடங்கியது
    • 4-ந்தேதி இரவு சாமிதோப்பு தலைமைபதியில் வாகன பவனியும், அய்யா வழி மாநாடும் நடக்கிறது.

    அய்யா வைகுண்ட சுவாமியின் 191-வது அவதார தினம் நாளை (4-ந்தேதி) நடக்கிறது.

    இதனை முன்னிட்டு அய்யா வைகுண்ட சுவாமியின் அவதார தினத்திற்கு முந்தைய தினமான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து வாகன பேரணி நாகர்கோவிலை நோக்கி புறப்பட்டது.

    அய்யா வைகுண்டசுவாமி விஞ்சை பெற்ற திருச்செந்தூர்,செந்தூர் பதியில் இருந்து புறப்பட்ட இந்தப் பேரணிக்கு பாலஜனாதிபதி தலைமை தாங்கினார். பையன் அம்ரிஷ் முன்னிலை வகித்தார். திருச்செந்தூர் சீர்காய்ச்சி, திசையன் விளை, உடன்குடி, கூடங் குளம், செட்டிகுளம், ஆரல்வாய்மொழி வழியாக பேரணி இரவு நாகர்கோ விலை வந்தடைகிறது.

    அதேபோல் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் திருவனந்தபுரம் சிங்காரத்தோப்பு, பத்ம நாபசுவாமி கோவில் வடக்கு வாசலில் இருந்து சாமிதோப்பை நோக்கி மற்றொரு வாகன பேரணி புறப்படுகிறது. இந்த வாகன பேரணி திருவனந்தபுரம், பாற சாலை, குழித்துறை, மார்த்தாண்டம், தக்கலை, வெட்டூர்ணிமடம் வழியாக இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகிறது.

    இன்று மாலை 6 மணிக்கு சாமிதோப்பு தலைமை பதியிலிருந்து வைகுண்ட தீபம் கொண்டு சென்று ஆதலவிளை மாமலையில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பையன் கிருஷ்ணராஜ் தலைமை தாங்குகிறார். நாகராஜா திடலில் இரவு 10 மணிக்கு பால. ஜனாதிபதி தலைமை யில் மாசி மாநாடு நடை பெறுகிறது.

    வைகுண்ட சுவாமியின் அவதார தினமான நாளை (4-ந்தேதி) காலை 5 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து அவதார தினவிழா மாசி ஊர்வலம் சாமிதோப்பு நோக்கி புறப்படுகிறது. இந்த ஊர்வலத்திற்கு பால. ஜனாதிபதி தலைமை வகிக்கிறார். ஜனாயுகேந்த் முன்னிலை வகிக்கிறார்.

    இந்த ஊர்வலம் நாகர் கோவில், கோட்டார், சுசீந்திரம், வழுக்கம்பாறை. வடக்கு தாமரைகுளம் வழியாக சாமி தோப்பு தலைமைப்பதியை சென்ற டைகிறது. குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதி யில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக் கான பக்தர்கள் வந்து ஊர்வலத்தில் கலந்து கொள்வார்கள்.

    நாளை (4-ந்தேதி) இரவு சாமிதோப்பு தலைமைபதியில் வாகன பவனியும், அய்யா வழி மாநாடும் நடக்கிறது.

    Next Story
    ×