search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவில்
    X
    திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவில்

    திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவிலில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

    திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவிலில் கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி நடந்தது. இதில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நாகநாதசாமி கோவில் உள்ளது. இங்கு நாகநாதர் கிரிகுஜாம்பிகை அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார்.

    இக்கோவிலில் ராகு பகவான் நாககன்னி, நாகவள்ளி சமேதராக மங்கள ராகுவாக தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். நவக்கிரகங்களில் ராகு பகவானுக்குரிய தலம் இதுவாகும். இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைஞாயிறு திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டும் கார்த்திகை கடைஞாயிறு திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா காரணமாக விழா நாட்களில் சாமி சிறப்பு அலங்காரத்துடன் கோவிலின் உட்பிரகாரத்தில் மட்டும் சாமி வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.

    விழாவின் 10-ம் நாள் நிகழ்ச்சியாக கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரி நேற்று நடந்தது. இதில் பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனங்களில் சூரிய புஷ்கரணி முன்பு எழுந்தருளினர்.

    சூரிய புஷ்கரணியில் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தீர்த்தவாரி நடந்தது. வழக்கமாக தீர்த்தவாரி உற்சவத்தின்போது பக்தர்கள் சூரிய புஷ்கரணியில் புனித நீராடி சாமி தரிசனம் செய்வார்கள்.

    ஆனால் கொரோனா காரணமாக நேற்று புனித நீராடுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் சூரிய புஷ்கரணி முன்பு வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய நாகநாதசாமி, பிறையணி அம்மன் மற்றும் பஞ்ச மூர்த்திகளை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நித்யா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
    Next Story
    ×